Tuesday, September 6, 2011

169-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-4



பார்வதி- சிலர் எவ்வளவுதான் முயற்சி உடையவர்களாக இருந்த போதிலும் கல்வி அறிவு பெறாதவராகக் காணப்படுகின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்- அவர்கள், முற் பிறவியில் கல்வியினால் கர்வம் அடைந்திருப்பர்.தங்கள் கல்விப் பெருமையால் பிறரை அலட்சியம் செய்திருப்பர்.இகழ்ந்திருப்பர்.அத்தகையோர் இப்பிறவியில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவி வாய்த்தும் கல்வி அறிவு இன்றிக் கானப்படுகின்றனர்.
பார்வதி-சிலர் எல்லா நற்குணங்களும் உள்ளவராய் உள்ளனர்.நல்ல மனைவி மக்களுடன் வாழ்கின்றனர்.அவர்கள் வேலைக்காரரும் அவர்கள் சொற்படி நடக்கின்றனர்.செல்வத்தில் திளைக்கின்றனர்.நோயின்றி மகிழ்ச்சியுடன் விளங்குகின்றனர்.ஒரு நாளும் அவர்கலுக்குத் துன்பம் இல்லையே..ஏன்?
ஈஸ்வரன்-முற்பிறவியில் யார் கல்வி அறிவில் சிறந்தவர்களாக..ஒழுக்க சீலராக, தானம் செய்பவர்களாகத் திகழ்கின்றனரோ..யார் கொல்லாமையும் வாய்மையையும் போற்றினரோ, யார் நல்ல நோன்புகளை மேற்கொண்டு பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதினரோ அவர்கள் இப்பிறவியில் எல்லா நன்மைகளும் பெற்று ஒரு குறையும் இன்றி வாழ்கின்றனர்.
பார்வதி-சிலர் பசியினால் வாடி, பிணியால் துன்புற்று, வறுமைப் பிடியில் சிக்கி, யாருக்கும் ஒன்றும் தராமல் இருக்கின்றனரே..மனைவியால் துன்பப்படுகின்றனரே..எப்போதும் ஏதேனும் ஒரு இடையூற்றை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனரே..அது ஏன்?
ஈஸ்வரன்-அவர்கள் முற்பிறவியில் இரக்கமற்றவராக இருந்திருப்பர்.கோபமும், பேராசையும் கொண்டவராக இருந்திருப்பர்.ஒழுக்கம் இல்லாதவராக, பிறரைத் துன்புறுத்துபவராக, உயிர்கலீடத்தில் அன்பு அற்றவராக இருந்திருப்பர்.ஆதலால் இப்பிறவியில் நீ கூறியவாறு உள்ளனர்.
பார்வதி-சிலர் பிறவியிலேயே குருடராய் இருக்கின்றனர்.சிலருக்குப் பிறந்த சில ஆண்டுகலுக்குப் பின் கண் கெட்டுப் போகிறது..ஏன்?
ஈஸ்வரன்-யார் முற்பிறவியில் காமாந்தகாரராகத் திரிந்தனரோ, யார் பிறர் மனைவியை நாடிச் சென்றனரோ அவர்கள் இப்பிறவியில் கண் பார்வைக் கெட்டுத் துன்புறுகின்றனர்
பார்வதி-பார்வதி- சிலர் இளம் வயதிலேயே பல்லை இழந்து,தொண்டையில் நோயுற்றுக் காது கேளாவராக ஆகி, முக விகரமாகத் தோன்றுகின்றனரே! ஏன்?
ஈஸ்வரன்-பொய் பேசுதலையே முற்பிறவியில் தொழிலாகக் கொண்டவரும்,சினத்துடன் விளங்கியவரும், பிறர் செவி கைப்பக் கூறியவரும், பிறர் கேட்டினைக் காதால் கேட்பவரும் ஆகிய இவர்கள் இப்பிறவியில் தொண்டை,காது,பல் முதலியவற்றில் நோய் உண்டாகத் துன்புறுகின்றனர்
பார்வதி-கர்மங்களைத் தோற்றுவைப்பது ஆத்மாவா? இல்லையெனில் வேறு யார்?
ஈஸ்வரன்-ஆத்மா கர்மங்களை உண்டாக்குவதில்லை.ஆனால் கர்மங்களினால் பாதிக்கப் படுகிறது.உடலானது கபம்,வாதம்,பித்தம் ஆகிய மூன்று தாதுக்களால் நிரம்பி இருப்பது போல, சத்துவ குணம்,ரஜோ குணம்,தாமோ குணம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கிறது.சத்துவ குணம் உடையவர் எப்போதும் புகழுடன் திகழ்வர்.ரஜோ குணம் துக்கத்திற்குக் காரணம்.தமோ குணம் அறிவின்மைக்கு இடமாகும்.
வாய்மை,தூய்மை,நன்மையில் நாட்டம்,பொறுமை,அடக்கமுடைமை,இன்சொல் கூறல் முதலான நற்பண்புகள் சத்துவ குணத்தால் உண்டாகும்.
செயல்திறன்,சுறு சுறுப்பு,பொருட்பற்று ஆகியவை ரஜோ குணத்தால் ஏற்படும்.பொய்,சோம்பல்,பிடிவாதம்,துக்கம்,தூக்கம்,வீண்பகை,பிறருக்குத் துன்பம் தருதல் முதலிய பாவச்செயல்கள் தமோ குணத்தால் விளையும்.
ஆதலால் நன்மை, தீமை ஆகிய கருமங்கள் குணங்களால் அமைபவை.எனவே ஆத்மா ஆசையற்றது.விகாரமற்றது.தூய்மையானது.
சத்துவகுணம் உள்ளவர் தேவர் உலகில் சென்று பிறப்பர் .
ரஜோ குணம் உள்ளவர் மனிதப் பிறவி எடுப்பர்
தமோ குணம் உள்ளவர் விலங்கு கதி,நரக கதி என்னும் கதிகளில் பிறவி எடுத்து துன்புறுவர்.

(பார்வதியின் சந்தேகங்களும்..ஈசனின் பதில்களும் தொடரும்)

No comments:

Post a Comment