Monday, October 10, 2011

181- பீஷ்மர் மறைந்தார்....




நல்ல பல அறவுரைகளைக் கதைகள் மூலம் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார்.பேச்சை நிறுத்தினார்.யோகத்தில் ஆழ்ந்தார்.தியானத்தில் இருக்கையிலேயே அவரின் உடலில் இருந்த அம்புகள் உதிர்ந்தன.அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அனைத்து அம்புகளும் காணாமற் போயின.அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று.அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர்.தேவ துந்துபிகள் முழங்கின.வானம் மலர் மாரி பொழிந்தது.சித்தர்களும், பிரம ரிஷிகளும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.'பிதாமகரே! வருக..என வானுலகோர் வரவேற்றனர்.பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தது.பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

பாண்டவர்களும், விதுரரும்,யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர்.திருதிராட்டிரனும்,தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர்.யுயுத்சு குடை பிடித்தான்.பீமனும்,அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர்.நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர்.திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர்.குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர்.ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின.புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டது.அனைவரும் வலம் வந்து தொழுதனர்.எங்கும் சாந்தி நிலவியது.

பின்னர் கண்ணனும், நாரதரும்,வியாசரும்,பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும்,நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கைக்கரையை அடைந்தனர்.ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது.அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே....' நான் சொலவதைக் கேளுங்கள்.என் மகன் குலப்பெருமை மிக்கவன்.ஒழுக்கத்தில் சிறந்தவன்.பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன்.உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன்.பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன்.காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளைக் கொண்டு வந்தவன்.வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை.அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது' என்றாள்.

அப்போது கண்ணன்..'தேவி துயரப்படாதே..தைரியத்தை இழக்காதே..உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார்.இனி அவர் வசுவாக இருப்பார்.ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ அறிவாய்.இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது.இனி நீ அவரைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.தேவி..ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்..அந்த க்ஷத்திரிய வீரன் சிகண்டியினால் கொல்லப்படவில்லை.தனஞ்செயனால் கொல்லப்பட்டார். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதை நீ அறிவாய்.வசுக்கள் உலகை அடைந்த உன் மைந்தனை எண்ணி நீ பெருமைப் பட வேண்டுமே தவிர..துயரம் கொள்ளக் கூடாது' என்று ஆறுதல் கூறினார்.

கண்ணனின் ஆறுதல் கேட்டுச் சாந்தம் அடைந்த தெய்வமகள் நீரில் இறங்கினாள்.பின் அனைவரும் கங்காதேவியை வணங்கினர்.அத்திருமகள் விடை தர அனைவரும் திரும்பிச் சென்றனர்.

(அனுசாசன பருவம் முற்றிற்று)

No comments:

Post a Comment