Thursday, October 22, 2009

70-பதினான்காம் நாள் போர்

அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன்..போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா..என யோசித்தான்.அது வீரர்க்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர்.அர்ச்சுனனை எண்ணி துரோணர் கலங்கினார்.அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார்.அதற்கேற்ப பத்மவியூகம்,சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார்.

எங்கே அர்ச்சுனன்? என ஆர்ப்பரித்த கௌரவர்கள்..துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர்.அப்போது கண்ணன் தேரை ஓட்ட..காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன்.அனுமக்கொடியுடன்..ஆக்ரோஷத்துடன் வந்த அர்ச்சுனனைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினான் துர்மர்ஷணன்.அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ச்சுனனை எதிர்த்தான்.பின் முடியாமல் திரும்பினான்.

அர்ச்சுனன்..துரோணரைச் சந்தித்து போரிட்டான்.ஆனாலும் அவருடனான போர் நிலைக்கவில்லை.ஏனெனில்..அர்ச்சுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன்.

ஜயத்ரதனை நோக்கி வந்த அர்ச்சுனனைக் கண்டு துரியோதனன் மிகவும் கோபம் கொண்டு..துரோணரைக் கடிந்துக் கொண்டான். 'அவனை ஏன் உங்களைக் கடந்து ஜயத்ரதனை நோக்கி செல்ல அனுமதித்தீர்.உங்கள் அன்பும்..பரிவும் எப்போதும் பாண்டவரிடம்தான்' என்றான்.

"துரியோதனா..என் திட்டம் என்ன தெரியுமா? அர்ச்சுனனை வேறு பக்கம் போக வைத்தால்..தருமரை பிடித்து விடலாம்.என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது.உனக்குத் தருகிறேன்.அதை யாரும் பிளக்க முடியாது.முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார்.அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான்.அவர் அவர் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார்.பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார்.அவர் எனக்குத் தந்தார்.அதை உனக்கு நான் தருகிறேன்..இனி உனக்கு வெற்றியே..போய் அர்ச்சுனனுடன் போரிடு' என்றார் துரோணர்.

மகிழ்ச்சியுடன்..அக்கவசத்தை அணிந்து..அர்ச்சுனனைத் தாக்கினான் துரியோதனன்.அர்ச்சுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை.ஆகவே அர்ச்சுனன் கேடயம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான்.துரியோதனன் வலி பொறுக்காது..வேறு பகுதிக்கு நகர்ந்தான்.

பின்..அர்ச்சுனன் துரியோதனனிடமிருந்து விலகி ஜயத்ரதனை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொல்லாதபடி..பூரிசிரவஸ் தாக்கினான்.உடன் சத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான்.சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ்..காலால் மார்பில் உதைத்தான்..மயக்கம் அடைந்தான் சாத்யகி...உடன் அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ்.உடன் அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான்.அந்த கை வாளுடன் வீழ்ந்தது...பூரிசிரவஸ் அர்ச்சுனனைப் பார்த்து'நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே..தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா?' என்றான்.

'நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா?' என்றான்.உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான்.பரமனை எண்ணி தியானம் செய்தான்.அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.பலரையும் வென்றவாறு..அர்ச்சுனன் ஜயத்ரதனை நெருங்கினான்.அக்கணத்தில் ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து..'நீங்கள் அனைவருக்கும் விற் பயிற்சி அளித்தீர்..ஆனால் அர்ச்சுனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன்?' என்றான்.

அதற்கு துரோணர்,'அர்ச்சுனன் தவ வலிமை உடையவன்..ஆகவே மேம்பட்டு விளங்குகிறான்' என்றார்.

பின் அர்ச்சுனனை ஜயத்ரதன் தாக்கத் தொடங்கினான்.கண்ணபிரான்..சூரியன் மறைந்தாற் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.சூரியன் மறைந்ததா எனப் பார்க்க ஜயத்ரதன் மேற்குத் திசையை நோக்கினான்...'அர்ச்சுனா..அம்பை செலுத்து'எனக் கூறி இருளைப் போக்கினார் கண்ணன்.அர்ச்சுனன் உடனே தன் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினான்.அது ஜயத்ரதனின் தலையை துண்டித்தது.அப்படி துண்டித்த தலை தவம் செய்துக் கொண்டிருந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தாட்சத்திரன் மடியில் போய் விழுந்தது.அதை ஏதோ என நினைத்தவன்...தன் கையால் தள்ளிவிட அது தரையில் விழுந்தது..ஜயத்ரதனின் தந்தையின் தலையும் சுக்கல் சுக்கலாகியது.தன் மகனின் தலையைத் தரையில் வீழ்த்துபவர் தலை சுக்கலாக வேண்டும்..என அத்தந்தை பெற்ற வரம்..அவருக்கே வினையாயிற்று.ஜயத்ரதன் மறைவு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால்..துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான்.துரோணரிடம்..'இன்று என் தம்பியர் பலர் மாண்டனர்.பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர்.ஜயத்ரதனும் மாண்டான்.அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும்..இனிப் பேசிப் பயனில்லை..வெற்றி அல்லது வீர மரணம்' என்று புலம்பினான்.

இவ்வாறு..ஒரு தரத்திற்கு மகிழ்ச்சியும்..மற்றவருக்கு சோகமுமாக அன்றையப் போர் பகல் போர் முற்றுப் பெற்றது.

No comments:

Post a Comment