Friday, March 27, 2009

31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.

அர்ச்சுனனின் பேச்சைக்கேட்டு பீமன் அமைதியானான்.அப்போது விகர்ணன் எழுந்து பேசலானான்..'திரௌபதிக்கு பீஷ்மர் கூறிய பதிலை நான் ஏற்கமாட்டேன்.பெண்களை விலங்குகள் போல கணவன்மார்கள் எதுவும் செய்யலாம்'என்றார் பீஷ்மர்.'நம் மூதாதையர் மனைவியை விற்றதுண்டோ? இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை.சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை.தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது..?திரௌபதிக்கு பாட்டனாரின் விடை பொருந்தாது'என்றான்.

விகர்ணனின் பேச்சைக் கேட்டு அவனுக்கு ஆதரவாக சில வேந்தர்கள் குரல் கொடுத்தனர்.'சகுனியின் கொடிய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது..ஒரு நாளும் உலகு இதை மறக்காது.செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயப் போர்களத்தில் பழி தீர்க்கப்படும் என்றனர்.

விகர்ணனின் சொல் கேட்டு கர்ணன் ஆத்திரமடைந்தான்..'அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய்.ஆற்றலற்றவனே..அழிவற்றவனே..இப்பெண்ணின் பேச்சால் தூண்டப்பட்டு ஏதோதோ பிதற்றுகிறாய்'என்றவன், ஒரு பணியாளனை நோக்கி..'அடிமைகள் மார்பிலே ஆடை உடுத்தும் வழக்கம் இல்லை.ஆதலால் பாண்டவர் மார்பில் உள்ள துணியை அகற்று! பாஞ்சாலியின் சேலையையும் அகற்று' என்றான்.

அப்பணியாள் தங்களை நெருங்குவதற்கு முன் பாண்டவர் தம் மாாபில் உள்ள ஆடையை வீசி எறிந்தனர்.பாஞ்சாலியோ செய்வது அறியாது மயங்கினாள்.

அந்நிலையில் துச்சாதனன்..பாஞ்சாலியின் துகிலை உரியலுற்றான்..பாஞ்சாலி கண்ணனை நினத்து ..இருகரம் கூப்பி தொழுதாள்.'கண்ணா..அபயம் ..அபயம்..என்றாள்.உலக நினைவிலிருந்து விலகித் தெய்வ நினைவில் ஆழ்ந்தாள்.

அன்று..முதலையிடம் சிக்கிய யானைக்கு அருள் புரிந்தாய்.

காளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய்.

கண்ணா..உன்னை நம்பி நின் அடி தொழுதேன்..என் மானத்தை காத்து அருள்புரி..உன்னை சரண் அடைந்தேன் என்றாள்.

கண்ணபிரான் அருள் கிடைத்து ..துச்சாதனன் துகில் உரிய உரிய சேலை வளர்ந்து கொண்டே இருந்தது.


ஒரு நிலையில் துச்சாதனன் மயங்கி கீழே விழுந்தான்.

'தீங்கு தடுக்கும் நிலையில் இல்லை' என்று முன்னர் உரைத்த பீஷ்மர் எழுந்து கை தொழுது வணங்கினார்...

துரியோதனன் தலை கவிழ்ந்தான்.

No comments:

Post a Comment