Wednesday, August 26, 2009

58-கண்ணன் தூது (2)

துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான்.கூர்மையான ஊசி அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.'விதுரர்,பீஷ்மர்,துரோணர் ஆகியோர் எனக்கே அறிவுரை கூறுகின்றனரே..நான் பாண்டவர்க்கு அப்படி என்ன தீது செய்தேன்?'என்றான்.

'துரியோதனா..நீ செய்த தீமை ஒன்றா..இரண்டா.அவர்களை வற்புறுத்தி சூதாடவைத்தாய்..அவையில்..திரௌபதியின் ஆடையை களைய முற்பட்டாய்.வாரணாவதத்தில் தாயுடன் சேர்த்து அவர்களை எரிக்க முயன்றாய்.பீமனைக் கட்டிப் போட்டதும்,விஷம் கொடுத்ததும் ஆகிய கொடுமைகள் செய்தாய்.இப்படி பாவங்களையே செய்த நீ..என்ன தீது செய்தேன் என்கிறாய்..நல்லவன் போல நடிக்கிறாய்.சான்றோர்..உரையையும் நீ மதிக்கவில்லை.சமாதானத்தை விரும்பாத நீ போர்க்களத்தில் அழிவது உறுதி' என்றார் மாதவன்.

இதுகேட்ட..துரியோதனன் கடும் சினம் கொண்டான்.கண்ணனை கைதியாகப் பிடித்துச் சிறையில் வைக்க முயன்றான்.அதைக் கண்டு நகைத்த கண்ணன் தன் விஸ்வரூபத்தை அனைவரும் காணச் செய்தார்.அவரிடமிருந்து எல்லா தேவர்களும் மின்னல் போல் காட்சி அளித்தனர்.எங்கெங்கு நோக்கினும் கண்ணன் தான்.ஒரு கோடி சூரியன் உதயமாயிற்றோ என அனைவரும் திகைத்தனர்.சங்கு,சக்கரம்,கதை,வில்,கலப்பை என எல்லாக் கருவிகளும் அவர் கரங்களில் ஒளி வீசின.

கண்ணனை பீஷ்மர்,விதுரர்,துரோணர்,திருதிராட்டிரன்,அசுவத்தாமா,விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.கண்ணன் குந்தியைக் காணச் சென்றார்.அவையில் நடந்தவற்றை அத்தையிடம் கூறினார்.பிறகு கர்ணனைச் சந்தித்து அவனது பிறப்பின் ரகசியத்தைக் கூறினார்.தனது பிறப்பின் ரகசியத்தை..யுத்தத்திற்கு முன் வெளியிட வேண்டாம் என்றான் கண்ணன்.துரியோதனனுடன் ஆன நட்பை யாரும் பிரிக்க முடியாது என்றும் உரைத்தான்.

பின்..தாய் குந்தி தேவி கர்ணனை சந்தித்து..கர்ணன் பிறந்த சூழலை உரைத்தாள்.பின் தாயிடம் கர்ணன்'அர்ச்சுனனைத் தவிர,,மற்ற நால்வருடன் போரிட மாட்டேன்'என உறுதி அளித்தான்.பின்'தாயே!அர்ச்சுனனுடன் ஆன போரில்..யாரேனும் ஒருவர் மடிவோம்..அப்படி நான் மடிந்தால்..என் தலையை தங்கள் மடியில் வைத்து..மகனே எனக் கதறி அழுது..நான் உன் புதல்வன் என்பதை உலகிற்கு உணர்த்து..நான் வெற்றி பெற்றாலும்..என் மூத்த மகன் வென்றான் என உண்மையைத் தெரிவி..ஆனால் எக்காரணம் கொண்டும் போருக்கு முன் என் பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் அறிவிக்க வேண்டாம் 'என்றான்.

பின்..கண்ணன்..தருமரை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி..யுத்தத்தை தவிர வேறு வழி இல்லை என்றார்.எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற தருமர்..தனக்கு துணைக்கு வந்த ஏழு அக்ரோணி படைக்கு..முறையே..துருபதன்,திருஷ்டத்துய்மன்,விராடன்,சிகண்டி,சாத்யகி,சேகிதானன்,திருஷ்டகேது..ஆகியவரை சேனாதிபதியாக நியமித்தார்.அத்தனைப் பேருக்கும் பிரதம தளபதியாக அவர்களில் ஒருவனான திருஷ்டத்துய்யனை நியமித்தார்.

துரியோதனன் சார்பில்..பதினோரு அக்ரோணிப் படைக்கு..கிருபர்,துரோணர்,ஜயத்ரதன்,சல்லியன்,சுதட்சிணன்,கிருதவர்மா,அசுவத்தாமா,கர்ணன்,பூரிசிரவா,சகுனி,பாகுலிகன் ஆகியோர் சேனாதிபதிகளாக நியமிக்கப் பட்டனர்.பிரதம தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார்.

இரு திறத்துப் படைகளும்..அணி வகுத்துக் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிச் சென்றன.

பலராமர்..முன்னரே..சொன்னபடி..குருக்ஷேத்ரப் போர்க்கால அழிவைப் பார்க்க விரும்பாமல்..தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டார்.

(உத்தியோக பருவம் முற்றும்)....

Monday, August 24, 2009

57-கண்ணன் தூது

சஞ்சயன் தூதாக வந்து சென்றபின்..தருமர்..எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார்.அதற்கு கிருஷ்ணன் தயாரானார்.

ஆனால் பீமன் கொதித்து எழுந்தான்..'சமாதானம் வேண்டாம்..போர்தான் வேண்டும்' என்றான்.அர்ச்சுனன்,நகுலன்,சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை.திரௌபதியும்..அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.

கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்.இதை அறிந்த திருதிராட்டினன்..மகிழ்வது போல நடித்தான்..விதுரரை அழைத்து 'தேர்,யானை,குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும்.என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்.வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறினான்.

அவன் கருத்தை அறிந்த விதுரர்..'இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார்' என்றான்.

அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும்..இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது..திருதிராட்டினன் மாளிகைக்கு சென்றார்.விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.

துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான்.ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை.காரியம் நிறைவேறுவதற்குள்..தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.

கௌரவர்,பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.

அதற்கு கண்ணன்'பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள்.நீ..அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய்.நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.

துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும்..அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்..

திருதிராட்டினனை நோக்கி..துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி..அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால்..திருதிராட்டிரன்..தன் இயலாமையைக் கூறினான்.

பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

"உனது தந்தையும்,மற்றும் அனைத்து சான்றோரும்..நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர்.அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய்.பீமனையும்,அர்ச்சுனனையும் வென்றாலே..உனக்கு உண்மையான வெற்றி கிட்டும்.ஆனால்..அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை.குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம்.பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு..அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக' என்றார்.

(கிருஷ்ணன் தூது..அடுத்த பதிவிலும் தொடரும்)

Saturday, August 15, 2009

56-சஞ்சயன் தூது

பின்..திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான்.'இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல..ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது.போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.

போரில் தருமருக்கு விருப்பமில்லை..ஆனாலும்..நாட்டைத் திருப்பித் தராவிடின்..போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.

திருதிராட்டிரன்..விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான்.விதுரர் நீதிகளைக் கூறினார்.பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை..அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார்.மேலும்..துரியோதனனிடம்..அது இல்லை என்றும்..அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.

திருதிராட்டிரன்..விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும்..புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.

அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.

பீஷ்மர்..'இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள்.இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம்' என்றார்.

வழக்கம் போல பீஷ்மரை கர்ணன் பழித்தான்.'இவர் நம்முடன் இருந்தாலும்..இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.

கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர்.'உன் வீரம் அனைவருக்கும் தெரியும்..வெட்டித்தனமாய் பேசாதே' என்றார்.

'எப்போதும்..எனக்கு எதிராய் பேசுவது இவரின் இயல்பு.அர்ச்சுனன் பற்றி இவர் பெரிதாக நினைக்கிறார்.இவர் அர்ச்சுனனிடம் தோல்வி அடையும் வரை நான் போரில் இறங்க மாட்டேன்.பின் அர்ச்சுனனை நான் போரில் கொல்வேன்'என்று கூறிவிட்டு..சபையிலிருந்து வெளியேறினான் கர்ணன்.

துரியோதனனிடம்..பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும்..அவன் கேட்கவில்லை.

'தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன்.இந்த பாண்டவர்கள் சூதாடித்தோற்ற போதே ஏன் போருக்கு கிளர்ந்து எழவில்லை.அவர்களுக்கு மான உணர்ச்சி கிடையாது.சபதம் என்ற பெயரில் வீரவாதம் புரிந்தனர்.தருமர் ஒரு முறை சூதில் தொலைத்தவர்..மீண்டும் இரண்டாம் முறை ஏன் சூதாட வேண்டும்.கிருஷ்ணனின் துணை இப்போது இருப்பதால்..இப்போது போரிடத் தயார் என்கிறார்கள்.போர் தொடங்கட்டும் பார்ப்போம்.என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது..அவர்களிடம் 7 மட்டுமே உண்டு.அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை.அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள்.தந்தையே..5 ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்' என்று கூறிக் கர்ணனைப் போல் அவனும் அவையை விட்டு வெளியேறினான்.

Saturday, August 8, 2009

55-சல்லியன் யார் பக்கம்

மத்ர தேச மன்னன் சல்லியன் நகுல,சகாதேவர்களின் தாய் மாமன்.பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர்.அவனும் அதையே விரும்பினான்.பெரும் படையுடன்..பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.

அவன் செல்லும் வழியெல்லாம்..பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது.இவை யாவும்..துரியோதனன் ஏற்பாடாகும்.இது அறியா சல்லியன்..இவை த்ருமரால் செய்யப்பட்டது என எண்ணினான்.இது துரியோதனனுக்கு தெரிய வந்தது.அவன் ஓடோடி வந்து..சல்லியனிடம்'எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி' என்றான்.

துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது.. சல்லியன்'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.

வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும்..என்றான் துரியோதனன்.சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான்.ஆயினும்..துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.

பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான்.பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.

என்ன செய்வது என அறியாத தருமர்..ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின்..அர்ச்சுனனின் பெருமையை..அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள்.பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.

பாண்டவர்களின் தூது
-- ---------------------

பாண்டவர்களின் தூதுவன்..பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன் அஸ்தினாபுரம் அடைந்தான்.பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள்..காட்டிலும்..நாட்டிலும்..நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர்.அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும்.அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது..என்றான்.

தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான்.பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் த்ன்னால் முடியும் என்றான்.

கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை.திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.

Tuesday, August 4, 2009

54-கிருஷ்ணன் யார் பக்கம்

அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் திருமணம் நடந்த மறுநாள் பாண்டவர்களுடன்..திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் வந்திருந்தனர்.தவிர..பலராமர்,கிருஷ்ணர்,துருபதன் ஆகியோரும் இருந்தனர்.எதிர்கால திட்டம் பற்றி கண்ணன் பேசினார்..

'துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்ததுடன்..பாண்டவர்களுக்கு நிபந்தனை விதித்தான்.அவற்றை பாண்டவர்கள் நிறைவேற்றிவிட்டனர்.இனி துரியோதனன் கருத்து அறிய ஒரு தூதுவனை அனுப்பி..நாட்டில் பாதியை ப் பாண்டவர்க்குத் தர கூற வேண்டும்' என்றார்..

ஆனால்..கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை.'சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம்.கொடுத்தால் பெறலாம்.ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.

'இந்த முக்ய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல.பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும்.முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும்.ஆகவே உடன் செயல்பட வேண்டும்.துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும்' என்றார் துருபதன்.

துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.

**** *** *** ****

பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில்..துரியோதனன் முனைப்புக் காட்டினான்.கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான்.அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான்.அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார்.கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும்,கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர்.கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான்.அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான்.துரியோதனனும் அதே சமயம் கேட்டான்.'நானே முதலில் வந்தேன்' என்றான் துரியோதனன்.'ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன்.ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு.என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன்.ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு..ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் ஒரு பங்கு.அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால்..அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு'என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான்.தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்..துரியோதனன்.

பின்..பலராமரிடம் செண்ரு உதவிக் கோரினான் துரியோதனன்.பலராமரோ'கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது.அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன்.நடுநிலைமை வகிப்பேன்.போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்'என்று கூறிவிட்டார்.

Saturday, August 1, 2009

53-விராட பருவம் முடிந்தது

விராட மன்னன்..கங்கருடன் சூதாடிக் கொண்டிருந்த போது..'பீஷ்மர் முதலானோரை வென்ற என் மகன் போல் உம்மை நான் வெல்வேன்' என்ரான்.

ஆனால்..அதற்கு கங்கர் 'பிருகன்னளையின் உதவியால்தான் உன் மகனுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்' என்றார்.இதனால்..கோபம் கொண்ட விராடன்..கையில் இருந்த பகடையை கங்கர் மீது வீசினான்.அவர் அவர் நெற்றியிலும்..வலது காதிலும் பட்டு ரத்தம் கொட்டிற்று.அருகில் இருந்த சைரந்தரி..பதறி..தன் மேலாடையால்..அந்த ரத்தத்தைத் துடைத்து..அதனை பிழிந்து ஒரு பாத்திரத்தில் ஏந்தினாள்.அச்செயல் மன்னனுக்கு அருவருப்பை ஏற்படுத்த..உடன் சைரந்தரி'இவர் ஒரு மகான்.இவர் ரத்தம் பூமியில் பட்டால்..மழை பொழியாது..உனக்குக் கேடு வரும்' என்றாள்.

இந்நிலையில்..உத்தரனும்..பிருகன்னளையும் வர 'உத்தரன் மட்டும் வரட்டும்' என்றார் கங்கர்.உள்ளே வந்த உத்தரன் கங்கரைக் கண்டான்.நேற்றியில் இருந்த காயத்தைப் பார்த்து 'இந்த கொடுமையை இழைத்தது யார்? என்றான்.மன்னன் அலட்சியமாக அது தன்னால் நேர்ந்தது என்றான்.

அவரின் காலில் விழுந்து மன்னனை மன்னிப்புக் கேட்கச் சொன்னான் உத்தரன்.பின் அவர்கள் யார் என்பதைக் கூறினான்.

பெரு மகிழ்ச்சியுற்ற மன்னன்..தன்னை மன்னிக்குமாறு கூறினான்..'என் நாட்டையே உங்களுக்குத் தருகிறேன்' என்றான்.அர்ச்சுனனை நோக்கி..'மாவீரனே..என் மகளுக்கு ஆடலும்..பாடலும் கற்பித்தவனே..என் மகள் உத்தரையை உனக்குத் தர விரும்புகிறேன்' என்றான்.

உடன் அர்ச்சுனன் 'மன்னா..ஒராண்டுக் காலம் உம் மகளை என் மகளாகவே நினைத்தேன்..அந்த மனநிலையை என்னால் மாற்ரிக் கொள்ள முடியாது.ஆகவே..என் மகன் அபிமன்யுவிற்கு அவளை மணம் செய்வியுங்கள்' என்றான். மன்னனும் ஒப்புக் கொண்டான்.

அப்போது..அஸ்தினாபுரத்திலிருந்து..துரியோதனனின் ஒற்றன் ஒருவன் வந்தான்.'ஒப்பந்தபடி 13ஆம் ஆண்டு முடிவிற்குள் நாங்கள் அர்ச்சுனனைப் பார்த்து விட்டோம்..ஆகவே நீங்கள் மீண்டும் வனவாசம் போக வேண்டும்' என்ற செய்தியுடன்.

அதற்கு தருமர்..'பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமின்றி மேலும் 5 மாதங்கள் கழித்தே நாங்கள் வெளிப்பட்டோம்.இக்கணக்கை பீஷ்மரேஉரைத்துள்ளார்' என்ற பதிலை அனுப்பினார்.

பாண்டவர்கள் வெளிப்ப்ட்ட செய்தி கேட்டு கண்ணன்,சுபத்ரை,அபிமன்யு ஆகியொர் விராட நாடு வந்தனர்.

திட்டமிட்டபடி..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கும்..உத்தரைக்கும் மணம் நடந்தது.

(விராட பருவம் முற்றும்..இனி உத்தியோக பருவம்)