Wednesday, May 18, 2011

151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)





சுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.

யாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.

பின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.

அத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான்! காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.

காச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.

ஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.

பரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.

கௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.

விசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.

அருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.

பசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.

சுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.

ரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.

உடன் சுனஸ்ஸகன், "உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.

'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.

Tuesday, May 10, 2011

150- தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (2)



பின்னர் அமைச்சர்கள் மன்னனை அடைந்து நடந்ததைக் கூறினர்.அதைக் கேட்ட விருஷாதர்ப்பி சினம் கொண்டான்.கடுமையான யாகத்தைச் செய்தான்.யாக குண்டத் தீயிலிருந்து பெண் பேய் ஒன்று தோன்றியது.அதற்கு 'யாதுதானி' எனப் பெயர் வைத்தான்.சப்த ரிஷிகளையும், அருந்ததியையும்,வேலைக்காரர்களையும் நீ அழித்து விடு.அவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்.கவனம் இருக்கட்டும் என ஆணையிட்டான்.ஆணைப்படி அந்தப் பேய் அவர்கள் இருக்குமிடம் நாடிச் சென்றது.

அப்போது அந்த ரிஷிகள் காட்டில் காய் கனிகளை உண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.ஒருநாள் அவர்கள் கை, கால்,முகம், வயிறு ஆகிய இவை பருத்த சரீரம் உடைய 'சுனஸ்ஸகன்' என்ற பெயருடைய துறவியைக் கண்டனர்.அப்போது அருந்ததி ரிஷிகளைப் பார்த்து. 'நீங்கள் இந்தத் துறவியைப் போல தேஜஸ் உடையவர்களாக இல்லையே..ஏன்' என்றாள்.

'இவனுக்கு நம்மைப் போல சாஸ்திரப் பயிற்சி இல்லை. இவனுக்குப் பசி தீர்ப்பது ஒன்றே குறிக்கோள்.இவன் கஷ்டப்பட்டு எதுவும் செய்வதில்லை.ஆகமப் பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை.அதனால் மூர்க்கன்.சோம்பேறி.இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் நகர்வது இல்லை.அதனால் உடல் பருத்து இருக்கிறான்' என பதில் உரைத்தனர்.

ஆனால் சுனஸ்ஸகனோ பதில் ஒன்றும் சொல்லாது, அந்த ரிஷிகளைத் தாழ்ந்து வணங்கிப் பணிவிடைகள் செய்தான்.ஒருநாள் ரிஷிகள் காட்டில் மரங்கள் அடர்ந்து நிழல் செய்யும் பெரிய குளத்தைக் கண்டனர்.அந்தக் குளம் யாவராலும் மாசுபடாத நீரைத் தன்னகத்தே கொண்டுவிளங்கியது.அதில் தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன.சேறில்லாது பளிங்கு போல விளங்கும் தூய நீரைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் அக்குளத்தை, விருஷாதர்ப்பி மன்னன் ஏவிய யாதுதானி என்னும் கொடிய பேய் காவல் காத்து வந்தது.ரிஷிகள் தாமரைக் கிழங்குக்காக சுனஸ்ஸகனோடு அக்குளத்தை அடைந்தனர்.பேயைக் கண்டு வியந்தனர்.'நீ யார்? யாருக்காக இங்குக் காத்துக் கொண்டிருக்கிறாய்?என்ன செய்ய நினைக்கிறாய்? என்று வினவினர்.

நான் யாராயிருந்தால் உங்களுக்கென்ன..பொருளற்ற வினாக்களை வினவ வேண்டாம்.இக்குளத்தைக் காவல் காக்கிறேன்..இந்த விடை உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன் என்றது பேய்.

ரிஷிகள் ஒன்றாக..'நாங்கள் பசியோடு இருக்கிறோம்.அதனால் நாங்கள் தாமரைக் கிழங்குகளைப் பறித்து உண்ண அனுமதி தர வேண்டும் என்றனர்.

ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால், தாமரைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ள அனுமதி தருகிறேன் ..உங்கள் பெயரை ஒவ்வொருவராக எனக்குச் சொல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றாள் யாதுதானி.

ரிஷிகள் ஒவ்வொருவராக பெயரைக் கூறினர்..

முதலில் அத்ரி மகரிஷி 'நான் ஒவ்வொரு இரவிலும் மூன்று முறை அத்யயனம் செய்கிறேன்.அதனால் அராத்ரி என்னும் என் பெயர் அத்ரி ஆயிற்று' என்றார்.

மகரிஷியே உம் பெயரை என் நினைவில் கொள்ள முடியவில்லை..ஆதலால் நீர் போய் குளத்தில் இறங்குக என்றாள் யாதுதானி.

அடுத்து வசிஷ்டர்..'நான் யாவரினும் சிறந்து இருப்பதாலும், சப்தரிஷி மண்டலத்தில் வசிப்பதாலும் எனக்கு வஷிஷ்டர் என்ற பெயர்' என்றார்.இந்தப் பெயரையும் நினைவில் கொள்ள முடியவில்லை.நீரும் போய் குளத்தில் இறங்குக' என்றாள் யாதுதானி.

இது போலவே..பரத்வாஜர்,காச்யபர்,கௌதமர்,ஜமதக்னி,விசுவாமித்திரர்,பசுசகன்..என அனைவரும் தங்கள் பற்றிக் கூற..எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என குளத்தில்

இறங்கச் சொன்னாள் யாதுதானி.

அருந்ததியும், 'நான் என் கணவரின் கருத்துப்படி நடப்பவள்.மேலும் எல்லாப் பொருளையும் தாங்குவதும்,காப்பதுமாகிய இப் பூமியில் நான் என் கணவரை எப்போதும் சார்ந்திருப்பதால், எனக்கு அருந்ததி என்னும் பெயர் அமைந்தது' என்றால்.அப்பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாத யாதுதானி அவளையும் குளத்தில் இறங்கச் சொன்னது.,

கடைசியாக சுனஸ்ஸகன் யாதுதானியிடம் வந்தான்.

(தொடரும்)