Sunday, August 7, 2011

159-தரும வியாதர் உரைத்த நீதிகள்- 4



கௌசிகன், தரும வியாதரை நோக்கி, 'உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது? ' என வினவ, தரும வியாதர் கூறலானார்...
'உயிர் கர்ப்பத்தில் சேரும் போதே புண்ணீய பாவ கர்மமும் அதனுடன் சேர்ந்து விடுகின்றன.அவ்வாறு கர்ப்பத்தில் சேரும் நல்வினைப் பயனால் நல்ல பிறப்பும், தீவினைப் பயனால் தீய பிறப்பும் உண்டாகின்றன.தான் செய்த வினைக்கு ஏற்பப் பிறப்பு,இறப்பு, பிணி,மூப்பு,துன்பம் ஆகியவற்றைச் சம்சாரத்தில் உயிர்கள் அனுபவிக்கின்றன.கர்மத் தொடர்பு காரணமாகவே உயிர்கள் ஆயிரக்கணக்கான விலங்கு கதிகளில் பிறப்பதும் நரகத்தை அடைவதுமாக மாறி மாறி அல்லல்படுகின்றன.கர்மத் தொடர்பினால் பிறப்பு இறப்புகளில் பலவகையான துன்பங்களை அடைந்து சக்கரம் போல உயிர்கள் சுழல்கின்றன.
அறவோன் இன்பக் காரியங்களில் இன்பத்தை அனுபவிக்கிறான்.தருமத்தின் நிழலில் தங்குகிறான்.தருமம் செய்து சம்பாதித்த பொருளைக் கொண்டு மேன் மேலும் தருமம் செய்து புண்ணியத்தை ஈட்டுகிறான்.தருமத்தையே எப்போதும் செய்துக் கொண்டு தருமம் என்னும் மரத்தி அடிவேரில் ஈரத்தன்மையை உண்டாக்குகிறான்.அதனால் புண்ணியப் பலன் பூவாகி, காயாகி,கனியாகி அவனைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.மறுமையிலும் அவன் இன்பம் தொடர்கிறது.ஒரு ஞானி விருப்பு, வெறுப்புக் கொள்வதில்லை.படிப்படியாக மோட்ச மார்க்கத்தில் சென்று முக்தி அடைகிறான்' என்றார் தரும வியாதர்.
'தரும வியாதரே! நல்வினை, தீவினைகளைப் பற்றி மேலும் விளக்க வேண்டும்' என கௌசிகன் கேட்டான்.
வியாதர் கூறினார்,'ஔ மனிதனுக்கு ஒரு பொருளைக் கண்டவுடன் அதனைப் பெற மனம் விழைகிறது.பல வழிகளில் முயன்று அதனை அடைகிறான்.அதனை அனுபவிக்கையில் மேன் மேலும் ஆசை உண்டாகிறது.மேன் மேலும் அப்பொருளை நாடி அலைகிறான்.ஆசைக்கு இடையூறு ஏற்படுகையில் சினம், ஆத்திரம் முதலிய தீய பண்புகள் உண்டாகின்றன.இவற்றால் கவரப்படும் மனிதனின் புத்தி நலத்தைப் பற்றி எண்ணுவதில்லை.அந்த மனிதன் வஞ்சனையாகத் தர்மவானைப் போல வேஷம் போட்டு பணத்தைத் திருடுகிறான்.இப்படிப் பொருள் சேர்த்ததும் கர்வம் அடைகிறான்.அப்போது யார் அறிவுரைகளும் அவன் காதில் விழுவதில்லை.ஆகமத்தில் இல்லாததை எல்லாம் இருப்பதாகச் சாதிக்கிறான்.பொருளாசையால் அதருமம் மூன்று வகையில் தோன்றுகிறது.பாவத்தை அவன் மனம் சிந்திக்கிறது.வாய் பேசுகிறது.கை செய்கிறது.அவன் எப்போதும் அதருமத்தில் மூழ்கிக் கிடப்பதால் அவனது நற்குணங்கள் அனைத்தும் அழிகின்றன.இத்தகையொனுக்கு இதே குணங்கள் உள்ளவனே நண்பனாகிறான்.இதனால் பாவம் மேலும் துணிந்து செயல் படுகிறது.
இவற்றையெல்லாம் எவன் சான்றோர் மூலமாகவும் அறிந்து கொள்கிறானோ அவன் நற்செயல்களைச் செய்வதிலும், பெரியோரைப் போற்றுவதிலும் சிறந்தி விளங்குகிறான்.அவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.எவன் ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்கிகிறானோ அவன் இன்பம் அடைகிறான்.இந்த உடல் ஒரு தேர்.ஐம்பொறிகளும் அதில் பூட்டப்பட்ட குதிரைகள்.உயிரே அவற்றை இயக்கும் சாரதி.இந்த ஐந்து குதிரைகளையும் அடக்கி ஆள்பவன் நல்ல நிலையை அடைவான்' எனத் தரும வியாதர் உரைத்தார்.
"உம்மால் பலவற்றை நான் அறிந்து கொண்டேன்.இவற்றால் நான் பெரிதும் பயன் அடைந்தேன்..விடை பெறுகிறேன்" என்றான் கௌசிகன்.
அது கேட்ட வியாதர்.."நீர் எம் வீட்டிற்கு வர வேண்டும்.வந்தால், புண்ணீயப் பலனைக் கண்கூடாக பார்த்து அறிந்து கொள்வீர்' என்றார்.சம்மதித்த கௌசிகரை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு விரைந்தார் தரும வியாதர்.வீட்டில் அவரது முதிய தாய்-தந்தையருக்குச் செய்யும் பணிவிடைகளை அவன் வியக்குமாறு எடுத்துரைத்தார்.இதுவே நான் செய்யும் புண்ணிய காரியம் என்றார்.
மேலும் சொன்னவை அடுத்த பதிவில்..
(தொடரும்)

1 comment:

Post a Comment