Friday, August 12, 2011

162- சத்தியம் உயர்ந்த தருமம்




பீஷ்மர் தருமரைப் பார்த்து, "தருமா! மேலோர் சத்தியத்தை 13 பிரிவாகப் பிரித்துள்ளனர்.அவை உண்மை,சமதாபாவனை,தமம்,அழுக்காறு இன்மை,அமைதி,பொறுமை,உத்தமப் பொறுமை,வெறுப்பின்மை,தியாகம்,தியானம்,மேன்மை,தைரியம்,அஹிம்சை என்பனவாகும்.
உண்மை என்பது எப்போதும் நிலை பெற்றிருப்பது.அழிவில்லாதது.எல்லா அறங்களுக்கும் அடிப்படையானது.இது யோகத்தால் சாத்தியமாகும்.
சமதாபாவனை என்பது, இன்ப துன்பங்களை ஒரே விதமாக ஏற்றுக் கொள்வது.இது விருப்பு,வெறுப்பு இன்மையால் ஏற்படும்
தமம் என்பது, அச்சம் இன்மையும் சினத்தை அடக்குவதும் ஆகும்.இது ஞானத்தால் உண்டாகும்.
அழுக்காறு இன்மை என்பது பொறாமையின்மை.எப்போதும் உண்மையையே நாடுவதால் இது கைகூடும்.
அமைதி எனப்படுவது மனம்,சொல்,செயல் ஆகியவை சலனமற்று இருப்பது.இது தரும காரியங்களால் அடையப்படும்.
பொறுமை என்பது பொறுக்கக்கூடியவற்றைப் போலவே பொறுக்க முடியாதவற்றையும் பொறுத்துக் கொள்வதாகும்.சத்தியத்தைப் பின்பற்றுவதால் இதனைப் பெற முடியும்.
உத்தமப் பொறுமை என்பது, தருமத்தின் காரணமாகப் பிறர் செய்யும் எல்லாத் தீமைகளையும் பொறுத்துக் கொள்வதாகும்.மேலான பொறுமையாகிய இது மனவலிமையால் பெறக் கூடும்.
வெறுப்பின்மை என்பது பிறர் குற்றம் காணாதிருப்பது.இது ஈகையால் - தானத்தால் அமையும்.
தியாகம் என்பது, மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை - மாசுகளை அறவே துறத்தலாகும்.
தியானம் என்பது, தருமத்தை எப்போதும் சிந்திப்பதாகும்.இது எப்போதும் நல்லவனவற்றை சிந்திப்பதால் உண்டாகும்.
மேன்மை என்பது, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பதாம்.நல்லவனவற்றை ஆய்ந்து ஆய்ந்து செய்வதன் மூலம் ஒருவன் மேன்மை அடையக்கூடும்.
தைரியம் என்பது கீழான சிந்தனைகளை ஒழித்தலாகும்.இது சினத்தை அடக்குவதாலும், அச்சத்தை அகற்றுவதாலும் ஏற்படும்.
அஹிம்சை என்பது மனம்,வாக்கு,செயல் இவற்றால் பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல்.அன்புடைமையாலும் அருளுடைமையாலும் ஒருவர் அஹிம்சையை பின்பற்ற முடியும்.
இப்படி பதின்மூன்று பிரிவாகப் பேசப்படும் சத்தியமே அனைத்து அறங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்' என்று உரைத்தார்.

No comments:

Post a Comment