Thursday, September 29, 2011

176- காலத்தின் நியதி - வினையின் பயன்




(13-அனுசாஸன பருவம்)
போர்க்கள அழிவிற்காக தருமர் வருந்துகையில், அவரது துயரத்தைப் போக்க பீஷ்மர் உரைத்த கதை..
தருமர், பீஷ்மரிடம் 'பாவத்திலிருந்து விடுபடுவது எப்படி ? என வினவ பீஷ்மர் கூறலானார்..
'தருமா..எல்லாம் கர்ம பலத்தால் ஏற்படும் என்பதனை எமன்,கௌதமி,வேடன்,பாம்பு,காலம்..இவர்களின் உரையாடல் மூலம் விளக்க விரும்புகிறேன்.
முன்னொரு காலத்தில் கௌதமி என்று ஒரு கிழவி இருந்தாள்.அவளது மகன் பாம்பு கடித்து இறந்தான்.அதைக்கண்ட அர்ச்சுனகன் என்னும் வேடன் சினம் கொண்டு கயிற்றால் பாம்பை சுருட்டிக் கொண்டு கௌதமியிடம் வந்து,'இந்த பாம்பை எப்படிக் கொல்ல வேண்டும் .சொல்' என்றான்.
'இந்த பாம்பைக் கொல்ல வேண்டாம்..என் மகன் சாவு கர்ம பலத்தால் நேர்ந்தது.பாம்பிற்கும், இவன் சாவிற்கும் தொடர்பில்லை.இது விதி.மதியுள்ள யாரும் தன்னைப் பெரியவனாக நினைக்க மாட்டான்.தம் புண்ணியத்தால் மக்கள் உலகில் துன்பமின்றி இனிதாக வாழ்கின்றனர்.பாவம் உள்ளவர்கள் துன்புறுகின்றனர்.இந்தப் பாம்பைக் கொல்வதால் இந்த்க் குழந்தை பிழைக்கவா போகிறது..இதன் உயிரைப் போக்குவதால் உலகில் யார் இறக்காமல் இருப்பர்?' என்று கௌதமி கூறினாள்.
வேடன், 'எப்போதும் யோக நிலையில் இருக்கும் சான்றோர்களுக்கு உலக விஷயம் புரிவதில்லை.மேல் உல்கைப் பற்றிய அவர்கள் உபதேசங்கள் மிக நல்லனவே..எனினும் இப்பாம்பை நான் கொல்லத்தான் போகிறேன்.அமைதியை நாடுபவர்கள் அதற்குரிய காலத்தை நழுவ விடுவார்களா?காரியத்தில் கண்ணாய் இருப்பவர்கள் சமயம் நேரும்போது, அக்காரியத்தை உடனே செய்து துயரத்தை அகற்றுவார்கள்.ஆதலால் இப்பாம்பை நான் கொன்ற பின் நீ உன் துன்பத்தை விட்டுவிடு;' என்றான்.
அது கேட்ட கௌதமி,'எம் போன்றவர்க்கு துயரம் ஏது?நாள்தோறும் துயரப்படுபவர்கள் சிறுவர்கள்!எனக்கு அத்தகைய துயரம் இல்லை.இந்த பாம்பின் மீது சினம் கொல்லாதே.உனது வைராக்கியத்தை போக்கிவிடு' என்றாள்.
வேடன்,'இதைக் கொல்லுவதால் எனக்கு புண்ணியமே உண்டாகும்.இது தேவ பூஜையை விடச் சிறந்ததாகும்.பல காலம் முயன்று பெறக் கூடிய புண்ணியம் இத்தகைய பாவிகளைக் கொல்வதால் உடனே கிடைக்கும்' என்றான்.
கௌதமி வேடனை நோக்கி,'பகைவர்களைக் கொல்வதால் என்ன லாபம் கிடைக்கும்?கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்?பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன்..?இது முக்திக்கு உரிய சாதனம்.ஆதலால் நான் பொறுமை இழக்கவில்லை' என்றாள்.
வேடன், 'கௌதமி! தேவேந்திரன் விருத்ராசுரனைக் கொன்று மேன்மை அடைந்தான் அல்லவா? சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார் அல்லவா?தேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்ன?விரைந்து பாம்பைக் கொல்வேன்' என்றான்.
என்னதான் வேடன் வற்புறுத்திய போதும் உத்தமியான கௌதமி பாம்பைக் கொல்ல உடன்படவில்லை.சுருக்குக் கயிற்றில் சிக்கித் தவித்த பாம்பு இப்போது பேசத் தொடங்கியது.'அர்ச்சுனகா..அறியாதவனே..இந்தக் குழந்தையைக் கொன்றதில் நான் செய்த பிழை என்ன?எமன் ஏவலின் படி செய்தேன்.இந்தக் குழந்தையிடம் எனக்கு பகை ஒன்றும் இல்லை.இதில் யாராவது பாவம் செய்திருந்தால் அது எமனைச் சாரும்' என்று பாம்பு கூறியது.
வேடன், 'பாம்பே..நீ வேறொருவர் கட்டளைப் படி இதைச் செய்திருந்தாலும், இந்தத் தீமையில் உனக்கும் பங்கு உண்டு.ஆதலால் நீயும் குற்றவாளிதான்.ஒரு மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை காரணமாய் அமைவது போல நீயும் காரணமாகிறாய்' என்றான்.
பாம்பு, 'வேடனே..அந்த மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை தாமே காரணமாகாது..அது போலத்தான் நானும்.ஆகவே என் மீது குற்றம் காணாதே..குற்றவாளி என என்னைக் கருதித் துன்புறுத்துவது நல்லதல்ல.பிழை உண்டு எனக் கருதினால் அந்தப் பிழை பொதுவானதாகும்.நான் மட்டுமே காரணமில்லை'என்று கூறிற்று.

வேடன், 'பாம்பே..இதற்கு நான் காரணம் இல்லை' என வாதாடுவதால் ஒரு பலனும் இல்லை.இந்தக் கொலையை நீ செய்திருக்கிறாய்.ஆதலால் நீ கொல்லத்தக்கவனே' என்றான்.
பாம்பு, 'வேடனே..உண்மையில் நானும் காரணம் என நீ கருதினால், என்னை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்திய ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?இப்படியிருக்க என்னைக் கொல்வதால்  உனக்கு என்ன லாபம்' என்று கேட்டது.
வேடன், 'கெட்ட புத்தியுள்ள பாம்பே..குழந்தையைக் கொன்ற கொலை பாதகனாகிய நீ என்னால் கொல்லத் தக்கவனே..கொலைகாரனான உனக்குப் பேச என்ன தகுதி இருக்கிறது? என்றான்.
பாம்பு, 'வேடனே..யாகத்தில் ஹோமம் செய்கிறவர் எப்படிப் பயனை அடைவதில்லையோ, அப்படியே நானும் இதன் பயனைப் பெறத் தக்கவன் அல்லன்' என்று பதில் கூறியது.
இவ்வாறு பாம்பு சொல்லும் போது எமன் அங்கு வந்து அதனை நோக்கி,'பாம்பே..நான் காலத்தால் ஏவப்பட்டு உனக்குக் கட்டளையிட்டேன்.இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நீயும் காரணமல்ல.நானும் காரணமல்ல.காலம்தான் காரணம்.நாம் அனைவரும் காலத்திற்கு உட்பட்டவர்கள்.பாம்பே.., விண்ணிலும் மண்ணிலும் உள்ள அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் காலத்தினாலேயே நடத்தப்படுகின்றன.இவ்வுலகம் அனைத்தும் காலத்திற்கு கட்டுப்பட்டே நடக்கின்றது.'பாம்பே! சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம் காலத்தால் ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க என்னைக் குற்றவாளியாக நீ கருதுவானேன்..ஒரு வேளை என்னிடம் குற்றம் இருக்குமாயின் நீயும் குற்றவாளியே!'என்று கூறினான்.
பாம்பை எமனை நோக்கி..'உம்மைக் குற்றவாளி என்றோ..குற்றமற்றவர் என்றோ நான் சொல்லவில்லையே..உன் ஏவலால் தான் நான் இதிச் செய்தேன் என்றேன்.இது காலத்தின் குற்றமாயும் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.அதனை தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.அந்தக் குற்றத்தினின்று நான் விடுபட நினைப்பது போல..நீயும் விடுபட விரும்புவது இயற்கையே' என்று சொல்லியபடியே..பின் ..வேடனை நோக்கி'எமனின் சொல்லைக் கேட்டாயா?நிரபராதி ஆன என்னைக் கொல்வது தகாது' என்றது.
இதற்கு வேடன், 'பாம்பே..உன் பேச்சையும், எமனின் பேச்சையும் கேட்டேன்.என் நிலையில் மாற்றம் இல்லை.இக்குழந்தை இறக்க நீயும் காரணம், எமனும் காரணம்.யாவருக்கும் துன்பத்தைத் தரும் எமன் அனைவராலும் இகழத் தக்கவன்.நீ கொல்லப்பட வேண்டியவன்' என்றான்.
இதற்கு எமன் வேடனிடம்,'நாங்கள் இருவரும் சுதந்திரம் அற்றவர்கள்.எங்கள் கடமை காலம் இட்ட கட்டளையைச் செய்வது தான்.நீ நன்கு ஆராய்ந்து பார்த்தால்,எங்களிடம் குற்றம் இல்லை என்பதை உணர்வாய்' என்றான்.
வேடன், 'எமனே! பாம்பே! நீங்கள் காலத்துக்கு உட்பட்டு நடப்பீராயின் எனக்கு உங்கள் மீது   வருத்தம் உண்டாவதேண்' என்றான்.
எமன் உடன்,'வேடனே..நான் திரும்பச் சொல்கிறேன்..உலகில் எல்லாச் செயலும் காலத்தால் செய்யப்படுகின்றன.ஆகையால் நாங்கள் இருவரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.எனவே நீ எங்களைக் குற்றவாளியாக நினைக்கக் கூடாது' என்றான்.
இச்சமயத்தில் காலதேவன் நேரில் வந்தான்..பாம்பையும்,எமனையும்,வேடனையும் நோக்கிக் கூற ஆரம்பித்தான்..
'வேடனே..நானும்,எமனும்,பாம்பும் ,இக்குழந்தை மாண்டதற்குக் காரணமில்லை.ஆதலால் நாங்கள் குற்றவாளியில்லை.இந்த குழந்தை செய்த வினைதான் எங்களை தூண்டிற்று.இது இறந்ததற்குக் காரணம் வேறு யாரும் இல்லை.தன் வினைப்பயனாலேயே இக் குழந்தை கொல்லப்பட்டது.இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வினையில் பங்கு உண்டு.இந்த வினையாகிய கர்மங்கள் ஏவுகின்ற படியே நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டளையிடுகிறோம்.கர்மங்களைச் செய்பவன் அவற்ரின் பலனை அடைகிறான்.நிழல் போல ஒருவனைக் கர்மப் பயன் தொடர்ந்து செல்கிறது.ஆதலால் நானோ,எமனோ,பாம்போ,நீயோ,கௌதமியோ யாரும் இக்குழந்தையின் இறப்பிற்குக் காரணம் இல்லை.இக்குழந்தையேக் காரணம்' என்றான்.
காலன் அப்படிச் சொல்கையில், கௌதமி என்னும் அந்த மாது உலகெலாம் கர்மத்தின் வயப்பட்டது எனத் தெளிந்தாள்.வேடனை நோக்கி, 'இது விஷயத்தில் காலம்,பாம்பு,எமன் ஆகிய யாரும் காரணமில்லை.தான் செய்த கர்மத்தாலேயே இக் குழந்தை காலம் வந்த போது இறந்தது.இனிக் காலதேவனும்,எமனும் செல்லலாம்.வேடனே..நீயும் இந்த பாம்பை விட்டுவிடு' என்றாள்.பின் அனைவரும் பிரிந்து சென்றனர்.
'தருமா! இது கேட்டு ஆறுதல் அடைவாயாக! போர்க்களத்தில் ஏராளமானவர் மாண்டதற்கு நீயோ,துரியோதனனோ காரணமல்ல.காலத்தின் செயல் எனத் தெளிவாயாக!'என்று பீஷ்மர் கூறினார்.


3 comments:

Nagasubramanian said...

தங்களின் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!

nithyananda said...

good

Thoduvanam said...

அருமையான கருத்து.நீரோட்டம் போன்ற நடை.மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

Post a Comment