Sunday, October 18, 2009

69-பதின்மூன்றாம் நாள் போர்

படைகள் அணிவகுத்து நின்றன.துரோணர் பத்மவியூகம் அமைத்தார்.முகப்பில் அவர் இருந்தார்.துரியோதனன் நடுவில் நின்றான்.பத்மவியூகத்தை உடைத்துச் செல்வது கடினம்.அந்த அமைப்புக் கண்டு தருமர் கலக்க முற்றார்.அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது.அவனால்..பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும்.இந்த பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும்..அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் உள்ளே புகுந்தால்..கௌரவர் படை சிதறி ஓடும் என தருமர் எண்ணினார்.அபிமன்யூவும் துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான்.ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லுமுன் வியூகம் மூடிக் கொண்டது.ஜயத்ரதன் யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை.

ஆகவே..துரோணர்,அசுவத்தாமா,கர்ணன் ஆகியோருடன் தனித்து நின்று போரிட்டான் அபிமன்யூ.அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் 'இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்'என்று வியந்து பாராட்டினார்.இதைக் கண்ட துரியோதனன்..'எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம்..இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்' என்றான்.

அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர்.எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி..அதரும யுத்தத்தில் ஈடுபலானார்.கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான்.பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது..துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்.ஆனால்..இதற்குத் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி ..தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான்.

உணர்ச்சிவசப்பட்ட துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வாளைத் துண்டித்தார்.அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான்.

மாவீரன் அபிமன்யூ தேரையும்,வில்லையும்,வாளையும்,கேடயத்தையும் இழந்தாலும்..வீரத்தை இழக்கவில்லை.ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான்.பல வீரர்களைக் கொன்றான்.

முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து , அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாள் மற்றவர்களை சமாளிக்கக்கூடும் என்னும் வரத்தை பெற்றிருந்தான் அல்லவா?அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு த டுத்தான்.கையில் ஆயுதமும் இன்றி..துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை (நரிகள் ஒன்று சேர்ந்து )மாவீரனான அபிமன்யூவைக் கொன்று விட்டனர்.

தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ச்சுனன் காதில் இச் செய்தி விழ..அவன் மயங்கி விழுந்தான்.அவன் துயரத்தை எழுத்தில் வடிக்க இயலாது.மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்தான்.பின்'ஜயத்ரதனை நாளை மாலைக்குள் கொல்வேன்..அல்லாவிடின்..வெந் நரகில் வீழ்வேன்' என சூளுரைத்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான்.அவ்வொலிக் கேட்டு அண்ட கோளங்களும் அதிர்ந்தன.பூமி நிலை குலைந்தது.இந்நிலையில் அன்றைய போர் நிறைவுப் பெற்றது.

2 comments:

ISR Selvakumar said...

உங்கள் பதிவை இன்றுதான் முதன் முதலாக வாசிக்கின்றேன். எனக்குள் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி செல்வக்குமார்

Post a Comment