Monday, October 5, 2009

66-பத்தாம் நாள் போரும்..பீஷ்மர் வீழ்ச்சியும்

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க...பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர்.சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது.இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது.சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன.விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை.ஆயுதம் ஏதும் கையில் இல்லை.அர்ச்சுனன் அம்பு செலுத்தி..பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான்.வில்லை முறித்தான்.அவரின் வேலாயுதத்தையும்,கதாயுதத்தையும் தகர்த்தான்.அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன.

தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர்.கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை.உடம்பில் தைத்திருந்த அம்புகள்..அவர் உடல் பூமியில் படாது தடுத்தன.அவரைக் கௌரவிக்க..கங்காதேவி..பல ரிஷிகளை அனுப்பினாள்.அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர்.அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார்.இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லையாயினும்..தலை தொங்கி இருந்தது.அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர்.ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான்.அவை..நுனிப்பகுதி மேலாகவும்,அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின.பீஷ்மர் புன்னகை பூத்தார்.

பீஷ்மருக்கு தாகம் எடுத்தது.பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர்.பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார்.குறிப்புணர்ந்த அர்ச்சுனன்..அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான்.கங்கை மேலே பீரிட்டு வந்தது.கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.

பீஷ்மர்..பின் துரியோதனனைப் பார்த்து..'அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா?தெய்வ பலம் பெற்றவன் இவன்.இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது.விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது.அது மட்டுமின்றி..அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும்.இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு.அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு.இப்போர் என்னுடன் முடியட்டும்' என்றார்.அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை.

எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான்.;'ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர த்தவறிவிட்டேன்.என்னை மன்னித்து விடுங்கள்' என்றான்.

அது கேட்ட பீஷ்மர்..'கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல.குந்தியின் மைந்தன்.சூரிய குமரன்.இதை வியாசர் எனக்குக் கூறினார்.காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால்..நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன்.பாண்டவர்கள் உன் தம்பியர்.நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று' என்றார்.

கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.'துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்' என்றான்.

கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.'கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல.குந்தியின் மைந்தன்.சூரிய குமரன்.//

ஆனால் கண்ணனை யசோதையின் மைந்தனாக ஏற்றுக் கொள்கிறார் அல்லவா

Vidhoosh said...

very beautifully written.
--vidhya

T.V.ராதாகிருஷ்ணன் said...

சில கேள்விகள் சில நேரங்களில் வலுவிழக்கும்..வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Vidhya

Post a Comment