Sunday, August 28, 2011

167-கல்வி,அறம்,பொருள்,இன்பம் -2




பார்வதி- எல்லோரையும் படைக்கும் கடவுளான பிரமதேவர் சமமாக படைத்தார் என்றால், சிலர் ஏன் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்? சிலர் ஏன் துன்பத்தில் வாகுகின்றனர்?
ஈஸ்வரன்-முற்காலத்தில் பிரமதேவர் மனிதர்களைச் சமமாகவே படைத்தார்.அவருக்கு யாரிடத்திலும் வெறுப்பும் இல்லை..விருப்பும் இல்லை.பிறக்கும் போது யாவரும் வேற்றுமையின்றியே பிறந்தனர்.அந்த யுகத்தில் அவர்கள் சமமாகவே இருந்தனர்.காலம் செல்லச் செல்ல, செயல் காரணமாக வேறுபட்டனர்.அதனால் மக்களிடையே பூசல் உண்டாயிற்று.இத்னை உணர்ந்த அறவோர் பிரமதேவனிடம் சென்று முறையிட்டனர்.'உமக்கு ஏன் இந்த மனோபாவம்! நாங்கள் அனைவரும் உம் புத்திரர் அல்லவா? அப்படியிருக்க ஏன் பூசல் தோன்றியது'என வினவினார்.
அதற்கு பிரமதேவர்,'நீங்கள் என் மீது குற்றம் கூறுவதில் அர்த்தம் இல்லை.நீங்கள் உங்கள் செயல்களை நினைத்துப் பாருங்கள்'.
உங்கள் செயல் காரணமாக நீங்கள் நன்மை அல்லது தீமை அடைகிறீர்கள்.ஒருவன் எந்தவிதமான வினையைச் செய்கிறானோ அதற்குரிய பயனைப் பெறுகிறான்.ஒவ்வொருவனும் தன்னுடைய வினைப் பயனைத் தானே அனுபவிக்க வேண்டும்.வேறு யாரும் அதை அனுபவிக்க முடியாது.மற்ற எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் உற்றார் உறவினர் கர்மத்தை அனுபவிப்பதில் மட்டும் உதவி செய்ய முடியாது.அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும்.' என்ற அறிவுரையைக் கேட்ட அறவோர் திரும்பச் சென்று நல்ல காரியங்களைச் செய்தனர்.அதன் பயனால் சுவர்க்கம் சென்று இன்பம் அடைந்தனர்.தேவி..பேராசைக்காரர்களும்,அன்பு இல்லாதவர்களும், சுயநலம் உடையவர்களும் தருமத்தில் நாட்டம் கொள்வதில்லை.அத்தகையோர் மறு பிறவியில் துன்பம் மிக அனுபவிக்கின்றனர்' என்றார்.
பார்வதி- மக்களில் சிலர் இன்பத்தை அனுபவிப்பதற்குரிய செல்வமெல்லாம் உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லையே...ஏன்?
ஈஸ்வரன்-மாந்தரில் சிலர் தூண்டுதலால் தருமம் செய்கின்றனரே யன்றி, தருமம் செய்வது நம் கடமை என்று எண்ணிச் செய்வதில்லை.அத்தகையோர் மறு பிறப்பில் இன்பத்துக்கு ஏதுவான பொருள்களை உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லை.செல்வத்தைக் காக்கும் காவற்காரனைப் போல இருப்பாரேயன்றி அதனை அனுபவிப்பதில்லை.
பார்வதி-சிலர் செல்வம் இல்லாதிருந்தும் இன்பம் உடையவர்களாக இருக்கிறார்களே..எப்படி..
ஈஸ்வரன்-யார் தருமத்தில் விருப்பம் உடையவர்களாக ..அன்புள்ளவர்களாக-தமது வறுமையிலும் பிறருக்கு உதவ முற்படுவார்களோ அவர்கள் மறுபிறவியில் செல்வம் இல்லாதிருந்த போதிலும் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.எனவே பொருள் இல்லையென்றால் கூடத் தான தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
பார்வதி- உலகில் பலவகை மனிதர்களைக் காண்கிறோம்.சிலர் ஓடி ஆடி வேலை செய்யாமல், உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே எல்லா அதிகாரத்தையும் திரண்ட செல்வத்தையும் பெற்று இன்பமாக இருக்கின்றனர்.அது எத்தகைய கருமத்தால்..
ஈஸ்வரன்- உனது சந்தேகம் நியாயமானதே..உலகில் யார் தான தருமத்தின் சிறப்பை உணர்ந்து,வெகு தொலைவில் இருந்த போதும் ஊகத்தினாலேயே தானத்திற்கு உரியவர்களை அறிந்து அவர்களைச் சார்ந்து அவர்களது மனம் மகிழுமாறு தானம் முதலானவற்றை செய்கின்றனரோ அவர்கள், சிறிதும் முயற்சியின்றியே அதன் பலனை ,மறுபிறவியில்  பெருகின்றனர்.தமது புண்ணியச் செயலால் விளைந்த இன்பத்தை உட்கார்ந்தவாரே அனுபவிக்கின்றனர்.
பார்வதி-சிலர் மிகவும் முயன்று செல்வத்தைப் பெற்று இன்புறுகின்றனர்..இது ஏன்?
ஈஸ்வரன்-யாசிப்பவர் தம்மை நோக்கிவரும் போது தான தருமம் செய்கின்றனர்.அத்தகையோர் மறுபிறவியில் மிகவும் முயன்று அந்தப் பயனை-இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
(பார்வதியின் சந்தேகமும்..ஈஸ்வரனின் பதிலும் தொடரும்)

No comments:

Post a Comment