Thursday, October 27, 2011

185-ஆஸ்ரம வாசப் பருவம்.(துறவு வாழ்க்கைப் பற்றி)




பிதாமகர் பீஷ்மரையும்,துரோணரையும்,கர்ணனையும்,துரியோதனன் முதலான தம்பியரையும் , எண்ணற்ற வீரர்களையும் யுத்த களத்தில் இழந்த பின் பெற்ற அரசாட்சியில் தருமருக்கு மகிழ்ச்சி ஏதுமில்லை.நாடாளும் மன்னன் என்னும் பெருமிதமும் இல்லை.நாட்டைக் காவல் புரியும் ஒரு காவல்காரனாகவே தம்மைக் கருதி நாட்டை ஆளத் தொடங்கினார்.முப்பத்தாறு ஆண்டுகள் தருமரின் ஆட்சி நீடித்திருந்தது.தரும நெறி எங்கும் தழைத்து ஓங்கியது.

நூறு பிள்ளைகளை பறி கொடுத்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் தனது இரு கண்களைப் போல் கருதிப் பாதுகாத்து வந்தார்.பிள்ளைகளைப் பறி கொடுத்த தந்தைக்கும்,தாய்க்கும் ஏற்பட்ட வேதனையைக் கண்டு தருமர் மனம் வாடினார்.அவர்களுக்கு மனக்குறை ஏதும் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தம்பியரிடம் கூறினார்.துரியோதனன் காலமெல்லாம் தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்தான்.ஆனால் தருமரோ..தன் தந்தை பாண்டு இருந்திருந்தால் எப்படி அவரைப் பார்த்துக் கொள்வாரோ அதைவிடப் பல மடங்கு அன்புடன் பெரியப்பாவிடம் நடந்து கொண்டார்.காலப் போக்கில் தன் மக்கள் இல்லாத குறையைத் திருதராட்டிரன் மறக்கும் வண்ணம் தருமர் நடந்துக் கொண்டார்.

தருமரைப் போலவே குந்தியும், திரௌபதியும் திரிதிராட்டினனுக்கும்,காந்தாரிக்கும் மனம் கோணாது பணிவிடை செய்தனர்.

பெரியப்பாவிற்கு மனம் கோணாமல் நடக்க வேண்டும் என தருமர் உரைத்தாலும், பீமன் மட்டும் சிறிது மாறுபாடாகவே நடந்து கொண்டான்.தாங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்ததற்காக திருதிராட்டிரன் காதில் விழுமாறு எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.இவற்றைக் கேட்ட திருதிராட்டிரன் மனம் புண்பட்டாலும்..காலப்போக்கில்..பீமன் சொல்வது உண்மைதானே என நினைத்து பண்பட்டான்.

தருமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.தருமரின் உபசரிப்பில் திருப்தியாய் இருந்தாலும், திருதிராட்டினன் கானகம் சென்று கடுந் தவம் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை முடிக்க எண்ணினார்.மனதில் முன்னர் இருந்த ஆசாபாசங்கள் இப்போது இல்லை.பிள்ளைப் பாசத்தால் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் திருந்தியவனாகத் திருதிராட்டினன் காட்சியளித்தான்.

க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் போர்க்களத்தில் போர் புரிந்து வீர மரணம் அடைய வேண்டும் அல்லது முதிர்ந்த வயதில் கானக வாழ்க்கை மேற்கொண்டு தவம் இயற்றி உலக வாழ்க்கையை முடிக்க வேண்டும்.போர்க்கள மரணத்திற்கு திருதிராட்டிரனுக்கு வாய்ப்பில்லை.எனவே வனத்திற்குச் செல்ல விரும்பினான்.

ஒருநாள் சான்றோர்களை அழைத்து தனது எண்ணத்தை புலப்படுத்திப் பேசினான்.'அன்புள்ளம் கொண்டவர்களே! கௌரவ வம்சமே வீழ்ச்சி அடைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதன் அழிவிற்கு நானும் ஒரு காரணம்தான்.புத்திர பாசத்தால் துரியோதனன் சொன்னவாறெல்லாம் நடந்து கொண்டேன்.பீஷ்மர் போன்ற மேலானவர் கூற்றிற்கு எல்லாம் செவி சாய்க்காது புறக்கணித்தேன்.என் தம்பியரின் புதல்வர்களுக்கு எல்லையற்ற தொல்லை கொடுத்தேன்.தருமனையா பகைத்தேன்...தருமத்தை அல்லவா பகைத்தேன்.

கண்ணனின் பேச்சைக் கேட்காததால் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்.பாண்டவர்களுக்கு நாடு தராதது மட்டுமல்ல..அவர்களுக்கு மாபாதகக் கொடுமைகளைச் செய்தேன்.நான் செய்த தவறுகள் என் மனதைத் துளைத்துத் துன்புறுத்துகின்றன.இதுவரை கண்ணை மட்டுமா இழந்திருந்தேன்..கருத்தையும் அல்லவா இழந்திருந்தேன்.இப்போதுதான் அறிவுக் கண் திறக்கப் பெற்றேன்.குருக்ஷேத்திர போருக்குப் பின் பாண்டவரின் உபசரிப்பால் அறிவுக் கண் திறந்தேன்.

செய்த தவறுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறேன்.சில நாட்களாகக் கஞ்சியை மட்டுமே பருகி வருகிறேன்.சுவையான உணவு உட்கொள்வதில்லை.நாள் தோறும் ஜபம் செய்கிறேன்.தர்ப்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு அதில் படுத்துக் கிடக்கிறேன்.இரவில் உறக்கம் இல்லை.காந்தாரியின் நிலையும் இதுவே.நூறு மகன்களை
இழந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு அவையோரை நோக்கிக் கூறிய திருதிராட்டினன் தருமரைப் பார்த்து,' உனக்கு எல்லா நன்மைகள் உண்டாகட்டும்.உன்னால் நான் நன்கு கவனிக்கப்படுகிறேன்.காந்தாரியும் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறாள்.திரௌபதிக்கும்,பண்டவர்களான உங்களுக்கும் தீங்கு இழைத்த கொடியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்.தற்போது எனக்கும் , உன் தாயான காந்தாரிக்கும் புண்ணியம் அளிக்கும் செயலை நான் செய்ய வேண்டும்.அரசன் என்பவன் மக்களை ஆள்பவன் மட்டுமல்ல.அவன் குடிமக்களுக்கு குரு போன்றவன்.ஒவ்வொருவருடைய ஆன்ம நலனுக்கும் அவன் உதவி செய்ய வேண்டும்.அதனால்..உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.அதற்கு நீ அனுமதி தர வேண்டும்.காடு செல்ல விரும்புகிறேன்..தருமா...தடை செய்யாதே'

நீ அனுமதி அளித்த பிறகு நானும், காந்தாரியும் காடு செல்வோம்.அங்கு மரவுரி தரிப்போம்.கந்த மூலாதிகளை உண்போம்.கடுந்தவம் செய்வோம்.அந்தத் தவத்தின் பயன் உனக்கும் கிடைக்கும்.மக்கள் செய்யும் பாவ புண்ணியத்தில் ஒரு பகுதி மன்னனைச் சாரும் என சான்றோர் கூறுகின்றனர்.எனவே எனக்கு அனுமதி கொடு' என்றார்.

இதைக் கேட்ட தருமர் வருந்தினார்.'அரசே..உங்கள் துயரை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம்.எல்லாம் பயனற்று போயின.காலப்போக்கில் கவலைகளை மறந்திருப்பீர் என எண்ணி ஏமாந்து விட்டோம்.நீர் உணவு கொள்ளாமல் உபவாசம் இருப்பதும், தரையில் படுப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.நீர் மகிழ்வுடன் இருப்பது போல பாவனை செய்து மனதிற்குள் வேதனையாய் இருந்துள்ளீர்கள்.நீங்கள் படும் வேதனைக் கண்டு, எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.துரியோதனனிடம் எனக்கு கோபம் இல்லை.எல்லாம் விதியின் செயல்.நாங்கள் தங்களையும், பாண்டுவையும் வேறாக பார்க்கவில்லை.அதுபோல காந்தாரியையும் எங்கள் தாய் போலவே கருதுகிறோம்.ஆகவே எங்களை விட்டு காடு செல்ல நீங்கள் விரும்பினால்..நானும் உங்களுடன் வருவேன்..யாரேனும் நாட்டை ஆளட்டும்'என்றார்.

தருமரின் உரையைக் கேட்ட திருதிராட்டினன் மூர்ச்சித்து காந்தாரியின் மடியில் சாய்ந்தான்.தருமர் உடன் குளிர்ந்த நீர் தெளித்துக் கைகளால் வருடினார்.தருமரின் கைப்பட்டதும் திருதிராட்டினன் உணர்வு பெற்றான்.

அப்போது அங்கு தோன்றிய வியாசர் தருமருக்கு அறிவுரை வழங்கினார்.'தருமா..திருதிராட்டினன் விருப்பப்படியே செய்..புத்திரர்களை இழந்த சோகத்தாலும், முதுமையின் தளர்ச்சியாலும் திருதிராட்டினன் மிகவும் துன்புறுகிறான்.எல்லா ராஜரிஷிகளும் கடைசிக் காலத்தில் வனவாசத்தையே விரும்புகிறார்கள்.அவனுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது.தடுக்காதே! ராஜரிஷிகள் யுத்தத்தில் இறக்க வேண்டும் அல்லது கானகம் சென்று தவம் இயற்றிப் பரகதி அடைய வேண்டும்.இது உலக நியதி.எனவே இவனுக்கு அனுமதி கொடு.தவம் புரிய தக்க சமயம்தான் இது' என்ற வியாசரின் அறிவுரையைத் தருமரால் தட்ட இயலவில்லை.

பின்னர் திருதிராட்டினன் மக்களை நோக்கிப் பேசினான்,' என் அன்பு மக்களே..முன்னர் சந்தனு மாமன்னன் இந்நாட்டை சிறப்பாக ஆண்டான்.பின் என் தந்தை விசித்திரவீரியனும்
பிதாமகர் பீஷ்மரால் காப்பாற்றப்பட்டு நல்ல முறையில் ஆட்சிக் காத்தார்.பின் பாண்டுவின் ஆட்சியும் மாட்சியுடன் திகழ்ந்தது.துரியோதனன் பாண்டவர்களுக்குத்தான் தீங்கு இழத்தானே தவிர உங்களுக்கு ஒரு தீமையும் செய்யவில்லை'

இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன்.நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நான் காட்டிற்குச் செல்வதால் வருந்த வேண்டாம்.தருமன் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்வான்.தருமன் தருமத்தின் உருவம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.நான்கு லோக பாலகர்களுக்கு இடையில் பிரம்ம தேவன் இருப்பது போலப் பீமன், அர்ச்சுனன்,நகுலன் ,சகாதேவன் ஆகியோர் சூழ்ந்திருக்க தருமன் உங்களை நன்கு பாதுகாப்பான்.

பெரியோர்களே! உங்களிடம் இன்னொன்றையும் வேண்டுகிறேன்.நான் பெற்ற மைந்தரில் விகர்ணனைத் தவிர மற்றவர்கள் அறிவுத் தெளிவற்றவர்கள்.சுயநலம் மிக்கவர்கள்.அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமேயாயின் அவர்களை மன்னித்துவிடுங்கள்.எங்கள் இறுதிக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தவ வாழ்க்கைக்கு நீங்களும் அனுமதி கொடுங்கள்'என்றான்.

கண் இழந்த மன்னன் பேசியதைக் கேட்டு மக்கள் உள்ளம் உருகினர்.கண்ணீர் விட்டனர்.ஒன்றும் பேசாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கை குவித்து வணங்கிப் பிரியா விடை அளித்தனர்.

திருதிராட்டினையும்,காந்தாரியுயையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும்,சஞ்செயனும் கானகம் சென்றனர்.நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் அறவே மறந்தனர்.
மறுமை இன்பத்தை வேண்டி நின்றனர்.துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையை நீத்த அவர்கள்;இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் மேலுலக வாழ்க்கையைப் பெற மூன்றாண்டுகள் துறவு மேற்கொண்டு தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சமயம் காட்டுத்தீ எங்கும் பரவியது.தியானத்தில் இருந்த திருதிராட்டினன்,காந்தாரி,குந்தியை அத்தீ இரையாக்கிக் கொண்டது.அவர்கள் உடல்கள் வெந்து கரிந்து சாம்பலாயின.ஆனால் அவர்கள் உயிர்கள் சோதி வடிவமாய் மேலுலகம் நோக்கிச் சென்றன.காட்டித் தீ விதுரரையும்,சஞ்செயனையும் பாதிக்கவில்லை.அவர்கள் தியானத்தை மேற்கொள்ள இமய மலையை நோக்கிச் சென்றனர்.
பின் சில காலம் வாழ்ந்த இவர்களது சீரிய வாழ்வு ஊழி ஊழிக்காலம் போற்றும் வண்ணம் முடிவுற்றது.

(ஆஸ்ரம வாசப் பருவம் முற்றும்)



Tuesday, October 18, 2011

184- கிருஷ்ணர் துவாரகை சென்றார்..




அஸ்வமேத யாகம் முடிவுற்றது.வந்திருந்த மகரிஷிகளும்,மன்னர்களும், மக்களும் கிருஷ்ணரை பணிந்து வணங்கினர்.கண்ணன் அனைவருக்கும் நல்லறக் கருத்துகளைக் கூறி ஆசி வழங்கினார்.பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்.தேவர்களும், பிரம்ம ரிஷிகளும் யோகிகளும் பல்துறை வல்லுநர்களும் இனிக் கண்ணனை துவாரகையில் கண்டு தரிசிப்போம் எனக் கருதினர்.

கண்ணனை பிரிய மனமில்லாத பாண்டவர்கள் வருத்தம் மேலிட, தலை மேல் கை வைத்து வணங்கிக் கண்ணிர் மல்க ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தனர்.கண்ணனும் மனம் நெகிழ்ந்தார்.வியாசர், திருதிராட்டிரன்,விதுரர்,காந்தாரி,திரௌபதி ஆகியோரிடம் விடை பெற்றுக் கொண்டு தேரில் புறப்பட்டார் கண்ணன்.அன்பு மேலிட பாண்டவரும் தேரில் ஏறினர்.தருமர் சாரதியாகி குதிரையின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்தார்.அர்ச்சுனன் தங்க மயமான விசிறி கொண்டு பகவானுக்கு அருகில் இருந்து வீசினான்.பீமன் ஸ்வர்ணமயமான குடையைப் பிடித்தான்.நகுல, சகாதேவன் சாமரம் வீசினர்.தேர் சில காத தூரம் சென்றதும், கண்ணன் தன்னை வணங்கிய பாண்டவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை அஸ்தினாபுரத்திற்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு துவாரகை சென்றார்.

அஸ்தினாபுரம் சென்ற பாண்டவர்கள் கண்ணனை நெஞ்சில் இருத்தி அவரது நினைவாகவே வாழ்ந்த வரலாயினர்.

(அஸ்வமேதிக பருவம் முற்றிற்று)

183- ஒரு பிடி மாவுக்கு ஈடாகுது



கீரி சொல்லத் தொடங்கியது..

நான் கர்வத்தால் பேச வில்லை.உங்களுடைய யாகம் ஒரு பிடி மாவுக்கு ஈடாகாது. என்று கூறினேன்.கவர்ச்சியான அஸ்வமேத யாகத்தைவிட அந்தணன் ஒருவன் அளித்த ஒரு பிடி மாவு எப்படி சிறந்ததாகும் என்பதை விளக்குகிறேன்..கேளுங்கள்..

முன்னொருகாலத்தில் குருக்ஷேத்திரத்தில் அந்தணர் ஒருவர் இருந்தார்.அவர் வயல்களில் விழுந்து சிந்திக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி வந்து மாவாக்கி உயிர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு ஒரு மனைவியும்,மகனும்,மருமகளும்  உண்டு.இந்த நால்வருடைய ஜீவனும் அந்தணர் கொண்டு வரும் தானியங்களையே சார்ந்திருந்தது.நாள்தோறும் தானியங்களைப் பொறுக்கி வருவதும்,மாவாக்குவதும் வழிபாடு முடிந்த பின் நால்வரும் சமமாக அந்த மாவைப் பகிர்ந்துக் கொள்வதும் நடைமுறை வாழ்க்கையாய் இருந்தது.தெய்வ வழிபாடு, வந்த விருந்தினரை உபசரித்தல் ஆகியவற்றில் அவரது குடும்பம் நிகரற்று விளங்கியது.

கோடைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது அரிது.ஆதலால் அக்குடும்பம் சில நாட்களில் அரைவயிறு உண்டும்,முழுப்பட்டினியாயும் கூடக் காலம் தள்ளிற்று.அத்தகைய வரிய நிலையில் இருந்த போது ஒருநாள் மாவை நால்வரும் பகிர்ந்து கொண்டு உணவு கொள்ள உட்கார்ந்த நேரத்தில் விருந்தாளி ஒருவர் வந்தார்.விருந்தினரை உபசரிப்பதை தலையாயக் கடமையாய்க் கொண்டிருந்த அந்தணர் தமக்குரிய பங்கை அந்த அதிதிக்கு அளித்தார்.வந்த விருந்தாளி அதனை ஆர்வத்துடன் உண்டார்.பசி அடங்கவில்லை.இதனைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தணரின் மனைவி தன் பங்கை அதிதிக்கு அளித்தார்.அதனை உண்டும் அவர் பசி அடங்கவில்லை.அவர் மகனும்,தன்  பங்கை கொடுத்தார்..மருமகளும் தன்பங்கைக் கொடுக்க ..அதனை உண்ட அதிதி பசி அடங்கிற்று.

விருந்தாளியாக, அதிதியாக வந்தது தருமதேவதையே ஆகும்.அங்கு வந்து அந்தணனின் தானத்தின் தன்மையை சோதித்தது.தர்மதேவதை அந்தணனை நோக்கி..

"நீர் நியாயமான வழியில் சேர்த்த பொருளை மனம் உவந்து உம் சக்திக்கு ஏற்றவாறு மனப்பூர்வமாக அளித்தது குறித்து மகிழ்ச்சி.உமது தானத்தை சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பேசுகின்றனர்.விண்ணிலிருந்து அவர்கள் மலர்மாரி பொழிவதைக் காணுங்கள்.பிரமலோகத்தில் உள்ளவர்களும், தேவலோகத்தில் உள்ளவர்களும் உம்மை தரிசிக்க விரும்புகிறார்கள்.ஆகவே நீ சுவர்க்கத்திற்குச் செல்வாயாக.தூய மனத்துடன் நீ அளித்த இந்த எளிய தானத்தால் இந்த நற்கதி உமக்கு வாய்த்தது.ஆராவாரத்துடன் மிகுந்த பொருளை வாரிவாரிக் கொடுப்பது தானமல்ல்...அது வீண் பெருமைதான்.அதனால் ஒரு பயனும் அல்ல.ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளன்போடு நூறு கொடுத்தால் போதுமானது.நூறு கொடுக்க வேண்டிய இடத்தில் பத்துக் கொடுத்தால் போதும்.பத்துக் கொடுக்க இடத்தில் ஒன்று கொடுத்தால் போதும்.ஒன்றும் கொடுக்க முடியாவிடின், தூய மனத்துடன் கொடுக்கும் தூய நீரே போதும்.

ரத்தி தேவன் என்னும் அரசன் ஒன்றும் இல்லாத சூழலில் தூய மனத்துடன் தூய நீர் மட்டுமே அளித்தான்.அதனாலேயே அவன் சுவர்க்கம் அடைந்தான்.

தருமமானது நியாயமான வழியில் சிறிய அளவில் சம்பாதிக்கப் பட்டாலும் அது பிறருக்குத் தூய மனத்துடன் அளிக்கப்படுவதாகும்.நியாயமில்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தைத் திரட்டிப் படாடோபமாகச் செய்யப்படுவது தருமம் அன்று.அதனால் மகிழ்ச்சியும் அல்ல.பயனும் அல்ல.

'திருகன் என்னும் மன்னன் ஓராயிரம் பசுக்களைத் தானமகச் செய்தான்.அந்த ஆயிரம் பசுக்களில் ஒரு பசு வேறொருவனுக்குச் சொந்தமானது.ஆயிரத்தில் ஒன்றுதான் அப்படி.
ஆனால் அவன் இதற்காக நரகம் செல்ல நேரிட்டது.நாம் கொடுப்பது எதுவாயினும், எவ்வளவாயினும் அது நல்ல வழியில் வந்ததாக இருக்க வேண்டும்.செல்வம் மட்டுமே புண்ணீயத்திற்குக் காரணமாகாது.அதுபோலவே பலவித யாகங்களால் வரும் புண்ணியமும் நியாயமான வழியில் வந்த பொருளைச் சக்திக்கு ஏற்ற வாறு தானம் செய்து சம்பாதித்த  புண்ணியத்திற்கு ஈடாகாது.ஒருவன் ராஜசூய யாகமோ, அஸ்வமேத யாகமோ செய்து ஏராளமான பொருளை வாரி வாரிக் கொடுத்தாலும் நீர் உமது தானத்தினால் பெற்ற பயனுக்கு நிகரான பயனை அவன் அடையமாட்டான்.நீர் ஒரு பிடி மாவினால் சுவர்க்கத்தை அடையும் புண்ணியம் செய்ததால், உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல அங்கிருந்த அற்புத விமானம்வந்திருக்கிறது.அதில் நீங்கள் நால்வரும் ஏறிச்செல்லுங்கள்.நான் தான் தருமம்.என்னை நங்கு பாருங்கள்' என்று கூறித் தரும தேவதை மறைந்தது.அந்த நால்வரும் சுவர்க்கம் சென்றனர்.

அப்படி தருமதேவதையும் நால்வரும் மறைந்த பிறகு நான் வளையிலிருந்து வந்தேன்.அங்கு சிந்தியிருந்த மாவில் படுத்துப் புரண்டேன்.என் மனம் தவமகிமையுடன் கூடிய மாவின் மீது சென்றதால் என் உடலில் பாதிப் பொன்னிறமாயிற்று.மற்றொரு பக்கம் எப்போது அப்படி பொன்னிறம் ஆகும் எனக் கரிதி யாகசாலைகளில் சுற்றித் திரிந்தேன்.தருமரின் அஸ்வமேத யாகத்தின் சிறப்பை எண்ணி இங்கு வந்து படுத்துப் புரண்டேன்.எனது உடலின் மறு பாதி பொன்னிறமாக மாறவில்லை.ஆதலால்'இந்த யாகம் ஒரு பிடி மாவுக்கு இணையில்லை' என்று கூறினேன்.முன்பு ஒரு பிடி மாவு என் பாடி உடலை பொன்னிறம் ஆக்கியது.இந்த யாகத்தால் அப்படி செய்ய இயலவில்லை.அதனால் இஃது அதற்கு ஈடாகாது என்பது என் கருத்து' என்று கூறி அந்தக் கீரி (தர்மதேவதை)மறைந்தது.

இதனால் நேர்மையான வழியில் பொருளைச் சேர்த்துத் தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம் கூட ஆரவாரத்துடன் ஆயிரம் ஆயிரமாக வழங்கிக் காண்போரைப் பிரம்மிக்க வைக்கும் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும்..என்ற உண்மை புலப்படுகிறது.

Friday, October 14, 2011

182- அஸ்வமேதிக பருவம்




பிஷ்மரின் மறைவு தருமரை மிக்கத் துயரத்தில் ஆழ்த்தியது.பாரதயுத்தம் முடிந்த போது ஏற்பட்ட சோகம் மீண்டும் அவரைச் சூழ்ந்தது.தருமருக்கு, திருதிராட்டிரரே ஆறுதல் சொன்னார்..

'மகனே! நீ இவ்வுலகை க்ஷத்திரிய தருமப் படியே வெற்றி கொண்டாய்.இனி நீ துயரப்பட வேண்டாம்.நானும், காந்தாரியும் தான் துயரம் அடைய வேண்டும்.ஏனெனில் எங்களது நூறு பிள்ளைகளும் மறைந்து விட்டனர்.விதுரர் எனக்கு எவ்வளவோ எடுத்துரைத்தார்.அவற்ரையெல்லாம் கேளாததால் இன்று இந்த நிலைக்கு ஆளானேன்.தருமா...நீ வருந்தாதே.நீயும் உன் தம்பிகளும் நாட்டாட்சியை மேற்கொண்டு நன்மை புரிவீராக' என்றார்.ஆனால் தருமர் பதில் ஏதும் உரைக்காது மௌனமாய் இருந்தார்.

அடுத்து, வியாசர் தருமரை நோக்கி.,'தருமா...நீ துயர் கொள்ளாதே..நீ எல்லா ராஜதருமங்களையும் ஆபத்தருமங்களையும் மோட்சதருமங்களையும் பீஷ்மரிடம் கேட்டிருக்கிறாய்.அப்படியிருந்தும் நீ ஏன் மதி மயக்கம் கொண்டாய்.நீ பாவம் செய்தவனாக நினைத்தால் அந்தப் பாவத்தைப் போக்கும் வழியைக் கூறுகிறேன்..கேள்..நீ தசர குமாரனான ராமனைப் போல அஸ்வமேத யாகம் செய்.உனது பாவங்கள் தொலையும்' என்றார்.

வியாசரின் ஆலோசனைப்படி கோலாகலமாகத் தொடங்கப்பட்ட அஸ்வமேத யாகத்தில் பலநாட்டு மன்னர்கள் கலந்து கொண்டனர்.பல்லாயிரக் கணக்கான மக்கள் பல பொருள்களை அரச காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப் பட்டது.

புலவர்கள், அறிஞர்கள், தர்க்க வாதம் புரிந்து அவையோரை மகிழ்ச்சிக் கடலிலாழ்த்தினர்.

யாகம் முடிந்ததும்..பொன்னிறமாக இருந்த ஒரு கீரி அங்கு வந்து  தருமர் செய்த அந்த யாகத்தைவிட ஒரு பிடி மாவின் தானம் மேன்மையுடையது என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அங்கிருந்த சான்றோர்கள் கீரியின் அருகில் வந்து, 'நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?சாத்திரப்படி செய்யப்பட்ட இந்த யாகத்தை ஏன் குறை கூறுகிறாய்?உனக்கு எவ்வளவு கர்வம் இருந்தால் வேதங்களை உடைய ரிஷிகளால் போற்றப்படும் இந்த யாகத்தைப் பழித்துப் பேசுவாய்?' என்றனர்.

கீரி பதில் உரைக்க ஆரம்பித்தது..

Monday, October 10, 2011

181- பீஷ்மர் மறைந்தார்....




நல்ல பல அறவுரைகளைக் கதைகள் மூலம் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார்.பேச்சை நிறுத்தினார்.யோகத்தில் ஆழ்ந்தார்.தியானத்தில் இருக்கையிலேயே அவரின் உடலில் இருந்த அம்புகள் உதிர்ந்தன.அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அனைத்து அம்புகளும் காணாமற் போயின.அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று.அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர்.தேவ துந்துபிகள் முழங்கின.வானம் மலர் மாரி பொழிந்தது.சித்தர்களும், பிரம ரிஷிகளும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.'பிதாமகரே! வருக..என வானுலகோர் வரவேற்றனர்.பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தது.பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

பாண்டவர்களும், விதுரரும்,யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர்.திருதிராட்டிரனும்,தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர்.யுயுத்சு குடை பிடித்தான்.பீமனும்,அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர்.நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர்.திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர்.குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர்.ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின.புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டது.அனைவரும் வலம் வந்து தொழுதனர்.எங்கும் சாந்தி நிலவியது.

பின்னர் கண்ணனும், நாரதரும்,வியாசரும்,பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும்,நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கைக்கரையை அடைந்தனர்.ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது.அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே....' நான் சொலவதைக் கேளுங்கள்.என் மகன் குலப்பெருமை மிக்கவன்.ஒழுக்கத்தில் சிறந்தவன்.பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன்.உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன்.பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன்.காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளைக் கொண்டு வந்தவன்.வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை.அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது' என்றாள்.

அப்போது கண்ணன்..'தேவி துயரப்படாதே..தைரியத்தை இழக்காதே..உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார்.இனி அவர் வசுவாக இருப்பார்.ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ அறிவாய்.இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது.இனி நீ அவரைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.தேவி..ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்..அந்த க்ஷத்திரிய வீரன் சிகண்டியினால் கொல்லப்படவில்லை.தனஞ்செயனால் கொல்லப்பட்டார். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதை நீ அறிவாய்.வசுக்கள் உலகை அடைந்த உன் மைந்தனை எண்ணி நீ பெருமைப் பட வேண்டுமே தவிர..துயரம் கொள்ளக் கூடாது' என்று ஆறுதல் கூறினார்.

கண்ணனின் ஆறுதல் கேட்டுச் சாந்தம் அடைந்த தெய்வமகள் நீரில் இறங்கினாள்.பின் அனைவரும் கங்காதேவியை வணங்கினர்.அத்திருமகள் விடை தர அனைவரும் திரும்பிச் சென்றனர்.

(அனுசாசன பருவம் முற்றிற்று)

Sunday, October 9, 2011

180-தவத்தைவிடச் சிறந்தது




தருமர், பீஷ்மரிடம், 'தவத்தைவிடச் சிறந்தது உண்டா?' என வினவ, பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்..
'தவத்தைவிட மேலானது உபவாசம்..இதனினும் சிரந்ததாக எதுவும் இல்லை.இது தொடர்பாகப் பிரம்ம தேவனுக்கும்,பகீரதனுக்கும் நடைபெற்ற உரையாடலை நெடுங்காலமாக கூறி வருகின்றனர்.அதைக் கூறுகிறேன்..ஒரு சமயம் பகீரதன் தேவலோகத்தையும், கோலோகத்தையும் கடந்து ரிஷிலோகத்தை அடந்தான்.அப்போது பிரம்மதேவன் பகீரதனைப் பார்த்து, 'அடையமுடியா இந்த ரிஷிலோகத்திற்கு நீ எப்படி வந்தாய்? தேவர்களாயினும், கந்தர்வர்களாயினும், மனிதராயினும் தவம் செய்துதான் இங்கு வர இயலும்.அப்படியிருக்க நீ வந்தது எவ்வாறு?' என வினவினார்.

பகீரதன் அதற்கு. 'பிரம்ம தேவரே! ஒரு லட்சம் பேருக்கு அன்னம் அளித்தேன்.ஆனால் அதன் பலனாக இங்கு நான் வரவில்லை.ஏகாத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,பஞ்சராத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,ஏகாதசராத்ர யாகங்கள் பதினொன்றும்,ஜோதிஷ்டோமம் என்னும் யோகங்கள் நூறும் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.கங்கைக் கரையில் நூறு வருடம் தவம் செய்தேன்..அங்கே ஆயிரம் கோவேறு கழுதைகளையும், கன்னியரையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

புஷ்கரஷேத்திரத்தில் நூறாயிரம் குதிரைகளையும்,இரண்டு லட்சம் பசுக்களையும் அந்தணர்க்கு வழங்கினேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.கோசலம் என்னும் யாகங்களில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு கருதாது..பத்துப் பத்து பசுக்களாக நூறு கோடி பசுக்களையும், பால் கறக்கப் போதிய பொன்பாத்திரங்களையும்,வெண்பாத்திரங்களையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

பாகிலி என்னும் இடத்தில் பிறந்தவையும்,பொன் மாலைகள் அணிந்தவையுமான பதினாயிரம் வெள்ளைக் குதிரைகளை அளித்தேன்.ஒவ்வொரு யாகத்திலும் நாள் தோறும் எட்டுக் கோடி,பத்துக் கோடி என வாரி வாரித் தந்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.பொன் மாலைகளுடன் காது கருத்தவையும் ,பச்சை நிறம் உள்ளவையுமான குதிரைகள் பதினேழு கோடிகளைத் தந்தேன்.பொன்னால் செய்யப்பட்ட, பொன் மாலைகளுடன் கூடிய பதினெட்டாயிரம் தேர்களை அளித்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

ஆயிரமாயிரம் அரசர்களை வென்று, எட்டு ராஜசூய யாகங்களைச் செய்தேன்.அழகும், பெருங்கொண்டைகளும் உடைய எண்ணாயிரம் வெள்ளைக் காளைமாடுகளையும்,பசுக்களையும்,பொன் குவியலையும், ரத்தினக் குவியல்களையும்,ஆயிரக்கணக்கான கிராமங்களையும் அளித்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

ஒரு யோசனை நீள அகலமுள்ள மாமரங்கள் நிறைந்த காட்டைக் கொடுத்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.அசுவமேத யாகங்கள் பல செய்தேன்.ஒவ்வொரு நாளும் முப்பது அக்கினிகளில் ஓமம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.முப்பதாண்டுக் காலம் சினம் தவிர்த்து யாராலும் செய்தற்கரிய துவாரணம் என்னும் யாகத்தை விடாமல் செய்தேன்.எட்டு சர்வமேத யாகங்களும் ஏழு நாமேத யாகங்களும் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

சரயு நதியிலும், நைமிசாரண்யத்திலும் பத்து லட்சம் பசுக்களைத் தானமாக வழங்கினேன்.அதனாலும் இங்கு வரவில்லை.ஓர் ரகசியம் இந்திரனால் குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனை பரசுராமர் தன் தவத்தால் உணர்ந்தார்.அதனைச் சுக்கிரர் மூலமாக நான் அறிந்தேன்.அதன் காரணமாக ஆயிரமாயிரம் அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும் தானம் செய்தேன்.அவற்றாலும் நான் இங்கு வரவில்லை.

உபவாசத்தால்தான் நான் இங்கு வந்தேன்.இந்த உபவாசத்தைவிட மேலான தவத்தை நான் எங்கும் அறியவில்லை' என்று கூறி முடித்தான்.

ஆதலால்..தருமா..நீயும் உபவாசத்தை மேற்கொண்டு, நற்கதி அடைவாயாக.." என்று பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

Thursday, October 6, 2011

179-இன்சொல்லின் சிறப்பு




இன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் தருமருக்கு விளக்குகிறார்..

'தருமா! இன்சொல்லால் ஆகாதது இல்லை.கொடிய விலங்குகளைக் கூட இனிமையான சொற்களால் வசப்படுத்தலாம்.இது சம்பந்தமாக, ஒரு அரக்கனால் பிடிக்கப்பட்ட ஒரு அந்தணன் தன் இனிமையான சொற்களால் விடுபட்டக் கதையைச் சொல்கிறேன்..
முன்னொரு காலத்தில் அறிவுள்ள அந்தணன் ஒருவன் காட்டில் அரக்கனால் பிடிபட்டான்.அரக்கன் தன் உணவிற்காக அந்தணனைப் பிடித்தான்.ஆனால் அவனோ சிறிதும் அச்சமோ,கலக்கமோ அடையவில்லை.இனிய வார்த்தைகளை அரக்கனிடம் பேசினான்.அதனால் வியப்படைந்த அரக்கன் அவனைப் பாராட்டினான்.பின், அரக்கன்,'நான் எதனால் இளைத்திருக்கிறேன்..சொல்' என்றான்.இது கேட்ட அந்தணன் தன் சொல்லாற்றலால் விரிவாகப் பதில் சொன்னான்.

நீ உன் உற்றார் உறவினரைப் பிரிந்து, வேற்று நாட்டில் இருக்கிறாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன்னால் பாதுகாக்கப்பட்டவர் உன்னைக் கைவிட்டுப் போயிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புறக்கணித்துப் பெரிய ஆசை கொண்டு அதற்காக நீ அலைந்து கொண்டு இருக்கிறாய் போலும்...அதனால் நீ இளைத்திருக்கலாம்.

செல்வமும் அதிகாரமும் உள்ளவர்கள் உன்னை அவமதித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உலகில் அறிஞர்களையும் ஞானிகளையும் புறக்கணித்துச் சிலர் அற்பர்களைப் பாராட்டியிருக்க, அது கண்டு நீ வேதனைப் பட்டிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

அரும்பாடுபட்டு நீ செய்த நன்றியை மறந்து ஒருவன் உன்னிடம் துரோகம் செய்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

காமம் முதலான தவறான வழிகளில் மக்கள் ஈடுபடுவதுக் கண்டு நீ வருத்தமுறுகிறாய் என எண்ணுகிறேன்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

நண்பனைப் போல நடித்து ஒரு பகைவன் உன்னை ஏமாற்றியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன் இனிய நண்பர்கள் சினம் கொண்டிருக்க அவர்களை உன்னால் அமைதிப்படுத்த முடியாமல் நீ வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

யாரோ உன் மீது பழி சுமத்த, அதைக் கேட்டவர்களால் நீ அலட்சியப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

நல்ல குணங்களையுடைய நீ பிறரால் வஞ்சகன் என்று பழிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

உனது நல்ல எண்ணங்களைச் சமயம் வரும்போது உன்னால் வெளிப்படுத்த முடியவில்லையே என வருந்தியிருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

அற்பர்கள் மத்தியில் உனது சிறந்த கருத்துக்கள் எடுபடாமல் போனது கண்டு நீ மனம் நொந்து போயிருப்பாய் ..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

ஒழுக்கம் இல்லாத நீ உயர்வடைய வேண்டும் எனக் கருதி ஏமாந்திருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன் பிள்ளை உனக்கு அடங்காமல் போயிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

தாய் தந்தையர் பசியால் வாடி இறந்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உனது பொருள்களைப் பிறர் கவர்ந்து கொள்ள நீ வாழ்க்கைக்கு வேறொருவர் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நீ தகாதவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின் அவர்களை விட முடியாமல் வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன்னிடம் கல்வி இல்லை..செல்வம் இல்லை..கொடை இல்லை..அப்படியிருந்தும் பெரிய புகழுக்கு நீ ஏங்கி இருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நெடுநாள் எதிர்பார்த்த ஒன்று பிறரால் அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

பாவிகள் நலமுடன் வாழ..நல்லவர்கள் கஷ்டப்படுவது கண்டு நீ தெய்வத்தை பழித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

அந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.

ஆதலால்..தருமா! இன் சொலால் ஆகாதது இல்லை என உணர்ந்து கொள்' என்றார் பீஷ்மர்,

Monday, October 3, 2011

178-இந்திரனுக்கும்..கிளிக்கும் நடந்த உரையாடல்




பீஷ்மர்  இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் ஒன்றை கதையாக தருமருக்கு உரைத்தார்..
'தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷம் தோய்ந்த அம்பையும்,வில்லையும் எடுத்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.மான் கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற்சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் சென்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பானதால் அந்த மரம் பட்டுப் போனது.
மரம் அப்படியான போதும் அந்த மரத்தின் பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகலவில்லை.இரை எடுக்கவில்லை.வெளியே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்படியானதே ..என வருந்தியது.
கிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான்.பறவை இனமாய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா? என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்..அவன் கிளியிடம்'இந்த மரத்தைவிட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்?' என்றான்.
இந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..'தேவேந்திரா! உன்னை என் தவத்தால் அறிந்து கொண்டேன்.உன் வரவு நல்வரவாகட்டும்' என்றது.
தேவேந்திரன் கிளியிடம்,'இலைகளும்,கனிகளும்,கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில்..நீ மட்டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய்..இக்காட்டில் உனக்கு வேறு மரமா..இல்லை?'எனக் கேட்டான்.
இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயரத்துடன்'நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன்.இளமையில் நன்கு பாதுகாக்கப் பட்டேன்.பகைவர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை.தயை,பக்தி இவற்றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்?நமக்கு உதவு செய்தவரிடத்தில் தயையுடன் நடந்து கொள்வதுதானே தருமத்தின் இலக்கணம்.தயையே எல்லோருக்கும் திருப்தியை அளிப்பது.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப்பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்..அதனால் அன்றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இருக்கிறாய்..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட்களாக நான் இருந்த மரத்தை விட்டுவிடச் சொல்லலாமா?ஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழைத்தவன் அவர் கெட்ட நிலைக்கு வந்த போது எப்படி பிரிவது?' என்று கூறியது.
கிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ்ந்தான்.ஞானிபோல பேசிய அக்கிளியிடம் மிக்க மரியாதை ஏற்பட்டது.அதனிடம், "நீ வேண்டும் வரம் கேள்..தருகிறேன்' என்றான்.
உடன் கிளி.'பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக் குலுங்க வேண்டும்..இதுவே நான் வேண்டும் வரம்'என்றது.
உடன் இந்திரனும் அம் மரத்தின் மீது அமிழ்தத்தைப் பொழிந்தான்.முன்னைவிட பன் மடங்கு பொலிவுடனும்,கம்பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.
'தருமரே! கிளியின் பக்தியால் அம்மரம் பழைய நிலையை விட சிறந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவில் இந்திர லோகம் அடைந்தது.பக்தியுள்ளவனைச் சார்ந்தவர் மரம் போல நற்பயனைப் பெறுவர் என உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.  

177-ஊழ்வினை-முயற்சி எது சிறந்தது?




"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?" என்று தருமர் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்..
'தருமரே! இதற்கு பழைய கதை ஒன்று உண்டு..
ஒரு சமயம் வசிஷ்டர் பிரமதேவரை நோக்கி, "ஊழ்வினை,மனித முயற்சி இவற்றில் எது சிறந்தது" என கேட்டார்.அதற்கு பிரம தேவர் காரண காரியங்களுடன் விளக்கினார்..
'வித்திலிருந்து முளை முளைக்கிறது.முளையிலிருந்து இலை..இலையிலிருந்து காம்பு..காம்பிலிருந்து கிளை..கிளையிலிருந்து மலர்..மலரிலிருந்து கனி..கனியிலிருந்து வித்து..வித்திலிருந்து மறுபடியும் உற்பத்தி ஏற்படுகிறது.வித்து இன்றி ஏதும் தோன்றுவதில்லை.வித்தின்றி கனி இல்லை..வித்திலிருந்து வித்து உண்டாகிறது.வித்தின்றி பயனில்லை.விதைப்பவன் எத்தகைய விதையை விதைக்கின்றானோ அவ்விதமான பயனை அடைகின்றான்.அது போல நல்வினை,தீவினைக்கு ஏற்ப பயனை மனிதன் பெறுகிறான்.நிலமில்லாது விதைக்கும் விதை பயன் தராது, அது போல முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன் தருவதில்லை.அதாவது செய்வினை பூமியாகவும் ஊழ்வினை விதையாகவும் கருதப்படுகின்றன.நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் ஏற்படுகின்றன.
ஒரு செயலை முயற்சியுடன் செய்பவன் அதிர்ஷ்டத்தால் நோக்கப்பட்டு நன்மை அடைகிறான்.முயற்சி செய்யாதவன் மீது அதிர்ஷ்டம் தன் பார்வையை செலுத்துவதில்லை.நட்சத்திரங்களும்,சூரிய சந்திரர்களும், தேவ தேவியரும்,இயக்க இயக்கியவரும் மனிதராய் இருந்து முயற்சியினால் தேவத் தன்மை அடைந்தனர்.செல்வம் முயற்சி இல்லாதவரிடம் எப்போதும் சேர்வதில்லை.தத்தம் செயலுக்குப் பயன் இல்லையாயின், மக்கள் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவர்.அப்போது எல்லாம் வீணாகும்.ஆனால் முயல்பவனுக்குத் தெய்வம் கைகொடுத்து உதவுகிறது.முயற்சி இல்லையானால் தெய்வம் உதவி செய்யாது.எனவே தானே தனக்கு நண்பன்.தானே தனக்குப் பகைவன்.தனது செயலுக்குத் தானே சாட்சி.செய்யும் செயல் ஒரு வேளை கெடுமாயினும், பெரு முயற்சியால் இன்னொரு சமயம் கூடி வரும்.
புண்ணிய பலத்தினால்தான் தேவலோக வாழ்வு கிடைக்கிறது.நற்செயல் காரணமாகப் பெறும் புண்ணியம் இல்லாதவனைத் தெய்வம் கண்டு கொள்வதில்லை.
தவத்தில் சிறந்த முனிவர்கள் சாபம் கொடுப்பது தெய்வத்தின் அருளால் அல்ல.அரிதின் முயன்ற தவத்தின் வலிமையால்.ஆசையும்,அறிவின்மையும் உள்ள மனிதனுக்குத் திரண்ட செல்வம் கிடைத்தும் காக்கும் முயற்சி இன்மையால் அது அவனை விட்டு விலகி விடுகிறது.தெய்வம் அவனைக் காக்க வருவதில்லை.சிரு நெருப்புப் பொறி காற்றினால் தூண்டப்பட்டுப் பெரிதாக ஆவது போலத் தெய்வம் முயற்சியுடையவனைச் சேர, செல்வம் மிகுதியாகப் பெருகும்.எண்ணெய் வற்ருவதால் தீப ஒளி மங்கிப் போவது போல, முயற்சி குறைவதால் தெய்வம் ஓய்வடைகிறது.மிக்க செல்வத்தையும்,வேண்டிய வசதிகளையும் பெற்றும் முயற்சி இல்லாத மனிதன் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக விடாமுயற்சியுள்ளவன் அவற்றை நன்கு அனுபவிக்கிறான்' என்று வசிஷ்டருக்கு பிரம தேவர் உரைத்தார்' என தருமருக்கு பீஷ்மர் கூறினார்.