Monday, September 12, 2011

170-கல்வி..அறம்..பொருள்..இன்பம்..-5




பார்வதி- இந்த உடல் கொல்லப்பட்டால் ஆத்மா இதனை விட்டுப் போய் விடுகிறதே..அது எதனால்..
ஈஸ்வரன்-மிக நுட்பமான அறிவு படைத்தவரும் இதனை விளக்கமுடியாது துன்புறுவர்.பிறவி  எடுத்து உயிர்களின் கர்மம் முடியும் போது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு உடலுக்கு இறுதி ஏற்படும்.அதனால் உடல் அழியும் போது ஆத்மா அதன் கருமத்திற்கு ஏற்பப் பயனை அனுபவித்து அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறது.உடல் அழிவுக்கான நோய்களினால் ஆத்மா துன்புறுவதில்லை.உடலை வெட்டினாலும், குத்தினாலும்,கொன்றாலும், தர தர என இழுத்துச் சென்றாலும் ஆத்மாவிடத்தில் ஒரு மாறுதலும் ஏற்படாது.அனுபவிப்பது உடல்தான்.கர்மத்தின் பயன் உள்ளவரை உடலில் ஆத்மா தங்கியிருக்கும்.பிரிய வேண்டிய காலம் வரும் போது பிரிந்து விடும்.இதையே உலகோர் மரணம் என்கின்றனர்.
பார்வதி-பிறருக்கு நன்மை செய்பவன் நன்மையை அடைந்து இன்புறுகிரான் என்பது சரி.ஆனால் பிறருக்குத் துன்பம் செய்பவன் எப்படி இன்பத்தை அடைகிறான்? இருள் என்பது என்ன?
ஈஸ்வரன்-பலரது நன்மைக்காக , சமுதாயத்தின் நன்மைக்காக ஒருவனுக்குத் துன்பம் செய்பவன் இன்பம் அடைவான்.அரசன் சமுதாய நன்மைக்காகச் சிலருக்கு தண்டனை விதித்துப் புண்ணியம் அடைகிறான்.வழி தவறி நடக்கும் சீடனுக்குப் பிராயச் சித்தம் முதலான தண்டனைகளால் குரு நற்பயனை அடைகிறார்.மருத்துவர் நோயாளிக்குத் துன்பத்தை அளித்துச் சிகிச்சை செய்து புண்ணியம் பெறுகின்றார்.இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படுபவர் புண்ணிய பலனால் தேவர் உலகம் அடைகின்றனர்.தீயவன் ஒருவன் கொல்லப்படுவதன் மூலம் ஒரு சமுதாயமே நன்மை பெறுமானால் அவனைக் கொல்வது கொலையாகக் கருதப்பட மாட்டாது.இது பாவம் அன்று.இதனால் பாவப் பயன் ஏற்படாது.புண்ணிய பலனே ஏற்படும்.
இருளைப் பறிச் சொல்வதானால்..இருள் இருவகைப்படும்.இரவில் தோன்றுவது ஒன்று..மனித மனதில் தோன்றுவது மற்றொன்று.
இருளில் தோன்றும் இருள் ஒளிகளால் மறையும்..விலகும்..ஆனால் உள்ளத்தில் தோன்றும் இருளை உலகில் உள்ள சூரியன், சந்திரன் ஆகிய ஒளிப் பிழம்புகளால் கூடத் தொலைக்க முடியாது.உல உயிர்களைப் படைத்த பிரமதேவன் மக்களின் மன இருளைப் போக்கத் தவம் செய்தார்.அப்படிச் செய்த தவத்தால் வேதமும், உபநிஷதமும் தோன்றின.பிரமதேவர் அதனால் மகிழ்ச்சி அடைந்தார்.மன இருள் அவற்றால் அழியலாயிற்று.நினைக்கத்தக்கது..சொல்லத்தக்கது..செய்யத்தக்கது என்பவற்றை எல்லாம் விளக்கும் ஆகமங்கள் இல்லையென்றால் மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருளைப் போக்கத் தெரியாமல் மக்கள் அவதியுற்றிருப்பர்.எனவே மன இருள் போக்க உதவும் ஒழுக்க நெறிகளைக் கூறும் ஆகமங்களை மக்கள் போற்றுதல் வேண்டும்.
அது மட்டுமல்லாது, இவ்வுலைகைத் தாங்குவது ஆகமம் என உணட வேண்டும்.இதைத்தவிர உயிர்களுக்கு நன்மை தருவது மூன்று உலகிலும் இல்லை.ஒருவருக்குப் பிறவியிலேயே அமையும் ஞானம் தலை சிறந்தது.கற்பிக்கப்படும் கல்வி இரண்டாவதாகக் கருதப் படுகிறது.இந்த இரண்டும் நிரைந்திருந்தால் தான் நன்மை உண்டாகும்.ஆகமப் பயிற்சி ஒருவனை முழு மனிதனாக ஆக்குகிறது.இந்த ஞானம் உள்ளவன் பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்கிறான்.காமம்,கர்வம்,பயம்,பேராசை ஆகியவை அனைத்தும் காற்றால் மேகம் விலகுவதைப் போல விலகும்.ஆகவே ஆகமக் கல்வி மிகவும் அவசியம் ஆகும்.
பார்வதி-பாவம், புண்ணியம் ஆகிய செயல்களைப் பற்ரி விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஈஸ்வரன்-கர்மங்கள் இரண்டுவகைப் படும்.அவை புண்ணிய கர்மம்,பாவ கர்மம்.பாவகர்மம் மூன்று வகையில் உண்டாகிறது.முதலில் மனதிலும், பிறகு சொல்லிலும்,பின் செயலிலும் தோன்றுகிறது.பொறாமை,ஆசை,கெட்ட எண்ணம் ஆகியவை மனத்தே தோன்றும் பாவ கர்மங்களாகும்.பொய்,புறங்கூறல்,கடும் சொல்,பிறர் மனம் புண்படப் பேசுதல்,பிறரைப் பழித்தல் ஆகிய இவை வாக்கினால் ஏற்படும் பாவங்கள்.கூடானட்பு,பிறர் மனை நாடுதல்,பிற உயிரைத் துன்புறுத்துவது,உண்ணத் தகாதவற்றை உண்ணுவது,செய்யத் தகாததைச் செய்வது,,பிறர் செய்யும் கெட்டசெயலுக்குத் துணையாக இருப்பது,புண்ணியத்திற்கு மாறாக செயல்களில் ஈடுபடுவது ஆகிய இச்செயல்கள் பாவங்கள் எனக் கருதப்படுபவை.மனதால் வரும் பாவத்தை விடச் சொல்லால் நேரும் பாவம் அதிகம் ஆகும்.அதைவிட அதிகம் செயலால் வரும் பாவம்.இத்தகைய பாவங்களால் ஒருவன் நரகத் துன்பத்தை அடைவான்.
இனிப் புண்ணியத்தின் பெருமையைக் கேள்..மனம்,சொல்.செயல் இவற்றால் ஏற்படக்கூடிய பாவச் செயல்களை விடுவதாலேயே புண்ணியம் உண்டாகிறது.பாவச் செயல்களை முற்றிலும் விலக்கும் ஒருவன் முனிவன் ஆகிறான்.பாவத்தை விலக்கிய ஆத்மா மேன்மை அடைகிறது.மனதில் மாசற்றுப் பாவத்திற்குப் பயந்த போதே புண்ணியம் உதயமாகிறது.சான்றோர் தொடர்பும்,ஆகமப் பயிற்சியும் ,மன உறுதியும்,மன நிறைவும் புண்ணியம் பெற பெரிதும் உதவுகின்றன.ஒவ்வொருவரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தானமும் இல்லை.தவமும் இல்லை.தருமமும் இல்லை.சத்தியம் என்னும் கப்பலைக் கொண்டுதான் சம்சாரம் என்னும் துக்கக் கடலைக் கடக்க முடியும்.

(பார்வதியின் சந்தேகங்களும் ஈசனின் பதிலும் தொடரும்)

No comments:

Post a Comment