Tuesday, October 13, 2009

68-பன்னிரண்டாம் நாள் போர்

தருமரை..உயிருடன் பிடிக்க வெண்டுமெனில்..அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது.போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள்.திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன்,சத்தியவர்மன்,சத்தியகர்மன் ஆகியோரும் தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர்.அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான்.

மும்மரமாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது.பகைவர்களும் அவனுடன் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர்.திரிகர்த்தவேந்தனுக்குத் துணையாக அவனுடன் அவன் சகோதரர்களையும் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர்.அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான்.ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார்.அன்றைய போரில் துரோணரின் திறைமையும் அனைத்துப்பேரையும் கவர்ந்தது.துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான்.தனது மரணம் இவனால்தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார்.அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட்டான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான்.அவனுக்கும், துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது.துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன்.அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு ஒன்று அவன் தலையைக் கொய்தது.சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க..அவனையும் அவர் கொன்றார்.

துரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும்பயம் ஏற்பட..பீமன் அங்கு வந்தான்.அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன்.அவைகளை பந்தாடினான் பீமன்.அபிமன்யூவும்..பாண்டவர்களின் குமாரர்களும் கௌரவர் படையை எதிர்த்து போராடினர்.

அப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான்.அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது.பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது.பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி..அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான்.அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது.ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான்.பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது.சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது.யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான்..அதனைக் கொல்ல.

அர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான்.அப்போது பீமன் அந்த யானையின் மீது சிங்கம் போல பாய்ந்தான்.அப்போது அர்ச்சுனன் ஒரு அம்பை எய்த ..அது யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது.யானை வீழ்ந்து மாண்டது.பின் அர்ச்சுனன் செலுத்திய ஓர் அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன்,விகுஷன் ஆகியோரைக் கொன்றான்.சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான்.அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான்.சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான்.தருமரை..பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது.கௌரவர்கள் கலங்க..பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன்..துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான்.'தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள்.வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்.நீர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று'என்றான்.

இதனால் துரோணர் கோபம் அடைந்து'துரியோதனா..உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன்.அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது.போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயா?எப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன்.அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார்.

துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்.

No comments:

Post a Comment