Monday, September 28, 2009

64-ஆறாம் .ஏழாம், எட்டாம் ..நாட்கள் போர்

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான்.பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார்.ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர்.பீமன் அன்று சிறப்பாக போரிட்டான்.பகைவர்களக் கொன்று
குவித்தான்.துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான்.அதைக் கண்ட பீமன் 'துரியோதனா..நீ இங்குத்தான் இருக்கிறாயா?உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன்..இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது' என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான்.பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான்.சூரியன் மறைய அன்றைய போர் நின்றது.

ஏழாம் நாள் போர்
ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான்.'எனது அச்சமும்..சோர்வும் என்னைவிட்டு அகவில்லை.உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன்'எனக் கெஞ்சிக் கேட்டான்.பீஷ்மர்..தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார்.துரியோதனன்..உடலெங்கும் புண்பட்டு வருந்தினான்.

துரோணருக்கும் விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான்.ஒரு புறம் நகுலனும்,சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர்.அவன் மயக்கம் அடைந்தான்.பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான்.கடுமையாய் இருந்த போர் ..சூரியன் மறைய முடிவுக்கு வந்தது.அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது.

எட்டாம் நாள் போர்
பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார்.அது கடல் போல் காட்சி அளித்தது.நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான்.இது வலுவானது.பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது.பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.அது கண்டு துரியோதனனும்,திருதிராட்டிரனும் வருந்தினர்.கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

அன்று நடந்த போரில் பீமன் யனைப் படையை அழித்தான்.கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான்.துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து,,அவன் தேரை அழித்தான்.அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான்.ரத்தம் பீரிட்டது.ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான்.கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர்.பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான்.பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.இதுவரை..பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான்.இரவு வர அன்றைய போர் நின்றது.

அடுத்த பதிவு ஒன்பதாம் நாள் போர்.

Friday, September 25, 2009

63-நான்காம்,ஐந்தாம் நாள் போர்

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார்.ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார்.அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டானர்ச்சுனன்.அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.அவனைப் பூரிசிரவசு,அஸ்வத்தாமா,சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன்..துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான்.தன் கதையால் யானைகளை வீழ்த்தினான்.பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான்.துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர்.

தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.

நான்காம் நாள் போர் நின்றது.பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன்'நீங்களும்,துரோணரும்,கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே!பல வீரர்கள் உயிர் இழந்தனரே1பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'என்றான்.

'இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன்.எங்கு கண்ணன் உள்ளாரோ..அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது.இப்போதும் காலம் கடந்து விடவில்லை.போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை.இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய்'என்றார் பீஷ்மர்.

துரியோதனன் இணங்கினான் இல்லை.

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும்.திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான்.இது பருந்து போன்றது.பல ஆயிரம் பேர் மாண்டனர்.துரியோதனன் துரோணரைப் பார்த்து' குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள்.உம்மையும்,பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்' என்றான்.

அதற்கு துரோணர் 'பாண்டவரிடம் பகை வேண்டாம்..என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை.ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன்' என்றார்.

சாத்யகியும்,பீமனும் துரோணருடன் சண்டையிட..அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான்.அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான்.கிருபர் தன் தேரை பாதுகாப்பாக வேறிடம் கொண்டு சென்றார்.

சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

ஆறாம் நாள் போர் அடுத்த பதிவில்..

Wednesday, September 23, 2009

62-மூன்றாம் நாள் போர்

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது.அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார்.படைகளை கருட வியூகமாக அமைத்தார்.அதன் தலைப்பக்கம் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,அஸ்வத்தாமா,சல்லியன்,பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர்.துரியோதனன்..அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான்.அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான்.அவன் வலப்பக்கமாக நின்றான்.அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும்,அர்ச்சுனனும் நின்றனர்.தர்மர் இடையில் நின்றார்.மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர்.அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.பீமன் ,துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான்.ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று 'உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால்..என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்' என்றான்.

அது கேட்டு நகைத்த பீஷ்மர்..'உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன்.பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது.என் ஆற்றல் முழுதும்..ஆயினும் உனக்கே தருவேன்..'என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார்.கௌரவர் படை உற்சாகம் அடைந்தது.பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.அர்ச்சுனன் உள்பட அனைவரும்..தளர்ந்து காணப்பட்டனர்.

கண்ணன் அர்ச்சுனனிடம்' அர்ச்சுனா ..என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா?'என்றார்.

உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால்..பீஷ்மரின் வில்லை முறித்தான்.பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார்.எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார்.பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன.ஆனால்..அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.

பீஷ்மர் மீது கொண்ட அன்பினால்..அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன்..தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனார்.சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார்.இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார்.''கண்ணன் கையால் மரணமா?அதை வரவேற்கிறேன்' என்று தூய சிந்தனை அடைந்தார்.

அர்ச்சுனன் ..கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி...ஓடோடி கண்ணனிடம் சென்று..காலைப் பிடித்துக் கொண்டு..'நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்.நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச் செயலா?அப்படியாயின் இதோ புறப்பட்டேன்..சினம் வேண்டாம்'என வேண்டினான்.

கண்ணனின் ஆவேசம் தணிந்தது.பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது.யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர்.

மாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

நான்காம் நாள் போர்..அடுத்த பதிவில்..

Sunday, September 20, 2009

61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்

விதிமுறைகளுக்கு உட்பட்டுப் போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.

பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.

ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்..

முதலாம் நாள் போர்

முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது.ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும்.இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன.கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர்.துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான்.தருமர் பின் புறத்தில் நின்றார்.திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர்.கண்ணபிரான் தேரை ஓட்ட..அர்ச்சுனன்..பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான்.பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார்.மற்றொரு புறம்..துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர்.திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான்,அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன்..கலிங்கப் படையை ஏவினான்.ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான்.அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார்.அவரை அபிமன்யூவும்..சாத்யகியும் சேர்ந்து தாக்கினார்.அவர்களது தாக்குதலால்..பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின.இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை.அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான்.அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது.

Sunday, September 13, 2009

60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)

அர்ச்சுனன் மனக் கலக்கம் கண்டு கண்ணன் கூறலானார்.
'அர்ச்சுனா..வருந்தாதே..தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள்..இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை.இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள்.அவர்கள் உயிர் அழிவதில்லை.இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை,அழகு,முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும்.இப்படி தோன்றுவதும்..மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர்.இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால்..இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது.இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ச்சுனா..உடல் அழிவுக்கு கலங்காதே..உயிர் அழியாது.தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும்.ஆத்மா கொல்வதும் இல்லை...கொல்லப்படுவதும் இல்லை.ஆகவே கலங்காது..எழுந்து போர் செய்.கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை..இறப்பும் இல்லை.இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று.இது என்றும் இறவாதது.என்றும் பிறவாதது.அதாவது உடல் கொல்லப்பட்டாலும்..உயிர் கொல்லப்படுவதில்லை.

நைந்து போன ஆடைகளை விடுத்து..புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது.எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது.உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை.வெட்டினாலும்,குத்தினாலும்,தரதர என இழுத்துப் போனாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை.ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்?அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும்..இறந்தவர் பிறப்பதும் இயல்பு.அதற்காக ஏன் வருத்தம்.இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது.ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மைத்து.எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது.ஆகவே ..நீ யாருக்கும் வருந்த வேண்டாம்.தவிர்க்க இயலா போர் வந்து விட்டது.வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது.சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய்.இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள்.இங்கு நீ தயக்கம் காட்டினால்..புகழை இழப்பாய்.அத்துடன் மட்டுமின்றி..அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள்.போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர்.உனக்கு அந்த இழுக்கு வரலாமா?இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை.வென்றால் இந்த மண்ணுலகம்..வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம்.இதனை மறக்காது துணிந்து போர் செய்..

வெற்றி..தோல்வி பற்றியோ..இன்ப துனபம் பற்றியோ..இலாப நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய்.பழி,பாவம் உன்னைச் சாராது.புகழும்,புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்' என கண்ணன் தமது உரையை முடித்தார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும்..பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது.அவன் கண்ணனை வணங்கி..'அச்சுதா..என் மயக்கம் ஒழிந்தது.என் சந்தேகங்கள் தீர்ந்தன.இனி உன் சொல் படி நடப்பேன்' எனக்கூறி போரிடத் தயாரானான்.

**** **** ****

இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

அவை வருமாறு

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.
ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது
புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது
இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது
அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது
யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும்,குதிரைப் படையுடன்..குதிரைப் படையும்,காலாட் படையுடன்..காலாட்படையும் போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்ட போது..சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

Sunday, September 6, 2009

59 - அர்ச்சுனனின் மனகலக்கம்

பீஷ்ம பருவம் (பீஷ்மரின் வீழ்ச்சியை உரைப்பது)

குருக்ஷேத்திரத்தில் இரு திறத்துப் படைகளும் அணி வகுத்து நின்றன.தனக்குச் சாரதியாக இருக்கும் கண்ணனை நோக்கி அர்ச்சுனன் 'பரந்தாமா! தேரை விரைவாகச் செலுத்து..என் எதிரில் போர் செய்வது யார் என்பதை தெரிந்து கொள்ள வெண்டும்.துரியோதனனுக்கு துணையாக வந்திருப்போரைக் காணவேண்டும்' என்றான்.

பார்த்தசாரதியும்..தேரினை கௌரவர் படைமுன் செலுத்தினார்.அப்போது பீஷ்மரையும்,துரோணரையும்,துரியோதனனையும்,அவன் தம்பியர்களையும்,நண்பர்களையும்,எண்ணற்ற வீரர்களையும் அர்ச்சுனன் கண்டான்.உள்ளம் கலங்கினான்.'பாட்டனார் பீஷ்மரையா கொல்லப் போகிறேன்..குரு துரோணாச்சாரியாரையா கொல்லப் போகிறேன்..துரியோதனன் முதலியோர் என் பெரியப்பா மகன்கள்..என் சகோதரர்கள் ..இவர்களையா கொல்ல வேண்டும்..இந்த இரக்கமற்ற பழியையையும்..பாவத்தையும் ஏற்கவா பிறந்தேன்?' என்றான்.

'கண்ணா..என் உடல் நடுங்குகிறது..உள்ளம் தளர்கிறது..என்னால் நிற்க முடியவில்லை..கால்கள் நடுங்குகின்றன..காண்டீபம் கை நழுவுகிறது.போரில் சுற்றத்தாரைக் கொன்று பழியுடன் வரும் நாட்டை நான் விரும்பவில்லை...உறவினரையா கொல்வது'

துரியோதனன் பாவிதான்..அவனைக் கொல்வதால் என்ன பயன்..சுற்றத்தைக் கொல்லும் பாதகத்தை என்னால் எண்ண முடியவில்லை.உறவினர்கள் பிணமாகக் கிடக்கும் போது..நாம் இன்பம் காண முடியுமா?என்னால் இந்த போரை ஏற்க முடியவில்லை.'

என்றெல்லாம் கூறியவாறு..கண்ணீர் மல்க ..தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான்..காண்டீபன்.

அர்ச்சுனனின் குழப்பத்தை உணர்ந்த கண்ணபிரான்..'அர்ச்சுனா..இந்த நேரத்திலா கலங்குவது? வீரர்க்கு இது அழகா..பேடியைப் போல நடந்துக் கொள்ளாதே!மனம் தளராதே! எழுந்து நில்' என்றார்.

அர்ச்சுனன்' பீஷ்மரையும்..துரோணரையும் எதிர்த்து எவ்வாறு போரிடுவேன்?அதைவிட பிச்சை எடுத்து வாழலாம்..இவர்களை எல்லாம் இழந்தபின்..ஏது வாழ்வு?அதனால் பெருமை இல்லை..சிறுமைதான்..
எனக்கு எது நன்மையை உண்டாக்கும்..உன்னை சரணடைந்தேன்..நல்வழி காட்ட வேண்டும்' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனிடம் கூற ஆரம்பித்தார்...