Wednesday, September 21, 2011

174-குரு பத்தினியைக் காத்த விபுலர் கதை




பீ ஷ்மர் தருமருக்கு உரைத்தது..
முன்னொரு காலத்தில் தேவசர்மா என்றொரு முனிவர் இருந்தார்.அவருடைய பத்தினியின் பெயர் 'ருசி'.அவளுடைய அழகில் மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலக தேவர்கள் அனைவரும் மயங்கினர்.தேவேந்திரன் எப்படியும் அவளை அடைய எண்ணினான்.தவ வலிமை மிக்க தேவ சர்மா இந்திரனை தன் மனைவியிடம் நெருங்க முடியாது பாதுகாத்தார்.
ஒரு சமயம், அவர் யாகம் செல்ல வேறிடம் செல்ல நேர்ந்தது.அதுவரை தன் பத்தினியை பாதுகாப்பது எப்படி என சிந்தித்தார்.தவ வலிமை மிக்க தன் சீடர் விபுலரை அழைத்தார்.'நீர்தான் என் துணைவியைக் காக்க வேண்டும்.இந்திரனுக்கு இவளிடம் ஆசை உள்ளது.இவளை அடைய துடித்துக் கொண்டிருக்கிறான்.அவன் எத்தகைய மாய உருவங்களையும் எடுத்து வருவான்.சாதுவாகவும் இருப்பான்.சண்டாளனாகவும் இருப்பான்.புலி போல சீறுவான்.பூனையாயும் இருப்பான்..பறவையாகவும் திரிவான்..அவன் எவ்வடிவத்தில் வருவான் என யாருக்கும் தெரியாது.உன் சாமர்த்தியத்தால் எப்படியேனும் இவளைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட விபுலர்,'இவளை எப்படிக் காப்பது?' எனக் கவலை யுற்றார்.யாரையும் அருகே நெருங்கவிடாது காத்தார்.ஆயினும் அச்சம் அவருக்கு இருந்தது.இந்திரன் காற்று வடிவத்தில் கூடக் கதவு இடுக்கில் நுழைந்து விடுவான்.மாயையில் வல்ல அவனைத் தடுக்க ஒரு வழிதான் உண்டு.என் தவத்தின் வலிமையால் இவளைக் காக்க முடியும்.தனது கண் பார்வையால் அவளது கண் பார்வை மூலம் சக்தியை அவள் உடல் எங்கும் செலுத்தி அவளை அசைக்க முடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி கொண்டார்.
அவ்வாறே தன் பார்வையுடன் அவள் பார்வையையும் கலக்குமாறு செய்து தன் சக்தியை அவள் உடலுக்குள் செலுத்தி, இந்திரன் அவளை அடைய முடியாதவாறு செய்து விட்டார்.
இப்படி விபுலர் தன் குரு வரும் வரை அவருடைய பத்தினியைக் காத்தார்.
இவ்வாறு சீடர் தம் குரு பத்தினியைக் காத்து வரும் நேரம் ஒருநாள் இந்திரன் பேரழகுடன் ஆஸ்ரமத்திற்குள் வந்தான்.'ருசி' யின் அழகுக் கண்டு பரவசமுற்று,இனிய சொற்களைக் கூறினான்.தன்னிடம் வருமாறு வலியுறுத்தினான்.விபுலரின் தவ வலிமையால் குரு பத்தினி கட்டுண்டுக் கிடந்தாள்.இருந்த இடம் விட்டு நகரவும் முடியவில்லை,பேசவும் நா எழவில்லை.விபுலரின் இச் செயல் கண்டும்.அவரது தவ வலிமை கண்டும் இந்திரன் அச்சம் அடைந்தான்."முன்னர் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த அவமானத்தை மறந்துவிட்டாயா?என் குரு வந்து சபிப்பதற்கு முன் போய்விடு'என்று பேரொலி இந்திரன் காதில் விழ, அது விபுலரின் குரல் என இந்திரன் அறிந்தான்.அங்கிருந்து மறைந்தான்.
தேவசர்மா தன் யாகத்தை முடித்துக் கொண்டு ஆசிரமம் திரும்பினார்.விபுலர் அவரை வணங்கி தன்னால் காக்கப்பட்ட குரு பத்தினியை அவரிடம் ஒப்படைத்து..இந்திரன் வந்து போனதைத் தெரிவித்தார்.ஆனால் அவர் எப்படி அவனிடமிருந்து அவளைக் காத்தார் என்னும் விவரத்தைக் கூறவில்லை.பத்தினி பாதுகாப்பாய் இருந்த செய்தி அறிந்த தேவசர்மா மகிழ்ந்தார்.விபுலரைப் பாராட்டி, வேண்டும் வரத்தைக் கேட்குமாறு கூறினார்.விபுலரும், தருமத்தினின்றும் தவறாமல் இருக்கும் வரத்தைக் கேட்டுப் பெற்றார்.
குருவிடம் வரம் பெற்ற விபுலர் தவம் மேற்கொள்ள காடு சென்றார்.கடும் தவஞ் செய்தார்.தவம் ஈடேறியது.மகிழ்ச்சியுடன் எங்கும் சென்று வரலானார்.
ஒரு நாள் ஒரு தெய்வ நங்கை தேவசர்மாவின் ஆசிரமத்திற்கு மேலே ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தாள்.அப்போது அவள் சூடியிருந்த மண மலர் ஒன்று ஆசிரமத்தின் அருகில் விழுந்தது.அப்படியொரு மலர் தன் சகோதரிக்கு வேண்டும் எனக் குருபத்தினி தேவசர்மாவிடம் தெரிவித்தாள்.அத்தகைய மலரைத் தேடிக் கொண்டு வரும்படி தன் சீடரான விபுலருக்குக் கட்டளையிட்டார்.
குருவின் கட்டளையை ஏற்று விபுலர் காட்டிற்குச் சென்று கஷ்டப்பட்டு அரிதான மணம் மிக்க அம்மலரைப் பெற்றார்.அதை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்புகையில்..வழியில் இருவர் சக்கரம் போல தங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்படி விளையாடுகையில் இருவரும் ஒரு சபதம் எடுத்துக் கொண்டனர்.விளையாட்டில் தோற்பவருக்குப் பொய் சொன்ன விபுலர் பெற இருக்கும் நரக கதிதான் கிடைக்கும் என்று சபதம் ஏற்றனர்.இதைக் கேட்டு விபுலர் நடுங்கினார்..மனம் சோர்ந்தார்.
பின்னர்..அதைவிட பேரதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்.ஆறு பேர் சூதாடிக் கொண்டிருந்தனர்.'நம்மில் பேராசை கொண்டு பொய் சொல்பவர் அந்த விபுலர் போக இருக்கும் நரகத்தையே சென்றடைவர்' என்று கூறிக் கொண்டு சூதாடினர்.விபுலர், இது கேட்டு தீயால் சுடுவது போல துயரம் அடைந்தார்..
'நான் செய்த தவறு என்ன?' என்று பலவாறு ஆராய்ந்து பார்த்தார்.ஒரு வேளை 'குரு பத்தினியைக் காக்கும் முயற்சியில் அவள் கண்ணோடு தன் கண்ணை இணைத்துப் பார்வையால் சக்தியை அவள் உடலில் செலுத்தி அவளைக் காப்பாற்றியதை குருவிடம் சொல்லாமல் மறைத்தது காரணமாக இருக்குமோ?" என எண்ணினார்.இத்தகைய மனக் குழப்பத்துடன் ஆசிரமம் சென்று குருவிடம் மலரைக் கொடுத்து வணங்கினார்.
பின்னர்,தான் கண்ட காட்சிகளை குருவிடம் கூறினார்.மனப்புழுக்கத்தைக் கூறினார்.'அந்த இருவரும் யாவர்?'மற்ற அறுவரும் யாவர்?நான் என்ன பிழை செய்தேன்? ஏன் அவர்கள் அப்படி சபித்தார்கள்?தயவு செய்து விளக்க வேண்டும்..'என்ரார்.
'சீடனே! உன் குழப்பத்தை நான் அறிவேன்.நீ செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்.என் பத்தினியை நீ எவ்வாறு காப்பாற்றினாய் என்ற உண்மையை மறைத்துவிட்டாய்.உண்மையை மறைப்பது கூடப் பொய்தான் என்பதை உணர்வாயாக.ஆயினும் நீ செய்த ரகசியச் செயலைச் சிலர் அறிந்துக் கொண்டனர்.ஒன்றை ஒருவர் அறிந்தால் அது ரகசியம்.இருவர் அறிந்தால் அது பரசியம்.
நீ குறிப்பிட்ட இருவரும் இரவும், பகலும் ஆவர்.அறுவர், பருவ காலங்கள்.பகல்,இரவு,பருவ காலங்கள் இவற்றிற்கு எந்த ரகசியமும் தெரியாமல் இருக்காது.'நாம் செய்தது சரியானதா?' என்னும் அச்சத்தில் தான்..'நீ கண்ணோடு கண்ணினை நோக்கி என் பத்தினியைக் காத்த தன்மையை என்னிடம் கூறாமல் மறைத்து விட்டாய்.நன்மை செய்வதில் கூட ஒரு முறை உண்டு.நீ தவறான எண்ணத்தோடு அப்படிச் செய்யவில்லை என்பதை நான் நம்புகிறேன்.ஆனால் உலகம் அதை அவ்வாறு கருதவில்லை' என்பதை உணர்வாயாக.
ரகசியத்தை யாரும் மறைத்துவிட முடியாது.பிறருக்கு நன்மை செய்யும்போது கூட அது பிறரால் பாராட்டத்தக்கதாக இருக்க வேண்டும்.ஐயத்திற்கு இடம் அளிக்கக் கூடாது என்பவை இக்கதையால் உணர்த்தப்படும் நீதிகளாகும்.

No comments:

Post a Comment