Tuesday, October 26, 2010

117- ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை (தொடர்ச்சி)

அரசன் கொக்கைப்போல ஒரே நினைவாக இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றி தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.ஓநாய் போல் பதுங்கிப் பாய்ந்து பகையை அழிக்க வேண்டும்.அம்பு போல திரும்பாமல் பகைவர் மேல் செலுத்த வேண்டும்.குடி,சூது,வேட்டைபாட்டு,இசை ஆகியவற்றை அளவுடன் அனுபவிக்க வேண்டும்.குருடனாக இருக்க வேண்டிய நேரத்தில் குருடனாக இருக்க வேண்டும்.செவிடனாக இருக்க வேண்டிய நேரத்தில் செவிடனாக இருக்க வேண்டும்.காலம்,இடம் அறிந்து செயல் பட வேண்டும்.பகை வலிமையையும்,தன் வலிமையையும் இருபக்கமும் துணையாவார் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

எந்த ரசன் பகைவனைத் தண்டத்தால் அடக்க வில்லையோ அந்த அரசன் அச்வத்ரி என்ற விலங்கு தன் கருவினால் அழிவது போல அழிவான்.(அச்வத்ரி என்னும் விலங்கின் கரு தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்)அரசன் நன்றாகப் பூவுள்ளதாக இருந்தும் கனியில்லாத மரம் போல திகழ வேண்டும்.கனியுள்ளதாக இருந்தும் ஏற முடியாத மரம் போல இருக்க வேண்டும்.பழுக்காமல் இருந்தும் பழுத்தது போல காட்சி தர வேண்டும். பகை வரும்வரை அஞ்சுவது போல காணப்பட வேண்டும்.பகைவர் வந்து விட்டாலோ அஞ்சாமல் போரிட வேண்டும்.வரும் துன்பத்தை முன்னதாக தெரிந்து கொண்டு அகற்ற வேண்டும்.

வந்த நன்மையை இழப்பதும்,வராததற்கு ஏங்குவதும் அரசர்க்கு இயல்பு அன்று.பகைவருடன் சமாதானம் செய்து கொண்டோம் என அரசன் நிம்மதியாக இருக்கக் கூடாதுஅப்படி நிம்மதியாக இருப்பவன், மரத்தின் நுனியில் உறங்குபவன் போல் ஆவான்.அதாவது மரத்தின் நுனியில் இருப்பவன் எந்நேரத்திலும் கீழே விழக்கூடும்.அதுபோலப் பகைவரிடம் அதிக நம்பிக்கைக் கொண்டவனுக்கும் எந்நேரத்திலும் அழிவு ஏற்படக் கூடும்.நண்பனிடத்தில் கூட அளவு கடந்த நம்பிக்கைக் கூடாது.அதிக நம்பிக்கை ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆராய்ந்து பார்க்காமல் யாரிடமும் நம்பிக்கை கொள்ளக் கூடாது.பிறப்பினால் யாரும் நண்பனுமில்லை, பகைவனும் இல்லை.செயல்களால்தான் பகையும் நட்பும் ஏற்படுகின்றன.

ஆணவம் மிக்கவனும் நன்மை தீமை அறியாதவனுமான ஒருவன் உறவினனாய் இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக நடந்துக் கொள்வானாயின் அவன் தண்டிக்கத் தக்கவன் ஆவான்.பகைவன் இனிக்க இனிக்க பேசினாலும் விட்டுவிடக் கூடாது.இனிமையாக பேசியே அவனை அடிக்க வேண்டும்.அடித்த பின்னரும் அன்புடன் பேச வேண்டும்.கனிவான பேச்சால்,வெகுமதிகளால் பிறரைத் தன்பால் கவர்ந்து கொள்ள வேண்டும்.முன்பு பகையாய் இருந்தவனை எப்போதும் நம்பக் கூடாது.பழம்பகை நட்பாவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.காரணமின்றி யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.கைகளால் நீந்திக் கடலை கடந்துவிட முடியாது.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகையைத் தொலைக்க முற்படுகையில் பூண்டோடு அழிக்க வேண்டும்.பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்.அரசன் கழுகைப் போல நீண்ட பார்வையுடையவனாக இருக்க வேண்டும்.கொக்கைப் போல அசைவற்ற தன்மையுடன் விளங்க வேண்டும்.நாயைப் போல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.காக்கையைப் போல பிறரின் இங்கிதத்தை அறியும் தன்மையுடன் திகழ வேண்டும்.பாம்பைப் போல செல்லும் வழியைப் பகைவர் உணராதவாறு செயல் பட வேண்டும்.தீரனைப் பணிந்தும், பயந்தவனைப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியும்,உலோபியைப் பொருள் கொடுத்தும்,நிகரானவரைப் போரிட்டும் அடக்கி ஒடுக்க வேண்டும்.

மன்னன் மென்மையாக இருந்தால் பிறர் அவமதிப்பர்.கடுமையாக இருந்தால் மிகவும் அஞ்சுவர்.ஆதலாம் அதிக மென்மையும், அளவுக்கு மீறிய கடுமையும் இன்றிச் சமயத்து ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.அறிஞருடன் விரோதம் கூடாது.ஏனெனில் புத்திசாலிகளின் கைகள் நீண்டிருக்கும்.எந்தச் செயல் செய்ய முடியாது என்று தெரிகிறதோ அந்தச் செயலில் இறங்கக் கூடாது.ஆபத்துக் காலத்தில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசன் ஆட்சி புரிய வேண்டும் என பாரத்துவாஜர் சத்ருந்தபனுக்குக் கூறினார்' எனப் பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

Monday, October 25, 2010

116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை

யுக மாறுபாட்டால் தருமம் குன்றித் திருடர்கள் மலிந்து விட்டால், அத்தகைய ஆபத்துக் காலத்தில் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்? என த்ருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.



'தருமா..இது பற்றி முன்னொரு காலத்தில் சத்ருந்தபன் என்னும் மன்னனுக்கும், பாரத்வாஜருக்கும் நடந்த உரையாடலை உனக்கு உனக்குச் சொல்கிறேன்..கேள்..



சௌவீர தெச மன்னனான சத்ருருந்தபன் பாரத்வாஜரிடம் சென்று, 'பெற முடியாத ஒரு பொருளைப் பெறுவது எப்படி? பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படி?வளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படி? என வினவினான்.



அது கேட்ட பாரத்வாஜர் அறவுரை அருளினார். மன்னன் தண்டிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.தண்டனையைக் கண்டு மனிதன் பயப்படுவான்.ஆதலால் அனைவரையும் தண்டனையினாலேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.நாட்டில் அமைதி நிலவினால்தான் நல்ல பல திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்ற முடியும்.ஆகையால்தான் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கில் தண்டம் முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.பெரிய மரத்தின் வேர் அறுபட்டால் கிளைகள் எங்கனம் இருக்கும்.அது போல பகைவரின் ஆணிவேரை முதலில் அறுக்க வேண்டும்.பின்னர் அவனுக்குத் துணையாக இருப்பவரை அழிக்க வேண்டும்.



ஆபத்துக் காலத்தில் அரசன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.ஆற்றலுடன் போரிட வேண்டும்.ஆற்றலுடன் பின் வாங்கவும் தயாராய் இருக்க வேண்டும்.பின் வாங்கத் தயங்கக் கூடாது.பணிவான சொற்களைப் பேச வேண்டும்.விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் செயல் பட வேண்டும்.பகைவனிடம் சமாதானம் செய்துக் கொண்ட போதிலும் அவனிடம் நம்பிக்கைக் கொள்ளக் கூடாது.அப்பகைவனிடம் நட்புடன் நடந்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பாம்பிடம் இருப்பது போல எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.செல்வத்தை விரும்புபவன் தாழ்ந்து பணிந்து கண்ணீர் வடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.காரியம் ஆகும்வரை பகைவரைத் தோளில் சுமக்க வேண்டும்.காரியம் முடிந்த உடன் மட்குடத்தைக் கல்லில் போட்டு உடைப்பதுபோல அவனை அழித்துத் தொலைக்க வேண்டும்.



ஒரு நொடிப்பொழுதானாலும் கருங்காலி மரத்தின் தீயைப் போல ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல நீண்ட காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.நன்றி கெட்டவரிடம் பொருள் தொடர்பு கொள்ளக் கூடாது.அவர்கள் காரியம் முடியும் வரை நல்லபடியே நடந்து கொள்வர்.காரியம் முடிந்தபின் அவமதிப்பர்.ஆதலால் அத்தகையவரின் காரியத்தை முழுதும் முடிக்காமல் மிச்சம் உள்ளதாகவே வைத்திருக்க வேண்டும்.



வேந்தன் விடா முயற்சியுடன் பகைவனுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவன் உடல் நலக் குறைவாய் இருந்தால் உடல் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.சோம்பேறிகளும்,தைரியம் இல்லாதவர்களும்,பிறரது பழிச் சொற்களுக்குப் பயப்படுவர்களும்,விடா முயற்சியின்றி விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடையமுடியாது.ஆமை தன் உறுப்புகளை மறைத்துக் கொள்வது போல் மன்னன் தன் குறைகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.குயில்,பன்றி,மேருமலை,ஒன்றும் இல்லாத வீடு, பாம்பு ஆகியவற்றைப் போல ஒழுக வேண்டும்.



(குயில்-தான் காக்க வேண்டிய முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு அதனைக் காப்பாற்றுமாறு செய்யும்.அதுபோல மன்னன் பயிர்,வாணிபம்,வழி,காடுகள் ஆகிய தனது பொருள்களைப் பிறரைக் கொண்டு காக்குமாறு செய்ய வேண்டும்.

பன்றி-தான் உண்ணும் கோரைப் புற்களை வேருடன் களைந்து உண்ணும்.அது போல மன்னன் பகைவர்களை வேருடன் களைந்துக் கொல்ல வேண்டும்.

மேருமலை-தன்னைத் தாண்டத் தகாதவாறு அசைவற்ரு நிற்கும்.அதைப் போல வேந்தனும் தன்னைப் பகைவர் வெற்றி கொள்ள முடியாதபடி உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஒன்றும் இல்லாத வீடு-பல பொருள்களை விரும்புவதாக இருக்கும்.அதைப் போலவே அரசனும் எல்லாப் பொருள்களையும் விரும்புபவனாக இருக்க வேண்டும்

பாம்பு-கடும் சினத்துடன் யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.அதைப்போல மன்னனும் பகைவரால் நெருங்க முடியாதவனாக இருக்க வேண்டும்)

(தொடரும்)

Thursday, October 7, 2010

115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்

தருமர்..பீஷ்மரைப் பார்த்து 'எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும்..சீலம் என்பது என்ன? அதனை எப்படி பெறுவது?' என வினவினார்.
பீஷ்மர் உரைக்கலானார்...
திரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..
பீஷ்மர்- 'தருமா..நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது.முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான்.அப்போது திருதிராஷ்டிரன் "மகனே! எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய்? உனக்கு நேர்ந்த துன்பம் என்ன?" எனவினவினான்.
அதற்கு துரியோதனன்'தந்தையே! தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்கப் பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர்.இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது.அது கண்டு மனம் புழுங்குகிறது என்றான்.அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன்..'மகனே நீ சீலத்தைப் போற்றுவாயாக.அதனைப் போற்றினால்..மூவுலக ஆட்சியைக் கூட நீ பெறலாம்.சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை.மாந்தாதா ஒரே இரவிலும்,ஜனமேஜயர் மூன்று நாட்களிலும் நாபகர் ஏழு நாட்களிலும் பூமியைப் பெற்றார்கள்.இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.
சீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல்..கருணை,தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும்.இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.
நாட்டை பறிகொடுத்த இந்திரன்,பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டிக் கொண்டான்.பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்குக் காரணமான ஞானத்தைப் பற்றிக் கூறினார்.இந்திரன் 'இதைவிட மேலானது இருக்கிறதா? இவ்வளவுதானா?' என வினவினான்.'இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க' என்றார் பிரகஸ்பதி.இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் 'இன்னமும் இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.'அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும்' என்றார்.
இந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார்.மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்.அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான்.அந்தணனோ ;'தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள்' என்று கூற , பிரகலாதனும் ஒப்புக் கொண்டான்.
பின்னர் ஒரு நாள்,அவன் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த பிரகலாதன் 'நீ வேண்டும் வரம் யாது?' என்றான்.
'உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன்' எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான்.ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி'அப்பயியே..நீ கேட்ட வரத்தைத் தந்தேன்' என்றான்.உடன் அந்தணன் மறைந்தான்.
பிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.
அப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது..'நீ யார்?' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா? உன்னைடம் ஏவல் புரிந்த அநதணனிடம்' என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.
பிரகலாதன் மேனியிலிருந்த் மீண்டும் ஒரு ஒளி..'நீ யார்' என்றான்.'நான் தருமம்..சீலம் எங்கு இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்..ஆகவே நானும் அந்த அந்தணனை நாடிச் செல்கிறேன்' என உரைத்துப் போனது.
பிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி..இம்முறை சத்தியம்.எங்கே தருமம் உள்ளதோ..அங்கே நான் இருப்பேன் என தருமத்தைத் தொடர்ந்தது.
மீண்டும் ஒரு ஒளி..அது 'பலம்" சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.
பின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள்.நீ யார் என்றான் பிரகலாதன்.
அதற்கு அந்த மகள் 'நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்.இப்போது உன்னிடம் பலம் நீங்கிச் சென்றுவிட்டது.எனவே நான் அந்த் பலத்தை நாடிச் செல்கிறேன்.நான் நாடிச் செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது."என்றாள்.
'யார் அந்த அந்தணன்' என்றான் பிரகலாதன்.
'அவன் தேவேந்திரன்.அந்தண வேடம் தாங்கி உனக்குப் பணி புரிந்தான்.நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய்.இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்துச் சென்றான்.சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம்,சத்தியம்,பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின.இறுதியாக நானும் செல்கிறேன்'என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.

ஆகவே..துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நன்மைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர்' என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கிக் கூறினார்.
பீஷ்மர் தருமருக்கு இப்படி உரைத்தார்.
(பீஷ்மர் உரைத்தல் தொடரும்)