Monday, March 23, 2009

29-திரௌபதி நீதி கேட்டல்

தீய எண்ணத்தில் அண்ணனை விஞ்சிய துச்சாதனன் பாஞ்சாலி இருக்குமிடம் நோக்கி விரைந்தான்.பாஞ்சாலி அவனைக்கண்டு ஒதுங்க...'அடீ..எங்கே செல்கிறாய்?'என கூச்சலிட்டான்..

திரௌபதியும் 'நான் பாண்டவர் மனைவி.துருபதன் மகள்..இதுவரை யாரும் இதனை மறந்ததில்லை...ஆனால்..தம்பி...நீயோ வரம்பின்றி பேசுகிறாய்'என்றாள்.

அதற்கு துச்சாதனன்..'இனி நீ பாண்டவர் தேவியும் அல்ல...பாஞ்சாலத்தான் மகளும் அல்ல,என் அண்ணனின் அடிமை.மன்னர் நிறைந்த அவையில் எங்கள் மாமனுடன் சூதாடி உன்னை தருமன் இழந்துட்டான்.இனி உன்னை ஆள்பவன் துரியோதனனே..அம்மன்னன்..உன்னை அழைத்து வருமாறு சொல்ல வந்தேன்...பேடி மகனான பாகனிடம் உரைத்தது போல என்னிடமும் சொல்லாது புறப்படு'என்றான்.

அவன் சொல் கேட்ட பாஞ்சாலி 'மாதவிலக்கு ஆதலால் ஒராடையுடன் இருக்கிறேன்.மன்னர் அவைக்கு என்னை அழைத்தல் முறையல்ல.மேலும் உடன்பிறந்தார் மனைவியை சூதில் வசமாக்கி...ஆதரவை நீக்கி...அருமையை குலைத்திடுதல் மன்னர் குல மரபா? உன் அண்ணனிடம் என் நிலையைஸ் சொல்' என்றாள்.

இதுகேட்ட துச்சாதனன்..கோபம் தலைக்கேற..பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்தான்.'ஐயோ' என அவள் அலற...அந்தக் கருங்கூந்தலை கரம் பற்றி இழுத்துச்சென்றான்.

வழிநெடுக மக்கள் வாய் மூடிப் பார்த்திருந்தனர்.

அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி விம்மி அழுதாள்.பாண்டவரை நோக்கி 'அம்மி மிதித்து..அருந்ததி காட்டி வேதஸ் சுடர்த்தீ முன் விரும்பி மணம் செய்து கொண்டீரே..இன்று இதைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே..இது தகுமா ' என்றாள்.

பார்த்தனும்..பீமனும்..செயலற்று இருந்தனர். தருமர் தலை குனிந்தார். .பாஞ்சாலி மேலும் கூறுகிறாள் 'இப்பேரவையில் சான்றோர் பலர் இருக்கின்றன்ர்.வேத விற்பன்னர்கள் உள்ளனர்.வேறுபல சிறப்புமிக்க மேலோர் உள்ளனர். ஆயினும் வெஞ்சினம் கொண்டு யாரும் வாய்திறக்கவில்லையே' என்றவள் துச்சாதனனை நோக்கி ;அற்ப புத்தியுடையவனே...மன்னர் அவையில் என்னை பிடித்து இழுத்து ஏசுகிறாயே..உன்னைப்பர்த்து 'நிறுத்துடா'எனக்கூற அவையில் யாரும் இல்லையே' என புலம்பினாள்.

வெறிகொண்ட துச்சாதனனோ..'நீ இப்போது வெறும் தாதி' என தீதுரைகள் பல சொன்னான்.

கர்ணன் சிரிக்க
துரியோதனன் ஆணவசிரிப்பு சிரிக்க
சகுனி மனம் மகிழ..அவையினரோ
வாளாயிருக்க...
பிதாமகன் பீஷ்மரோ
எழுந்து பேச ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment