Tuesday, April 27, 2010

99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா

கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார்..பின் கண்ணனை நோக்கி.."கண்ணா..உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன்..உமது வாக்கன்றோ வேத வாக்கு..என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்..எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை..இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும்..உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூடக் கிடையாதே..எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்' என உரைத்தார்.

அது கேட்டு கண்ணன் 'கௌரவர்களில் சிறந்தவரே..உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர்..அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர்..இதோ நான் அருள் புரிகிறேன்..உமது உடலில் உள்ள எரிச்சலும்..சோர்வும்,தளர்வும் உடனே நீங்கிவிடும்.உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும்..இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம்..உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன்..' என்றார்.

அப்போது அவரை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர்..தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.வனம் தூய்மையாக காட்சி அளித்தது..எங்கும் சாந்தி நிலவியது..சூரியன் மறைந்தான்..அனைவரும் 'நாளை வருகிறோம்' என்று பீஷ்மரிடம் விடை பெற்றுத் திரும்பினர்.

மறுநாள்..கண்ணன்,நாரதர் உட்பட அனைவரும் தருமத்தின் இருப்பிடமான குருக்ஷேத்திரம் வந்தனர்.அனைவரும் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றனர்.தருமர் பீஷ்மரை கையெடுத்துக் கும்பிட்டார்.பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன் ஆகியோர்களும்..மற்றவர்களும் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினர்.

அப்போது நாரதர் அனைவரையும் நோக்கி..'கங்கை மைந்தரிடம் அறிய வேண்டிய அனைத்து தர்மங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.இந்தப் பீஷ்மர் சூரியன் போல மறைய இருக்கிறார்.ஆகவே அவரிடம் நெருங்கிச் சென்று வேண்டியதைக் கேளுங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.நாரதர் சொன்ன மொழிகளைக் கேட்டதும் அனைவரும் பீஷ்மரை நெருங்கினர்.ஆனால் வாய் திறந்து பேச அஞ்சினர்..அப்போது..

தருமர் கண்ணனிடம் "கண்ணா..உம்மைத் தவிரப் பாட்டனாரிடம் பேசும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை..ஆதலால் நீரே பேசும்' என்று வேண்டிக் கொண்டார்.பின் கண்ணனே தன் பேச்சை ஆரம்பித்தார்..'கங்கை மைந்தரே..இரவு நேரம் நன்கு கழிந்ததா? சோர்வு போனதா? ஞானங்கள் அனைத்தும் தோன்றுகிறதா?' என்று வினவினார்.

உடன் பீஷ்மர்..

"கண்ணா..உம் அருளால் என் உடல் எரிச்சல்கள் தொலைந்தன..மயக்கம் விலகியது.இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன்..கண்ணா..நீவரம் அளித்தபடி..எல்லாத் தருமங்களும் மனதில் ஒளிவிடுகின்றன.ராஜ தருமம்,ஆபத்துத் தருமம்,மோட்ச தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களையும் அறிகின்றேன்.எந்தத் தருமத்தில் எப் பிரைவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன்..கண்ணா..உன் புண்ணியத்தால்..நான் திரும்பவும் இளைஞன் போல உணருகிறேன்..நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான் அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன்..ஆயினும்..உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..இந்தத் தரும உபதேசங்களை நீரே தருமருக்குக் கூறாதது ஏன்?' என்றார்.

Friday, April 23, 2010

98-நெஞ்சை உருக்கும் சந்திப்பு

குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில் அம்புப் படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரைக் கண்டனர்.கண்ணனும்,பாண்டவர்களும்,கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர்.அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார்.

'அறிவின் சிகரமே..அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா?உமது அறிவு தெளிவாக உள்ளதா?உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர்..நீர் அனைத்தும் அறிந்தவர்.சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும் அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும் உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை.தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே வெல்ல வல்லீர்.எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன்.பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை.இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன.இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும்.மனித குல மாணிக்கமே..தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் விலக்க வேண்டும்"

கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார்.மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார்..'உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே..உம்மை நான் சரணடைந்தேன்..உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன்..உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது.உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன.திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன.சூரியன் உமது கண் ஆவான்.காயாம்பூ மேனி உடையவரே..மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன்..தாமரைக்கண்ணனே..பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்' எனத் துதிச் செய்தார்.

கண்ணபிரான் .,'எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன்.இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள்.இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை.சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும்.நீர் அழிவற்ற உலகத்தை அடையப் போகிறீர்..பீஷ்மரே..நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும்.அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர்.தருமரின் சோகம் போக..அவர் சந்தேகம் அகல..சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக..தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்' என்று கூறினார்.

Thursday, April 15, 2010

97-அனைவரும் பீஷ்மரிடம் செல்லுதல்

அரசாட்சியை ஏற்ற தருமர்..பின்..கண்ணன் உறையும் இடம் சென்றார்.கண்ணன் அப்போது தியானத்தில் இருந்தார்..அது கண்டு வியந்த தருமர்..'மூவுலக நாயகனே..உலக உயிர் அனைத்தும் உம்மை நோக்கி தியானம் செய்கையில்..நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்..' என வினவினார்.

'யுதிஷ்டிரா! அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது.எவரது நாணொலிக் கேட்டு..இந்திரனும் நடுங்குவானோ..அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.முன்னொரு சமயம்..மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்த்ப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது.தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும்..வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் வேத வேதாங்கங்களையும் முக்காலங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.யுதிஷ்டிரா..அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும்.ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக" என்றார் கண்ணன்.

பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் கண்ணீர் விட்டார்.'வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன்..'என நா தழுதழுக்க வினவினார்.

பின்னர்..கண்ணனும், பாண்டவர்களும்..பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.

Monday, April 12, 2010

96-தருமரின் முடி சூட்டு விழா

பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி,வியாசர்,கண்ணன் ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார்.தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது.அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்,பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார்.பீமன் தேரைச் செலுத்தினான்.அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான்.நகுல,சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர்.சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது.கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர்.திருதிராட்டிரன்..காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான்.குந்தி,திரௌபதி,சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர்.அலங்கரிக்கப்பட்ட யானைகளும்,குதிரைகளும் தொடர்ந்து சென்றன.அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.

அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.நகரை நன்கு அலங்கரித்தனர்.நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது.தெருவெங்கும் மாலைகளும்,தோரணங்களும் காட்சியளித்தன.சந்தனமும்,கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின.'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.

தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார்.அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார்.தருமர் நடுவில் இருக்க..பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும்,அர்ச்சுனனும் அமர்ந்தனர்.அழகான இருக்கையில் நகுலன்,சகாதேவன் ,குந்தி ஆகியோர் அமர்ந்தனர்.திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார்.கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார்.எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின.அந்தணர்கள் வாழ்த்தினர்.

தருமர் அவையினரை நோக்கி' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர்..என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர்.நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும்.எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார்.பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது.தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்.விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார்.சஞ்சயனை வரவு..செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார்.அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார்.நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார்.சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார்.அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார்.பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.

தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார்.கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார்.'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது.உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.

பின்..துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார்.துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார்.துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும்,துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார்.'என் அன்புத் தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர்.இனி இன்பத்துடன் வாழ்வீர் ' என்றார்.

பின் ,குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார்.

Monday, April 5, 2010

95-கண்ணன் தருமருக்கு உரைத்தல் (2)

(தருமருக்கு..கண்ணன் மேலும் நாரதர் சொன்னதைச் சொல்கிறார்)

திலீபன் என்னும் மன்னன் புகழை உலகம் போற்றுகிறது.அவன் யாகத்தின் போது பொன்னாலான யானைகளைத் தானமாக அளித்தான்.இந்திரன் முதலான தேவர்கள் அவனை வழிபட்டனர்.அவன் முன்னால் ஆயிரம்..ஆயிரம்..தேவர்களும்..கந்தர்வர்களும் நடனம் ஆடினர்.அவன் அவையில் வசு என்னும் கந்தர்வன் வீணை வாசித்தான்..அந்த வீணையிலிருந்து எழும் இனிய ஒலி கேட்டு உயிரினங்கள் மகிழ்ச்சி அடைந்தன.அவனது நாட்டில் தங்கக் கவசம் பூண்ட யானைகள் மதம் பிடித்து எங்கும் திரிந்தன.அந்தத் திலீபனும் இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிறாய்.

மூன்று உலகங்களையும் வெற்றி கொண்ட மாந்தாதா என்னும் மன்னனும் மாண்டு போனான்.குழந்தையாக தேவ வடிவத்தில் தன் தந்தையின் மடியில் படுத்திருந்த போது..இந்திரன் 'இந்தக் குழந்தைக்கு நான் பால் தருவேன்' என தன் கை விரலை அதன் வாயில் வைத்தி பால் பெருகச் செய்தான்.அந்தப் பாலின் சக்தியால் மாந்தாதா பன்னிரெண்டு நாட்களிலேயே வளர்ந்து வாலிபன் ஆனான்.ஆற்றல் மிக்க அவன் பூமி முழுதும் வென்று தனதாக்கிக் கொண்டான்.அவன் அங்காரகன் என்னும் அரசனை எதிர்த்துப் போர் செய்கையில் எழுந்த நாண் ஒலியால் தேவலோகம் இடிந்து விழுமோ எனத் தேவர்கள் நடுங்கினர். அவன் நூற்றுக்கும் மேலான அசுவ மேத யாகங்களையும்..ராஜசூய யாகங்களையும் செய்தான்.அவன் ஆயுளும் ஒரு நாள் முடிந்தது

நகுஷன் மகன் யயாதி புகழ் வாய்ந்தவன்..பூமி முழுதும் யாகசாலையாக மாற்றியவன் அவன்.அவன் தங்க மலைகளைத் தானம் செய்த பெருமை மிக்கவன்.அவன் காட்டை அடைந்து தவம் இயற்றி மாண்டு போனான்.

நாபகன் என்னும் மன்னனின் மகன் அம்பரீஷன்.அவன் இயற்றிய யாகத்தில் பத்து லட்சம் அரசர் பணி புரிந்தனர்.அவனைப் போன்ற சிறந்த மன்னன் மூவுலகிலும் இல்லை என மக்கள் புகழ்ந்தனர்.அவனுக்கு பணி புரிந்தோர் அனைவரும் புண்ணிய உலகம் அடைந்தனர்.கடைசியில் அந்த மன்னனும் மாண்டான்.

சித்திரதன் என்னும் மன்னனின் மகன் சசபிந்து..நூறு நூறு யானைகளையும்.ஒவ்வொரு யானைக்கும் நூறு நூறு தேர்களையும்..ஒவ்வொரு தேருக்கும் நூறு நூறு குதிரைகளையும்..ஒவ்வொரு குதிரைக்கும் நூறு நூறு பசுக்களையும்..ஒவ்வொரு பசுவிற்கும் நூறு நூறு வெள்ளாடுகளையும் ஒவ்வொரு வெள்ளாட்டுக்கும் நூறு நூறு செம்மறியாடுகளையும் கொண்ட அளவற்ற செல்வத்தை யாகத்தின் போது தானமாக அளித்தான்..அத்தகைய தான திலகனான சசபிந்துவும் மாண்டான்.

அதூர்த்தரஜஸ் என்னும் மன்னனின் மகன் கயன்.அவன் ஆட்சியில் நாடெங்கும் அமைதி நிலவியது.அவன் பல யாகங்களைச் செய்தான்..யாகத்தின் போது நூறாயிரம் பசுக்களையும்..பதினாறாயிரம் குதிரைகளையும் தானமாக அளித்தான்.அசுவமேதம் என்னும் பெரும் யாகத்தின் முடிவில் ஐம்பது முழ அகலமும் நூறு முழ நீளமும் கொண்ட பொன் விளையும் பூமியைத் தானமாகக் கொடுத்தான் பொன்னும், பொருளும்,போகமும் பெற்றிருந்த அந்தக் கயனும் மாண்டு விட்டான்

ரத்தி தேவன் என்னும் மன்னன்சங்கிருதியின் மகன் ஆவான்..புகழ் வாய்ந்த அவன் வேள்விச் சாலையில் இருந்த குடங்கள், தோண்டிகள், அண்டாக்கள், அனைத்தும் பொன்னாலானவை.அவன் செய்
த, தர்மங்களுக்கு அளவே இல்லை.'எங்களை நல்ல செயலுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள்' என்றுக் கேட்டுக் கொண்டு நாட்டிலும்,காட்டிலும் இருந்த பசுக்கள் அம்மன்னனை வந்தடைந்தன.அத்தகைய பெருமை மிக்க மன்னனும் மடிந்தான்.

இட்சுவாகு குல அரசன் சகரன்..அவனுக்கு அறுபதினாயிரம் மைந்தர்கள்.அந்தச் சகர புத்திரர்களால் தோண்டப்பட்டதால் கடல் சாகரம் எனப் பெயர் பெற்றது.சகரன் ஆயிர அசுவமேத யாகங்களைச் செய்து தேவர்களை மகிழ்வித்தான்.பூமி முழுதும் ஒரே குடைக் கீழ் ஆண்ட அந்தச் சகரனும் மாண்டான்

வேனனின் மகன் பிருது என்னும் அரசன், மகரிஷிகள் ஒன்று கூடி..'நாட்டைப் பெருகச் செய்வான் இவன்' எனக் கருதி பிருது எனப் பெயரிட்டு முடிசூட்டினர்.அவன் உலகத்தை ஆபத்திலிருந்து காத்ததால் க்ஷத்திரியன் என்றும் அழைக்கப் பட்டான்.அவன் கடல் மீது செல்கையில் கடல் நீர் கல்லைப்போல் உறுதியாக இருந்து வழி அமைத்துத் தரும்.அவன் செய்த அசுவமேத யாகத்தின் போது மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மாலைகளை வேதியர்க்கு தானம் செய்தான்.அத்தகைய வள்ளலும் இறந்தான்

'சிருஞ்சயனே..இவ்வாறு பதினாறு மாமன்னர்களும் மாண்டார்கள் என்றால்..உனது சிறு பாலகன் இறந்ததற்கு வருந்தலாமா?' என நாரதர் ஆறுதல் கூறினார்.

இந்த வரலாற்றைக் கூறிய நாரதரும் இங்கு வீற்றிருக்கிறார்.ஆதலால்..தருமரே..உலக இயல்பு இதுதான் எனத் தெளிந்து மனக்கவலை விலக்கி மண்ணாள் செல்வத்தை ஏற்றுச் சிறப்பாக ஆட்சி புரிவாயாக!' எனக் கண்ணன் கூறி முடித்தார்.

கண்ணனைத் தொடர்ந்து வியாசர் பல அறங்களை எடுத்துரைத்தார்.தருமரை அசுவமேத யாகம் புரிய வற்புறுத்தினர்.