Tuesday, August 16, 2011

163-கொல்லாமையின் சிறப்பு




உமா மகேஸ்வரன் உமா மகேஸ்வரியைப் பார்த்து, "மக்களுக்கு இன்பத்தைத் தரும் தருமத்தைச் சொல்கிறேன்..கேள்.." என சொல்லத் தொடங்கினார்.
கொல்லாமைதான் அறங்களில் தலையாய அறம்.கடவுள் வழிபாடும், எப்போதும் ஆகமப் பயிற்சியும், மன அடக்கமும் கொல்லாமைக்கு ஈடாகாது.தாய் தந்தையரைப் போற்றுவதும் புண்ணிய நதிகளில் போராடுவதும் கூடக் கொல்லாமைக்கு நிகரில்லை' என்றார்.
'அப்படியானால் ஏன் யாகங்களில் பசுக்களைக் கொல்கின்றனர்?மன்னர்கள் வேட்டையாடச் செல்கின்றனரே! இது என்ன அறம்' என வினவினாள் மகேஸ்வரி.
'தேவி! பாராட்டத்தக்க கேள்வி..இந்த உலகில் கொல்லாதவர் யாருமில்லை.நடக்கையில் நுண்ணுயிர்கள் பல மடிகின்றன.உட்காரும் போதும்,படுக்கும் போதும் கூட இருக்கையிலும், படுக்கையிலும் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கின்றன.நீரிலும், காற்றிலும் உயிரினங்கள் எண்ணற்றவை இருக்கின்றன.பூமியில் இருக்கும் உயிர்களுக்குக் கணக்கு இல்லை.இப்படி நீரில்,காற்றில்,மண்ணில் உள்ள உயிர்கள் ஒன்று ஒன்றால் கொல்லப்படுகின்றன.
பலம் மிக்க பறவைகளும், மீன்களும் பலம் குறைந்த தம் இனங்களைப் புசித்து வாழ்கின்றன.சிறிய மீனைப் பெரிய மீன் கொல்லுதல் இயல்பாய் உள்ளது.புறா முதலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.ஆயிரக்கணக்கான உயிர்கள் பிற உயிர்களின் மாமிசத்தாலேயே உயிர் வாழ்கின்றன.
ஒருவன் உணவு என்னும் பெயரால் உயிருள்ள பொருள்களைப் பக்குவப்படுத்தி உண்கிறான்.சில நாட்கள் சில தானியங்களை உண்ணாமல் உண்ணாநோன்பு இருப்பவன் கொல்லாதவனாகக் கருதப்படுகின்றான்.உயிர்களைக் கொன்று தின்னாதவன் புண்ணியத்தைப் பெறுகிறான்..
உணவைத் துறப்பதால் உடல் வாடுகிறது.அப்படி உடல் வாடும் போது ஐம்பொறிகளும் கட்டுப் படுத்தப் படுகின்றன.ஐம்பொறிகளையும் மனதையும் அடக்கும் ஆற்றல் பெற்றவன் யாரினும் உயர்ந்தவன் ஆகிறான்.இவ்வாறு உபவாசம் இருப்பது கொல்லாமைக்குக் காரணமாகிறது.இவ்வாறு நடப்பவன் , படுப்பவன்,பிற உயிர்களைக் கொன்று புசிப்பவன் ஆகிய அனைவரும் உயிர்க்குத் துன்பம் தருபவர்கள் என்று அற நூல்கள் கூறுகின்றன.
பிற உயிர்க்குத் துன்பம் செய்யாதவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.உண்பதற்கு ஏற்ற  கிழங்குகளையும்,கனிகளையும்,இலைகளையும் உண்டு ஓவியம் போல் அசைவற்று இருப்பவன் தான் இம்சை செய்யாதவன்.பொருள்களின் மீதுள்ள பற்றற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துறவு பூண்டு, வைராக்கியத்துடன், சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்பவரே பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவர் ஆவர்.இத்தகையோர் உலகில் சிலரே.மனதில் எழும் ஆசையை அகற்ற வேண்டும்.இதனால் புண்ணியம் பெருகும்.தருமமும்,அதருமமும் மனதில் எழும் எண்ணங்களாலேயே அமைகின்றன.
ஒரு உயிர் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதும், இறுதியில் முக்தி அடைவதும் மனத்தாலேதான்.முன்வினைப் பயன் காரணமாக உயிர்கள் விலங்குகளாகவும்,பறவைகளாகவும்,ஊர்வனவாகவும் பிறக்கின்றன.அவ்வாறு பிறக்கும் உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட உடல்களுடன் ஆற்றலும் வலிமையும் கொண்டு பிறக்கின்றன.அப்படிப் பிறக்கும் பிராணிகள் தம் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களைப் பெறுகின்றன.மரணமும் அப்படியே.ஒரு உயிர் எப்படி எங்கே எப்போது பிரிய வேண்டும் என்பது விதியால் அமைவதாகும்.மரணத்தை எத்தகைய மகான்களாலும்,அரசகளாலும்,வீரர்களாலும் கூட மாற்றி அமைத்து விட முடியாது.இதுவரை மரணத்தை வென்றவர் இல்லை.விதி மிகவும் விழிப்புடன் உயிர் இனங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.அதற்கு நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை.அதன் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமானவர்களே.மந்திரத்தாலோ,மருந்தாலோ,செல்வத்தாலோ,தானத்தாலோ,அரிய தவத்தாலோ,புகழாலோ,அதிகாரத்தாலோ எதனாலும் எமனை ஏமாற்ற முடியாது.எனவே..உமா..உலகில் மாற்ற முடியா மாபெரும் சக்தி மரணம்தான் என்பதைத் தெளிவாக உணர்.ஆதலால் வாழும் காலத்தில் எவ்வுயிர்க்கும் துன்பம் தராது வாழ வேண்டும்' என்றார் மகேஸ்வரன்.


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

உலகில் மாற்ற முடியா மாபெரும் சக்தி மரணம்தான் என்பதைத் தெளிவாக உணர்.ஆதலால் வாழும் காலத்தில் எவ்வுயிர்க்கும் துன்பம் தராது வாழ வேண்டும்' என்றார் மகேஸ்வரன்.
/

அருமையான பகிர்வுக்கு நன்றி.

Post a Comment