Tuesday, June 23, 2009

47-யார்..யார்..எப்படி..?

ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள்..அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.

அப்போது அர்ச்சுனன் தருமரிடம்..'அண்ணா.., தாங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர்..அங்கு போய் விராடனுக்கு பணிந்து எப்படி இருக்க முடியும்?'என்றான்.

அப்போது தருமர்..'தம்பி வருந்தாதே..கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு..விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.

பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.

தான் சமையல்கலையில் வல்லவன் என்றும்..மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன்...என்றான் பீமன்.

தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும்..அதன்படி 'பேடி'வேஷம் தாங்கி..பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.

தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால்..தாமக்கிரந்தி என்ற பெயரில்..குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.

தான் தந்திரிபாலன் என்ற பெயரில்..மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.

தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை
செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.

பின்...தங்கள் ஆடை..மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி..மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில்..ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின்..உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.

பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய..துர்க்கையும் காட்சி அளித்து..அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும்..பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.

தருமருக்கு..பின் தெய்வீகத் தந்தையின் அருளால் துறவிக் கோலம் தானாகவே வந்தமைந்தது.காவியும்,கமண்டலமும் ஏந்தித் தூய துறவியாகவே காட்சியளித்தார்.

அதைப்போலவே..மற்றவர்கள் தோற்றமும்..அவரவர்கள் நினைத்தபடி மாறின.

Thursday, June 18, 2009

46 - வனபர்வம் முடிந்தது

தருமரின் பதில்களில் திருப்தியடைந்த யட்சன் 'தருமரே..உமது தம்பியரில் யாருக்கேனும் உயிர் தருகிறேன்..யாருக்கு வேண்டும்?' எனக் கேட்க...தருமர்..'நகுலன் உயிர் பெற வேண்டும்' என்றார்.

உன் உடன் பிறந்த மகாவீரர்களான..அர்ச்சுனன், பீமனை விடுத்து..நகுலன் உயிரை ஏன் விரும்புகிறாய்..என்ற யட்சனுக்கு..தருமர்..'என் தந்தைக்கு குந்தி,மாத்ரி என இரு மனையியர்.இருவருமே எங்களுக்கு தாயார்கள் தான்..ஆயினும்..இருவரும் புத்திரர் உள்ளவராக விரும்புகிறேன்' என்றார்.

தருமரின்..பரந்த மனதைப்பாராட்டிய யட்சன்..'எல்லோரும் உயிர் பெறட்டும்' எனக் கூற...உறங்கி எழுவது போல அனைவருமெழுந்தனர்.

பின்னர் தன்னை பல கேள்விகள் கேட்ட யட்சனை தருமர் ஒரு கேள்வி கேட்டார். 'யாராலும் வெற்றி கொள்ள முடியாத...என் தம்பியரை..மாய்த்துப் பின் உயிர் பெறச் செய்த தாங்கள் யார்'என்றார்.

'மகனே! நான் தர்ம தேவதை..நான் உனக்கு தேய்வீகத் தந்தை.நீ உனது கொள்கையில் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறாய் என பரீட்சித்தேன்..உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.

'தரும தேவதையே!முனிவருக்கு அரணியுடன் கூடிய கடைகோலை தர வேண்டும்' என்றார் தருமர்.

'மானாக வந்து அதைக் கவர்ந்தது நான்தான்..இந்தா' என தர்ம தேவதை..திருப்பிக் கொடுக்க தருமர் பெற்றுக் கொண்டார்.

'இன்னும்..என்ன வரம் வேண்டும்..கேள்' என்றது தர்ம தேவதை.


'பன்னிரெண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த வனவாசம் போல..ஓராண்டு அஞ்ஞாதவாசமும் அமைய வேண்டும்' என்றார் தருமர்.

"உங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது..நீங்கள் வெற்றி வீரராக திகழ்வீர்கள்' என அருளி தர்ம தேவதை மறைந்தது.

பாண்டவர்கள் பின் ஆச்ரமத்தை அடைந்து..கடைகோலை முனிவரிடம் கொடுத்து வணங்கினர்.

பின் ஓராண்டு அஞ்ஞாத வாசம் பற்றி திட்டமிட்டனர்.வனவாசத்தின் போது உடன் இருந்த முனிவர்களையும், மற்றவர்களையும்...அஞ்ஞாதவாசம் இருக்கும் போது உடன் இருக்க முடியாது என்பதால்....அனைவரும் தருமரின் வேண்டுகோளை ஏற்று பிரிந்து சென்றனர்.இனி அட்சயபாத்திரத்தின் தேவையும் இருக்காது என்றாயிற்று.

வன பர்வம் முற்றியது..

அடுத்த பதிவு முதல்..விராட நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் விராட பர்வம்.

Wednesday, June 10, 2009

45 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும் (தொடர்ச்சி)

யட்சன்-இதயம் இல்லாதது எது

தர்மர்-கல்

உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது

கல்வி

வேகம் மிக்கது எது

நதி

நோய் உடையவனின் நண்பன் யார்

மருத்துவர்

உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார்

அவன் செய்த நல்லறம்

எது அமிழ்தம்

பால்

வெற்றிக்கு அடிப்படை எது

விடா முயற்சி

புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம்

இல்லாதவர்க்கு ஒன்றைத் தருவதால்

உலகில் தனியாக உலா வருபவன் யார்

சூரியன்

உலகில் மிகச் சிறந்த தர்மம் எது

கொல்லாமை

உலகெங்கும் நிறந்திருப்பது எது

அஞ்ஞானம்

முக்திக்கு உரிய வழி எது

பற்றினை முற்றும் விலக்குதல்

யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது

சாதுக்களிடம் கொண்ட நட்பு

நாட்டுக்கு உயிர் போன்றவன் யார்

அரசன்

எது ஞானம்

மெய்ப்பொருளை (கடவுள்) அறிவதே ஞானம்

ஒருவனுக்கு பகையாவது எது

கோபம்

முக்திக்கு தடையாக இருப்பது எது

'நான்' என்னும் ஆணவம்

பிறப்புக்கு வித்திடுவது எது

ஆசை

எப்போதும் நிறைவேறாதது எது

பேராசை

யார் முனிவர்

ஆசை அற்றவர்

எது நல்வழி

சான்றோர் செல்லும் வழி

எது வியப்பானது

நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது

மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்

எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.

Tuesday, June 9, 2009

44 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும்

யட்சன்- சூரியனை உதிக்கச் செய்வது யார்?

தருமர்-பிரம்மா

சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்

சத்தியத்தில்

ஒருவன் எதனால் சிறப்படைகிறான்

மன உறுதியால்

சாதுக்களின் தருமம் எது

தவம்

உழவர்களுக்கு எது முக்கியம்

மழை

விதைப்பதற்கு எது சிறந்தது

நல்ல விதை

பூமியைவிட பொறுமை மிக்கவர் யார்

தாய்

வானினும் உயர்ந்தவர் யார்

தந்தை

காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது

மனம்

புல்லைவிட அதிகமானது எது

கவலை

ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்

மகன்

மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது

மனைவி

ஒருவன் விட வேண்டியது எதனை

தற்பெருமையை

யார் உயிர் அற்றவன்

வறுமையாளன்

எது தவம்

மன அடக்கம்

பொறுமை என்பது எது

இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

உயர்ந்தோர் என்பவர் யார்

நல்லொழுக்கம் உடையவர்

மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்

கடன் வாங்காதவர்

தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது

மீன்

(மேலும் கேள்வி பதில்கள் அடுத்த பதிவில்)

Thursday, June 4, 2009

43-யட்சன்

பன்னிரண்டு கால வனவாசம் நெருங்கியது.அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது.வேள்விக்கு உதவும்..அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார்.அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள...மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது.தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி..பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து..பாண்டவர்களும் ஓடினர்.ஆயினும் மானைப் பிடிக்க இயலவில்லை.மானும் ஓடி மறைந்தது.

முனிவருக்கு உதவ முடியவில்லையே..ஏன் இந்த இழிவு நமக்கு..என பாண்டவர்கள் எண்ணினர்.

பாஞ்சாலியை அவையில் அவமானப் படுத்தினவனை ..அன்றே கொன்றிருக்க வேண்டும்..அதனால்தான் இந்த இழிவு...என்றான் பீமன்.

அன்று நாக்கில் நரம்பின்றி பேசினானே கர்ணன்..அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும்...அதனால்தான் இந்த இழிவு என்றான் பார்த்தன்.

சகுனி மாயச் சூதாடும்போது..அப்போதே அவனை கொன்றிருக்க வேண்டும்..அதனால் தான் இந்த இழிவு என்றான் சகாதேவன்.

இந்நிலையில் தாகம் ஏற்பட..நகுலனை தண்ணீர் எடுத்துவரக் கூறினார் தருமர்.

தண்ணீரைத் தேடி அலைந்த நகுலன்..வெகு தொலைவில்..ஒரு தோப்புக்கு நடுவே ஒரு குளம் இருப்பதைக் கண்டான். அதன் அருகே சென்று..நீரை மொண்டு பருக ஆரம்பிக்கையில் 'நில்' என்ற குரல் கேட்டது.அதை அலட்சியம் செய்துவிட்டு..நகுலன் நீரைப் பருக அவன் சுருண்டு வீழ்ந்து மாண்டான்.நீண்ட நேரம் ஆகியும் நகுலன் வராததால்..சகாதேவனை..தருமர் அனுப்ப..அவனுக்கும்..நகுலனுக்கு ஆன கதியே ஆயிற்று.

பின்னர் அனுப்பப்பட்ட பார்த்தன்.பீமன் ஆகியோரும் இக்கதிக்கு ஆளாகினர்.

நீண்ட நேரம் எவரும் திரும்பாததால்..தருமர்..அனைவரையும் தேடிச் சென்றார்.

அவர்களுக்கு ஆனக் கதியை எண்ணி..புலம்பி..அழுதார்.நாக்கு வரண்டது.தண்ணீர் அருந்த நினைத்த போது...'நில்' என்றது ஒரு குரல்..இத் தடாகம் என்னுடையது.என் அனுமதியின்றி இவர்கள் இறங்கியதால்..இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.என் கேள்விகளுக்கு பதில் தராவிடின்...உன் முடிவும் இப்படித்தான் ஆகும்.நான் கேட்கும் கேள்விகளுக்கு...தகுந்த விடை அளித்தால்...நீ நீர் பருகலாம்' என்றது.

இது யட்சன் குரல் என அறிந்த தருமர்..'கேளுங்கள்..என்னால் இயன்றவரை பதில் தருகிறேன்' என்றார்.

(அடுத்த பதிவு..யட்சன் கேள்வியும்...தருமர் பதிலும்)