Sunday, October 9, 2011

180-தவத்தைவிடச் சிறந்தது




தருமர், பீஷ்மரிடம், 'தவத்தைவிடச் சிறந்தது உண்டா?' என வினவ, பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்..
'தவத்தைவிட மேலானது உபவாசம்..இதனினும் சிரந்ததாக எதுவும் இல்லை.இது தொடர்பாகப் பிரம்ம தேவனுக்கும்,பகீரதனுக்கும் நடைபெற்ற உரையாடலை நெடுங்காலமாக கூறி வருகின்றனர்.அதைக் கூறுகிறேன்..ஒரு சமயம் பகீரதன் தேவலோகத்தையும், கோலோகத்தையும் கடந்து ரிஷிலோகத்தை அடந்தான்.அப்போது பிரம்மதேவன் பகீரதனைப் பார்த்து, 'அடையமுடியா இந்த ரிஷிலோகத்திற்கு நீ எப்படி வந்தாய்? தேவர்களாயினும், கந்தர்வர்களாயினும், மனிதராயினும் தவம் செய்துதான் இங்கு வர இயலும்.அப்படியிருக்க நீ வந்தது எவ்வாறு?' என வினவினார்.

பகீரதன் அதற்கு. 'பிரம்ம தேவரே! ஒரு லட்சம் பேருக்கு அன்னம் அளித்தேன்.ஆனால் அதன் பலனாக இங்கு நான் வரவில்லை.ஏகாத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,பஞ்சராத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,ஏகாதசராத்ர யாகங்கள் பதினொன்றும்,ஜோதிஷ்டோமம் என்னும் யோகங்கள் நூறும் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.கங்கைக் கரையில் நூறு வருடம் தவம் செய்தேன்..அங்கே ஆயிரம் கோவேறு கழுதைகளையும், கன்னியரையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

புஷ்கரஷேத்திரத்தில் நூறாயிரம் குதிரைகளையும்,இரண்டு லட்சம் பசுக்களையும் அந்தணர்க்கு வழங்கினேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.கோசலம் என்னும் யாகங்களில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு கருதாது..பத்துப் பத்து பசுக்களாக நூறு கோடி பசுக்களையும், பால் கறக்கப் போதிய பொன்பாத்திரங்களையும்,வெண்பாத்திரங்களையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

பாகிலி என்னும் இடத்தில் பிறந்தவையும்,பொன் மாலைகள் அணிந்தவையுமான பதினாயிரம் வெள்ளைக் குதிரைகளை அளித்தேன்.ஒவ்வொரு யாகத்திலும் நாள் தோறும் எட்டுக் கோடி,பத்துக் கோடி என வாரி வாரித் தந்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.பொன் மாலைகளுடன் காது கருத்தவையும் ,பச்சை நிறம் உள்ளவையுமான குதிரைகள் பதினேழு கோடிகளைத் தந்தேன்.பொன்னால் செய்யப்பட்ட, பொன் மாலைகளுடன் கூடிய பதினெட்டாயிரம் தேர்களை அளித்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.

ஆயிரமாயிரம் அரசர்களை வென்று, எட்டு ராஜசூய யாகங்களைச் செய்தேன்.அழகும், பெருங்கொண்டைகளும் உடைய எண்ணாயிரம் வெள்ளைக் காளைமாடுகளையும்,பசுக்களையும்,பொன் குவியலையும், ரத்தினக் குவியல்களையும்,ஆயிரக்கணக்கான கிராமங்களையும் அளித்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

ஒரு யோசனை நீள அகலமுள்ள மாமரங்கள் நிறைந்த காட்டைக் கொடுத்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.அசுவமேத யாகங்கள் பல செய்தேன்.ஒவ்வொரு நாளும் முப்பது அக்கினிகளில் ஓமம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.முப்பதாண்டுக் காலம் சினம் தவிர்த்து யாராலும் செய்தற்கரிய துவாரணம் என்னும் யாகத்தை விடாமல் செய்தேன்.எட்டு சர்வமேத யாகங்களும் ஏழு நாமேத யாகங்களும் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.

சரயு நதியிலும், நைமிசாரண்யத்திலும் பத்து லட்சம் பசுக்களைத் தானமாக வழங்கினேன்.அதனாலும் இங்கு வரவில்லை.ஓர் ரகசியம் இந்திரனால் குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனை பரசுராமர் தன் தவத்தால் உணர்ந்தார்.அதனைச் சுக்கிரர் மூலமாக நான் அறிந்தேன்.அதன் காரணமாக ஆயிரமாயிரம் அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும் தானம் செய்தேன்.அவற்றாலும் நான் இங்கு வரவில்லை.

உபவாசத்தால்தான் நான் இங்கு வந்தேன்.இந்த உபவாசத்தைவிட மேலான தவத்தை நான் எங்கும் அறியவில்லை' என்று கூறி முடித்தான்.

ஆதலால்..தருமா..நீயும் உபவாசத்தை மேற்கொண்டு, நற்கதி அடைவாயாக.." என்று பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

No comments:

Post a Comment