Monday, October 26, 2009

72-பதினைந்தாம் நாள் போர்

(துரோணரின் முடிவு)

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை.துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான்.துரோணரும் கடுமையாகப் போரிட்டார்.போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார்.அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார்.பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்.

ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன்.ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன்.'அசுவத்தாமன்'என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான்.அது சுருண்டு விழுந்தது.அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல..உணர்ச்சி
வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.இது துரோணர் காதில் விழுந்தது..தலையில் இடி விழுந்தாற் போல ஆனார்.ஆனால் பின் மனம் தெளிந்தார்.அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார்.ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.ஆயிரக்கணக்கான குதிரைகளையும்,வீரர்களையும்,யானைகளையும் கொன்று குவித்தார்.ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது.

துரோணர்..விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர்.'சாந்த நிலை அடையுங்கள்' என வேண்டினர்.முனிவர்கள் கூற்றும்..சற்று முன்னர் பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின.உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார்.

இதற்கிடையே..ஒரு நன்மையின் பொருட்டு..பொய் சொல்லுமாறு தருமரிடம் கண்ணன் கூறினார்.தருமர் மறுத்தார்.'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த ,தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும்..மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான்.அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.

அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சொல்ல கண்ணன் வற்புறுத்திய போது..அதில் உள்ள சூழ்ச்சியை தருமர் உணர்ந்தார்.பின்னரும் அப்படிச் சொல்ல உடன்பட்டது அவரின் பண்பில் நேர்ந்த குறை என்று இன்றும் விவாதிப்பவர்கள் உண்டு.

துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

No comments:

Post a Comment