Monday, October 3, 2011

177-ஊழ்வினை-முயற்சி எது சிறந்தது?




"ஊழ்வினை,முயற்சி..இவற்றில் எது சிறந்தது?" என்று தருமர் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்..
'தருமரே! இதற்கு பழைய கதை ஒன்று உண்டு..
ஒரு சமயம் வசிஷ்டர் பிரமதேவரை நோக்கி, "ஊழ்வினை,மனித முயற்சி இவற்றில் எது சிறந்தது" என கேட்டார்.அதற்கு பிரம தேவர் காரண காரியங்களுடன் விளக்கினார்..
'வித்திலிருந்து முளை முளைக்கிறது.முளையிலிருந்து இலை..இலையிலிருந்து காம்பு..காம்பிலிருந்து கிளை..கிளையிலிருந்து மலர்..மலரிலிருந்து கனி..கனியிலிருந்து வித்து..வித்திலிருந்து மறுபடியும் உற்பத்தி ஏற்படுகிறது.வித்து இன்றி ஏதும் தோன்றுவதில்லை.வித்தின்றி கனி இல்லை..வித்திலிருந்து வித்து உண்டாகிறது.வித்தின்றி பயனில்லை.விதைப்பவன் எத்தகைய விதையை விதைக்கின்றானோ அவ்விதமான பயனை அடைகின்றான்.அது போல நல்வினை,தீவினைக்கு ஏற்ப பயனை மனிதன் பெறுகிறான்.நிலமில்லாது விதைக்கும் விதை பயன் தராது, அது போல முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன் தருவதில்லை.அதாவது செய்வினை பூமியாகவும் ஊழ்வினை விதையாகவும் கருதப்படுகின்றன.நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் ஏற்படுகின்றன.
ஒரு செயலை முயற்சியுடன் செய்பவன் அதிர்ஷ்டத்தால் நோக்கப்பட்டு நன்மை அடைகிறான்.முயற்சி செய்யாதவன் மீது அதிர்ஷ்டம் தன் பார்வையை செலுத்துவதில்லை.நட்சத்திரங்களும்,சூரிய சந்திரர்களும், தேவ தேவியரும்,இயக்க இயக்கியவரும் மனிதராய் இருந்து முயற்சியினால் தேவத் தன்மை அடைந்தனர்.செல்வம் முயற்சி இல்லாதவரிடம் எப்போதும் சேர்வதில்லை.தத்தம் செயலுக்குப் பயன் இல்லையாயின், மக்கள் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவர்.அப்போது எல்லாம் வீணாகும்.ஆனால் முயல்பவனுக்குத் தெய்வம் கைகொடுத்து உதவுகிறது.முயற்சி இல்லையானால் தெய்வம் உதவி செய்யாது.எனவே தானே தனக்கு நண்பன்.தானே தனக்குப் பகைவன்.தனது செயலுக்குத் தானே சாட்சி.செய்யும் செயல் ஒரு வேளை கெடுமாயினும், பெரு முயற்சியால் இன்னொரு சமயம் கூடி வரும்.
புண்ணிய பலத்தினால்தான் தேவலோக வாழ்வு கிடைக்கிறது.நற்செயல் காரணமாகப் பெறும் புண்ணியம் இல்லாதவனைத் தெய்வம் கண்டு கொள்வதில்லை.
தவத்தில் சிறந்த முனிவர்கள் சாபம் கொடுப்பது தெய்வத்தின் அருளால் அல்ல.அரிதின் முயன்ற தவத்தின் வலிமையால்.ஆசையும்,அறிவின்மையும் உள்ள மனிதனுக்குத் திரண்ட செல்வம் கிடைத்தும் காக்கும் முயற்சி இன்மையால் அது அவனை விட்டு விலகி விடுகிறது.தெய்வம் அவனைக் காக்க வருவதில்லை.சிரு நெருப்புப் பொறி காற்றினால் தூண்டப்பட்டுப் பெரிதாக ஆவது போலத் தெய்வம் முயற்சியுடையவனைச் சேர, செல்வம் மிகுதியாகப் பெருகும்.எண்ணெய் வற்ருவதால் தீப ஒளி மங்கிப் போவது போல, முயற்சி குறைவதால் தெய்வம் ஓய்வடைகிறது.மிக்க செல்வத்தையும்,வேண்டிய வசதிகளையும் பெற்றும் முயற்சி இல்லாத மனிதன் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக விடாமுயற்சியுள்ளவன் அவற்றை நன்கு அனுபவிக்கிறான்' என்று வசிஷ்டருக்கு பிரம தேவர் உரைத்தார்' என தருமருக்கு பீஷ்மர் கூறினார்.

No comments:

Post a Comment