Thursday, September 29, 2011

176- காலத்தின் நியதி - வினையின் பயன்




(13-அனுசாஸன பருவம்)
போர்க்கள அழிவிற்காக தருமர் வருந்துகையில், அவரது துயரத்தைப் போக்க பீஷ்மர் உரைத்த கதை..
தருமர், பீஷ்மரிடம் 'பாவத்திலிருந்து விடுபடுவது எப்படி ? என வினவ பீஷ்மர் கூறலானார்..
'தருமா..எல்லாம் கர்ம பலத்தால் ஏற்படும் என்பதனை எமன்,கௌதமி,வேடன்,பாம்பு,காலம்..இவர்களின் உரையாடல் மூலம் விளக்க விரும்புகிறேன்.
முன்னொரு காலத்தில் கௌதமி என்று ஒரு கிழவி இருந்தாள்.அவளது மகன் பாம்பு கடித்து இறந்தான்.அதைக்கண்ட அர்ச்சுனகன் என்னும் வேடன் சினம் கொண்டு கயிற்றால் பாம்பை சுருட்டிக் கொண்டு கௌதமியிடம் வந்து,'இந்த பாம்பை எப்படிக் கொல்ல வேண்டும் .சொல்' என்றான்.
'இந்த பாம்பைக் கொல்ல வேண்டாம்..என் மகன் சாவு கர்ம பலத்தால் நேர்ந்தது.பாம்பிற்கும், இவன் சாவிற்கும் தொடர்பில்லை.இது விதி.மதியுள்ள யாரும் தன்னைப் பெரியவனாக நினைக்க மாட்டான்.தம் புண்ணியத்தால் மக்கள் உலகில் துன்பமின்றி இனிதாக வாழ்கின்றனர்.பாவம் உள்ளவர்கள் துன்புறுகின்றனர்.இந்தப் பாம்பைக் கொல்வதால் இந்த்க் குழந்தை பிழைக்கவா போகிறது..இதன் உயிரைப் போக்குவதால் உலகில் யார் இறக்காமல் இருப்பர்?' என்று கௌதமி கூறினாள்.
வேடன், 'எப்போதும் யோக நிலையில் இருக்கும் சான்றோர்களுக்கு உலக விஷயம் புரிவதில்லை.மேல் உல்கைப் பற்றிய அவர்கள் உபதேசங்கள் மிக நல்லனவே..எனினும் இப்பாம்பை நான் கொல்லத்தான் போகிறேன்.அமைதியை நாடுபவர்கள் அதற்குரிய காலத்தை நழுவ விடுவார்களா?காரியத்தில் கண்ணாய் இருப்பவர்கள் சமயம் நேரும்போது, அக்காரியத்தை உடனே செய்து துயரத்தை அகற்றுவார்கள்.ஆதலால் இப்பாம்பை நான் கொன்ற பின் நீ உன் துன்பத்தை விட்டுவிடு;' என்றான்.
அது கேட்ட கௌதமி,'எம் போன்றவர்க்கு துயரம் ஏது?நாள்தோறும் துயரப்படுபவர்கள் சிறுவர்கள்!எனக்கு அத்தகைய துயரம் இல்லை.இந்த பாம்பின் மீது சினம் கொல்லாதே.உனது வைராக்கியத்தை போக்கிவிடு' என்றாள்.
வேடன்,'இதைக் கொல்லுவதால் எனக்கு புண்ணியமே உண்டாகும்.இது தேவ பூஜையை விடச் சிறந்ததாகும்.பல காலம் முயன்று பெறக் கூடிய புண்ணியம் இத்தகைய பாவிகளைக் கொல்வதால் உடனே கிடைக்கும்' என்றான்.
கௌதமி வேடனை நோக்கி,'பகைவர்களைக் கொல்வதால் என்ன லாபம் கிடைக்கும்?கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்?பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன்..?இது முக்திக்கு உரிய சாதனம்.ஆதலால் நான் பொறுமை இழக்கவில்லை' என்றாள்.
வேடன், 'கௌதமி! தேவேந்திரன் விருத்ராசுரனைக் கொன்று மேன்மை அடைந்தான் அல்லவா? சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார் அல்லவா?தேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்ன?விரைந்து பாம்பைக் கொல்வேன்' என்றான்.
என்னதான் வேடன் வற்புறுத்திய போதும் உத்தமியான கௌதமி பாம்பைக் கொல்ல உடன்படவில்லை.சுருக்குக் கயிற்றில் சிக்கித் தவித்த பாம்பு இப்போது பேசத் தொடங்கியது.'அர்ச்சுனகா..அறியாதவனே..இந்தக் குழந்தையைக் கொன்றதில் நான் செய்த பிழை என்ன?எமன் ஏவலின் படி செய்தேன்.இந்தக் குழந்தையிடம் எனக்கு பகை ஒன்றும் இல்லை.இதில் யாராவது பாவம் செய்திருந்தால் அது எமனைச் சாரும்' என்று பாம்பு கூறியது.
வேடன், 'பாம்பே..நீ வேறொருவர் கட்டளைப் படி இதைச் செய்திருந்தாலும், இந்தத் தீமையில் உனக்கும் பங்கு உண்டு.ஆதலால் நீயும் குற்றவாளிதான்.ஒரு மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை காரணமாய் அமைவது போல நீயும் காரணமாகிறாய்' என்றான்.
பாம்பு, 'வேடனே..அந்த மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை தாமே காரணமாகாது..அது போலத்தான் நானும்.ஆகவே என் மீது குற்றம் காணாதே..குற்றவாளி என என்னைக் கருதித் துன்புறுத்துவது நல்லதல்ல.பிழை உண்டு எனக் கருதினால் அந்தப் பிழை பொதுவானதாகும்.நான் மட்டுமே காரணமில்லை'என்று கூறிற்று.

வேடன், 'பாம்பே..இதற்கு நான் காரணம் இல்லை' என வாதாடுவதால் ஒரு பலனும் இல்லை.இந்தக் கொலையை நீ செய்திருக்கிறாய்.ஆதலால் நீ கொல்லத்தக்கவனே' என்றான்.
பாம்பு, 'வேடனே..உண்மையில் நானும் காரணம் என நீ கருதினால், என்னை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்திய ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?இப்படியிருக்க என்னைக் கொல்வதால்  உனக்கு என்ன லாபம்' என்று கேட்டது.
வேடன், 'கெட்ட புத்தியுள்ள பாம்பே..குழந்தையைக் கொன்ற கொலை பாதகனாகிய நீ என்னால் கொல்லத் தக்கவனே..கொலைகாரனான உனக்குப் பேச என்ன தகுதி இருக்கிறது? என்றான்.
பாம்பு, 'வேடனே..யாகத்தில் ஹோமம் செய்கிறவர் எப்படிப் பயனை அடைவதில்லையோ, அப்படியே நானும் இதன் பயனைப் பெறத் தக்கவன் அல்லன்' என்று பதில் கூறியது.
இவ்வாறு பாம்பு சொல்லும் போது எமன் அங்கு வந்து அதனை நோக்கி,'பாம்பே..நான் காலத்தால் ஏவப்பட்டு உனக்குக் கட்டளையிட்டேன்.இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நீயும் காரணமல்ல.நானும் காரணமல்ல.காலம்தான் காரணம்.நாம் அனைவரும் காலத்திற்கு உட்பட்டவர்கள்.பாம்பே.., விண்ணிலும் மண்ணிலும் உள்ள அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் காலத்தினாலேயே நடத்தப்படுகின்றன.இவ்வுலகம் அனைத்தும் காலத்திற்கு கட்டுப்பட்டே நடக்கின்றது.'பாம்பே! சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம் காலத்தால் ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க என்னைக் குற்றவாளியாக நீ கருதுவானேன்..ஒரு வேளை என்னிடம் குற்றம் இருக்குமாயின் நீயும் குற்றவாளியே!'என்று கூறினான்.
பாம்பை எமனை நோக்கி..'உம்மைக் குற்றவாளி என்றோ..குற்றமற்றவர் என்றோ நான் சொல்லவில்லையே..உன் ஏவலால் தான் நான் இதிச் செய்தேன் என்றேன்.இது காலத்தின் குற்றமாயும் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.அதனை தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.அந்தக் குற்றத்தினின்று நான் விடுபட நினைப்பது போல..நீயும் விடுபட விரும்புவது இயற்கையே' என்று சொல்லியபடியே..பின் ..வேடனை நோக்கி'எமனின் சொல்லைக் கேட்டாயா?நிரபராதி ஆன என்னைக் கொல்வது தகாது' என்றது.
இதற்கு வேடன், 'பாம்பே..உன் பேச்சையும், எமனின் பேச்சையும் கேட்டேன்.என் நிலையில் மாற்றம் இல்லை.இக்குழந்தை இறக்க நீயும் காரணம், எமனும் காரணம்.யாவருக்கும் துன்பத்தைத் தரும் எமன் அனைவராலும் இகழத் தக்கவன்.நீ கொல்லப்பட வேண்டியவன்' என்றான்.
இதற்கு எமன் வேடனிடம்,'நாங்கள் இருவரும் சுதந்திரம் அற்றவர்கள்.எங்கள் கடமை காலம் இட்ட கட்டளையைச் செய்வது தான்.நீ நன்கு ஆராய்ந்து பார்த்தால்,எங்களிடம் குற்றம் இல்லை என்பதை உணர்வாய்' என்றான்.
வேடன், 'எமனே! பாம்பே! நீங்கள் காலத்துக்கு உட்பட்டு நடப்பீராயின் எனக்கு உங்கள் மீது   வருத்தம் உண்டாவதேண்' என்றான்.
எமன் உடன்,'வேடனே..நான் திரும்பச் சொல்கிறேன்..உலகில் எல்லாச் செயலும் காலத்தால் செய்யப்படுகின்றன.ஆகையால் நாங்கள் இருவரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.எனவே நீ எங்களைக் குற்றவாளியாக நினைக்கக் கூடாது' என்றான்.
இச்சமயத்தில் காலதேவன் நேரில் வந்தான்..பாம்பையும்,எமனையும்,வேடனையும் நோக்கிக் கூற ஆரம்பித்தான்..
'வேடனே..நானும்,எமனும்,பாம்பும் ,இக்குழந்தை மாண்டதற்குக் காரணமில்லை.ஆதலால் நாங்கள் குற்றவாளியில்லை.இந்த குழந்தை செய்த வினைதான் எங்களை தூண்டிற்று.இது இறந்ததற்குக் காரணம் வேறு யாரும் இல்லை.தன் வினைப்பயனாலேயே இக் குழந்தை கொல்லப்பட்டது.இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வினையில் பங்கு உண்டு.இந்த வினையாகிய கர்மங்கள் ஏவுகின்ற படியே நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டளையிடுகிறோம்.கர்மங்களைச் செய்பவன் அவற்ரின் பலனை அடைகிறான்.நிழல் போல ஒருவனைக் கர்மப் பயன் தொடர்ந்து செல்கிறது.ஆதலால் நானோ,எமனோ,பாம்போ,நீயோ,கௌதமியோ யாரும் இக்குழந்தையின் இறப்பிற்குக் காரணம் இல்லை.இக்குழந்தையேக் காரணம்' என்றான்.
காலன் அப்படிச் சொல்கையில், கௌதமி என்னும் அந்த மாது உலகெலாம் கர்மத்தின் வயப்பட்டது எனத் தெளிந்தாள்.வேடனை நோக்கி, 'இது விஷயத்தில் காலம்,பாம்பு,எமன் ஆகிய யாரும் காரணமில்லை.தான் செய்த கர்மத்தாலேயே இக் குழந்தை காலம் வந்த போது இறந்தது.இனிக் காலதேவனும்,எமனும் செல்லலாம்.வேடனே..நீயும் இந்த பாம்பை விட்டுவிடு' என்றாள்.பின் அனைவரும் பிரிந்து சென்றனர்.
'தருமா! இது கேட்டு ஆறுதல் அடைவாயாக! போர்க்களத்தில் ஏராளமானவர் மாண்டதற்கு நீயோ,துரியோதனனோ காரணமல்ல.காலத்தின் செயல் எனத் தெளிவாயாக!'என்று பீஷ்மர் கூறினார்.


Sunday, September 25, 2011

175-முக்தி எப்போது கிடைக்கும்




தருமர், பீஷ்மரிடம்,'முக்தி எப்போது கிடைக்கும்?' என வினவ பீஷ்மர் உரைத்தது..

நாரதர் திரிலோக சஞ்சாரி.தேவர் உலகத்திற்கும், இந்த மண்ணுலகத்திற்கும் போய் வருபவர்.ஒருமுறை நாரதர் தேவ உலகிலிருந்து பூலோகத்திற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருப்பதைப் பார்த்தார்.அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது.நாரதரின், இறை நாமத்தைக் கேட்டதும் அந்த வாலிப யோகி கண்ணை விழித்து நாரதரைப் பார்த்தார்.
'நாரத பகவானே..எங்கு சென்று கொண்டிருக்கிறீர்' என்றார்.
'நான் சிவபெருமானைப் பார்ப்பதற்காகக் கைலாயத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றார் நாரதர்.
'கைலாயத்தில் எனக்காக ஒரு காரியம் செய்ய முடியுமா?'
'கட்டாயம் செய்கிறேன்..அங்கு உனக்கு என்ன செய்ய வேண்டும்..கேள்'
'நான் மிக நீண்ட காலமாகச் சிவனை தரிசிப்பதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன்.இன்னும் எத்தனை காலம் இப்படித் தொடர்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு வந்து, சொல்வீர்களா?"
கட்டாயம் கேட்டு வருகிறேன்'
நாரதர் அந்தக் காட்டில் கொஞ்ச தூரம் சென்றதும், வேறு ஒரு யோகியைப் பார்த்தார்.
அந்த யோகி,'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' எனப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த யோகி நாரதரைப் பார்த்தார், 'நாரதரே..எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
'வைகுந்தத்திற்கு'
'வைகுந்தமா..மகிழ்ச்சி.இன்னும் எத்தனைக் காலத்திற்குப் பஜனை செய்து கொண்டிருந்தால் நான் இறைவனை அடையலாம்? என்பதை தெரிந்து கொண்டு வரமுடியுமா?'
கட்டாயம் தெரிந்து கொண்டு வருகிறேன்'
ஆண்டுகள் பல கடந்தன.நாரதர் பூலோகத்திற்கு வந்தார்.
புற்று வளர்ந்து தன்னை மூடிக்கொண்டிருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தியானத்திலிருந்த யோகியைப் பார்த்தார்.
'நாரதரே! கைலாயத்திற்குச் சென்றீர்களா?சிவபெருமானைப் பார்த்தீர்களா?நான் சொன்னதை அவரிடம் சொன்னீர்களா? அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்' என்றார்.
நான் சிவபெருமானைப் பார்த்தேன்..தாங்கள் சொன்னதைச் சொன்னேன்.அதற்கு அவர் நீங்கள் இன்னும் நான்கு பிறவிகள் எடுத்துத் தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.அதற்கு பின்னரே நீங்கள் கைலாயத்திற்கு வரமுடியுமாம்' என்று நாரதர் சொன்னதும்..வாலிப யோகி 'ஓ' என அலறினார்.புலம்பினார்.கண்ணீர் வடித்தார்.
நாரதர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' யோகியிடம் சென்றார்.அந்த யோகி நாரதர் வந்ததையும் கவனிக்க வில்லை.தற்செயலாக அவரைப் பார்த்ததும்'நாரதரே! வைகுந்தம் சென்றீர்களா? சேதி ஏதேனும் உண்டா" என்றார்,
'உண்டே..அதோ தெரிகிறதே..அந்த மரத்தைப் பாருங்கள்'
'பார்த்தேன்'
'அந்த மரத்தில் உள்ள இலைகளையெல்லாம் எண்ணி விட முடியுமா?"  
'கட்டாயம் எண்ணிவிடமுடியும்.அவற்றை எண்ணுவதற்கு வேண்டிய அளவிற்கு பொறுமை என்னிடம் இருக்கிறது.இப்போதே அம்மரங்களின் இலைகளை எண்ணிச் சொல்லட்டுமா/"
'இப்போதே எண்ண வேண்டும் என்பதில்லை.தங்களுக்கு நேரம் இருக்கும் போது இலைகளை எண்ணினால் போதும்,'
'இது இருக்கட்டும்..என்னுடைய கோரிக்கைக்கு இராம பிரான் அளித்த பதில் என்ன"
'அந்த மரத்தில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகள் எடுத்த பிறகு தான் தாங்கள் வைகுண்டத்திற்கு வரமுடியும் என்று இராம பிரான் கூறிவிட்டார்'
'ஓ..இவ்வளவுதானா..ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் அளவுதானே பிறவி எடுக்க வேண்டும்.இறைவனுக்கு நன்றி.இந்த மரத்தில் மாட்டுமில்ல..இத்தோப்பில் உள்ள மரங்கள் அனைத்திலும் இருக்கும் இலைகளின் அளவுக்கு பிறவி எடுக்கவும் தயார்;'என்று கூறிவிட்டு..'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' என பஜனையில் ஈடுபட்டுவிட்டார் யோகி.
இச் சமயம் வைகுண்டத்திலிருந்து ஒரு ரதம் வந்தது.அதிலிருந்த சாரதி அந்த யோகியைப் பார்த்து,'இந்த ரதத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.இராம பிரான் உங்களை உடனே வைகுண்டத்திற்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டுள்ளார் என்றார்.
'நான் இப்போதே வைகுண்டம் போக வேண்டுமா/"
ஆமாம்
'நான் வைகுண்டம் செல்ல பல பிறவி எடுக்க வேண்டும் என நாரதர் இப்போதானே சொன்னார்'
'எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுத்து இறைவனை அடைய நீ தயாராய் இருக்கிறாய்.அதில் பொறுமையும்,ஈடுபாடும்,நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது.அதனால் நீ இனி இங்கு இருக்க வேண்டியதில்லை.இப்பவே நீ வைகுண்டம் செல்லலாம்' என்றார் நாரதர்.
'அந்த வாலிப யோகியின் நிலை என்ன?' எனப் பக்தியுடன் கேட்டார் வைகுண்டம்செல்லும் யோகி
'அவர் நான்கு பிறவிக்குக் கூடத் தயாராக இல்லை.அதனால் அவர் இன்னும் கடுமையாகத் தியானம் செய்த பிறகுதான் தாம் விரும்பும் இடத்தை அடைய முடியும்'என்றார் நாரதர்.
இந்தக் கதை போதிக்கும் உண்மை...
பொறுமையும்,மன உறுதியும் இல்லாமல் சாதனையை எதிர்பார்க்கக் கூடாது.அமைதியில்லாத மனத்தினால் எந்தத் தகுதியையும் அடைய முடியாது.
எனவே எவ்வளவு காலம் தியானத்தில் ஈடுபடுகிறோம் என்பது முக்கியமல்ல.எவ்வளவு பொறுமையும் ஈடுபாடும் நம்பிக்கையும் அதில் அமைந்திருக்கின்றன என்பதே முக்கியமாகும்.
தியானத்தைப் பற்றி விளக்கும் போது பீஷ்மர் தருமருக்கு இவற்றை உணர்த்தினார்.

(சாந்தி பருவம் முற்றிற்று)

Wednesday, September 21, 2011

174-குரு பத்தினியைக் காத்த விபுலர் கதை




பீ ஷ்மர் தருமருக்கு உரைத்தது..
முன்னொரு காலத்தில் தேவசர்மா என்றொரு முனிவர் இருந்தார்.அவருடைய பத்தினியின் பெயர் 'ருசி'.அவளுடைய அழகில் மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலக தேவர்கள் அனைவரும் மயங்கினர்.தேவேந்திரன் எப்படியும் அவளை அடைய எண்ணினான்.தவ வலிமை மிக்க தேவ சர்மா இந்திரனை தன் மனைவியிடம் நெருங்க முடியாது பாதுகாத்தார்.
ஒரு சமயம், அவர் யாகம் செல்ல வேறிடம் செல்ல நேர்ந்தது.அதுவரை தன் பத்தினியை பாதுகாப்பது எப்படி என சிந்தித்தார்.தவ வலிமை மிக்க தன் சீடர் விபுலரை அழைத்தார்.'நீர்தான் என் துணைவியைக் காக்க வேண்டும்.இந்திரனுக்கு இவளிடம் ஆசை உள்ளது.இவளை அடைய துடித்துக் கொண்டிருக்கிறான்.அவன் எத்தகைய மாய உருவங்களையும் எடுத்து வருவான்.சாதுவாகவும் இருப்பான்.சண்டாளனாகவும் இருப்பான்.புலி போல சீறுவான்.பூனையாயும் இருப்பான்..பறவையாகவும் திரிவான்..அவன் எவ்வடிவத்தில் வருவான் என யாருக்கும் தெரியாது.உன் சாமர்த்தியத்தால் எப்படியேனும் இவளைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட விபுலர்,'இவளை எப்படிக் காப்பது?' எனக் கவலை யுற்றார்.யாரையும் அருகே நெருங்கவிடாது காத்தார்.ஆயினும் அச்சம் அவருக்கு இருந்தது.இந்திரன் காற்று வடிவத்தில் கூடக் கதவு இடுக்கில் நுழைந்து விடுவான்.மாயையில் வல்ல அவனைத் தடுக்க ஒரு வழிதான் உண்டு.என் தவத்தின் வலிமையால் இவளைக் காக்க முடியும்.தனது கண் பார்வையால் அவளது கண் பார்வை மூலம் சக்தியை அவள் உடல் எங்கும் செலுத்தி அவளை அசைக்க முடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி கொண்டார்.
அவ்வாறே தன் பார்வையுடன் அவள் பார்வையையும் கலக்குமாறு செய்து தன் சக்தியை அவள் உடலுக்குள் செலுத்தி, இந்திரன் அவளை அடைய முடியாதவாறு செய்து விட்டார்.
இப்படி விபுலர் தன் குரு வரும் வரை அவருடைய பத்தினியைக் காத்தார்.
இவ்வாறு சீடர் தம் குரு பத்தினியைக் காத்து வரும் நேரம் ஒருநாள் இந்திரன் பேரழகுடன் ஆஸ்ரமத்திற்குள் வந்தான்.'ருசி' யின் அழகுக் கண்டு பரவசமுற்று,இனிய சொற்களைக் கூறினான்.தன்னிடம் வருமாறு வலியுறுத்தினான்.விபுலரின் தவ வலிமையால் குரு பத்தினி கட்டுண்டுக் கிடந்தாள்.இருந்த இடம் விட்டு நகரவும் முடியவில்லை,பேசவும் நா எழவில்லை.விபுலரின் இச் செயல் கண்டும்.அவரது தவ வலிமை கண்டும் இந்திரன் அச்சம் அடைந்தான்."முன்னர் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த அவமானத்தை மறந்துவிட்டாயா?என் குரு வந்து சபிப்பதற்கு முன் போய்விடு'என்று பேரொலி இந்திரன் காதில் விழ, அது விபுலரின் குரல் என இந்திரன் அறிந்தான்.அங்கிருந்து மறைந்தான்.
தேவசர்மா தன் யாகத்தை முடித்துக் கொண்டு ஆசிரமம் திரும்பினார்.விபுலர் அவரை வணங்கி தன்னால் காக்கப்பட்ட குரு பத்தினியை அவரிடம் ஒப்படைத்து..இந்திரன் வந்து போனதைத் தெரிவித்தார்.ஆனால் அவர் எப்படி அவனிடமிருந்து அவளைக் காத்தார் என்னும் விவரத்தைக் கூறவில்லை.பத்தினி பாதுகாப்பாய் இருந்த செய்தி அறிந்த தேவசர்மா மகிழ்ந்தார்.விபுலரைப் பாராட்டி, வேண்டும் வரத்தைக் கேட்குமாறு கூறினார்.விபுலரும், தருமத்தினின்றும் தவறாமல் இருக்கும் வரத்தைக் கேட்டுப் பெற்றார்.
குருவிடம் வரம் பெற்ற விபுலர் தவம் மேற்கொள்ள காடு சென்றார்.கடும் தவஞ் செய்தார்.தவம் ஈடேறியது.மகிழ்ச்சியுடன் எங்கும் சென்று வரலானார்.
ஒரு நாள் ஒரு தெய்வ நங்கை தேவசர்மாவின் ஆசிரமத்திற்கு மேலே ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தாள்.அப்போது அவள் சூடியிருந்த மண மலர் ஒன்று ஆசிரமத்தின் அருகில் விழுந்தது.அப்படியொரு மலர் தன் சகோதரிக்கு வேண்டும் எனக் குருபத்தினி தேவசர்மாவிடம் தெரிவித்தாள்.அத்தகைய மலரைத் தேடிக் கொண்டு வரும்படி தன் சீடரான விபுலருக்குக் கட்டளையிட்டார்.
குருவின் கட்டளையை ஏற்று விபுலர் காட்டிற்குச் சென்று கஷ்டப்பட்டு அரிதான மணம் மிக்க அம்மலரைப் பெற்றார்.அதை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்புகையில்..வழியில் இருவர் சக்கரம் போல தங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்படி விளையாடுகையில் இருவரும் ஒரு சபதம் எடுத்துக் கொண்டனர்.விளையாட்டில் தோற்பவருக்குப் பொய் சொன்ன விபுலர் பெற இருக்கும் நரக கதிதான் கிடைக்கும் என்று சபதம் ஏற்றனர்.இதைக் கேட்டு விபுலர் நடுங்கினார்..மனம் சோர்ந்தார்.
பின்னர்..அதைவிட பேரதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்.ஆறு பேர் சூதாடிக் கொண்டிருந்தனர்.'நம்மில் பேராசை கொண்டு பொய் சொல்பவர் அந்த விபுலர் போக இருக்கும் நரகத்தையே சென்றடைவர்' என்று கூறிக் கொண்டு சூதாடினர்.விபுலர், இது கேட்டு தீயால் சுடுவது போல துயரம் அடைந்தார்..
'நான் செய்த தவறு என்ன?' என்று பலவாறு ஆராய்ந்து பார்த்தார்.ஒரு வேளை 'குரு பத்தினியைக் காக்கும் முயற்சியில் அவள் கண்ணோடு தன் கண்ணை இணைத்துப் பார்வையால் சக்தியை அவள் உடலில் செலுத்தி அவளைக் காப்பாற்றியதை குருவிடம் சொல்லாமல் மறைத்தது காரணமாக இருக்குமோ?" என எண்ணினார்.இத்தகைய மனக் குழப்பத்துடன் ஆசிரமம் சென்று குருவிடம் மலரைக் கொடுத்து வணங்கினார்.
பின்னர்,தான் கண்ட காட்சிகளை குருவிடம் கூறினார்.மனப்புழுக்கத்தைக் கூறினார்.'அந்த இருவரும் யாவர்?'மற்ற அறுவரும் யாவர்?நான் என்ன பிழை செய்தேன்? ஏன் அவர்கள் அப்படி சபித்தார்கள்?தயவு செய்து விளக்க வேண்டும்..'என்ரார்.
'சீடனே! உன் குழப்பத்தை நான் அறிவேன்.நீ செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்.என் பத்தினியை நீ எவ்வாறு காப்பாற்றினாய் என்ற உண்மையை மறைத்துவிட்டாய்.உண்மையை மறைப்பது கூடப் பொய்தான் என்பதை உணர்வாயாக.ஆயினும் நீ செய்த ரகசியச் செயலைச் சிலர் அறிந்துக் கொண்டனர்.ஒன்றை ஒருவர் அறிந்தால் அது ரகசியம்.இருவர் அறிந்தால் அது பரசியம்.
நீ குறிப்பிட்ட இருவரும் இரவும், பகலும் ஆவர்.அறுவர், பருவ காலங்கள்.பகல்,இரவு,பருவ காலங்கள் இவற்றிற்கு எந்த ரகசியமும் தெரியாமல் இருக்காது.'நாம் செய்தது சரியானதா?' என்னும் அச்சத்தில் தான்..'நீ கண்ணோடு கண்ணினை நோக்கி என் பத்தினியைக் காத்த தன்மையை என்னிடம் கூறாமல் மறைத்து விட்டாய்.நன்மை செய்வதில் கூட ஒரு முறை உண்டு.நீ தவறான எண்ணத்தோடு அப்படிச் செய்யவில்லை என்பதை நான் நம்புகிறேன்.ஆனால் உலகம் அதை அவ்வாறு கருதவில்லை' என்பதை உணர்வாயாக.
ரகசியத்தை யாரும் மறைத்துவிட முடியாது.பிறருக்கு நன்மை செய்யும்போது கூட அது பிறரால் பாராட்டத்தக்கதாக இருக்க வேண்டும்.ஐயத்திற்கு இடம் அளிக்கக் கூடாது என்பவை இக்கதையால் உணர்த்தப்படும் நீதிகளாகும்.

Sunday, September 18, 2011

173-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 8




பார்வதி-மூப்பையும்..மரணத்தையும் விலக்குவது எப்படி?
ஈஸ்வரன்-பிறப்பே இல்லாதிருக்குமாயின் முதுமை இல்லை..மரணமும் இல்லை.இதற்கு ஒரே வழி முக்தி ஒன்றுதான்.தானத்தாலோ,தவத்தாலோ,முதுமையை,மரணத்தைத் தடுக்க முடியாது.முக்தி பெற்ற உயிர் மீண்டும் பிறப்பதில்லை.பிறப்பில்லையெனில் மூப்பு முதலான வியாதி களும் இல்லை,மரணமும் இல்லை.
தனம்,தானம்,ஞானம், பிற நல்ல ஒழுக்கங்கள் அனத்தும் நன்மை தரத்தக்கதுதான்.எனினும் இவற்றாலும் மரணத்தைத் தடுக்க முடியாது.ஆகவே மரணத்தை தடுக்கும் முக்திக்கு உரிய வழிகளை ஒவ்வொரு உயிரும் நாட வேண்டும்.முதுமையையும்,மரணத்தையும் தடுக்கும் வழி முக்தி ஒன்றுதான் எனத் தெளிதல் வேண்டும்.உலகில் எத்தகைய நிலையில் இருப்பாராயினும் சரி, அரசராகவோ,மாபெரும் அறிஞராகவோ, முனிவராகவோ,  அனைவரையும் காலம் அவர்களுக்கு உரிய நேரம் வரும் போது மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிரது.ஒவ்வொரு நாளும்..ஏண்..ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.காலம்,,..இதன் பிடியிலிருந்து எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது.மனிதன் விழிப்புடன் இருக்கிறானோ இல்லையோ அவனுக்காக விதிக்கப்பட்ட ஆயுட் காலத்தை முடிப்பதற்கு மரணம் விழிப்புடன் இருக்கிறது.
ஆதலால் செய்ய வேண்டிய நற்காரியங்களை உடனே செய்து முடிக்க வேண்டும்.நாளை செய்ய நினைத்ததை இன்றே..இன்று செய்ய நினைத்ததை இப்பவே செய்துவிட வேண்டும்.இப்போது மழையாக உள்ளது..இப்போது வெயிலாக உள்ளது..இப்போது குளிராக உள்ளது, பிறகு பார்க்கலாம் என்று இருக்கக் கூடாது.இது வேண்டும்..அது வேண்டும் என்று பொருளை நாடித் திரியும் போதே மனிதன் மரணத்தை நெருங்குகிறான்.நரை கூடிக் கிழப் பருவம் அடையும் முன்..இளமை கழியும் முன்னரே மரணம் வரக்கூடும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
மனைவி,மக்கள்,உற்றார்,உறவினர் அனைவராலும் ஒருவனை மரணத்தினின்று காப்பாற்ற முடியாது.இவர்கள் அனைவருமே ஒரு நாள் மரணத்தைத் தழுவ வேண்டும்.இந்நிலையில் யாருக்கு யார் துணை?நல்லறங்களைச் செய்து அசையாத ஒழுக்கத்தை மேற்கொண்டு ஆத்மத் தியானத்திலேயே திளைத்து முக்தி அடைதல் ஒன்றே மரணத்தை வெல்லும் வழியாகும்.

Thursday, September 15, 2011

172-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 7




பார்வதி- ஞானம் என்பது என்ன? வைராக்கியம் என்பது என்ன?
ஈஸ்வரன்-ஞானம் என்பது முக்திக்குரிய மார்க்கமாகும்.சம்சாரம் என்னும் காட்டை ஞானம் என்னும் தீ சுட்டு எரித்து விடும்.பொருள்களிடத்து பற்றற்ற மன நிலை கொண்டு சம்சாரத்தில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சியே ஞான நல்வழியாகும்.முட்டாள்கள் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டு துன்பம் அடைகிறார்கள்.ஆனால் ஞானிகள் துன்பம் என்று எதையும் கருதுவதில்லை.சாதாரண மக்கள் வேண்டியது கிடைத்துவிட்டால் தலை கால் தெரியாமல் குதித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.துன்பம் வந்து விட்டாலோ சொல்லவே வேண்டியதில்லை.எல்லாமே தொலைந்தது என பதறுகிறார்கள்.ஒரு இலை அசைந்தாலும் புயல் வந்தது போல பரிதவிக்கிறார்கள்.
மனிதப்பிறவியில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வருகின்றன.எந்தப் பொருளில் பற்று ஏற்படுகிறதோ அப்போது அதன் நிலையாமையை உணர்தல் வேண்டும்.அழியப் போகிற ஒன்றின் மீது ஏன் இவ்வளவு ஆசை..பற்று என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது பற்றற்ற தன்மை தோன்றும்.வைராக்கியம் தோன்றும்.
ஆழ்கடலில் வேறு வேறு மூலைகளில் கிடக்கும் நுகத்தடிகள் பல காலம் அலைந்து திரிந்து ஒன்று சேர்ந்து பிரிதல் போல உயிரும் ..உடலும் கலந்து பின் ஒரு கால கட்டத்தில் பிரிகின்றன.பொருள்களின் உண்மைத்தன்மையை..நிலையாமையை அறிந்தவர்கள் அவற்றில் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.நால்வகைக் கதிகளில் எந்தக் கதியாயினும் அதில் துன்பம் தான்.அழியக் கூடிய..பிரியக் கூடிய அனைத்திலும் துன்பம் தான்.பொருளைச் சேர்க்கும் போதும் துன்பம்..காக்கும் போதும் துன்பம்..இழக்கும் போதும் துன்பம்.பொருள் ஆசை உள்ளவர்க்கு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டினாலும் அந்த ஆசை நிரம்பாது.விரும்பியவை அனைத்தும் கிடைத்து விட்டால் இன்பம் கிடைக்குமா? எனில் அப்போதும் இன்பம் கிடைக்காது.மேலும்..மேலும் ஆசை வளரும்.ஆனால் ஆசையே இல்லாத போதுதான் இன்பம் ஏற்படும்.இது பொருள்கள் மீது கொள்ளும் வெறுப்பினால்..வைராக்கியத்தால் ஏற்படும்.
அறிவு என்பது ஒப்பற்ற ஆற்றலால்.. யார் ..ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களை துன்பம் அணுகாது.ஐம்பொறிகளை அடக்க முடியாது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனப் பொறி வழிச் சென்று அலைபவர் ஒரு நாளும் இன்பம் அடையார்.
கொடிது..கொடிது..காமம் கொடிது.அஞ்ஞானிகள் இதன் வலையில் வீழ்ந்து கடைத்தேற முடியாது... துன்புற்று பாவப் படுகுழியில் மீண்டும் மீண்டும் வீழ்கின்றனர்.நெருப்பெனத் தவம் இயற்றும் உண்மைத் துறவிகளை இந்த ஈனக் காமம் நெருங்குவதில்லை.ஐம்பொறிகளையும் நிலைகுலையச் செய்யும் இந்தக் காமத்தை வெற்றி கொள்ளாதார்க்கு நற்கதி இல்லை.
காமவெறி கொண்டு அலைவோர் செய்ய வேண்டிய நற்காரியங்களில் ஒன்றைக் கூட செய்ய இயலாது, மரண காலத்தில் சொல்ல முடியாத கொடிய துன்பத்தில் வீழ்ந்து தத்தளிப்பர்.பொருளே கதி என மயங்கிக் கிடப்போரையும்,காம இன்பமே இன்பம் என மயங்கிக் கிடப்போரையும் சிங்கம் ஒன்று மான் குட்டியைத் தூக்குவது போல எமன் தூக்கிக் கொண்டு செல்லும் போது புலம்பி அழுது என்ன பயன்?

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈஸ்வரனின் பதில்களும் தொடரும்)

Wednesday, September 14, 2011

171-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..- 6




பார்வதி- விரதம்..விரதம் என்கிறார்களே..அதை ப்படி கடைப்பிடிப்பது?
ஈஸ்வரன்-மனத்தினால்,சொல்லினால்,செய்கையினால் ஏற்படும் பாவங்களை விட முயல்வது விரதமாகும்.ஆகம விதிப்படி மனத் தூய்மையுடன்,உடல் தூய்மையுடன் பஞ்ச பூதங்களையும் வணங்க வேண்டும்.சூரிய சந்திரர்களை வழிபட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ,மரணம் வரையிலோ விரதத்தை மேற்கொள்ளலாம்.கர்மக் காட்டைச் சுட்டெரிக்கும் நெருப்பு என விரதத்தைக் கருத வேண்டும் பூ,காய்,கனி இவற்றைக் கொள்ளும் வகையிலும் விரதம் அமைய வேண்டும்.பிரமசர்ய விரதத்தையும் மேற் கொள்ள வேண்டும்.
பார்வதி-புலால் உண்பதால் ஏற்படும் தீமை யாது? உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?
ஈஸ்வரன்-எல்லாத் தான தருமங்களும் புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மைக்கு ஈடாகாது.தன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லக்கூடாது.நம் உடலுறுப்புக்களை அறுக்கும் போது நமக்கு ஏற்படும் துன்பம் போலவே பிற உயிர்களை அறுக்கும் போதும் அவ்வுயிர்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.நூறு வருடம் தவம் செய்தால் ஏற்படும் பயன் புலால் உண்ணாமையால் ஏற்படும்.தன் உயிரைக் காட்டிலும் ஒருவருக்கு இனிமை பிறிதில்லை.ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்துடன் இருந்து அவற்றிற்கு நன்மை செய்ய வேண்டும்.
பார்வதி-எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த மோட்ச தருமம் எப்படி வர்ணிக்கப்படுகிறது?தோற்றமும், முடிவும் இல்லாத மோட்ச தருமம் எப்படி உயர்ந்ததாக ஆகிறது?
ஈஸ்வரன்-மோட்சத்திற்கு உரிய வழிமுறைகள் எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளது.தருமத்தின் செயல் எதுவும் வீணாவதில்லை.யார் யார் எந்தெந்தத் தருமங்களில் உறுதியாய் உள்ளனரோ,அந்தநத தருமங்கள் மோட்ச மார்க்கமேயாகும்.மோட்சம் தான் எல்லாத் தருமங்களின் முடிவு.இதனினும் சிறந்த ஓர் உயநிலை வேறு எதுவும் இல்லை.எனவே மோட்ச மார்க்கத்தை அறிந்து கொள்வது அவசியந்தான்.இதைப் பற்றி விளக்குகிறேன்...
மோட்சம் மனதாலும் அறிய முடியா மாண்பு உடையது.மோட்ச ஞானமே உயர்ந்த ஞானமாகும்.மகரிஷிகள் அதை பரமபதம் என கொண்டாடுகிறார்கள்.அழியாததும் அந்தமில்லாததும் இன்பம் தரக்கூடியதுமான அம்மோட்சத்தை நோக்கித் தான் எல்லா உயிர்களும் பயணம் செய்கின்றன.ஆயினும் ஒழுக்கத்தால் உயர்ந்தவரே அதை அடைய முடிகிறது.இந்தப் பிறவியானது துக்க சாகரத்தில் மூழ்கித் துன்புறுகிறது.சம்சாரம் என்பது பிறப்பு,பிணி,மூப்பு என்னும் துக்கத்தால் நிறைந்துள்ளது.இறப்போ..பிறப்புக்கு வித்தாகிறது.ஆகாயத்தில் காணப்படும் விண்மீன்கள் எவ்வாறு மீண்டும்,. மீண்டும் சுற்றுகின்றனவோ அவ்வாரு தான் பிறப்பும் உள்ளது.எறும்பு முதல் யானை வரையிலுமான பல உடல்களில் சென்று உயிர் பல பிறவிகளை எடுக்கிறது.
இந்தப் பிறவியாகிய கடலிலிருந்து கரை ஏற உதவும் படகாக இருப்பதுதான் ஆத்ம ஞானம்.ஆத்ம ஞானம் என்பது உயிரின் உண்மைத் தன்மையை உணர்ந்து கர்மத் தளையிலிருந்து விடுபடும் உபாயம் ஆகும்..

(பார்வதியின் சந்தேகங்களும் ஈஸ்வரனின் பதில்களும் தொடரும் )

Monday, September 12, 2011

170-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-5




பார்வதி- இந்த உடல் கொல்லப்பட்டால் ஆத்மா இதனை விட்டுப் போய் விடுகிறதே..அது எதனால்..
ஈஸ்வரன்-மிக நுட்பமான அறிவு படைத்தவரும் இதனை விளக்கமுடியாது துன்புறுவர்.பிறவி  எடுத்து உயிர்களின் கர்மம் முடியும் போது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு உடலுக்கு இறுதி ஏற்படும்.அதனால் உடல் அழியும் போது ஆத்மா அதன் கருமத்திற்கு ஏற்பப் பயனை அனுபவித்து அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறது.உடல் அழிவுக்கான நோய்களினால் ஆத்மா துன்புறுவதில்லை.உடலை வெட்டினாலும், குத்தினாலும்,கொன்றாலும், தர தர என இழுத்துச் சென்றாலும் ஆத்மாவிடத்தில் ஒரு மாறுதலும் ஏற்படாது.அனுபவிப்பது உடல்தான்.கர்மத்தின் பயன் உள்ளவரை உடலில் ஆத்மா தங்கியிருக்கும்.பிரிய வேண்டிய காலம் வரும் போது பிரிந்து விடும்.இதையே உலகோர் மரணம் என்கின்றனர்.
பார்வதி-பிறருக்கு நன்மை செய்பவன் நன்மையை அடைந்து இன்புறுகிரான் என்பது சரி.ஆனால் பிறருக்குத் துன்பம் செய்பவன் எப்படி இன்பத்தை அடைகிறான்? இருள் என்பது என்ன?
ஈஸ்வரன்-பலரது நன்மைக்காக , சமுதாயத்தின் நன்மைக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்பவன் இன்பம் அடைவான்.அரசன் சமுதாய நன்மைக்காகச் சிலருக்கு தண்டனை விதித்துப் புண்ணியம் அடைகிறான்.வழி தவறி நடக்கும் சீடனுக்குப் பிராயச் சித்தம் முதலான தண்டனைகளால் குரு நற்பயனை அடைகிறார்.மருத்துவர் நோயாளிக்குத் துன்பத்தை அளித்துச் சிகிச்சை செய்து புண்ணியம் பெறுகின்றார்.இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படுபவர் புண்ணிய பலனால் தேவர் உலகம் அடைகின்றனர்.தீயவன் ஒருவன் கொல்லப்படுவதன் மூலம் ஒரு சமுதாயமே நன்மை பெறுமானால் அவனைக் கொல்வது கொலையாகக் கருதப்பட மாட்டாது.இது பாவம் அன்று.இதனால் பாவப் பயன் ஏற்படாது.புண்ணிய பலனே ஏற்படும்.
இருளைப் பறிச் சொல்வதானால்..இருள் இருவகைப்படும்.இரவில் தோன்றுவது ஒன்று..மனித மனதில் தோன்றுவது மற்றொன்று.
இருளில் தோன்றும் இருள் ஒளிகளால் மறையும்..விலகும்..ஆனால் உள்ளத்தில் தோன்றும் இருளை உலகில் உள்ள சூரியன், சந்திரன் ஆகிய ஒளிப் பிழம்புகளால் கூடத் தொலைக்க முடியாது.உல உயிர்களைப் படைத்த பிரமதேவன் மக்களின் மன இருளைப் போக்கத் தவம் செய்தார்.அப்படிச் செய்த தவத்தால் வேதமும், உபநிஷதமும் தோன்றின.பிரமதேவர் அதனால் மகிழ்ச்சி அடைந்தார்.மன இருள் அவற்றால் அழியலாயிற்று.நினைக்கத்தக்கது..சொல்லத்தக்கது..செய்யத்தக்கது என்பவற்றை எல்லாம் விளக்கும் ஆகமங்கள் இல்லையென்றால் மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருள் போக்க உதவும் ஒழுக்க நெறிகளைக் கூறும் ஆகமங்களை மக்கள் போற்றுதல் வேண்டும்.
அது மட்டுமல்லாது, இவ்வுலைகைத் தாங்குவது ஆகமம் என உணட வேண்டும்.இதைத்தவிர உயிர்களுக்கு நன்மை தருவது மூன்று உலகிலும் இல்லை.ஒருவருக்குப் பிறவியிலேயே அமையும் ஞானம் தலை சிறந்தது.கற்பிக்கப்படும் கல்வி இரண்டாவதாகக் கருதப் படுகிறது.இந்த இரண்டும் நிரைந்திருந்தால் தான் நன்மை உண்டாகும்.ஆகமப் பயிற்சி ஒருவனை முழு மனிதனாக ஆக்குகிறது.இந்த ஞானம் உள்ளவன் பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்கிறான்.காமம்,கர்வம்,பயம்,பேராசை ஆகியவை அனைத்தும் காற்றால் மேகம் விலகுவதைப் போல விலகும்.ஆகவே ஆகமக் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
பார்வதி-பாவம், புண்ணியம் ஆகிய செயல்களைப் பற்ரி விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஈஸ்வரன்-கர்மங்கள் இரண்டுவகைப் படும்.அவை புண்ணிய கர்மம்,பாவ கர்மம்.பாவகர்மம் மூன்று வகையில் உண்டாகிறது.முதலில் மனதிலும், பிறகு சொல்லிலும்,பின் செயலிலும் தோன்றுகிறது.பொறாமை,ஆசை,கெட்ட எண்ணம் ஆகியவை மனத்தே தோன்றும் பாவ கர்மங்களாகும்.பொய்,புறங்கூறல்,கடும் சொல்,பிறர் மனம் புண்படப் பேசுதல்,பிறரைப் பழித்தல் ஆகிய இவை வாக்கினால் ஏற்படும் பாவங்கள்.கூடானட்பு,பிறர் மனை நாடுதல்,பிற உயிரைத் துன்புறுத்துவது,உண்ணத் தகாதவற்றை உண்ணுவது,செய்யத் தகாததைச் செய்வது,,பிறர் செய்யும் கெட்டசெயலுக்குத் துணையாக இருப்பது,புண்ணியத்திற்கு மாறாக செயல்களில் ஈடுபடுவது ஆகிய இச்செயல்கள் பாவங்கள் எனக் கருதப்படுபவை.மனதால் வரும் பாவத்தை விடச் சொல்லால் நேரும் பாவம் அதிகம் ஆகும்.அதைவிட அதிகம் செயலால் வரும் பாவம்.இத்தகைய பாவங்களால் ஒருவன் நரகத் துன்பத்தை அடைவான்.
இனிப் புண்ணியத்தின் பெருமையைக் கேள்..மனம்,சொல்.செயல் இவற்றால் ஏற்படக்கூடிய பாவச் செயல்களை விடுவதாலேயே புண்ணியம் உண்டாகிறது.பாவச் செயல்களை முற்றிலும் விலக்கும் ஒருவன் முனிவன் ஆகிறான்.பாவத்தை விலக்கிய ஆத்மா மேன்மை அடைகிறது.மனதில் மாசற்றுப் பாவத்திற்குப் பயந்த போதே புண்ணியம் உதயமாகிறது.சான்றோர் தொடர்பும்,ஆகமப் பயிற்சியும் ,மன உறுதியும்,மன நிறைவும் புண்ணியம் பெற பெரிதும் உதவுகின்றன.ஒவ்வொருவரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தானமும் இல்லை.தவமும் இல்லை.தருமமும் இல்லை.சத்தியம் என்னும் கப்பலைக் கொண்டுதான் சம்சாரம் என்னும் துக்கக் கடலைக் கடக்க முடியும்.

(பார்வதியின் சந்தேகங்களும் ஈசனின் பதிலும் தொடரும்)

Tuesday, September 6, 2011

169-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-4



பார்வதி- சிலர் எவ்வளவுதான் முயற்சி உடையவர்களாக இருந்த போதிலும் கல்வி அறிவு பெறாதவராகக் காணப்படுகின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்- அவர்கள், முற் பிறவியில் கல்வியினால் கர்வம் அடைந்திருப்பர்.தங்கள் கல்விப் பெருமையால் பிறரை அலட்சியம் செய்திருப்பர்.இகழ்ந்திருப்பர்.அத்தகையோர் இப்பிறவியில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வாய்த்தும் கல்வி அறிவு இன்றிக் கானப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் எல்லா நற்குணங்களும் உள்ளவராய் உள்ளனர்.நல்ல மனைவி மக்களுடன் வாழ்கின்றனர்.அவர்கள் வேலைக்காரரும் அவர்கள் சொற்படி நடக்கின்றனர்.செல்வத்தில் திளைக்கின்றனர்.நோயின்றி மகிழ்ச்சியுடன் விளங்குகின்றனர்.ஒரு நாளும் அவர்கலுக்குத் துன்பம் இல்லையே..ஏன்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் யார் கல்வி அறிவில் சிறந்தவர்களாக..ஒழுக்க சீலராக, தானம் செய்பவர்களாகத் திகழ்கின்றனரோ..யார் கொல்லாமையும் வாய்மையையும் போற்றினரோ, யார் நல்ல நோன்புகளை மேற்கொண்டு பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதினரோ அவர்கள் இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெற்று ஒரு குறையும் இன்றி வாழ்கின்றனர்.
பார்வதி-சிலர் பசியினால் வாடி, பிணியால் துன்புற்று, வறுமைப் பிடியில் சிக்கி, யாருக்கும் ஒன்றும் தராமல் இருக்கின்றனரே..மனைவியால் துன்பப்படுகின்றனரே..எப்போதும் ஏதேனும் ஒரு இடையூற்றை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் இரக்கமற்றவராக இருந்திருப்பர்.கோபமும், பேராசையும் கொண்டவராக இருந்திருப்பர்.ஒழுக்கம் இல்லாதவராக, பிறரைத் துன்புறுத்துபவராக, உயிர்கலீடத்தில் அன்பு அற்றவராக இருந்திருப்பர்.ஆதலால் இப்பிறவியில் நீ கூறியவாறு உள்ளனர்.
பார்வதி-சிலர் பிறவியிலேயே குருடராய் இருக்கின்றனர்.சிலருக்குப் பிறந்த சில ஆண்டுகலுக்குப் பின் கண் கெட்டுப் போகிறது..ஏன்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் காமாந்தகாரராகத் திரிந்தனரோ, யார் பிறர் மனைவியை நாடிச் சென்றனரோ அவர்கள் இப்பிறவியில் கண் பார்வைக் கெட்டுத் துன்புறுகின்றனர்
பார்வதி-பார்வதி- சிலர் இளம் வயதிலேயே பல்லை இழந்து,தொண்டையில் நோயுற்றுக் காது கேளாவராக ஆகி, முக விகரமாகத் தோன்றுகின்றனரே! ஏன்?
ஈஸ்வரன்-பொய் பேசுதலையே முற்பிறவியில் தொழிலாகக் கொண்டவரும்,சினத்துடன் விளங்கியவரும், பிறர் செவி கைப்பக் கூறியவரும், பிறர் கேட்டினைக் காதால் கேட்பவரும் ஆகிய இவர்கள் இப்பிறவியில் தொண்டை,காது,பல் முதலியவற்றில் நோய் உண்டாகத் துன்புறுகின்றனர்
பார்வதி-கர்மங்களைத் தோற்றுவைப்பது ஆத்மாவா? இல்லையெனில் வேறு யார்?
ஈஸ்வரன்-ஆத்மா கர்மங்களை உண்டாக்குவதில்லை.ஆனால் கர்மங்களினால் பாதிக்கப் படுகிறது.உடலானது கபம்,வாதம்,பித்தம் ஆகிய மூன்று தாதுக்களால் நிரம்பி இருப்பது போல, சத்துவ குணம்,ரஜோ குணம்,தாமோ குணம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கிறது.சத்துவ குணம் உடையவர் எப்போதும் புகழுடன் திகழ்வர்.ரஜோ குணம் துக்கத்திற்குக் காரணம்.தமோ குணம் அறிவின்மைக்கு இடமாகும்.
வாய்மை,தூய்மை,நன்மையில் நாட்டம்,பொறுமை,அடக்கமுடைமை,இன்சொல் கூறல் முதலான நற்பண்புகள் சத்துவ குணத்தால் உண்டாகும்.
செயல்திறன்,சுறு சுறுப்பு,பொருட்பற்று ஆகியவை ரஜோ குணத்தால் ஏற்படும்.பொய்,சோம்பல்,பிடிவாதம்,துக்கம்,தூக்கம்,வீண்பகை,பிறருக்குத் துன்பம் தருதல் முதலிய பாவச்செயல்கள் தமோ குணத்தால் விளையும்.
ஆதலால் நன்மை, தீமை ஆகிய கருமங்கள் குணங்களால் அமைபவை.எனவே ஆத்மா ஆசையற்றது.விகாரமற்றது.தூய்மையானது.
சத்துவகுணம் உள்ளவர் தேவர் உலகில் சென்று பிறப்பர் .
ரஜோ குணம் உள்ளவர் மனிதப் பிறவி எடுப்பர்
தமோ குணம் உள்ளவர் விலங்கு கதி,நரக கதி என்னும் கதிகளில் பிறவி எடுத்து துன்புறுவர்.

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈசனின் பதில்களும் தொடரும்)