Tuesday, July 28, 2009

52- கௌரவர்கள் ஓடினர்.

பின் அர்ச்சுனன் ஊர்வசியை நினைத்துத் தனது பேடி உருவம் நீங்கினான்.தேரில் இருந்த சிங்கக் கொடியை இறக்கிக் குரங்கின் சின்னக் கொடியை ஏற்றினான்.

வருவது..அர்ச்சுனன் என்பதை அனைவரும் அறிந்தனர்.'யாரானால் என்ன..போர் தொடரட்டும்' என்றான் துரியோதனன்.

'நானே அர்ச்சுனனைக் கொல்வேன்' என்றான் கர்ணன்.

அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஒரே சமயத்தில் செலுத்தினான்.அவற்றுள் ஒன்று..துரோணரின் பாதத்தில் விழுந்து குரு வணக்கம் செலுத்தியது.மற்றொன்று அவர் காதோரம் சென்று..போரிட அனுமதியும், ஆசியும் வேண்டியது.முதல் கடமையாக பசுக்களை மீட்க..சரமாரியாக அம்பெய்தினான்.பேரொலி கேட்ட பசுக்கள் பகைவரின் பிடியிலிருந்து தப்பி ஓடித் தங்கள் பண்ணையை அடைந்தன.கிளர்ந்து எழுந்த கௌரவ வீரர்களைக் கடந்து..கர்ணனைத் தாக்கினான், அர்ச்சுனன்.எதிர் நிற்க முடியாது..போர்க்களத்தை விட்டு கர்ணன் ஓடினான்.பின்னர் துரோணர்..அஸ்வத்தாமன் ,கிருபாச்சாரியார்..ஆகியோர் எதிர்க்கமுடியாது தலைக் குனிந்தனர்.

பின்னர்..பீஷ்மருடன் அர்ச்சுனன் போரிட்டான்.பிதாமரும் சோர்ந்து திரும்பினார்.பின்..துரியோதனனும் சிறிது நேரமே போர் புரிந்தான்.பின் தோற்று ஓடினான்.

துரியோதனா..நில்..நீ ஒரு வீரனா?உனக்கு மானம் இல்லையா? என அவன் மான உணர்ச்சியைத் தூண்டினான் பார்த்திபன்.பின் மோகனாஸ்திரத்தால்..அர்ச்சுனன் அனைவரையும் மயங்கச் செய்தான்.பின் அர்ச்சுனன் பீஷ்மரைத் தவிர மற்றவர்கள் அணிந்திருந்த பட்டுத் துணிகளை கவர்ந்து வருமாறு உத்திரனிடம் கூறினான்.அவனும் அவ்வாறே செய்தான்.

மோகானாஸ்திரத்தால் மயங்கி விழுந்தவர்கள்..மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள்..தோல்வியால் மனம் உடைந்தனர்.வெட்கத்தோடு அஸ்தினாபுரம் திரும்பினர்.

வெற்றி வீரர்களாக விஜயனும்..உத்தரனும் விராட நகரம் வந்தார்கள்.வரும் வழியில்..முன்பிருந்தபடியே ஆயுதங்களை ஒளித்துவைத்தனர்.அர்ச்சுனன் மீண்டும் பிருகன்னளையாகி தேர் ஓட்டிச்சென்றான்.

தென்திசையில்..திரிகர்த்த மன்னன் சுசர்மாவைத் தோற்கடித்து..வெற்றிவாகை சூடிய மன்னனை வரவேற்க விராட நகரம் தயாராகயிருந்தது.அப்போதுதான் தன் மகன் உத்தரன் காணப்படாததைக் கண்டு..விராட மன்னன் வினவ..அவன் வடதிசையில் கௌரவர்களை எதிர்க்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மன்னன் திகைத்தான்.'அங்கு மாவீரர்களான பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோரை எப்படி என் மகன் வெல்வான்?' எனக் கவலையுற்றான்.

அப்போதுதான் மகனின் வெற்றிச் செய்தி மன்னனுக்கு எட்டியது.மிகச் சிறந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான்.

Monday, July 20, 2009

51-அர்ச்சுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல்

துரியோதனன் தனக்குத் துணையாகப் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பெரும் படையுடன்..விராட நாட்டின் வடக்குப் பக்கம் இருந்த பசுக்களைக் கவர்ந்தான்.அரண்மனையில் இருந்த அரசகுமாரன் உத்தரனுக்கு செய்தி போயிற்று. 'எனக்கு நல்ல சாரதி கிடைத்தால் அர்ச்சுனனைப் போல் போரிட்டு பகைவனை வெல்வேன்'என்றான்.அதனைக் கேட்ட சைரந்தரி..'பிருகன்னளை ஆடல் பாடலில் மட்டுமல்ல..தேரோட்டுவதிலும் வல்லவள்.இவளை சாரதியாகக் கொண்டு போருக்குப் போகலாம்' என்றாள்.

போருக்கு கிளம்பிய உத்தரன்..கௌரவர் சேனையைக் கண்டு திகைத்தான்.தேரினின்று குதித்து ஓடினான்.அவனை விரைந்து பிடித்த பிருகன்னளை..அவனுக்கு ஊக்கம் பிறக்கும் வண்ணம் உரையாடினாள்.இதை துரோணர் கண்டார்.

'சாரதியாக இருப்பவள்..பேடி அல்ல..அர்ச்சுனன் என நினைக்கிறேன்' என்றார்.கர்ணன் அதை மறுத்தான்.

பிருகன்னளை உத்தரனிடம்..'நீ தேரை செலுத்து..நான் போரிடுகிறேன்..'என்றாள்.உத்தரன் ஒப்புக் கொண்டான்.மரத்தின் பொந்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்கள் எடுத்துவரச் செய்தாள்.காண்டீபம் என்னும் வில்லை உத்தரனுக்குக் காட்டினாள்.அது அர்ச்சுனனுடையது. அதனால் அவன் தேவாசுரர்களை வென்றான்.

முதன் முதலில் இவ்வில்லை பிரமதேவர் வைத்திருந்தார்.பின்..சிவ பெருமான் வைத்திருந்தார்,பின் சந்திரனிடம் இருந்தது.அதன் பின் வருணன் சில ஆண்டுகள் வைத்திருந்தார்.அவரிடமிருந்து அக்கினி தேவன் கைக்கு வந்தது.அக்கினி தேவன் அர்ச்சுனனுக்கு கொடுத்தான்.மற்ற கருவிகளைப் பற்றியும்..பிருகன்னளை அர்ச்சுனனுக்கு விளக்கினாள்.அவை தருமர்,பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோருக்கு உரியவை என்றார்.

இவற்றைக் கேட்ட உத்திரன்..'பாண்டவர்கள் இப்போது எங்கே?" என்றான்.அப்போது பிருகன்னளை தான் அர்ச்சுனன் என்றும்...மற்றவர்கள் பற்றியும் விளக்கி, 'நாங்கள் ஓராண்டு மறைந்திருக்க வேண்டி..உங்கள் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தோம்..சில நாட்களில் எங்களை வெளிப்படுத்திக் கொள்வோம்.அது வரை எல்லாம் ரகசியமாக இருக்கட்டும்.உன்னைச் சார்ந்தவர்களீடம் கூட இதை வெளியிடாதே' என்றான்.

உடன் உத்திரன் வியப்படைந்தான்.'இனி நான் யாருக்கும் அஞ்சேன்..நானே உனக்கு பாகன்' என்றான் மகிழ்வோடு.

Wednesday, July 15, 2009

50-விராடப் போர்

பதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெருங்கியதும் துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான்.ஒற்றர்களை அனுப்பினான்..அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் வருவார்கள்..'என்றார் பீஷ்மர்.

அப்போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டுவந்திருந்தான்.விராட நகரில்..கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.

உடனே துரியோதனன்'அந்தப் பெண்..திரௌபதியே என்றான்.கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்க வேண்டும் என்றான்.பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நகரிலேதான் இருக்கிறார்கள்.
நாம் விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால்...அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்.கண்டுபிடித்து விடலாம்.மீண்டும்..நிபந்தனைப்படி பன்னிரண்டு காலம் வனவாசம் அனுப்பிவிடலாம்' என்றான்.

அப்போது..விராடனிடம் கொண்ட பழைய பகமைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய..திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.தெந்திசைத் தாக்குதல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.வடதிசைத் தாகுதலை துரியோதனன் மேற்கொண்டான்.ஏற்கனவே கீசகனை இழந்து விராட நாடு வலுவிழந்திருக்கும் என துரியோதனன் எண்ணினான். முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு.
போர் தொடங்கியது.

விராடனுக்கு உதவியாக அவனது சகோதரர்கள்..சதானிகன்.மதிராட்சன் ஆகியோரும் புறப்பட்டனர்.கங்கர்..தாமும் வல்லனும்,தாமக்கிரந்தியும்,தந்திரி பாலனும் உதவிக்கு வரலாமா? என்றார்.மன்னன் அனுமதித்தான்.ஆனால் மன்னன் சுசர்மா..விராடனை சிறைப் பிடித்தான்.விராடன் படை வீரர்கள் சிதறி ஓடினர்.அப்போது கங்கர்..வல்லனுக்கு சைகை செய்தார்.பீமன் உடன் ஆவேசத்துடன்..ஒரு மரத்தை வேருடன் பிடுங்கச் சென்றான்.கங்கர்..'இது பச்சை மரம்' என்றார்.(பீமன் தனது இயல்பான போர்முறையைக் காட்டக் கூடாது...சாதாரண வீரனைப் போல் போரிட வேண்டும்.ஏனெனில்..இன்னும் சில தினங்கள் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது).பின் பீமன் ..வேறு முறையில் போரிட்டு சுசர்மனைத் தோற்கடித்தான்.விராடன் மீட்கப்பட்டான்.திரிகர்த்த நாட்டு மன்னனை கங்கர் மன்னித்து விட்டு விட்டார்.

ஆனால்...நாட்டின் வடக்குப் பக்க நிலை வேறாக இருந்தது.

Wednesday, July 8, 2009

49 - கீசகன் வதம்

விராட நாட்டில் விழாக்கள் நடக்கும்.விழாக்காலங்களில் பல விளையாட்டுகள் நடைபெறும்.வடக்கே இருந்து ஜீமுதன் என்ற மல்லன் வந்தான்.அவன் விராட நாட்டு மன்னர்களை எளிதாக வென்றான்.பின்னர்..'என்னுடன் மற்போர் புரிபவர் யாரும் இல்லையா?' என அறைகூவல் விடுத்தான்.

யாரும் வரவில்லை.மன்னன் மனம் வருந்த,கங்கர்..'அரசே..புதிதாக சேர்ந்திருக்கும் வல்லன் என்னும் சமையற்காரன்..போர் புரிவதில் வல்லவன் என நினைக்கிறேன்..அவனை அழையுங்கள்' என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்ய..வல்லனும்...ஜீமுதனும் மோதினர்.வடநாட்டு மல்லன் தோற்று ஓடினான்.

பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது.பின் ஒரு நாள்..அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான்.அவன் பெயர் கீசகன்.அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்..அரசியைக் காண வந்த போது..சைரந்தரியைக் கண்டான்.ஆசைக் கொண்டான்.தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.

வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.

காதல் மயக்கம் தீராத அவன்..அரசியிடம் சென்று..அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான்.

தம்பி..அவள் அடைக்கலமாய் வந்தவள்..அவளுக்கு தீங்கு இழைத்தால்..அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.

ஆனால் அவன் பயப்படவில்லை..காதல் நோயால் மயங்கினான்.வேறு வழி தெரியாத அரசி..சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.

'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.

சைரந்தரியும் சென்றாள்.அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான்.ஓடிய அவளை எட்டி உதைத்தான்.அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள்."இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள்.விராட மன்னன் உட்பட அனைவரும் வாளாயிருந்தனர்.

பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான்.அதன்படி சைரந்தரியும்...கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து..அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.

கீசகனும் வந்தான்...கட்டிலில் போர்வை போர்த்தி படுத்திருப்பது அவள்தான் என எண்ணி ஆசையோடு அணைக்கப் போனான்.வீறு கொண்டு எழுந்த பீமன்..அவனைத் தாக்கி காலில் இட்டுத் தேய்த்துக் கொன்றான்.

கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்லவர ..பீமன் அவர்களையும் கொன்றான்.

பொழுது விடிந்ததும்..அவர்களை கந்தர்வர்கள் தான் கொன்றார்கள்..என விராடான் உட்பட அனைவரும் நம்பினர்.

விராடன்..இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம்..என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.

சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள்.'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள்.அரசியும் சரி என அனுமதித்தாள்.

Wednesday, July 1, 2009

48 - வேலையில் அமர்ந்தனர்

தருமர்..சாத்திரச் சுவடியும்..தர்ப்பைப் புல்லும் கொண்டு கங்கன் எண்ணும் பெயருடன் விராடனைச் சந்தித்தார்.விராடனும்...அவரது நட்பு தனக்குத் தேவை என அவரை தன்னிடமே இருக்க வேண்டினான்.

பின் பீமன் ஒருநாள் வந்து..தன் பெயர் வல்லன் என்றும்..தனக்கு சமையல் வேலை தெரியும் என்றும்..யுதிஷ்டர் இடத்தில் சமையல்காரனாய் இருந்ததாகவும் கூறினான்.அவன் பேச்சில் நம்பிக்கை ஏற்பட..விராடனும் அவனை..அரண்மனை சமையல்காரர்களுக்கு தலைவனாக இருக்க கட்டளையிட்டான்.

திருநங்கை வடிவில் வந்த அர்ச்சுனனோ..தன் பெயர் பிருகன்னளை என்றும்..தான் ஆடல் பாடல்களில் பயிற்சி பெற்றுள்ளதாகவும்..மன்னரின் மகளுக்கு..நல்லிசையும் , நாட்டியமும் கற்றுத்தத் தயார் என்றான்..வாய்ப்பும் கிட்டியது.

பின் வந்த நகுலன்...'தாமக்கிரந்தி' என்பது தன் பெயர் என்றும்...குதிரைகள் இலக்கணம் தனக்குத் தெரியும் என்றும்...யுதிஷ்டரின் குதிரைகளை அடக்கிய அனுபவம் உண்டு என்றும் கூற...விராடன்..குதிரைகளை காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.

சகாதேவன்..தந்திரிபாலன் என அங்கு வந்தான்.தான் பாண்டவர்களின் பசுக்கூட்டத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அனுபவத்தைக் கூற மன்னனும்..அந்தப் பணியை அவனுக்குக் கொடுத்தான்.

திரௌபதியோ...சைரந்திரி என்ற பெயருடன் வந்தாள்.தன்னை ஒரு வேலைக்காரி என்று ராணியார் சுதேட்சணையிடம் அறிமுகம் செய்துக் கொண்டால்.தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்கள் என்றும் ஒரு சாபத்தால் பிரிந்திருப்பதாகவும் உரைத்தாள்.இந்த பிரிவு ஓராண்டுகள் மட்டுமே என்றாள்.

ஆனால்..அரசமாதேவியோ 'பெண்ணே!..உன் அழகு..பிற ஆடவரால்..உன் கற்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சுகிறேன்..'ஏன்றாள்.

'அரசியாரே!..தாங்கள் கவலைப்பட வேண்டாம்..என் கணவர்கள் வெளித்தோற்றத்திற்கு தெரியமாட்டார்களே தவிர..என்னை உயிர்போல் பாதுகாப்பர்.எவனாவது..என்னிடம் முறைதவறினால் கொல்லப்படுவார்கள்' என திரௌபதி உரைத்தால்.

பாண்டவர் தேவிக்கு..ஒப்பனை செய்த அனுபவம் உண்டு என்றும்..அரசிக்கு அப்பணியை செய்வதாகவும் உரைத்தாள்.

அரண்மனையில் வேலைக்காரர்களாக அனைவரும் இருந்தது..விதியின் கொடுமை என்றாலும்...மேற்கொண்ட பணியை நன்கு செய்து முடித்தார்கள்.