Sunday, August 29, 2010

109-நண்பன்..பகைவன்..சுற்றம்..

தருமர், பீஷ்மரிடம் 'கங்கை மைந்தா..மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது.அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி? அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்? அரசன் எப்படிப்பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்..எவன் நம்பத்தகாதவன்' என்றெல்லாம் வினவினார்.

பீஷ்மர் சொல்கிறார்..'அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்கப் பட்டவன்.)பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை..பரம்பரையாய் உதவி செய்பவன்),சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து ஏற்படுத்தப்பட்டவன்) என நான்கு வகை நண்பர்களுண்டு.நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன்.அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான்.தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம்.ஆனால் அவனுக்குத் தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்லக் கூடாது.அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன்.அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கைக் கொள்ள நேரிடும்.நட்பு,பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல.ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும்,அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு.மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும்,சகஜனும் உத்தமர்கள்.மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது.நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள்.அவமதிப்பார்கள்.மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான்.நல்லவன் கெட்டவன் ஆகலாம்..கெட்டவன் நல்லவனாகலாம்.நண்பன் பகைவன் ஆகலாம்..பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு.ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது.முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள்,இன்பம் அனைத்தும் நாசமாகும்.ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது.அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும்.எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நல்ல தோற்றமும்,அழகும்,கம்பீரக் குரலும்,பொறுமையும்,நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான்.தருமா...அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாகக் கொள்ள வேண்டும்.நல்லறிவு படைத்தவர்களையும்,நினைவாற்றல் மிக்கவர்களையும்,நல்ல இயல்பு உள்ளவர்களையும் ,தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகழ் நோக்கம் உடையவனும்,நீதியை விரும்புபவனும்,காமம்,அச்சம்,சினம் இல்லாதவனும்,அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளாதவனும் ஆகிய ஒருவனிடம் அமைச்சுப் பதவியைத் தர வேண்டும்.அறம்,பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும்.ஆனாலும்..தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது.அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும்.ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள்.அதனால் காரியம் நிறைவேறாது.

மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும்.அரசனின் பெருமைக் கண்டு சுற்றம் மகிழாது.சுற்றத்தாரால் துன்பமும் உண்டு.இன்பமும் உண்டு.சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர்.ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.

சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான்.எனவே, சுற்றத்தாரைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப் படுத்த வேண்டும்.அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதைச் செய்யக் கூடாது.அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும்.குணமோ,குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது.இவ்விதம் பகைவர்,நண்பன்,சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான்' என்று உரைத்தார் பீஷ்மர்.

(பீஷ்மருடன் உரையாடல் தொடரும்)

Friday, August 20, 2010

108-மனக்கவலை மறைய..

தருமர்..'மனதில் கவலை அற்றிருக்கவும்,அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்..

தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும்.மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும்.

நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள்.பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும்,நீரும் அளித்து பாலைக் கறக்க வேண்டும்.ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது.அதுபோல தக்க உதவிகளைச் செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.மக்களிடம் அதிக வரிச் சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிப்பதில் மாலைக் கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும்.கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான்.கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)

குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும்.அறநெறி கெடாமல் குடிமக்களைக் காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணியப் பயனை இன்பமாக அனுபவிப்பான்.யாகம்,தானம்,தவம் ஆகியவற்றைச் செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான்.இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான்.தருமா..இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு' என்றார் பீஷ்மர்.

(பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

Saturday, August 7, 2010

107-முப்பத்தாறு குணங்கள்

'தருமா..அறம்..பொருள்..இன்பம்..இம்மூன்றையும் காலத்திற்கேற்றபடி போற்ற வேண்டும்.காலம் அரசனுக்குக் காரணமா..அல்லது அரசன் காலத்துக்குக் காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது.அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால்...அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும்.அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும்.அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர்.மக்களின் குரலும்,நிறமும்,மனமும் தெளிவாக விளங்கும்.அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை.கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள்.உழவு இன்றியே பூமி பயன் தரும்.இவை கிருதயுக தருமம்.அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும்.அக் காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும்.அந்தக் காலத்தில் உழுதால்தா பூமி பயனைத் தரும்.

அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டுப் பாதி பாகத்தைத் தொடந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும்.அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும்.அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும்.அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும்.கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும்.தருமத்தை காண முடியாது.நான்கு வருண தருமங்கள் சிதறிப் போகும்.வியாதிகள் பெருகும்.ஆடவர் அகால மரணமடைவர்.மகளிர் விதவை ஆவர்.ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணன் என உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக' என்றார் பீஷ்மர்.



தருமர்..'இம்மையிலும்..மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை?'என்று பீஷ்மரிடம் கேட்க..

பீஷ்மர் சொல்கிறார்..'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்

3)அறவழியில் பொருளை ஈட்டுதல்

4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்

5)யாருடனும் அன்புடன் பேசுதல்

6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்

7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்

11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்

12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்

15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்

16)தக்காரைச் சார்ந்திருத்தல்

17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்

21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்

22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்

25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்

26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்

27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்

28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணி புரிதல்

30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்

31)பயனுள்ளவற்றையே பேசுதல்

32)தடை சொல்லாது உதவி புரிதல்

33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்

34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை

ஆகியவையாகும்..

( பீஷ்மரின் அறிவுரை தொடரும்)