Wednesday, August 31, 2011

168-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 3



பார்வதி தன் சந்தேகத்தைத் தொடர்கிறார்..
பார்வதி-சிலர் என்ன தான் முயன்றாலும் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனரே..ஏ ன் ?
ஈஸ்வரன்-யார் யாசிப்பவர்க்கு ஒன்றும் தராமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்களோ அத்தகையோர் மறுபிறவியில் எவ்வளவு முயன்றாலும் ஓர் இன்பத்தையும் பெற முடிவதில்லை.எதுவும் வித்தின்றி முளைப்பதில்லை.நற்செயல் அன்றி நற்பலன் இல்லை
பார்வதி-சிலர் வயதான காலத்தில், அனுபவிக்க இயலாத முதுமையில் எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறார்களே..ஏண்?
ஈஸ்வரன்-அத்தகையோர் செல்வம் உடையவராக இருந்தும் தருமச் செயல்களை வெகுநாள் செய்யாதிருந்து மரணகாலத்தில் நோயால் துன்புறும் போது அறம் செய்ய முற்பட்டவராவர்.அதனால் அனுபவிக்க வேண்டிய காலத்தில் செல்வம் முதலியவற்றைப் பெறாமல் இறுதிக் காலத்தில் (காலம் கடந்து) பெறுகின்றனர்.
பார்வதி-சிலர் திரண்ட செல்வத்தைப் பெற்றிருந்தும் நோயினால் அவதிப்பட்டு அவற்றை அனுபவிக்க முடியாமல் வருந்துகின்றனரே..ஏன்?
ஈஸ்வரன்-அத்தகையோர் முற்பிறவியில் நோயினால் பீடிக்கப்பட்டு இனிப் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபின் தான தருமங்களை செய்தவராவர்.அதனால் அவர்கள் மறுபிறவியில் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும் அவற்றை அனுபவிக்க முடியாதவாறு நோயினால் துன்புறுகின்றனர்.
பார்வதி-சிலர் பார்ப்பதற்கு அழகானவராகவும், இனிமையாகவும் இருப்பது எந்தக் கர்மப் பலனால்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் நாணம் மிக்கவராகவும் இனிமையாக பேசுபவராகவும் தருமம் செய்பவராகவும் விளங்கினார்களோ..அவர்கள் இப்பிறவியில் காண்பதற்கு அழகாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கின்றனர்
பார்வதி-சிலர் காண்பதற்குக் கவர்ச்சியில்லாது அருவருப்பாக இருக்கின்றனரே..அது எதனால்
ஈஸ்வரன்-முற்பிறவியில் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று கர்வத்தினால் பிறரை இகழ்ந்தவர்கள், இப்பிறவியில் பிறர் இகழ அழகில்லாமல் இருக்கின்றனர்
பார்வதி-சிலரிடம் அழகும் இல்லை..செல்வமும் இல்லை..ஆயினும் மனதைக் கவரும் வண்ணம் பேசுகின்றனரே..பெண்களால் கவரப்படுகின்றனரே..அது எந்தக் கர்மத்தால்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் இனிமையாக பேசுபவராகவும், தம் மனைவியைத் தவிர வேறு பெண்களை எண்ணிப் பாராதவராகவும், தான தருமங்கள் செய்பவராகவும்,மகளிரிடம் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்தாது குணங்களையே பேசுபவராகவும் இருந்தவர்கள் இப்பிறவியில் அழகில்லாவிடினும் அன்புள்ளவராய் இருக்கின்றனர்.தன் அன்பான பேச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.பெண்களால் விரும்பப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் கல்வி அறிவும் ,கேள்வி ஞானமும், விடாமுயற்சியும் இருந்தும் வறுமையில் வாடுகின்றனரே..ஏண்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் கல்வியிலும்,செல்வத்திலும் சிறந்து இருந்த போதும் யாருக்கும் ஒன்றும் தராமல், பசித்தவர்க்குக் கூட உணவு தராமல் இருந்தனரோ, அவர்கள் இப் பிறவியில் அறிவும்,ஞானமும் உள்ளவராய் இருந்தும் வறுமையுடையவர்களாகவே திகழ்கின்றனர்.விதைத்ததுதானே முளைக்கும்.
பார்வதி-உலகில் செல்வம் மிக்கவராக இருந்தும் சிலர் கல்வி அறிவு இல்லாதவர்களாக, மன உறுதி அற்றவர்களாக, முரடர்களாக உள்ளனரே ..ஏன்
ஈஸ்வரன்-முற்பிறவியில் கல்வியில்லாதவர்களாக இருந்த போதிலும் சிலர் ஏழைகளுக்கு உதவி செய்திருப்பர்.அதனால் இப்பிறவியில் அவ்வாறே செல்வந்தராகவும்,கல்வி முதலான சிறப்புகள் அற்றவராகவும் இருக்கின்றனர்.கல்வி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தானத்தின் பலன் அப்படியே செல்வத்தை உண்டாக்கும்.
பார்வதி- சிலர் புத்திசாலியாகவும்,நினைவாற்றல் உள்ளவராகவும், தெளிவான உச்சரிப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனரே..அது எந்தக் கர்மப் பயனால்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் ஒரு குருவைச் சார்ந்து முறைப்படி கல்வி கற்றவார்கள் ஆவர்.செருக்கு இல்லாதவர் ஆவர்.மன அடக்கம் உள்ளவராக இருந்திருப்பர்.அதனால் அவர்கள் இப்பிறவியில் புத்திசாலித்தனமும்,நினைவாற்றலும் ,தெளிவான உச்சரிப்பும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்.

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)

Sunday, August 28, 2011

167-கல்வி,அறம்,பொருள்,இன்பம் -2




பார்வதி- எல்லோரையும் படைக்கும் கடவுளான பிரமதேவர் சமமாக படைத்தார் என்றால், சிலர் ஏன் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்? சிலர் ஏன் துன்பத்தில் வாகுகின்றனர்?
ஈஸ்வரன்-முற்காலத்தில் பிரமதேவர் மனிதர்களைச் சமமாகவே படைத்தார்.அவருக்கு யாரிடத்திலும் வெறுப்பும் இல்லை..விருப்பும் இல்லை.பிறக்கும் போது யாவரும் வேற்றுமையின்றியே பிறந்தனர்.அந்த யுகத்தில் அவர்கள் சமமாகவே இருந்தனர்.காலம் செல்லச் செல்ல, செயல் காரணமாக வேறுபட்டனர்.அதனால் மக்களிடையே பூசல் உண்டாயிற்று.இத்னை உணர்ந்த அறவோர் பிரமதேவனிடம் சென்று முறையிட்டனர்.'உமக்கு ஏன் இந்த மனோபாவம்! நாங்கள் அனைவரும் உம் புத்திரர் அல்லவா? அப்படியிருக்க ஏன் பூசல் தோன்றியது'என வினவினார்.
அதற்கு பிரமதேவர்,'நீங்கள் என் மீது குற்றம் கூறுவதில் அர்த்தம் இல்லை.நீங்கள் உங்கள் செயல்களை நினைத்துப் பாருங்கள்'.
உங்கள் செயல் காரணமாக நீங்கள் நன்மை அல்லது தீமை அடைகிறீர்கள்.ஒருவன் எந்தவிதமான வினையைச் செய்கிறானோ அதற்குரிய பயனைப் பெறுகிறான்.ஒவ்வொருவனும் தன்னுடைய வினைப் பயனைத் தானே அனுபவிக்க வேண்டும்.வேறு யாரும் அதை அனுபவிக்க முடியாது.மற்ற எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் உற்றார் உறவினர் கர்மத்தை அனுபவிப்பதில் மட்டும் உதவி செய்ய முடியாது.அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும்.' என்ற அறிவுரையைக் கேட்ட அறவோர் திரும்பச் சென்று நல்ல காரியங்களைச் செய்தனர்.அதன் பயனால் சுவர்க்கம் சென்று இன்பம் அடைந்தனர்.தேவி..பேராசைக்காரர்களும்,அன்பு இல்லாதவர்களும், சுயநலம் உடையவர்களும் தருமத்தில் நாட்டம் கொள்வதில்லை.அத்தகையோர் மறு பிறவியில் துன்பம் மிக அனுபவிக்கின்றனர்' என்றார்.
பார்வதி- மக்களில் சிலர் இன்பத்தை அனுபவிப்பதற்குரிய செல்வமெல்லாம் உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லையே...ஏன்?
ஈஸ்வரன்-மாந்தரில் சிலர் தூண்டுதலால் தருமம் செய்கின்றனரே யன்றி, தருமம் செய்வது நம் கடமை என்று எண்ணிச் செய்வதில்லை.அத்தகையோர் மறு பிறப்பில் இன்பத்துக்கு ஏதுவான பொருள்களை உடையவராக இருந்தும் இன்பத்தை அனுபவிப்பதில்லை.செல்வத்தைக் காக்கும் காவற்காரனைப் போல இருப்பாரேயன்றி அதனை அனுபவிப்பதில்லை.
பார்வதி-சிலர் செல்வம் இல்லாதிருந்தும் இன்பம் உடையவர்களாக இருக்கிறார்களே..எப்படி..
ஈஸ்வரன்-யார் தருமத்தில் விருப்பம் உடையவர்களாக ..அன்புள்ளவர்களாக-தமது வறுமையிலும் பிறருக்கு உதவ முற்படுவார்களோ அவர்கள் மறுபிறவியில் செல்வம் இல்லாதிருந்த போதிலும் இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.எனவே பொருள் இல்லையென்றால் கூடத் தான தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
பார்வதி- உலகில் பலவகை மனிதர்களைக் காண்கிறோம்.சிலர் ஓடி ஆடி வேலை செய்யாமல், உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே எல்லா அதிகாரத்தையும் திரண்ட செல்வத்தையும் பெற்று இன்பமாக இருக்கின்றனர்.அது எத்தகைய கருமத்தால்..
ஈஸ்வரன்- உனது சந்தேகம் நியாயமானதே..உலகில் யார் தான தருமத்தின் சிறப்பை உணர்ந்து,வெகு தொலைவில் இருந்த போதும் ஊகத்தினாலேயே தானத்திற்கு உரியவர்களை அறிந்து அவர்களைச் சார்ந்து அவர்களது மனம் மகிழுமாறு தானம் முதலானவற்றை செய்கின்றனரோ அவர்கள், சிறிதும் முயற்சியின்றியே அதன் பலனை ,மறுபிறவியில்  பெருகின்றனர்.தமது புண்ணியச் செயலால் விளைந்த இன்பத்தை உட்கார்ந்தவாரே அனுபவிக்கின்றனர்.
பார்வதி-சிலர் மிகவும் முயன்று செல்வத்தைப் பெற்று இன்புறுகின்றனர்..இது ஏன்?
ஈஸ்வரன்-யாசிப்பவர் தம்மை நோக்கிவரும் போது தான தருமம் செய்கின்றனர்.அத்தகையோர் மறுபிறவியில் மிகவும் முயன்று அந்தப் பயனை-இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
(பார்வதியின் சந்தேகமும்..ஈஸ்வரனின் பதிலும் தொடரும்)

Wednesday, August 24, 2011

166-கல்வி,அறம்,பொருள்,இன்பம்




பார்வதி ஈஸ்வரனை நோக்கிக் கல்வி,அறம்,பொருள், இன்பம் பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்ள,ஈஸ்வரன் கூறலானார்.
மனிதப் பிறவி மட்டுமே தொழில் செய்யும் வாய்ப்புப் பெற்றுள்ளது.ஏனைய பிறவிகளுக்கு இவ்வாய்ப்பு இல்லை.இன்பமும்,துன்பமும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு.ஒருவன் எத் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்குக் கல்வியினாலேயே அமையும்.கல்வியால் அறிவு விரிவடைகிறது.அறிவினால் உண்மையை அறிய முடிகிறது.உண்மையை உணர்ந்தவன் பொறாமை,அவா,சினம் முதலான மாசுகளை அகற்றி மனத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்வான்.
கல்வியினால் ஒருவன் எங்குச் சென்றாலும் சிறந்த வாழ்க்கை நடத்த முடியும்.ஆதலால் ஒவ்வொருவரும் கல்வியால் தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.கல்வி அறிவினால் நன்மை தீமைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.மனத்தில் தோன்றும் சினம், ஆசை முதலிய குற்றங்களைப் போக்கி ஆன்மத் தூய்மையுடன் விளங்க வேண்டும்.பெரியோரைப் போற்றி வழிபட வேண்டும்.மனமானது குடும்பத்தில் வழி வழியாய் வரும் ஒழுக்கத்தைப் பற்றும்.ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறப்பதற்காகத் தான தருமங்கள் முற்காலத்தில் விதிக்கப்பட்டன.ஒருவன் கல்வியின் மூலமாக வாழவேண்டும் என கருதுவானாயின்,ஒரு நல்ல ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும்.கற்ற கல்வியை மேலும் மேலும் நல்ல நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உழவுத்தொழில் மூலம் ஒருவர் வாழ நினைத்தால் நல்ல நீர்வளம் நிறைந்த இடத்தை நாடி உழவுத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.வாணிபத்தை மேற்கொள்வதாயின் காலத்திற்கு ஏற்றவாறு மிக நுணுக்கமாக விலை மாற்றங்களைச் செய்து சாதுர்யமாக வாழ வேண்டும்.பத்து, பதினைந்து பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்யலாம்.ஒரு முதலாளியிடம் வேலை செய்யும் தொழிலாளி தான் வாங்கும் பணத்தைவிடப் பல மடங்கு வேலை செய்து முதலாளியின் நன் மதிப்பைப் பெற வேண்டும்.முதலாளியும் அத்தகைய தொழிலாளியிடம் மிகவும் அன்பு கொண்டு தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதி அவன் தேவையை நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் நாட்டில் தொழில் பெருகும்,வாணிபம் செழிக்கும்.இடம்,காலம்,மூலதனம்,செய்திறம் ஆகியவற்றை ஆராய்ந்து தெய்வத்தாலோ,மனிதனாலோ இடையூறு நேரா வண்ணம் எண்ணிப்பார்த்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்.கிடைத்தப் பொருளைக் காப்பாற்ற வேண்டும்.மேலும், மேலும் பெருக்க வேண்டும்.இடைவிடாமல் தொழிலைச் செய்ய வேண்டும்.ஆராய்ந்து பாராமல் இருப்பதே போதும் என்று தொழில் புரியாமல் உண்பவனுடைய செல்வம் மலை அளவு இருந்தாலும் நாளாவட்டத்தில் அழிந்து விடும்.
அறிவுடையவன் தொழிலால் வரும் லாபத்தை ஒழுங்காக வரையறை செய்து கொண்டு செலவிட வேண்டும்.ஒரு பாகத்தைத் தரும காரியங்களுக்காகச் செலவழிக்க வேண்டும்.ஒரு பாகத்தைக் கொண்டு மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.பொருள் இல்லாதவரை உலகம் ஒரு நாளும் மதிக்காது. அத்தகைய பொருளைக் கண்ணும் கருத்துமாகப் பெற முயற்சித்தல் முதல் கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு பாகத்தைத் திடீரென ஏற்படும் நோய்களையும் ஆபத்துகளையும் போக்கச் செலவிட வேண்டும்.பொருள் இல்லாதவன் இம்மை இன்பங்களையும் மறுமை இன்பங்களையும் இழப்பான்.உண்ணும் உணவினால் எப்படி ஐம்பொறிகளும் செயல் படுகின்றனவோ அப்படியே சேர்க்கும் பொருளால் உலகத்தில் செயல்கள் நடைபெறுகின்றன.உணவு இல்லையேல் ஐம்பொறிகளும் நிலைகலங்கிப் போவது போலப் பொருள் இல்லையேல் வீடும் நாடும் அழிந்தொழியும்.
பொருளை நல்வழியில் சேர்ப்பது, செலவழிப்பது என்பதோடு நில்லாமல் ஒருவன் ஞான மார்க்கத்தில் நிலை பெற வேண்டும்.ஆன்ம முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட வேண்டும்.நல்ல உணவாலும் நல்ல ஒழுக்கத்தாலும் உடலைக் காப்பாற்ற வேண்டும்.எப்படிப்பட்டவனும் தன் சக்திக்கு ஏற்றவாறு எதையும் செய்ய வேண்டும்.தன் சக்திக்கு ஏற்ற தவம்..சக்திக்கு ஏற்ற தானம்..சக்திக்கு ஏற்ற தியாகம் என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறி முடித்தார் ஈஸ்வரன்.     (தொடரும்)

Sunday, August 21, 2011

165- போரில் இறப்போர் கதி




போரில் இறப்போர் கதி பற்றி மகேஸ்வரி வினவ..ஈஸ்வரன் சொல்கிறார்..
'போர்க்களத்தில் இரு திறத்துப் படைகளும் மோதும் போதும், யானைப்படை வீரரும்,குதிரைப் படை வீரரும்,தேர்ப்படை வீரரும்,காலாட்படை வீரரும் உற்சாகம் குன்றாமல் போராடுகின்றனர்.வீர வாதம் செய்து போர் புரிகையில் எண்ணற்ற வீரர்கள் இறக்கின்றனர்.போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரரைப் பாவம் துரத்திப் பிடித்துக் கொள்ளும்.இப்பாவம் மன்னனைச் சாராது கோழைகளையே பற்றிக் கொள்கிறது.இதுபோலவே கொல்லாமை மேற் கொள்ளும் வீரர் மனம் ஒன்றிப் போரிடவில்லையெனில் அவர்களையும் கொடிய பாவம் பற்றும்.அரசர்கள் நரகத்தை அடைவர்.தன் மன்னனுக்கு வீராவேசம் கொண்டு போரிட்டு உயிர் துறக்கும் வீரன் சுவர்க்கம் அடைவான்.
கருணையுள்ள வீரன் கூடப் பெரு வீரத்துடன் போர் புரிவதில் உற்சாகம் கொள்வான்.இங்கு இரக்கத்திற்கு இடமில்லை.பெரு வீரன் மான் கூட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தும் சிங்கம் போல கர்ஜித்துப் போரிட வேண்டும்.யுத்தத்தில் யானை மீதிருந்து போரிட்டு மாண்டவன் பிரம லோகத்தை அடைவான்.தேரிலிருந்து போரிட்டு உயிர் துறந்தவன் இந்திரர் லோகத்தை அடைந்து இன்பம் அனுபவிப்பான்.போர்க்களத்தில் கொல்லப்பட்டவர் சுவர்க்கத்தில் தேவர்களால் பாராட்டப்படுவர்.கொன்றவர் இங்கு போற்றப்படுவர்.எனவே..போர்க்களம் செல்லும் வீரன் வெஞ்சமரில் அஞ்சாது போரிட வேண்டும்.ஆயிரமாயிரம் நதிகள் கடலில் கலப்பது போல, ராஜ தர்மத்துடன் பல்வேறு ஒழுக்கங்கள் அவனை சென்று அடையும்.
தொன்று தொட்டு வரும் தருமங்கள் எல்லாவற்றையும் மன்னன் காப்பாற்ற வேண்டும்.தருமத்தை அரசன் கைவிட்டால் , தருமம் அவனை கைவிட்டு விடும்.எந்த நாட்டில் மன்னன் ஆட்சி செம்மையாய் உள்ளதோ அங்கே மழை தவறாது பெய்யும்.நாட்டு மக்கள் பிணி முதலான துன்பங்களின்றி நலமாக வாழ்வர்.
மன்னன் எது நடந்தாலும் பொறுமையாக இருந்தால்,ராஜ தருமம் ஒழுங்காக நடைபெறாது.தீயவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது.நல்லவர்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.மன்னன் ஆறிலொரு பகுதியைத் தீர்வையாகக் கொள்ள வேண்டும்.அப்படிக் கொள்பவன் தன் குடிமக்களைப் பாதுகாக்காமலும், பிற நாட்டைக் கைப்பற்றாமலும் இருத்தல் கூடாது.அத்தகைய மன்னனின் திறமையின்மையைப் பயன்படுத்தி அயல் நாட்டவர் அவன் மீது படையெடுத்து வெற்றி காண்பர்.அந்நிலையில் எதிரி நாட்டுப் பாவமெல்லாம் தோல்வியுற்ற மன்னனை வந்து அடையும்.யுத்தக்களத்தில் வீரத்துடன் போரிட்டு மாண்ட மன்னவன் விமானத்தில் ஏறி வீர சுவர்க்கம் அடைவான்.அவன் உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உளவோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவ சுகம் அனுபவிப்பான்.பின் மண்ணுலகில் மன்னனாகவோ, அறவானாகவோ பிறப்பான்.ஆதலால் மன்னன் விழிப்புடன் நாட்டை ஆள வேண்டும்' என்று முடித்தார் மகேஸ்வரன்.




Thursday, August 18, 2011

164-விதியின் வலிமை




விதியின் வலிமை பற்றி மஹேஸ்வரிக்கு மஹேஸ்வரன் உரைத்தது..

"மரணத்துக்குரிய நேரம் வந்தபோது அதனை யாரும் கடக்க முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.விட்டிற் பூச்சிகள் அழியும் காலம் வரும்போது தாங்களே வந்து எரியும் விளக்கில் வீழ்ந்து மாள்கின்றன.காட்டில் திரியும் மான்களில் எதற்கு முடிவு காலம் வந்ததோ அதுதான் வலையில் அகப்படுகிறது.கொல்வதற்காகக் கொலைக் களத்திற்கு அனுப்பப் படும் விலங்குகளில் ஆயுள் குறைந்ததுதான் முதலில் கொல்லப் படுகிறது.எல்லாமே உடனே கொல்லப்படுவதில்லை.விரைந்து பறந்து செல்லும் பறவைகள் கூட ஆயுள் காலம் முடிந்தால் சுட்டுத் தள்ளப்படுகின்றன.தண்ணீரில் இருக்கும் மீன்கள் அனைத்துமா ஒரே நாளில் வலையில் அகப்படுகின்றன? ஆயுள் குறைந்தவை மட்டுமே வலையில் சிக்குகின்றன.
உழவன் உயிகளைக் கொல்ல வேண்டும் என்றா நிலத்தை உழுகின்றான்.அந்த எண்ணம் அவனுக்கு இல்லை.ஆயினும் ஆயுள் முடிவால் கலப்பை நுனியால் பல உயிர்கள் இறக்கின்றன.யானை நடக்கும்பொழுது சாகும் உயிர்களைவிட மனிதன் நடக்கும் போது இறக்கும் நுண்ணூயிர்கள் அதிகம்.ஒரு நாளைக்கு மனிதன் ஆயிரம் நடை நடக்கிறான்.யானை அப்படி நடப்பதில்லை.எது எப்படியாயினும் இறக்கத்தக்கவைதான் இறக்கின்றன.ஆகவே எந்தப் பிராணியும் விதியை வெல்ல முடியாது.இறக்க தக்கவைதான் இறக்கும்.விடுபடத்தக்கவை விடுபடும்.


 

Tuesday, August 16, 2011

163-கொல்லாமையின் சிறப்பு




உமா மகேஸ்வரன் உமா மகேஸ்வரியைப் பார்த்து, "மக்களுக்கு இன்பத்தைத் தரும் தருமத்தைச் சொல்கிறேன்..கேள்.." என சொல்லத் தொடங்கினார்.
கொல்லாமைதான் அறங்களில் தலையாய அறம்.கடவுள் வழிபாடும், எப்போதும் ஆகமப் பயிற்சியும், மன அடக்கமும் கொல்லாமைக்கு ஈடாகாது.தாய் தந்தையரைப் போற்றுவதும் புண்ணிய நதிகளில் போராடுவதும் கூடக் கொல்லாமைக்கு நிகரில்லை' என்றார்.
'அப்படியானால் ஏன் யாகங்களில் பசுக்களைக் கொல்கின்றனர்?மன்னர்கள் வேட்டையாடச் செல்கின்றனரே! இது என்ன அறம்' என வினவினாள் மகேஸ்வரி.
'தேவி! பாராட்டத்தக்க கேள்வி..இந்த உலகில் கொல்லாதவர் யாருமில்லை.நடக்கையில் நுண்ணுயிர்கள் பல மடிகின்றன.உட்காரும் போதும்,படுக்கும் போதும் கூட இருக்கையிலும், படுக்கையிலும் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கின்றன.நீரிலும், காற்றிலும் உயிரினங்கள் எண்ணற்றவை இருக்கின்றன.பூமியில் இருக்கும் உயிர்களுக்குக் கணக்கு இல்லை.இப்படி நீரில்,காற்றில்,மண்ணில் உள்ள உயிர்கள் ஒன்று ஒன்றால் கொல்லப்படுகின்றன.
பலம் மிக்க பறவைகளும், மீன்களும் பலம் குறைந்த தம் இனங்களைப் புசித்து வாழ்கின்றன.சிறிய மீனைப் பெரிய மீன் கொல்லுதல் இயல்பாய் உள்ளது.புறா முதலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.ஆயிரக்கணக்கான உயிர்கள் பிற உயிர்களின் மாமிசத்தாலேயே உயிர் வாழ்கின்றன.
ஒருவன் உணவு என்னும் பெயரால் உயிருள்ள பொருள்களைப் பக்குவப்படுத்தி உண்கிறான்.சில நாட்கள் சில தானியங்களை உண்ணாமல் உண்ணாநோன்பு இருப்பவன் கொல்லாதவனாகக் கருதப்படுகின்றான்.உயிர்களைக் கொன்று தின்னாதவன் புண்ணியத்தைப் பெறுகிறான்..
உணவைத் துறப்பதால் உடல் வாடுகிறது.அப்படி உடல் வாடும் போது ஐம்பொறிகளும் கட்டுப் படுத்தப் படுகின்றன.ஐம்பொறிகளையும் மனதையும் அடக்கும் ஆற்றல் பெற்றவன் யாரினும் உயர்ந்தவன் ஆகிறான்.இவ்வாறு உபவாசம் இருப்பது கொல்லாமைக்குக் காரணமாகிறது.இவ்வாறு நடப்பவன் , படுப்பவன்,பிற உயிர்களைக் கொன்று புசிப்பவன் ஆகிய அனைவரும் உயிர்க்குத் துன்பம் தருபவர்கள் என்று அற நூல்கள் கூறுகின்றன.
பிற உயிர்க்குத் துன்பம் செய்யாதவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.உண்பதற்கு ஏற்ற  கிழங்குகளையும்,கனிகளையும்,இலைகளையும் உண்டு ஓவியம் போல் அசைவற்று இருப்பவன் தான் இம்சை செய்யாதவன்.பொருள்களின் மீதுள்ள பற்றற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துறவு பூண்டு, வைராக்கியத்துடன், சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்பவரே பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவர் ஆவர்.இத்தகையோர் உலகில் சிலரே.மனதில் எழும் ஆசையை அகற்ற வேண்டும்.இதனால் புண்ணியம் பெருகும்.தருமமும்,அதருமமும் மனதில் எழும் எண்ணங்களாலேயே அமைகின்றன.
ஒரு உயிர் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதும், இறுதியில் முக்தி அடைவதும் மனத்தாலேதான்.முன்வினைப் பயன் காரணமாக உயிர்கள் விலங்குகளாகவும்,பறவைகளாகவும்,ஊர்வனவாகவும் பிறக்கின்றன.அவ்வாறு பிறக்கும் உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட உடல்களுடன் ஆற்றலும் வலிமையும் கொண்டு பிறக்கின்றன.அப்படிப் பிறக்கும் பிராணிகள் தம் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களைப் பெறுகின்றன.மரணமும் அப்படியே.ஒரு உயிர் எப்படி எங்கே எப்போது பிரிய வேண்டும் என்பது விதியால் அமைவதாகும்.மரணத்தை எத்தகைய மகான்களாலும்,அரசகளாலும்,வீரர்களாலும் கூட மாற்றி அமைத்து விட முடியாது.இதுவரை மரணத்தை வென்றவர் இல்லை.விதி மிகவும் விழிப்புடன் உயிர் இனங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.அதற்கு நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை.அதன் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமானவர்களே.மந்திரத்தாலோ,மருந்தாலோ,செல்வத்தாலோ,தானத்தாலோ,அரிய தவத்தாலோ,புகழாலோ,அதிகாரத்தாலோ எதனாலும் எமனை ஏமாற்ற முடியாது.எனவே..உமா..உலகில் மாற்ற முடியா மாபெரும் சக்தி மரணம்தான் என்பதைத் தெளிவாக உணர்.ஆதலால் வாழும் காலத்தில் எவ்வுயிர்க்கும் துன்பம் தராது வாழ வேண்டும்' என்றார் மகேஸ்வரன்.


Friday, August 12, 2011

162- சத்தியம் உயர்ந்த தருமம்




பீஷ்மர் தருமரைப் பார்த்து, "தருமா! மேலோர் சத்தியத்தை 13 பிரிவாகப் பிரித்துள்ளனர்.அவை உண்மை,சமதாபாவனை,தமம்,அழுக்காறு இன்மை,அமைதி,பொறுமை,உத்தமப் பொறுமை,வெறுப்பின்மை,தியாகம்,தியானம்,மேன்மை,தைரியம்,அஹிம்சை என்பனவாகும்.
உண்மை என்பது எப்போதும் நிலை பெற்றிருப்பது.அழிவில்லாதது.எல்லா அறங்களுக்கும் அடிப்படையானது.இது யோகத்தால் சாத்தியமாகும்.
சமதாபாவனை என்பது, இன்ப துன்பங்களை ஒரே விதமாக ஏற்றுக் கொள்வது.இது விருப்பு,வெறுப்பு இன்மையால் ஏற்படும்
தமம் என்பது, அச்சம் இன்மையும் சினத்தை அடக்குவதும் ஆகும்.இது ஞானத்தால் உண்டாகும்.
அழுக்காறு இன்மை என்பது பொறாமையின்மை.எப்போதும் உண்மையையே நாடுவதால் இது கைகூடும்.
அமைதி எனப்படுவது மனம்,சொல்,செயல் ஆகியவை சலனமற்று இருப்பது.இது தரும காரியங்களால் அடையப்படும்.
பொறுமை என்பது பொறுக்கக்கூடியவற்றைப் போலவே பொறுக்க முடியாதவற்றையும் பொறுத்துக் கொள்வதாகும்.சத்தியத்தைப் பின்பற்றுவதால் இதனைப் பெற முடியும்.
உத்தமப் பொறுமை என்பது, தருமத்தின் காரணமாகப் பிறர் செய்யும் எல்லாத் தீமைகளையும் பொறுத்துக் கொள்வதாகும்.மேலான பொறுமையாகிய இது மனவலிமையால் பெறக் கூடும்.
வெறுப்பின்மை என்பது பிறர் குற்றம் காணாதிருப்பது.இது ஈகையால் - தானத்தால் அமையும்.
தியாகம் என்பது, மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை - மாசுகளை அறவே துறத்தலாகும்.
தியானம் என்பது, தருமத்தை எப்போதும் சிந்திப்பதாகும்.இது எப்போதும் நல்லவனவற்றை சிந்திப்பதால் உண்டாகும்.
மேன்மை என்பது, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பதாம்.நல்லவனவற்றை ஆய்ந்து ஆய்ந்து செய்வதன் மூலம் ஒருவன் மேன்மை அடையக்கூடும்.
தைரியம் என்பது கீழான சிந்தனைகளை ஒழித்தலாகும்.இது சினத்தை அடக்குவதாலும், அச்சத்தை அகற்றுவதாலும் ஏற்படும்.
அஹிம்சை என்பது மனம்,வாக்கு,செயல் இவற்றால் பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல்.அன்புடைமையாலும் அருளுடைமையாலும் ஒருவர் அஹிம்சையை பின்பற்ற முடியும்.
இப்படி பதின்மூன்று பிரிவாகப் பேசப்படும் சத்தியமே அனைத்து அறங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்' என்று உரைத்தார்.

Thursday, August 11, 2011

161-கணவனை வயப்படுத்தும் வழி




கணவனை வயப்படுத்தும் வழி யாது? என்று வினவிய சத்யபாமாவிற்கு திரௌபதி உரைத்தது..

நீண்ட நாட்களுக்குப் பின் சத்யபாமாவும் திரௌபதியும் சந்தித்தனர்.கண்ணனின் மனைவியான சத்யபாமா திரௌபதியை நோக்கி..'புகழ் மிக்க பாண்டவர்களை நீ எவ்வாறு வயப்படுத்தினாய்? இதற்குக் காரணம் உனது விரதமா?தவமா? மந்திரமா? வயப்படுத்தும் மை ஏதேனும் வைத்துள்ளாயா?பாண்டவர் ஐவரும் உன்னைக் கண்டு மயங்கிக் கிடக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? கண்ணபிரான் எப்போதும் என் வயப்பட்டு இருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் எனக்கு சொல்' என்றாள்.
'சத்யா..கெட்ட பெண்களின் நடத்தைப் பற்றி நான் ஏதும் கூற மாட்டேன்.நல்ல மாதர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் உரைக்கின்றேன்.மந்திரத்தாலோ,மாயையாலோ, மூலிகையாலோ தன்னை வயப்படுத்தும் மனைவியைக் காணும் கணவன் பாம்பைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவான்.மனைவிக்கு பயப்படும் கணவனுக்கு மன அமைதி இல்லை.அமைதியில்லை என்றால் இன்பம் ஏது!"கெட்ட நடத்தையுள்ள பெண்கள்  கணவனுக்கு தீங்கிழைக்கின்றனர்.கணவனுக்கு விருப்பமில்லா எதையும் மனைவி செய்யக் கூடாது..
நான் என் கணவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறை பற்றிச் சொல்கிறேன்.என்னிடம் சிறிதும் கர்வமில்லை.ஆசையும் இல்லை.சினமும் இல்லை.பொறாமை என்பது கிஞ்சித்தும் இல்லை.என் மனதைக் கட்டுப்பாடுடன் வைத்துள்ளேன்.தகாத சொற்களைச் சொல்வதில்லை.அதிகமாகவும் ஏதும் கூறுவதில்லை.கணவரின் மனம் அறிந்து நடக்கிறேன்.சூரிய, சந்தரருக்கு இணையான என் கணவர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.கணவரைத் தவிர மற்றவரை அவர்கள் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்.கணவர் உணவின்றி இருந்தாலும் நானும் அவ்வாறே பட்டினி கிடப்பேன்.வெளியேயிருந்து கணவர் வீடு திரும்பியதும் தக்கவாறு உபசரிப்பேன்.தூய உணவை உரிய காலத்தில் அளிக்கிறேன்.எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேன்.சோம்பல் என்பது என்னிடம் துளியும் இல்லை.
கணவர் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் என்னை அழகு படுத்திக் கொள்வதில்லை.நீராடேன்..பூச்சூடேன்.பூமி போன்ற பொறையுடைய என் மாமியாரை மிகுந்த மரியாதையுடன் கவனித்துக் கொள்கிறேன்.என் கணவர் சத்தியம் தவறாதவர்.நானும் அவ்வாறே உண்மையைக் கடைப்பிடிக்கிறேன்.குடும்பத்தின் வரவு செலவுகளையும் நானே கவனித்துக் கொள்கிறேன்.பின் தூங்கி முன் எழுவேன்..இப்படித்தான் என் கணவரை நான் வயப்படுத்தித் திருப்தி செய்கிறேன்.இது போலவே நீயும் நடந்துக் கொள்வாயாயின் உன் கணவரான கண்ணன் உன்னை விட்டுப் பிரியவே மாட்டார்.' என்றாள் பாஞ்சாலி.
சத்யபாமா திரௌபதியின் சொல் கேட்டு, வாழ்த்தி விடை பெற்றாள்.

Tuesday, August 9, 2011

160-தரும வியாதர் உரைத்த நீதிகள் - 5



வீட்டின் உள்ளே நான்கு அறைகள் இருந்தன.வீடு ஒரு கோயில் போல விளங்கியது.கோயிலில் உள்ள தெய்
வம் போல இருந்தனர் தரும வியாதரின் பெற்றோர்.தெய்வத்தை வழி படுவது போல பெற்றோரை வணங்கி வழிபட்டார் தரும வியாதர்.
'மகனே நீ நீடூழி வாழ்க.நீ நல்ல ஞானத்தை அடைந்திருக்கிறாய்.நாங்கள் உன்னால் உபசரிக்கப் பட்டு தேவ சுகத்தை இங்கேயே அடைந்துள்ளோம்.எங்களைத் தவிர உனக்கு வேறு தெய்வம் இல்லை எனபதை நாங்கள் அறிகிறோம்.உன் நல் ஒழுக்கத்தைக் கண்டு பாட்டனாரும்.முப்பாட்டனாரும் மிகவும் மகிழ்ந்துள்ளனர்.நீ மனத்தாலும்,சொல்லாலும்,செயலாலும் ஒரே தன்மையுடையவனாய் இருக்கிறாய்.ஜமதக்கினி தன் தந்தை பரசுராமரை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொண்டாரோ அப்படி நீ எங்களைக் கவனித்துக் கொள்கிறாய்' என தரும வியாதரின் பெற்றோர் அவரை மிகவும் பாராட்டினர்.
பின், தரும வியாதர் தன் பெற்றோரை கௌசிகனுக்கு அறிமுகம் செய்தார்.
பின் தரும வியாதர் கௌசிகனிடம்' தாய் தந்தையர் தான் நான் வணங்கும் தெய்வங்கள்.தேவர்கள் தேவேந்திரனை எப்படி வழிபடுகிறார்களோ அப்படி இவர்களை நான் வழிபடுகிறேன்.உயர்ந்த பொருள்களைக் கொண்டு இவர்களை ஆராதிக்கிறேன்.எனக்கு நாங்கு வேதங்களும் இவர்களே.என் மனைவியோடும், மகனோடும் இவர்களுக்கு நானே பணிவிடை செய்கிறேன்.இவர்களுக்கு பிரியமில்லாத எதையும் நான் செய்வதில்லை.உலகில் மேன்மை அடைய வேண்டுமாயின் தாய் தந்தையரை போற்ற வேண்டும்' என்றார் தரும வியாதர்.
அவர் மேலும்,'நீர் மிதிலை சென்று தரும வியாதரைக் காண்பீராயின் அவர் உமக்குத் தருமங்களைக் கூறுவார்' என அக் கற்புக்கரசி சொன்னாள்.இதை என் ஞானத்தால் நான் அறிந்தேன்' என்றார்.
கௌசிகன் தரும வியாதரிடம்' தூய விரதம் உடையவரே! பத்தினியின் சொற்களை அப்படியே உரைத்த உம்மை நான் சிறந்த தவசியாகக் கருதுகிறேன்' எனப் பாராட்டினார்.
தரும வியாதர், "கௌசிகனே..அந்தப் பத்தினி தருமங்களை அறியும் பொருட்டு உம்மை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்.இவை அனைத்தும் அவளுக்குத் தெரியும்.ஆயினும் என் மூலமாகவே நீர் மேன்மை அடைய வேண்டும்..என்பது அவளது எண்ணம்.நீர் நான் சொல்வதைக் கேட்பீராக! நீர் உம் தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாக்கவில்லை.அவர்களின் அனுமதியின்றி வேதப் பயிற்சி பெற வீட்டை விட்டுச் சென்று விட்டீர்.உம்மைப் பிரிந்த துயரத்தால் அவர்கள் அழுது அழுது கண் குருடாயினர்.அவர்களைப் போற்றிப் பாதுகாக்க செல்வீராக' என்றார்.
கௌசிகனும், 'நான் செய்த நல்வினையால் இங்கு வரும் வாய்ப்பினைப் பெற்றேன்.இத்தகைய அறத்தைப் போதிப்பவர் உம்மைத் தவிர வேறு யாருளர்.இப்போது நான் நரகத் துன்பத்திலிருந்து கரையேறி விட்டேன்.உம்மை ஒன்று வேண்டுகிறேன்.சென்ற பிறவியில் உமது நிலை என்னவாக இருந்தது? அதையும் தெரிவிக்க வேண்டும்.அதைத் தெரிந்து கொண்டு என் ஊர் திரும்பி என்னைப் பெற்றோரை நங்கு பாதுகாப்பேன்" என்றான்.
"முற்பிறவியில் நடந்ததைக் கூறுகிறேன்.நான் முற்பிறவியில் அந்தணனாகப் பிறந்தேன்.வேதங்களைக் கற்று பண்டிதன் ஆனேன்.ஆயினும் என் பாவ கர்மத்தால் ஒரு பெரும் குற்றம் நேர்ந்து விட்டது.அரசனுடன் காட்டிற்குச் சென்ற போது, நான் ஒரு அம்பு செலுத்த, அது ஒரு முனிவர் மீது பாய்ந்தது.முனிவர் கடும் சினம் கொண்டார்.நான் விலங்கு என எண்ணி இப்படிச் செய்து விட்டேன்! பொறுத்தருளுவீர்..!! என மன்றாடினேன்.ஆயினும் சினம் தணியாத அம்முனிவர் "நீ வேடனாக பிறப்பாயாக!" என சபித்தார்.அதனால் இப்பிறவியை அடைந்தேன்' என்றார் தரும வியாதர்.
அது கேட்டு கௌசிகன்.."தரும வியாதரே! நீர் அந்தணர் குலத்தில் பிறக்கவில்லை என்பது உண்மை..ஆனாலும் அவர்களைவிட மேலான ஒழுக்கமுள்ளவராக உம்மை மதிக்கிறேண்.அந்தணன் என்பவன் யார்" யார் அறத்தைப் போற்றி பின்பற்றுகிறாரோ அவரே அந்தணர் ஆவார்.பிறப்பால் ஒன்றுமில்லை.அவரவர் ஒழுக்கத்தால் தான் போற்றப்படுகிறார்கள்...என்பதை நங்கு புரிந்து கொண்டேன்.அறிவைவிட உயர்ந்த ஞான ஒளி உம் முகத்தில் பிரகாசிக்கிறது.தருமத்தின் மீது பற்றுள்ளவரே, நான் விடை பெறுகிறேண்' என கைகளைக் கூப்பி வணங்கினான்.
தரும வியாதரும் விடை கொடுத்தார்.
வீடு சென்ற கௌசிகன் தாய் தந்தையரைக் கண் போல பாதுகாத்து வந்தான்.
இக் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டருக்கு உரைத்தார்.இதன் மூலம் கற்பின் சிறப்பும், தாய் தந்தையரை பாதுகாக்கும் அவசியமும்,பிறப்பால் மேன்மையில்லை, ஒழுக்கத்தால்தான் மேன்மையடையமுடியும் என்பன போன்ற நீதிகள் உணர்த்தப்பட்டன.

Sunday, August 7, 2011

159-தரும வியாதர் உரைத்த நீதிகள்- 4



கௌசிகன், தரும வியாதரை நோக்கி, 'உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது? ' என வினவ, தரும வியாதர் கூறலானார்...
'உயிர் கர்ப்பத்தில் சேரும் போதே புண்ணீய பாவ கர்மமும் அதனுடன் சேர்ந்து விடுகின்றன.அவ்வாறு கர்ப்பத்தில் சேரும் நல்வினைப் பயனால் நல்ல பிறப்பும், தீவினைப் பயனால் தீய பிறப்பும் உண்டாகின்றன.தான் செய்த வினைக்கு ஏற்பப் பிறப்பு,இறப்பு, பிணி,மூப்பு,துன்பம் ஆகியவற்றைச் சம்சாரத்தில் உயிர்கள் அனுபவிக்கின்றன.கர்மத் தொடர்பு காரணமாகவே உயிர்கள் ஆயிரக்கணக்கான விலங்கு கதிகளில் பிறப்பதும் நரகத்தை அடைவதுமாக மாறி மாறி அல்லல்படுகின்றன.கர்மத் தொடர்பினால் பிறப்பு இறப்புகளில் பலவகையான துன்பங்களை அடைந்து சக்கரம் போல உயிர்கள் சுழல்கின்றன.
அறவோன் இன்பக் காரியங்களில் இன்பத்தை அனுபவிக்கிறான்.தருமத்தின் நிழலில் தங்குகிறான்.தருமம் செய்து சம்பாதித்த பொருளைக் கொண்டு மேன் மேலும் தருமம் செய்து புண்ணியத்தை ஈட்டுகிறான்.தருமத்தையே எப்போதும் செய்துக் கொண்டு தருமம் என்னும் மரத்தி அடிவேரில் ஈரத்தன்மையை உண்டாக்குகிறான்.அதனால் புண்ணியப் பலன் பூவாகி, காயாகி,கனியாகி அவனைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.மறுமையிலும் அவன் இன்பம் தொடர்கிறது.ஒரு ஞானி விருப்பு, வெறுப்புக் கொள்வதில்லை.படிப்படியாக மோட்ச மார்க்கத்தில் சென்று முக்தி அடைகிறான்' என்றார் தரும வியாதர்.
'தரும வியாதரே! நல்வினை, தீவினைகளைப் பற்றி மேலும் விளக்க வேண்டும்' என கௌசிகன் கேட்டான்.
வியாதர் கூறினார்,'ஔ மனிதனுக்கு ஒரு பொருளைக் கண்டவுடன் அதனைப் பெற மனம் விழைகிறது.பல வழிகளில் முயன்று அதனை அடைகிறான்.அதனை அனுபவிக்கையில் மேன் மேலும் ஆசை உண்டாகிறது.மேன் மேலும் அப்பொருளை நாடி அலைகிறான்.ஆசைக்கு இடையூறு ஏற்படுகையில் சினம், ஆத்திரம் முதலிய தீய பண்புகள் உண்டாகின்றன.இவற்றால் கவரப்படும் மனிதனின் புத்தி நலத்தைப் பற்றி எண்ணுவதில்லை.அந்த மனிதன் வஞ்சனையாகத் தர்மவானைப் போல வேஷம் போட்டு பணத்தைத் திருடுகிறான்.இப்படிப் பொருள் சேர்த்ததும் கர்வம் அடைகிறான்.அப்போது யார் அறிவுரைகளும் அவன் காதில் விழுவதில்லை.ஆகமத்தில் இல்லாததை எல்லாம் இருப்பதாகச் சாதிக்கிறான்.பொருளாசையால் அதருமம் மூன்று வகையில் தோன்றுகிறது.பாவத்தை அவன் மனம் சிந்திக்கிறது.வாய் பேசுகிறது.கை செய்கிறது.அவன் எப்போதும் அதருமத்தில் மூழ்கிக் கிடப்பதால் அவனது நற்குணங்கள் அனைத்தும் அழிகின்றன.இத்தகையொனுக்கு இதே குணங்கள் உள்ளவனே நண்பனாகிறான்.இதனால் பாவம் மேலும் துணிந்து செயல் படுகிறது.
இவற்றையெல்லாம் எவன் சான்றோர் மூலமாகவும் அறிந்து கொள்கிறானோ அவன் நற்செயல்களைச் செய்வதிலும், பெரியோரைப் போற்றுவதிலும் சிறந்தி விளங்குகிறான்.அவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.எவன் ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்கிகிறானோ அவன் இன்பம் அடைகிறான்.இந்த உடல் ஒரு தேர்.ஐம்பொறிகளும் அதில் பூட்டப்பட்ட குதிரைகள்.உயிரே அவற்றை இயக்கும் சாரதி.இந்த ஐந்து குதிரைகளையும் அடக்கி ஆள்பவன் நல்ல நிலையை அடைவான்' எனத் தரும வியாதர் உரைத்தார்.
"உம்மால் பலவற்றை நான் அறிந்து கொண்டேன்.இவற்றால் நான் பெரிதும் பயன் அடைந்தேன்..விடை பெறுகிறேன்" என்றான் கௌசிகன்.
அது கேட்ட வியாதர்.."நீர் எம் வீட்டிற்கு வர வேண்டும்.வந்தால், புண்ணீயப் பலனைக் கண்கூடாக பார்த்து அறிந்து கொள்வீர்' என்றார்.சம்மதித்த கௌசிகரை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு விரைந்தார் தரும வியாதர்.வீட்டில் அவரது முதிய தாய்-தந்தையருக்குச் செய்யும் பணிவிடைகளை அவன் வியக்குமாறு எடுத்துரைத்தார்.இதுவே நான் செய்யும் புண்ணிய காரியம் என்றார்.
மேலும் சொன்னவை அடுத்த பதிவில்..
(தொடரும்)

Tuesday, August 2, 2011

158-தரும வியாதர் உரைத்த நீதிகள் -3



மேலும் தருமவியாதர் கூறலானார்..
நான் செய்யும் தொழில் பாராட்டத்தக்கது அல்ல.உண்மையில் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.முற்பிறப்பில் செய்த தீவினையினால் இப்பிறப்பில் இத் தொழிலைச் செய்கிறேன்.விதி வலிமை மிக்கது.யாராலும் அதை அடக்க முடியாது.பிறப்புக் காரணமாக இத் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறேன்.அறவோரை போற்றி வணங்குகிறேன்.தருமத்தில் பற்றுடையவனாக இருக்கின்றேன்.எப்போதும் நான் செருக்குக் கொள்வதில்லை.நான் அதிகமாகப் பேசுவதுமில்லை.நான் பயிர்த் தொழிலை மேலானதாகக் கருதுகின்றேன்.அதிலும் ஜீவஹிம்சை உள்ளது.கலப்பைக் கொண்டு உழுகையில் பூமியில் உள்ள உயிர்கள் நாசம் அடைகின்றன..
மனிதர்களில் சிலர் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.நடக்கையில் பல உயிர்கள் மிதிப்பட்டு இறக்கின்றன.உட்கார்ந்திருப்பவர்களும்,படுத்திருப்பவர்களும் தங்கள் உடல் அசைவினால் பல உயிர்களைத் தாங்கள் அறியாமலேயே கொல்கின்றனர்.
உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது உயரிய தருமம்தான்.ஆனால் உலகம் முழுதும் பிராணிகளைக் கொன்று ஜீவிக்கும் பிராணிகள் தான் அதிகம் உள்ளன.கொல்லாமையே உயர்ந்தது என்னும் சாதுக்கள் கூடத் தம்மை அறியாமல் பிற உயிர்கலுக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்.உலகில் பலவகை மனிதர்கள் உள்ளனர்.உறவினர்கள் செல்வம் உடைய உறவைப் பார்த்து மகிழ்வதில்லை.செருக்கு மிக்கவர்கள் குருவையே அவமதிக்கின்றனர்.தருமத்துடன் பல செயல்கள் நடைபெறுகின்றன.அதே சமயம் தருமமும் அதருமமும் கலந்த நிகழ்வுகலும் நிகழ்கின்றன.எவன் ஒருவன் தன் தொழிலை நேர்மையுடன் செய்கிறானோ அவன் சுவர்க்கம் செல்வது உறுதி' என்றார் வியாதர்..
பின்னர் தரும வியாதர் முயற்சியை விட விதியைப் புகழ்ந்து பேசினார்.நன்மை, தீமைகளே இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்றார்.
தருமத்தின் சூட்சுமத்தைச் சுலபமாக யாராலும் உணரமுடியாது.அது பல நேரங்களில் பல வகையாகக் காட்சியளிக்கிறது.பொய் சொல்வதால் நன்மை ஏற்படுமாயின் அந்தப் பொய் பழிக்கப்படாது.அதனால் பாவமும் நேராது.அந்தப் பொய் உண்மையாகவே எண்ணப்படும்.சில நேரங்களில் உண்மை பேசுவதால் பொய்யால் நேரும் பாவம் உண்டாகக்கூடும். ஆதலால் 'எந்தப் பேச்சு உயிருக்கு இன்பம் தருமோ அந்தப் பேச்சு சத்தியமானது.' என்று சான்றோர் அறம் கூறினர்.அது உண்மையா பொய்யா என்பதல்ல, முக்கியம்.அது பிற உயிருக்கு நன்மை தருமா, தராதா என்பதே முக்கியம்.உயிருக்கு உண்மை தராத உண்மைப் பேச்சு அதருமம் எனக் கருதப்படும்.
யாராக இருந்தாலும் நன்மை தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இதில் ஐயமில்லை.மனிதன் கெட்ட நிலையை அடைந்தால் செல்வத்தைப் பழிக்கிறான்.அது தனது கர்மப் பலன் என உணர்வதில்லை.
ஊழ்வினை என ஒன்று இல்லையானால், மக்கள் இறக்கமாட்டார்கள்.முதுமை அடைய மாட்டார்கள்.அவரவர் விரும்பியதைப் பெற்று மகிழ்ச்சியடைவர்.ஒவ்வொருவரும் மற்றவரைவிட உயர்வாகவே இருக்க விரும்புகின்றனர்.முயல்கின்றனர்.ஆனால் எண்ணம் போல ஏதும் நடப்பதில்லை.ஆன்மா என்பது தோன்றுவதும் இல்லை..அழிவதும் இல்லை.எல்லா உயிர்களின் உடலும் அழியக் கூடியவை.உடல் கொல்லப்படுமாயின் அந்த உடலுக்கு மட்டுமே அழிவு ஏற்படுகிறது.உயிரோ முன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, மீண்டும் ஓர் உடலை அடைகிறது.
அவன் இறந்தான்..அவன் பிறந்தான் என பேசப்படுவது எல்லாம் உயிரைப் பற்றி அன்று.அழிவு உடலுக்குத்தான்.உயிருக்கு அல்ல.உடல் அழிகையில் உயிர் பிரிகிறது என்பதெல்லாம் தவறு.உயிர் இப்போதுள்ள உடலைவிட்டு வேறோரு உடலை அடைவதையே மரணம் என்கிறார்கள்.இவ்வுலகில் ஒருவர் செய்த வினைப்பயனை இன்னொருவன் அனுபவிப்பதில்லை.அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அவரவரே அனுபவிக்கின்றனர்.அதனால் நல்லோர் நல் செயல்களையே செய்கின்றனர்.தீயோர் தீய செயல்களையே செய்கின்றனர்.இவ்வுலகில் புண்ணிய பாவங்களுக்கு ஏற்பப் பிறவி ஏற்படுகிறது.அவன் மனிதனாகத்தான் பிறக்கின்றான் என்பதில்லை.வினைக்கு ஏற்ப நாயாகவோ,பூனையாகவோ,ஈயாகவோ,எறும்பாகவோ,மரமாகவோ,தேவனாகவோ பிறக்கிறான்' என்றார் தரும வியாதர்.
பின் அவரை நோக்கி கௌசிகன், 'தருமமுணர்ந்தவரே! உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது' என வினவ தரும வியாதர் சொன்னது அடுத்த பதிவில்..
(தொடரும்)