Monday, June 20, 2011

153-ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்





தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார்.

பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றேன், கேள்' எனக் கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் பங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான்.நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது.சில நாட்களுக்குப் பின் அம் மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான்.இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான்.அறிவு மயங்கிய அம் மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.

களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான்.குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான்.அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன்..இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக்கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே..பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பலவாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந்தான்.அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

அவன் நடந்ததைக் கூறினான்.'நான் வேட்டையாட காட்டிற்குச் சென்றேன்.ஒரு தெய்வம் என்னை மயக்கிவிட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒரு அழகான குளத்தில் நீராடுகையில் பெண் ஆனேன்.இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.'

பின் தன் மக்களை அழைத்து'என் செல்வங்களே..நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்' என்றான்

பெண் ஆன அம் மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான்.முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி'இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்தவர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக" என்றான்.அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்றுமையுடன் ஆண்டனர்.

அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர்களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந்தான்.மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, 'ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில்லை..காஸ்யபரின் புத்திரர்கள்தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர்.நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள்.உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே! இது மரபில்லவே' என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான்.மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டனர்.

அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,'ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது' என வினவினான்.

அவள் அவனை நோக்கி,'நான் முன்னர் மன்னனாக இருந்தேன்.அப்போது நூறு பிள்ளைகளைப் பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன்.பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க்கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைகளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர்.இதைவிட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)

இந்திரன் அவளை நோக்கி, 'முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய்.இதனால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்' என்றான்.

ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி'நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப்பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது.தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல' என மன்றாடினாள்.

தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு,'உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளா?' என வினவினான்.

;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.' என்றாள்.

இந்திரன் வியப்புடன்,'நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?'என்றான்.

அதற்கு அவள் 'பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம்.ஆண்களுக்கு அப்படி இல்லை.ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை பிழைக்கச் செய்ய வேண்டுகிறேன்' என்றாள்.

உடன் இந்திரன், 'உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்' என்றார்.மேலும் அவளை நோக்கி, 'நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கிறாயா?' என்றான்.

"நான் மீண்டும் ஆணாக விரும்பவில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்.ஆண் பெண் புணர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள்.இதனால்தான் நான் பெண்தன்மையை விரும்புகிறேன்.நான் இப்படியே பெண்ணாகவே இருந்து விடுகிறேன்.இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கிறது" என்றாள்.

அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.

இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

Sunday, June 12, 2011

152-உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்



பீஷ்மர் தருமருக்கு மேலும் சொல்லத் தொடங்கினார்..

'தருமா..காலகவிருஷியர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு கூண்டில் காகம் ஒன்றை அடைத்துக் கொண்டு,ஆங்காங்குச் சென்று குற்றம் புரிபவரைக் கண்டுபிடித்து விடுவார்.காகத்தின் மொழி எனக்குத் தெரியும்..ஆகவே காகம் சொல்வதை நான் புரிந்துக் கொள்வேன் என்பார்.அவர் ஒரு சமயம் கோசல நாட்டு மன்னனான க்ஷேமதரிசியைக் காணச் சென்றார்.மன்னனைச் சார்ந்த அதிகாரிகளின் குற்றத்தைக் காக மொழியின் மூலம் தெரிந்து கொண்டார்.

நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட முனிவர் அமைச்சர்களுடன் மன்னன் இருக்கையில் அங்குச் சென்றார்.அமைச்சருள் ஒருவரை நோக்கி..'நீ செய்த அரச குற்றங்களை நான் அறிவேன்.அரசாங்க உடமைகளைத் திருடியதையும்,செல்வத்தைக் கொள்ளை அடித்ததையும் நான் என் காகம் மூலம் அறிந்து கொண்டேன்.நீ செய்தது சரிதானா..என உன் மனசாட்சியைக் கேட்டுப் பார்' என்றார்.முனிவரின் அப்பேச்சைக் கேட்ட அவையோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் கோசல நாட்டில் எங்கும் காகம் மொழி பற்றியே பேசப்பட்டது.அதிகாரிகளின் ஒழுக்கக் கேட்டை மக்கள் கடுமையாக விமரிசனம் செய்யத் தொடங்கினர்.அமைச்சர்கள் பற்றிய புகார்கள் எங்கும் எழுந்தது.இந்நிலையில் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் முனிவருக்கு எதிராகச் சதி செய்யத் தொடங்கினர்.முனிவரின் காகத்தைத் தீர்த்துக் கட்டுவது எனமுடிவெடுத்தனர்.முனிவர் உறங்கிக் கொண்டிருந்த போது கூண்டிலேயே காகத்தைக் கொன்றனர்.காலையில் எழுந்த முனிவர் காகத்தின் கதி கண்டு வருந்தினார்.மன்னனைக் காணச் சென்றார்.

க்ஷேமதரிசி என்னும் அம் மன்னனை நோக்கி ..'மன்னா..உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.உனக்குச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.உன்னைச் சார்ந்த சிலர் உனக்கு கேடு செய்கின்றனர்.அரசாங்க பொக்கிஷத்தைஸ் சிறிது சிறிதாகத் திருடுகின்றனர்.நான் இதை என் காகத்தின் மூலம் அறிந்தேன்.உன்னைச் சார்ந்தவர்களின் கோபம் காகத்திடம் சென்று அதனைக் கொன்று விட்டது.

உயிர்களீடம் கருணை அற்ற அவர்கள் வேறொரு திட்டத்தையும் வைத்துள்ளனர்.உன் சமையல்காரர் மூலம் உன் அழிவை விரும்புகின்றனர்.ஆகவே நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவர்களிடம் நான் கொண்ட அச்சத்தால் நான் வேறு ஆசிரமம் செல்ல விழைகிறேன்.அவர்கள் கோபத்தால் என் மீது வீசிய அம்பு என் காகத்தைக் கொன்று விட்டது.பயங்கரமான விலங்குகளால் சூழப்பட்ட குகையில் நுழைவது போல துன்பம் தருவது, கொடியவர்களால் சூழப்பட்ட அரச நீதியில் நுழைவது.ஆயினும் அரச நீதி என்னும் நதியைக் காகம் என்னும் படகைக் கொண்டு கடந்து வந்தேன்.

உன் அரசு வஞ்சகர்களால் சூழப்பட்டுள்ளது.இந்நிலையில் நீ யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.நிலைமை இப்படியிருக்கையில்..நான் எப்படி இங்கு தங்குவது? தீமையின் கை இங்கு ஓங்கி உள்ளது.நன்மை செய்பவன் கொல்லப்படுகிறான்.தீமை செய்பவனை யாரும் கண்டுக் கொள்வதில்லை.நல்ல ஆட்சியில் நல்லவர் துன்பம் இல்லாது இருப்பர்.தீயவர் தண்டிக்கப் படுவர்.உனது ஆட்சி சுழல்கள் நிறைந்த அபாயகரமான நதியாக இருக்கிறது.நீயோ நஞ்சு கலந்த உணவாக இருக்கிறாய்.அதாவது தீயோரின் ஆலோசனைதான் உன் நெஞ்சில் நிறைந்துள்ளது.

உன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மிக்க கொடியவர்களாக உள்ளனர்.நீயோ பாம்புகள் நிறைந்த கிணறு போல் இருக்கிறாய்.முட்புதர்கள் பின்னிப் படர்ந்து தண்ணீர் வெளியே தெரியா நதியாய் இருக்கிறாய்.உடன் இருப்போரால் உனக்கு அழிவு நிச்சயம்.உனது ஆட்சியின் மாட்சியையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன்.நாடாளும் ஆசைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மக்களிடம் அன்புள்ளவனாக ஆட்சி செய்கிறாயா என்பதை அறிய முற்பட்ட போது உன்னிடம் பெரிய குற்றம் ஏதும் தெரியவில்லை.ஆனால் அமைச்சர்கள் அப்படியில்லையே.அவர்கள் தாகத்திற்கு உதவாத தண்ணீர் போல உள்ளனர்.நீயோ பசித்தவனுக்குக் கிடைத்த உணவு போல இருக்கிறாய்.

உனது நன்மையை நாடுபவன் நான் என்பதை உணர்ந்த அமைச்சர்கள் என்னிடம் வெறுப்பு கொண்டுள்ளனர்.அவர்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை நான் செய்த பெரிய குற்றமாகக் கருதுகின்றனர்.நீயும் அவர்களிடம் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கூறினார் முனிவர்.

மன்னன் முனிவரை நோக்கி,'உமது துன்பத்தை நான் போக்குகிறேன்.நீர் இங்கேயே தங்கி இருக்கலாம்.உம்மை வெறுப்பவரை நான் வெறுக்கிறேன்.அவர்களுக்கு எத்தகைய தண்டனை தரப் போகிறேன் என்பதை பாருங்கள்.நான் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நன்மை செய்யத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்' என்றான்.

முனிவர் மன்னனிடம், 'நீ காகம் கொல்லப்பட்ட செய்தியை வெளியே சொல்ல வேண்டாம்.ஆனால் உனது அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து விடு.பின் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவர்களைக் கொலை செய்.ஒரு குற்றத்தைப் பல பேர் சேர்ந்து செய்வாராயின் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்.பொருளின் தன்மையால் தான் ஒருவரிடம் செருக்குத் தோன்றுகிறது.அந்தப் பொருளை அப்புறப்படுத்தி விட்டால் அகங்காரம் குறையும்.அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான்.மனதிலேயே வைத்திருப்பான்.தீயவரைத் தீயவரைக் கொண்டே அழிக்க வேண்டும்.இந்த ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றுதான் உனக்கு இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதாயிற்று.மக்கள் நலனை நான் பெரிதும் விரும்புகிறேன். வேந்தே!இப்போது என்னைப்பற்றி உரைக்கின்றேன்..என் பெயர் காலகவிருக்ஷயன் என்பதாம்.உன் தந்தையும், என் தந்தையும் உற்ற நண்பர்கள்.அந்தப் பிணைப்பு வழி வழியாய் தொடர வேண்டும் என விழைகிறேன்.இப்போது நீ அரசன்.உன் பகைவரை நீ நண்பன் எனக் கருத வேண்டாம் என மீண்டும் உரைக்கின்றேன்.அரசாட்சியை அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஏன் துன்பம் அடைகிறாய்? அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது தவறாகும்'" என்றார்.

நல்லது கெட்டது உணர்ந்த கோசல நாட்டு மன்னனும் முனிவரின் நல் யோசனைகளை ஏற்று நாட்டை நன்கு ஆண்டான்.

"தருமா! உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள யாரும் தயங்கக் கூடாது என்பதனையும், அதே நேரத்தில் தீயவர்களின் யோசனையை ஏற்கக் கூடாது என்பதனையும் இதன் மூலம் அறிவாயாக" என்றார் பீஷ்மர்.