Thursday, October 6, 2011

179-இன்சொல்லின் சிறப்பு




இன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் தருமருக்கு விளக்குகிறார்..

'தருமா! இன்சொல்லால் ஆகாதது இல்லை.கொடிய விலங்குகளைக் கூட இனிமையான சொற்களால் வசப்படுத்தலாம்.இது சம்பந்தமாக, ஒரு அரக்கனால் பிடிக்கப்பட்ட ஒரு அந்தணன் தன் இனிமையான சொற்களால் விடுபட்டக் கதையைச் சொல்கிறேன்..
முன்னொரு காலத்தில் அறிவுள்ள அந்தணன் ஒருவன் காட்டில் அரக்கனால் பிடிபட்டான்.அரக்கன் தன் உணவிற்காக அந்தணனைப் பிடித்தான்.ஆனால் அவனோ சிறிதும் அச்சமோ,கலக்கமோ அடையவில்லை.இனிய வார்த்தைகளை அரக்கனிடம் பேசினான்.அதனால் வியப்படைந்த அரக்கன் அவனைப் பாராட்டினான்.பின், அரக்கன்,'நான் எதனால் இளைத்திருக்கிறேன்..சொல்' என்றான்.இது கேட்ட அந்தணன் தன் சொல்லாற்றலால் விரிவாகப் பதில் சொன்னான்.

நீ உன் உற்றார் உறவினரைப் பிரிந்து, வேற்று நாட்டில் இருக்கிறாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன்னால் பாதுகாக்கப்பட்டவர் உன்னைக் கைவிட்டுப் போயிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புறக்கணித்துப் பெரிய ஆசை கொண்டு அதற்காக நீ அலைந்து கொண்டு இருக்கிறாய் போலும்...அதனால் நீ இளைத்திருக்கலாம்.

செல்வமும் அதிகாரமும் உள்ளவர்கள் உன்னை அவமதித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உலகில் அறிஞர்களையும் ஞானிகளையும் புறக்கணித்துச் சிலர் அற்பர்களைப் பாராட்டியிருக்க, அது கண்டு நீ வேதனைப் பட்டிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.

அரும்பாடுபட்டு நீ செய்த நன்றியை மறந்து ஒருவன் உன்னிடம் துரோகம் செய்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

காமம் முதலான தவறான வழிகளில் மக்கள் ஈடுபடுவதுக் கண்டு நீ வருத்தமுறுகிறாய் என எண்ணுகிறேன்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

நண்பனைப் போல நடித்து ஒரு பகைவன் உன்னை ஏமாற்றியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

உன் இனிய நண்பர்கள் சினம் கொண்டிருக்க அவர்களை உன்னால் அமைதிப்படுத்த முடியாமல் நீ வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

யாரோ உன் மீது பழி சுமத்த, அதைக் கேட்டவர்களால் நீ அலட்சியப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

நல்ல குணங்களையுடைய நீ பிறரால் வஞ்சகன் என்று பழிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

உனது நல்ல எண்ணங்களைச் சமயம் வரும்போது உன்னால் வெளிப்படுத்த முடியவில்லையே என வருந்தியிருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..

அற்பர்கள் மத்தியில் உனது சிறந்த கருத்துக்கள் எடுபடாமல் போனது கண்டு நீ மனம் நொந்து போயிருப்பாய் ..அதனால் நீ இளைத்திருக்கலாம்.

ஒழுக்கம் இல்லாத நீ உயர்வடைய வேண்டும் எனக் கருதி ஏமாந்திருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன் பிள்ளை உனக்கு அடங்காமல் போயிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

தாய் தந்தையர் பசியால் வாடி இறந்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உனது பொருள்களைப் பிறர் கவர்ந்து கொள்ள நீ வாழ்க்கைக்கு வேறொருவர் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நீ தகாதவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின் அவர்களை விட முடியாமல் வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

உன்னிடம் கல்வி இல்லை..செல்வம் இல்லை..கொடை இல்லை..அப்படியிருந்தும் பெரிய புகழுக்கு நீ ஏங்கி இருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

நெடுநாள் எதிர்பார்த்த ஒன்று பிறரால் அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

பாவிகள் நலமுடன் வாழ..நல்லவர்கள் கஷ்டப்படுவது கண்டு நீ தெய்வத்தை பழித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்

அந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.

ஆதலால்..தருமா! இன் சொலால் ஆகாதது இல்லை என உணர்ந்து கொள்' என்றார் பீஷ்மர்,

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.//

இன்சொல்லின் சிற்ப்பு பற்றி இனிமையான பகிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment