Monday, November 14, 2011

190 - முடிவுரை




இன்றுடன் "மகாபாரதம்"பதிவு முடிவடைகிறது.

.முகநூலில் தொடர்ந்து 190 அத்தியாயங்கள் வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.இச்சாதனையை நடத்த ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

மாகாபாரதம் உணர்த்தும் செய்திகள்..

எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.'தருமம் வெற்றி பெறும்' என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி எனலாம்.ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.இந்த உண்மையை உணர்த்தச் சான்றோர் எவ்வளவோ துன்பத்தை பொறுத்திருக்க வேண்டும்.எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்னும் செய்திகளையும் மகாபாரதம் உணர்த்துகிறது.இன்ப துன்பங்கள் ஞானிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் மனிதர்களை அவை ஆட்டிப்படைக்கின்றன என்பதும் மகாபாரதம் உணர்த்தும் செய்திகளாம்..

இனி என்னுரை..

எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட மகாபாரதத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுத வேண்டும் என எண்ணினேன்.கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ..எந்ததவறும் வந்துவிடக்கூடாதே என் அபலமுறை படித்து..அவற்றை எளிமைப்படுத்தி எழுதினேன்.நண்பர் கே என் சிவராமன்,தி.முருகன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் இது, "மினியேச்சர் மகாபாரதம்" எனும் நூலாக சூரியன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பல பத்திரிகைகளின் பாராட்டுகளும்,படித்தோரிடம் இருந்து வாழ்த்துகளும் பெற்றேன். முகநூல் நண்பர்கள் படிக்க . 190 பகுதிகளில் எழுதியுள்ளேன்.மகாபாரதப் போருக்குப் பின் நடந்தவைகளை பலர் அறியமாட்டார்கள்.ஆகவே அதையும் எழுத வேண்டும் என எண்ணினேன்.என் பணி முடிந்தது.


நான் முதலிலேயே குறிப்பிட்டபடி..இதை நம்பியவர்களும்..சரி..நம்பாதவர்களும் சரி  இதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப ஒத்துழைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

இம் மாபெரும் செயலை முடிக்க எனக்கு உறுதுணையாய்  இருந்தது..ராஜாஜி அவர்கள், வாரியார் அவர்கள்,ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்.அவர்களுக்கு நன்றி.

(மகாபாரதம் முற்றும்)

Sunday, November 13, 2011

189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)




சுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்."திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா? இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.

அது கேட்ட நாரதர், 'தருமா! பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்?துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.

நாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?கொடை வள்ளல் கர்ணன் எங்கே? அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.

முதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர்? என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.

அந்த நேரத்தில், 'தருமரே! இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், "நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.

தேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.

தாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.
சுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.

(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)

Thursday, November 10, 2011

188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.




விருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார்.காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.துறவு மேற்கொள்ள விழந்தனர்.எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர்.தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார்..'உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன்.யாதவர்களில் எஞ்சியுள்ள வஜ்ரன் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான்.நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம்.இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் யுயுத்சு இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான்.கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார்'

இவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார்.சகோதரர்களும்,திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர்.அவரை பிரிய மனம் இல்லாத மக்கலும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர்.

பாண்டவர்களும், திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர்.புண்ணிய நதிகளில் நீராடினர்.புனிதத் தலங்களைத் தரிசித்தனர்.முதலில் தருமரும்,அவருக்குப் பின் பீமனும்,பின்னால் அர்ச்சுனனும்,அவனுக்குப் பின் நகுல, சகாதேவனும் சென்றனர்.அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள்.நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது.அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான்.

அவர்கள் கடற்கரையை அடைந்த போது, அக்கினி தேவன் தோன்றி,'முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன்.அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான்.இனி அவற்றால் பயனில்லை.எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக' என்று கூறி மறைந்தான். அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன.

பிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர். பின் தென்மேற்காய்ச் சென்றனர்.பின் வடக்கு நோக்கிச் சென்றனர்.இமயமலையைக் கண்டனர்.அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர்.சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதிர்ச்சி அடைந்த பீமன், 'இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள்?'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்?' என்றான்.'தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது' என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.'தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது' என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார்.அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான்.அதற்கு 'தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார்.

பீமனுக்கும் தலை சுற்றியது, 'அண்ணா, இதற்கு என்ன காரணம்?' என்றான் பீமன்.'தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம்'என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான்.

தருமர் போய்க்கொண்டே இருந்தார்.நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது.உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ..துயரோ அடையவில்லை? காரணம் அவர் துறவு மேற்கொண்ட போதே பந்த பாசங்கள் மறைந்தன.அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான்.'என் சகோதரர்களும்,திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்' என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது.அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை' என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

தருமர், 'என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன்.இது நான் மேற்கொண்ட விரதம்' என்றார்.

அப்போது நாய் தன் வடிவத்தை மாற்ரிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது."தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன்.இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன்' என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர்.தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார்.'நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய்.உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை' என்று மேலும் புகழ்ந்தார் நாரதர்.

நாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை.அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது.ஆனால் அவர்களைக் காண இயலவில்லை.

(மகாபிரஸ்தானிக பருவம் முற்றிற்று)

Thursday, November 3, 2011

187 - காலம் நெருங்குகிறது




அனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான்.அவர்கள் துவாரகையை விட்டுச் சென்றதும்..துவாரகை கடலில் மூழ்கியது.அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்லச் செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன.

அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று.அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர்.திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான்.'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள்.இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான்.ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களை மறித்துச் சூறையாடினர்.சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான்.ஆனால்...காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது.கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை.கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின.'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.காண்டீபம் செயலிழந்ததும்..அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின.யாவும் விதியின் பயன் என உணர்ந்தான்.இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர்.பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான்.அவர்களை பொருத்தமான இடத்திலிருக்கச் செய்தான்.ருக்மணி அக்கினிப் பிரவேசம் செய்தாள்.சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர்.

கண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரைக் காணச் சென்றான்.கண்ணனைப் பிரிந்தது..ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்துக் கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான்.

வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்.."அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக.."என்றார்.

கருத்து மிக்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ச்சுனன்..தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்.

(மௌசல பருவம் முற்றும்)

Tuesday, November 1, 2011

186 - மௌசல பருவம் - உலக்கையால் மாண்டது




பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன.சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான்.எங்கும் குழப்பமும்,அச்சமுமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.

ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர்.விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர்.கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர்.ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?' எனக் கேட்டு நகைத்தனர்.

கந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர்.'இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான்.அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்' எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.

இரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர்.தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர்.ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது.முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.'நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம்.ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்' என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது.விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது.ஆணவமும்,ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன.பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர்.ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர்.குறிப்பாகக் காமக்
களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர்.கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.

சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன.குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர்.கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன.விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.தந்தையென்றும்,மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர்.

காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன்.மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார்.பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார்.கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார்.காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார்.இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார்.கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன்.அவரை அங்கு இந்திரனும்,அஸ்வினி தேவர்களும்,ருத்ரர்களும்,வசுக்களும்,சித்தர்களும்,முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.

தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும்,அந்தகர்களும் மாண்ட செய்தியை தெரிவித்தான்.உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது.கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான்.அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார்.துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.

கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான்.பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ'வென கதறி அழுதனர்.மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர்.அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.பலராமர்,கண்ணன் ஆகியோர் சடலங்களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான்.