Sunday, September 25, 2011

175-முக்தி எப்போது கிடைக்கும்




தருமர், பீஷ்மரிடம்,'முக்தி எப்போது கிடைக்கும்?' என வினவ பீஷ்மர் உரைத்தது..

நாரதர் திரிலோக சஞ்சாரி.தேவர் உலகத்திற்கும், இந்த மண்ணுலகத்திற்கும் போய் வருபவர்.ஒருமுறை நாரதர் தேவ உலகிலிருந்து பூலோகத்திற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருப்பதைப் பார்த்தார்.அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது.நாரதரின், இறை நாமத்தைக் கேட்டதும் அந்த வாலிப யோகி கண்ணை விழித்து நாரதரைப் பார்த்தார்.
'நாரத பகவானே..எங்கு சென்று கொண்டிருக்கிறீர்' என்றார்.
'நான் சிவபெருமானைப் பார்ப்பதற்காகக் கைலாயத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றார் நாரதர்.
'கைலாயத்தில் எனக்காக ஒரு காரியம் செய்ய முடியுமா?'
'கட்டாயம் செய்கிறேன்..அங்கு உனக்கு என்ன செய்ய வேண்டும்..கேள்'
'நான் மிக நீண்ட காலமாகச் சிவனை தரிசிப்பதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன்.இன்னும் எத்தனை காலம் இப்படித் தொடர்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு வந்து, சொல்வீர்களா?"
கட்டாயம் கேட்டு வருகிறேன்'
நாரதர் அந்தக் காட்டில் கொஞ்ச தூரம் சென்றதும், வேறு ஒரு யோகியைப் பார்த்தார்.
அந்த யோகி,'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' எனப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த யோகி நாரதரைப் பார்த்தார், 'நாரதரே..எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
'வைகுந்தத்திற்கு'
'வைகுந்தமா..மகிழ்ச்சி.இன்னும் எத்தனைக் காலத்திற்குப் பஜனை செய்து கொண்டிருந்தால் நான் இறைவனை அடையலாம்? என்பதை தெரிந்து கொண்டு வரமுடியுமா?'
கட்டாயம் தெரிந்து கொண்டு வருகிறேன்'
ஆண்டுகள் பல கடந்தன.நாரதர் பூலோகத்திற்கு வந்தார்.
புற்று வளர்ந்து தன்னை மூடிக்கொண்டிருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தியானத்திலிருந்த யோகியைப் பார்த்தார்.
'நாரதரே! கைலாயத்திற்குச் சென்றீர்களா?சிவபெருமானைப் பார்த்தீர்களா?நான் சொன்னதை அவரிடம் சொன்னீர்களா? அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்' என்றார்.
நான் சிவபெருமானைப் பார்த்தேன்..தாங்கள் சொன்னதைச் சொன்னேன்.அதற்கு அவர் நீங்கள் இன்னும் நான்கு பிறவிகள் எடுத்துத் தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.அதற்கு பின்னரே நீங்கள் கைலாயத்திற்கு வரமுடியுமாம்' என்று நாரதர் சொன்னதும்..வாலிப யோகி 'ஓ' என அலறினார்.புலம்பினார்.கண்ணீர் வடித்தார்.
நாரதர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' யோகியிடம் சென்றார்.அந்த யோகி நாரதர் வந்ததையும் கவனிக்க வில்லை.தற்செயலாக அவரைப் பார்த்ததும்'நாரதரே! வைகுந்தம் சென்றீர்களா? சேதி ஏதேனும் உண்டா" என்றார்,
'உண்டே..அதோ தெரிகிறதே..அந்த மரத்தைப் பாருங்கள்'
'பார்த்தேன்'
'அந்த மரத்தில் உள்ள இலைகளையெல்லாம் எண்ணி விட முடியுமா?"  
'கட்டாயம் எண்ணிவிடமுடியும்.அவற்றை எண்ணுவதற்கு வேண்டிய அளவிற்கு பொறுமை என்னிடம் இருக்கிறது.இப்போதே அம்மரங்களின் இலைகளை எண்ணிச் சொல்லட்டுமா/"
'இப்போதே எண்ண வேண்டும் என்பதில்லை.தங்களுக்கு நேரம் இருக்கும் போது இலைகளை எண்ணினால் போதும்,'
'இது இருக்கட்டும்..என்னுடைய கோரிக்கைக்கு இராம பிரான் அளித்த பதில் என்ன"
'அந்த மரத்தில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகள் எடுத்த பிறகு தான் தாங்கள் வைகுண்டத்திற்கு வரமுடியும் என்று இராம பிரான் கூறிவிட்டார்'
'ஓ..இவ்வளவுதானா..ஒரு மரத்தில் இருக்கும் இலைகள் அளவுதானே பிறவி எடுக்க வேண்டும்.இறைவனுக்கு நன்றி.இந்த மரத்தில் மாட்டுமில்ல..இத்தோப்பில் உள்ள மரங்கள் அனைத்திலும் இருக்கும் இலைகளின் அளவுக்கு பிறவி எடுக்கவும் தயார்;'என்று கூறிவிட்டு..'ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா' என பஜனையில் ஈடுபட்டுவிட்டார் யோகி.
இச் சமயம் வைகுண்டத்திலிருந்து ஒரு ரதம் வந்தது.அதிலிருந்த சாரதி அந்த யோகியைப் பார்த்து,'இந்த ரதத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.இராம பிரான் உங்களை உடனே வைகுண்டத்திற்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டுள்ளார் என்றார்.
'நான் இப்போதே வைகுண்டம் போக வேண்டுமா/"
ஆமாம்
'நான் வைகுண்டம் செல்ல பல பிறவி எடுக்க வேண்டும் என நாரதர் இப்போதானே சொன்னார்'
'எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுத்து இறைவனை அடைய நீ தயாராய் இருக்கிறாய்.அதில் பொறுமையும்,ஈடுபாடும்,நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது.அதனால் நீ இனி இங்கு இருக்க வேண்டியதில்லை.இப்பவே நீ வைகுண்டம் செல்லலாம்' என்றார் நாரதர்.
'அந்த வாலிப யோகியின் நிலை என்ன?' எனப் பக்தியுடன் கேட்டார் வைகுண்டம்செல்லும் யோகி
'அவர் நான்கு பிறவிக்குக் கூடத் தயாராக இல்லை.அதனால் அவர் இன்னும் கடுமையாகத் தியானம் செய்த பிறகுதான் தாம் விரும்பும் இடத்தை அடைய முடியும்'என்றார் நாரதர்.
இந்தக் கதை போதிக்கும் உண்மை...
பொறுமையும்,மன உறுதியும் இல்லாமல் சாதனையை எதிர்பார்க்கக் கூடாது.அமைதியில்லாத மனத்தினால் எந்தத் தகுதியையும் அடைய முடியாது.
எனவே எவ்வளவு காலம் தியானத்தில் ஈடுபடுகிறோம் என்பது முக்கியமல்ல.எவ்வளவு பொறுமையும் ஈடுபாடும் நம்பிக்கையும் அதில் அமைந்திருக்கின்றன என்பதே முக்கியமாகும்.
தியானத்தைப் பற்றி விளக்கும் போது பீஷ்மர் தருமருக்கு இவற்றை உணர்த்தினார்.

(சாந்தி பருவம் முற்றிற்று)

No comments:

Post a Comment