Tuesday, May 11, 2010

102- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல் (2)

தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்றவற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது.கடுமையான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அரசன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ..அந்தந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.

மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி..ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக்கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது..அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.

அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை,சொக்கட்டான்,பகல் உறக்கம்,பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன.தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது,குற்றமற்றவனைத் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவனைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது,பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்குவது..ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.

அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும்..கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணாமல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பது போல , அரசனும் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடாது.பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள்.அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள்..அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும்.காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்திலும்,பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும்.அரசன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும்.எல்லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி,கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந்த கப்பலைப் போல தள்ளிவிட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.

நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.' எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.

த்ருமர்..கண்களில் கண்ணீருடன் பீஷ்மரை வணங்கி 'மேலும் ஐயங்களை நாளை கேட்பேன்' என்று விடை பெற்றார்.பின்னர் அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.

Thursday, May 6, 2010

101- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல்


தருமர்..கண்ணனையும்..பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..


'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும்..ஆகவே இந்த ராஜதருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..

'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும்..முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது.வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை.இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும்."முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்" என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.

ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரும்,விசாலாட்சாரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர்.இந்த இரட்சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்...

பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம்,சுறுசுறுப்பு,உண்மை,குடிமக்களின் நன்மை,நேராகவும்..கபடமாகவும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது,பழுதான கட்டிடங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை..பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது,காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல்,நண்பர்..பகைவர்..ந்டுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.

இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களைக் கொன்று இவ்வுலகிலும்..தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான்..முயற்சியால் சிறந்தவன் கல்வியில் சிறந்த பண்டிதனை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலும்..அவனிடம் முயற்சியில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான்..அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.

உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்..தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும்..நற்குணமும், நல்லொழுக்கமும்,புலனடக்கமும், தெளிவும்,தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்.. (தொடரும்)

Sunday, May 2, 2010

100-உபதேசிக்க பீஷ்மர் சம்மதம்

கண்ணன் பீஷ்மரின் வினாவிற்கு பதிலளித்தார்..

'வேதம் உள்ள அளவும் உம் புகழ் மேன் மேலும் விரிவடைய வேண்டும்..இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும்..அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன்..நீர் தருமருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன.உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள் உயிர் துறந்த பின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றனர்.

கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன்..போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும்..பல தருமங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை..உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது.ஆனால் உமது பிறப்பு முதல் பாவம் என்பதை உம்மிடம் சிறிதுக் கூடக் காணவில்லை.குறையொன்றும் இல்லாதவரே..ஒரு தந்தை மகற்கு உரைப்பது போல நீர் உபதேசம் புரிவீராக..தர்மம் தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும்..அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும்..ஆதலால் ஞானக்கடலே..உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்..' என்றார்.

அது கேட்டு பீஷ்மர்..'கண்ணா..உமது அருளால் நான் பெற்ற ஞான நல்லறத்தை..தருமத்தை உமது தாள் பணிந்து இப்போது சொல்லத் தொடங்குகிறேன்..தருமத்தை விரும்பும் தருமர் என்னிடம் அனைத்து தருமங்களையும் கேட்க விரும்பினால்..நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்..தருமத்தைப் போற்றும் யார் அரசராக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..துணிவும், பொறுமையும், தருமமும், வீரமும், பெருமையும் ஆகிய இக்குணங்கள் எப்போதும் எவரிடம் நிலை பெற்றிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..சத்தியம், தானம், தவம், சுறுசுறுப்பு, பரபரப்பின்மை ஆகிய நற்குணங்கள்..எவரிடம் குடி கொண்டிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..ஆசையாலோ..அவசரத்தாலோ,பயத்தாலோ, பொருள் கிடைக்கும் என்னும் காரணத்தாலோ..அத் தருமத்திடம் அணுகா தரும சிந்தையுள்ளவர் எவரோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..நான் தருமங்களை தருமருக்குக் கூறுகிறேன்' என்றார் பீஷ்மர்.

அதற்குக் கண்ணன் ' தருமர்..வெட்கத்தாலும்..சாபம் வருமோ என்னும் அச்சத்தாலும் நடுங்குகிறார்.வழிபடத்தக்க பெரியோர்களைப் போர்க் களத்தில் கொன்றதற்காகச் சோகமும், வெட்கமும் கொண்டுள்ளார்.சகோதரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பெரிதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.தாம் செய்த தீங்கிற்காக என்ன நேருமோ என பயந்து உமது அருகில் வராது இருக்கிறார்' என்றார்.

அதனை உணர்ந்த பீஷ்மர்..'கண்ணா, போர்க்களத்தில் உயிர் துறத்தல் க்ஷத்திரியர் கடமையாகும்..தந்தையும், பாட்டனும், ஆசாரியரும் உறவினரும் கெட்ட எண்ணத்துடன் போரிட வருவார்களேயாயின் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்திரிய தர்மம்தான்.க்ஷத்திரியனுக்கு உரிய இத்தகைய போர்த் தருமம் என்றும் மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டிலும் நற்கதிக்குக் காரணம் என மனு கூறியுள்ளார்' என்றார்.

பிதாமகரின் இவ்வுரையைக் கேட்டதும், தருமர் மிகவும் பணிவுடன் அவரை நெருங்கி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.வில்லாற்றல் மிக்க பீஷ்மர் மிகவும் மகிழ்ந்து தருமரை அமருமாறு பணித்தார்.பின்னர் சந்தேகங்களைக் கேட்குமாறு பணித்தார்.

(இதுவரை மகாபாரதம் 100 இடுகைகள் முடிந்துவிட்டன..இவ்வலைப்பூவிற்கு வருபவர் எண்ணிக்கைக்கான விட்ஜிட்டை நான் இணைக்கவில்லை..காரணம்..படிப்பவர் எண்ணிக்கை குறைவு எனில்..தொடரை தொடரும் எண்ணம் வராது என்பதால்...இருப்பினும்..இத் தொடரை படிப்பவர் அனைவருக்கும் நன்றி..பீஷ்மரின் உபதேசம்..கிட்டத்தட்ட 100 இடுகைகள் வரலாம்..உங்கள் ஒத்துழைப்புடன் இவை தொடரும்..நன்றி)