Friday, October 30, 2009

74-பதினேழாம் நாள் போர்

போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 'இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி' என்றான் கர்ணன்.உடன் சல்லியன் 'உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு'என்றான் சல்லியன்.

'தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது' என்றான் கர்ணன்.

'வீண் தற்பெருமை வேண்டாம்..உன் வீரம் நான் அறிவேன்.சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன்.சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன்.அப்போது, கர்ணா..நீ எங்கே போனாய்?விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ.உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும்,துரோணரையும் வென்றவன்..கண்ணன் தேரோட்டும் போது..சற்று எண்ணிப்பார்.உன் ஆணவப் பேச்சை நிறுத்தி..ஆற்றலை செயலில் காட்டு ' என்றான் சல்லியன்.

துரியோதனன் இருவரையும் அமைதிப் படுத்தினான்.போர்ப் பறை முழங்கியது.போர் ஆரம்பித்தது.துச்சாதனன் பீமனைத் தாக்கினான்.போரின் ஆரம்பத்தில் பீமன் தன் முழு ஆற்றலைக் காட்டவில்லை.பின் தன் சபதம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டது உணர்ந்து..தன் ஆற்றல் வெளிப்படும் வகையில் போரிட்டான்.துச்சாதனனின் வலிமை மிக்க தோள்களைப் பிடித்து அழுத்தி..'இந்த கைதானே திரௌபதியின் கூந்தலைத் தொட்டு இழுத்தது' என அவன் வலக்கையைப் பிய்த்து வீசினான்..'இந்தக் கைதானே..பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுத்தது' என இடக்கையை பிய்த்து எறிந்தான்.அவன் சினம் அத்துடன் அடங்காமல் துச்சாதனன் மார்பைப் பிளந்தான்..துச்சாதனன் மாண்டு தரையில் கிடந்தான்.பீமனின் சபதத்தில் பாதி நிறைவுப் பெற்றது.(மறு பாதி துரியனைக் கொல்வதாகும்)

தருமர் கர்ணனை எதிர்த்தார்.வச்சிரம் போன்ற கருவியைக் கர்ணன் மீது எறிந்தார்.கர்ணன் அதன் வேகத்தை தடுக்க முடியாது மயங்கினான்.பின் எழுந்த கர்ணன் தருமரின் தேரை முறித்தான்.தருமர் உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார்.

தருமரைக் காண கவலையுடன் அர்ச்சுனன் கண்ணனுடன் பாசறைக்கு வர..அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு வந்ததாக மகிழ்ந்தார் தருமர்.அது இல்லை என்றதும் கோபம் மேலிட'அவனைக் கொல்லாமல் ஏன் இங்கு வந்தாய்..பயந்து ஓடி வந்து விட்டாயா?உன்னைப்போல ஒரு கோழைக்கு வில் வேண்டுமா?அந்தக் காண்டீபத்தைத் தூக்கி எறி' என்றார்.

தருமரின் எதிர்பாரா இப்பேச்சைக் கேட்ட அர்ச்சுனன்..உணர்ச்சி வசப்பட்டு தருமரை நோக்கி'நீயா வீரத்தைப் பற்றிப் பேசுவது?நீ எந்த போர்க்களத்தில் வென்றிருக்கிறாய்..சூதாடத்தானே உனக்குத் தெரியும்? அதில் கூட நீ வென்றதில்லை.இவ்வளவு துன்பங்களுக்கு நீயே காரணம்' என்றவாறே அவரை கொல்ல வாளை உறுவினான்.

உடன் கண்ணன் அவன் சினத்தைப் போக்க இன்சொல் கூறினார்.தன் தவறுணர்ந்த அர்ச்சுனன்..மீண்டும் வாளை உறுவினான்..ஆனால்..இம்முறை தனைத்தானே மாய்த்துக் கொள்ள.தருமரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.தருமரும்..தன் இயல்புக்கு மாறாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.அர்ச்சுனன்'அண்ணா, கர்ணனைக் கொன்று திரும்புவேன்'எனக் கிளம்பினான்.

கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர்.அம்புகள் பறந்தன.கர்ணனின் விஜயம் என்ற வில்லும்..காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின.அர்ச்சுனனுக்கு தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான்.(அதை கடோத்கஜனைக் கொல்ல கர்ணன் உபயோகித்து விட்டான்)பின் நாகாஸ்திரத்தை எடுத்து எய்தான்.அது மின்னல் வேகத்தில் பார்த்தனை நெருங்கியது.தேவர்கள் திகைக்க, மக்கள் கத்த..அந்த நேரம் பார்த்துப் பார்த்தஸாரதி தேர்க்குதிரைகளை நிறுத்தித் தேரைத் தம் காலால் மிதித்து ஓர் அழுத்து அழுத்தினார்.தேர் சில அங்குலங்கள் பூமிக்குள் இறங்க..அந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் முடியைத் தட்டிச் சென்றது.

யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது..ஆனால் அச்சமயம் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.தனக்கு பாதுகாப்பாக இருந்த கவச, குண்டலங்களைக் கர்ணன் முன்னமேயே இந்திரனுக்குத் தானமாக வழங்கி விட்டான்.அந்த இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதமும் இல்லை..நிராயுதபாணி ஆன அவன்,,'தருமத்தின் பெயரில் கேட்கிறேன்..தேரை சேற்றிலிருந்து எடுக்க சற்று அவகாசம் கொடு' எனக் கெஞ்சினான்.

அப்போது கண்ணன்..'கர்ணா..நீயா தர்மத்தைப் பேசுகிறாய்.துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய்.அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று..மன்னர் நிறைந்த அவையில்..பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்..பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும்..நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா..அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்' எனக் கேட்டார்.

கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலைக் குனிந்தான்.ஆயினும்..அர்ச்சுனனின் கணைகளை தடுத்து நிறுத்தினான்.இறுதியாக அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரம் ஒன்றை எடுத்து 'நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும்'என கர்ணன் மீது செலுத்தினான்.தர்மம் வென்றது.கர்ணனின் தலை தரையில் விழுந்தது.தன் மகனின் முடிவைப் பார்த்து சூரியன் மறைந்தான்.துரியோதனன் துயரம் அடைந்தான்

2 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, அருமையாக சொல்லியிருகின்றீர்கள். ஆனால் கர்ணனுக்கு கிருஷ்னர் விஸ்வ ரூப தரிசனம் தரவில்லையா. அதுகுறித்து விளக்கினால் நன்று.

பித்தனின் வாக்கு said...

இந்தக் கட்டுரைகளை தமிலிஷ்ஷில் இணைக்கவும். தமிழ்மணம் திராவிடக் கட்டுரைகளுக்கு சரியான இடம். புராணத்துக்கானது இல்லை. நன்றி.

Post a Comment