Sunday, August 21, 2011

165- போரில் இறப்போர் கதி




போரில் இறப்போர் கதி பற்றி மகேஸ்வரி வினவ..ஈஸ்வரன் சொல்கிறார்..
'போர்க்களத்தில் இரு திறத்துப் படைகளும் மோதும் போதும், யானைப்படை வீரரும்,குதிரைப் படை வீரரும்,தேர்ப்படை வீரரும்,காலாட்படை வீரரும் உற்சாகம் குன்றாமல் போராடுகின்றனர்.வீர வாதம் செய்து போர் புரிகையில் எண்ணற்ற வீரர்கள் இறக்கின்றனர்.போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரரைப் பாவம் துரத்திப் பிடித்துக் கொள்ளும்.இப்பாவம் மன்னனைச் சாராது கோழைகளையே பற்றிக் கொள்கிறது.இதுபோலவே கொல்லாமை மேற் கொள்ளும் வீரர் மனம் ஒன்றிப் போரிடவில்லையெனில் அவர்களையும் கொடிய பாவம் பற்றும்.அரசர்கள் நரகத்தை அடைவர்.தன் மன்னனுக்கு வீராவேசம் கொண்டு போரிட்டு உயிர் துறக்கும் வீரன் சுவர்க்கம் அடைவான்.
கருணையுள்ள வீரன் கூடப் பெரு வீரத்துடன் போர் புரிவதில் உற்சாகம் கொள்வான்.இங்கு இரக்கத்திற்கு இடமில்லை.பெரு வீரன் மான் கூட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தும் சிங்கம் போல கர்ஜித்துப் போரிட வேண்டும்.யுத்தத்தில் யானை மீதிருந்து போரிட்டு மாண்டவன் பிரம லோகத்தை அடைவான்.தேரிலிருந்து போரிட்டு உயிர் துறந்தவன் இந்திரர் லோகத்தை அடைந்து இன்பம் அனுபவிப்பான்.போர்க்களத்தில் கொல்லப்பட்டவர் சுவர்க்கத்தில் தேவர்களால் பாராட்டப்படுவர்.கொன்றவர் இங்கு போற்றப்படுவர்.எனவே..போர்க்களம் செல்லும் வீரன் வெஞ்சமரில் அஞ்சாது போரிட வேண்டும்.ஆயிரமாயிரம் நதிகள் கடலில் கலப்பது போல, ராஜ தர்மத்துடன் பல்வேறு ஒழுக்கங்கள் அவனை சென்று அடையும்.
தொன்று தொட்டு வரும் தருமங்கள் எல்லாவற்றையும் மன்னன் காப்பாற்ற வேண்டும்.தருமத்தை அரசன் கைவிட்டால் , தருமம் அவனை கைவிட்டு விடும்.எந்த நாட்டில் மன்னன் ஆட்சி செம்மையாய் உள்ளதோ அங்கே மழை தவறாது பெய்யும்.நாட்டு மக்கள் பிணி முதலான துன்பங்களின்றி நலமாக வாழ்வர்.
மன்னன் எது நடந்தாலும் பொறுமையாக இருந்தால்,ராஜ தருமம் ஒழுங்காக நடைபெறாது.தீயவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது.நல்லவர்களை நன்கு பாதுகாக்க வேண்டும்.மன்னன் ஆறிலொரு பகுதியைத் தீர்வையாகக் கொள்ள வேண்டும்.அப்படிக் கொள்பவன் தன் குடிமக்களைப் பாதுகாக்காமலும், பிற நாட்டைக் கைப்பற்றாமலும் இருத்தல் கூடாது.அத்தகைய மன்னனின் திறமையின்மையைப் பயன்படுத்தி அயல் நாட்டவர் அவன் மீது படையெடுத்து வெற்றி காண்பர்.அந்நிலையில் எதிரி நாட்டுப் பாவமெல்லாம் தோல்வியுற்ற மன்னனை வந்து அடையும்.யுத்தக்களத்தில் வீரத்துடன் போரிட்டு மாண்ட மன்னவன் விமானத்தில் ஏறி வீர சுவர்க்கம் அடைவான்.அவன் உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உளவோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவ சுகம் அனுபவிப்பான்.பின் மண்ணுலகில் மன்னனாகவோ, அறவானாகவோ பிறப்பான்.ஆதலால் மன்னன் விழிப்புடன் நாட்டை ஆள வேண்டும்' என்று முடித்தார் மகேஸ்வரன்.




1 comment:

vidivelli said...

ஒரு நாட்டை ஆளும் தலைவன் எப்படி இருக்கவேண்டும் ...
அப்படி நடக்காவிட்டால் எப்படி உலகம் பார்க்கும் என்று கதை சொல்கிறது...நல்ல கருத்து நிறைந்த கதை..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

http://sempakam.blogspot.com/2011/08/blog-post_22.html#comments

Post a Comment