Thursday, April 28, 2011

149-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள்..





தருமர் பீஷ்மரை நோக்கி, 'தானம் கொடுப்பவர் மற்றும் ஏற்பவர் இயல்புகள் யாவை? என வினவ பீஷ்மர் கூறலானார்..

'தருமா..இது தொடர்பாக விருஷாதர்ப்பி என்ற மன்னனுக்கும் சப்த ரிஷிகளுக்கும் நடந்த உரையாடலை அறிவாயாக..

ஒருசமயம் விருஷாதர்ப்பி அந்தணர்களிடம் 'தானம் வாங்கி உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.உங்களிடம் எனக்கு மரியாதை உண்டு.அன்பு உண்டு.நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைத் தருகிறேன்.ஒவ்வொரு கன்றை ஈன்ற பத்தாயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன்.விரைந்து செல்லும் வெள்ளைக் குதிரைகள் கொடுக்கிறேன்.எருதுகள் பத்தாயிரம் கொடுக்கிறேன்..கிராமங்களையும் ரத்தினங்களையும் தருவேன்.இன்னும் என்னென்ன உங்களுக்குத் தேவையோ..கேளுங்கள் தருகின்றேன்' என்றான்.

ரிஷிகள் மன்னனிடம் தானம் வாங்க விரும்பவில்லை.மன்னர் தரும் தானம் முதலில் இன்பம் தருவது போல இருந்தாலும் முடிவில் துன்பம் தரும்.ஆயிரம் கசாப்புக் கடைகளை வைத்திருக்கும் கசாப்புக்காரனும், மன்னமும் சரி.எனவே மன்னனிடம் தானம் வாங்குவது தீமை பயக்கும்.பொதுவாக அந்தணர்களுக்குத் தவம் எளிதில் கிடைக்கும்.மன்னனின் பொருள் காட்டுத்தீயைப் போல அந்த தவத்தையே எரித்து விடும்..என்று கூறி ரிஷிகள் காட்டுக்குச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து செல்லுமாறு அமைச்சர்களை அனுப்பினான் மன்னன்.அத்திப் பழங்களைப் பறித்துத் தந்தனர் அமைச்சர்கள்.ரிஷிகள் அப் பழங்களை வாங்கச் சென்ற போது மன்னனின் வேலைக்காரர்கள் உள்ளே பொன்னை வைத்துத் தந்தனர்.

அத்ரி முனிவர் அவை பளுவாய் இருந்ததால் வாங்க மறுத்துப் பேசினார்..'நாங்கள் முட்டாள்கள் அல்ல.இவற்றின் உள்ளே பொன் உள்ளதை அறிவோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்.மறுபடியும் சொல்கிறேன்..அரசன் தரும் பொருள் மறுமை இன்பத்தை அளிக்காது.இம்மை மறுமைகளில் இன்பம் வேண்டுவோர் அரசர் தரும் இத்தகைய பொருள்களை வாங்கவே கூடாது' என்றார்.

கச்யபர்,'பூமியில் பொன்னும் பொருளும் போகமும் விரும்பத் தக்கது அல்ல' என்றார்.

வஷிஷ்டர்,'நூறு ஆயிரம் என மிகுதியானப் பொன்னை வாங்கினால் தாழ்ந்த கதிதான் கிடைக்கும்' என்றார்.

பரத்வாஜர்,'மான் குட்டி வளரும் போது கூடவே வளரும் கொம்பு போன்றது ஆசை.அது வளர்ந்து கொண்டே போகும்.அதற்கு எல்லையே இல்லை' என்றார்.

கௌதமர், "ஆசை நிறைவேறுதல் என்பது இல்லை.நதி நீரால் கடல் நிரம்பாதது போன்றது ஆசை.ஒரு நாளும் மனிதன் நிறைவடைய மாட்டான்' என்றார்.

ஜமதக்னி,'பிறரிடம் வாங்குவதற்கும் மனக் கட்டுப்பாடு வேண்டும்.ஆசைப்படுபவர்களுக்குத் தவம் என்னும் செல்வம் தொலையும்' என்றார்.

விசுவாமித்திரர், 'ஒரு விருப்பம் நிறைவேறும் போதே மற்றொரு விருப்பம் அம்பு போல மனதில் பாயும்' என்றார்.

சீலம் மிக்க ரிஷிகள் அனைவரும் உள்ளே பொன் வைத்த அக்கனிகளை ஏற்க மறுத்து வேறு இடம் சென்றனர்..

(தொடரும்)
 

Sunday, April 10, 2011

148- இந்திரனுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்





காலத்தின் இயல்பு குறித்துப் பலி இந்திரனிடம் கூறும்போது, அப்பலியிடமிருந்து லட்சுமி ஒளிமிக்க பெண்ணாக வெளியே வந்தாள்.வியப்புற்ற இந்திரன் பலியை நோக்கி, 'ஒளியுள்ள இந்தப் பெண் யார்?" என வினவினார்.பலியோ தெய்வப் 'பெண்ணோ,மண்ணுலக மாதோ நான் அறியேன்.நீ அவளையேக் கேள் என்றான்.

உடன் இந்திரன், 'பெண்ணே..கண்ணைக் கவரும் அழகுடைய நீ யார்? பலியை விட்டு விலகி என் அருகில் நிற்கிறாயே ஏன்? என்றார்.

அது கேட்டு லட்சுமி சிரித்தாள்.'விரோசனும் என்னை அறியவில்லை.அவன் மகன் பலியும் என்னை அறியவில்லை.போகட்டும்..எனக்கு லட்சுமி,விதித்சை எனப் பலப் பெயர்கள் உண்டு.இந்திரா..நீயும், தேவர்களும் கூட என்னை அறியீர்' என்றாள்.

'பலியிடமிருந்து ஏன் விலகி விட்டாய்..என்னை அடையவா?' என்றார் இந்திரன்.

'பிரம்மதேவன் கூட எனக்குக் கட்டளையிட முடியாது.யாரிடம் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடும் வலிமை காலதேவனுக்கு மட்டுமே உண்டு'காலத்துக்குக் கட்டுப்பட்டவள் நான்.பலிக்கு உரிய காலம் மாறியது.நான் உங்களிடம் வந்து விட்டேன்.அவ்வளவுதான்' என்றாள் லட்சுமி.

'பலியைவிட்டு ஏன் விலகிவிட்டாய்..என்னை விடாமல் இருப்பாயா?' என்ரார் இந்திரன்.

'பலியை விட்டு விலகியதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறேன்.தானம்,தவம்,வாய்மை,வீரம்,தருமம் ஆகியவற்றினின்று விலகி விட்டான் பலி.ஆதலால் அவனை விட்டு விலகினேன்.இப்போது உன்னை அடந்துள்ளேன்.நீயும் அவற்றினின்று விலகினால்,நானும் உன்னை விட்டு விலகுவேன்' என்றாள் லட்சுமி.

'உலகில் உன்னைத் தன்னிடமே இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்தவர் யார்?' என்றார் இந்திரன்.

அத்தகையவர் யாரும் இல்லை என்றாள் லட்சுமி.

'செல்வத் திருமகளே..நீ எப்போதும் என்னிடம் தங்கியிருக்கும் உபாயத்தை சொல்வாயாக' என இந்திரன் வேண்ட, 'இதோ அந்த உபாயத்தைக் கூறுகிறேன்.வேத நெறிப்படி என்னை நான்கு பாகமாகப் பிரித்து அமைத்துக் கொள்' என அருளினாள் தேவி.

'எனது ஆத்ம பலத்திற்கும்,உடல் வலிமைக்கும் ஏற்ப அவ்வாறே உன்னை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்'

'உலக உயிரினங்களைத் தாங்கும் ஆற்றல் பூமி தேவிக்குத் தான் உண்டு.ஆதலால் உனது நாங்கில் ஒரு பாகத்தைப் பூமி தேவியிடம் தந்துள்ளேன்.இனி அவள் பூமி பாரத்தைத் தாங்குவாள்'

ஓடும் நீர்தான் உலக உயிர்களை வளர்க்கிறது.எனவே உன் இரண்டாம் பாகத்தை னிரிடம் வைத்து உள்ளேன்'

'உனது மூன்றாம் பாகத்தை யாகத்திற்கு முதல் காரணமாக விளங்கும் அக்கினி தேவனிடம் வைத்துள்ளேன்'

உனது நான்காம் பாகத்தை மாந்தருள் சிறந்தவர்க்குக் கொடுத்துள்ளேன்.இந்த நான்கினிடத்தும் நீ நிரந்தரமாக தங்கியிருக்க உன்னை வேண்டுகிறேன்.உன்னிடம் தவறு செய்வோர் தண்டிக்கப் படுவர்' என்றார் இந்திரன்.

அப்படியே நடக்கட்டும் என இந்திரனுக்கு அருளினாள் லட்சுமி.

பின் லட்சுமியால் கை விடப்பட்ட பலி, இந்திரனிடம்,'சூரியன் கிழக்கே எந்த அளவு ஒளி வீசுகிறானோ அந்த அளவு மற்ற மூன்று திக்குகளிலும் ஒளி வீசுவான்.அந்தச் சூரியன் நடுப்பகலில் இருக்கும் போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மறுபடி போர் மூளும்.அந்த நேரத்தில் நான் தேவர்களை வெற்றி கொள்வேன்.அந்தச் சூரியன் எப்போது பிரம்ம லோகத்திலிருந்து கீழ் உலகங்களைத் தகிப்பானோ அப்போது உன்னை நான் தோற்கடிப்பேன்.பின் நான் இந்திரன் ஆவேன்' என்றான்.

அது கேட்டு இந்திரன் கோபமுற்று

'உன்னைக் கொல்லக்கூடாது என பிரம்மதேவர் கட்டளையிட்டுள்ளார்.ஆகவே நீ தப்பித்தாய்.உடனே இந்த இடத்தைவிட்டுப் போ.நீ சொல்வது போல சூரியன் நடுவில் இருந்து ஒளி வீசுவதில்லை.எங்கும் சுற்றிக் கொண்டு ஒளி வீச வேண்டும் என்ற பிரமதேவனின் ஆணையை மீறாமல் அந்தச் சூரியன் செயல் படுகிறான்.அவனுக்கு ஆறு மாதம் உத்தராயணம்.ஆறு மாதம் தட்சணாயணம் ஆகும்.அதன்படி உலகிற்கு ஒளி வழங்கி வருகிறான், சூரியன்' என உரைத்தான்.

தருமரே! இவ்வாறு இந்திரன் சொன்னவுடன் பலி தெற்கு நோக்கிச் சென்றான்.பின் இந்திரன் விண் வழியாக இந்திர லோகம் அடைந்தார்.இந்தப் பகுதியில் காலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளதை கவனமாக ஆராய்ந்து பார்.கண்ணுக்குத் தெரியாத ஒப்பற்ற அந்தப் பொருளின் ஆற்றலை உணர்ந்துக் கொள்வாயாக' என்றார்
 

Friday, April 1, 2011

147-காலத்தின் வலிமை



காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.

இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி