Friday, January 28, 2011

140-சாதலும், பிறத்தலும் இயற்கை



பீஷ்மர் தருமருக்கு உற்றார்,உறவினர் இறப்பின் போது ஆற்றியிருத்தல் எப்படி என்பதை விளக்க எடுத்துக் காட்டாக ஓர் அந்தணனுக்கும்,சேனஜித் என்னும் மன்னனுக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறியது..

'முன்னொரு காலத்தில் சேனஜித் என்றொரு மன்னன் இருந்தான்.திடீரென அவன் மகன் இறந்ததால் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி இருந்தான்.செய்வதறியாது திகைத்து யாரிடமும் ஒன்றும் பேசாது செயலற்று இருந்தான்.அப்போது அவனது நண்பனான ஒரு அந்தணன் அவனைக் காண வந்தான்.'மன்னனே, ஏன் இப்படி அறிவிழந்து இப்படி துயரப்படுகிறாய்? உண்மையில் உனக்காகவே நீ வருத்தப் பட வேண்டும்.ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மை இவ்வாறிருக்க இன்னொருத்தர் மரணத்திற்காக ஏன் துயரப் பட வேண்டும்?எல்லோரும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக விரும்புகிறோம்.பிறப்பு எனில் இறப்பு யார்க்கும் உண்டே!' என்று கூறினான்.

உடன் மன்னன்..'நீர் துயரமின்றி இருக்கக் காரணம் என்ன? சாத்திர ஞானமா?தவமா?' என்று வினவினான்.

அந்தணன், 'மன்னனே..இந்த உலகத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவரோ,குறைந்தவரோ,மிகவும் தாழ்ந்தவரோ எந்த நிலையினராயினும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பர்.இந்த உலகத்துப் பொருள்களில் எதுவும் என்னுடையதன்று.அப்படியே பிறருக்கும் உரியவை அல்ல.இந்தத் த்ளிந்த ஞானம் ஏற்பட்டதால், எனக்குத் துன்பமும் இல்லை..இன்பமும் இல்லை.கடலில் எங்கெங்கோ இருக்கும் கட்டைகள் ஒன்று கூடி பிரிவது போன்றது பிறப்பும், இறப்பும்.தாய்,தந்தை,மனைவி,மக்கள் எல்லாரும் இப்படித்தான் ஒன்று கூடுகின்றனர்.பிரிகின்றனர்.எப்படி உன் மகன் பிரிந்தானோஅப்ப்டியே அறிய முடியாமல் இறந்து விட்டான்.துன்பத்தின் இறுதியில் இன்பமும், இன்பம் மாறித் துன்பமும் இயற்கையாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.தற்போது துன்பத்தில் இருக்கும் நீ பிறகு இன்பத்தை அடைவாய்.பின் துன்பம்.பின்னர் இன்பம் இப்படி வண்டிச் சக்கரம் போல இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்துக் கொண்டே இருக்கும்.இன்ப, துன்பங்களுக்கு உடம்பே காரணமாகும்.ஓர் உயிர் எந்த உடலைச் சார்ந்து வினையைச் செய்ததோ அந்த வினையை அடுத்த பிறப்பில் அனுபவித்தே ஆக வேண்டும்.இந்த உயிர் ஓர் உடலைச் சார்ந்து பிறக்கிறது.சுற்றம் என்றும், நட்பு என்றும் சில காலம் சிலரோடு உறவு கொள்கிறது.பொருளாசையில் சிக்கி அந்த ஆசை நிறைவேறாமல் துன்பப்படுகிறது.உயிர் பல விதமான உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறது.செக்கில் இடப்பட்ட பொருள் பிழியப் படுவது போலப் பிறவிச் சுழியில் அகப்பட்டுத் துன்புறுகிறது உயிர்.மனிதன் தன் உற்றார்,உறவினரைக் காப்பாற்றத் தகாத காரியங்களிலும் ஏடுபட்டுக் கர்மத்தைப் பெருக்கிக் கொள்கிறான்.அதற்குரிய பயனை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.அவனது துன்பத்தை எப்படிப் பிறர் ஏற்க முடிய வில்லையோ அப்படியே அவன் கர்மத்தையும் பிறரால் ஏற்க முடியாது.அதை அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.ஞானிகள் இதைத் தெளிவாக உணர்ந்து உணர்த்தியிருக்கிறார்கள்.உணராத அஞ்ஞானிகள் சம்சாரம் என்னும் சேற்றில் சிக்கிக் கொண்டு கரையேற முடியாமல் அல்லல் படுகின்றனர்.ஒவ்வொருவரும் புதிதாக கர்மங்களைச் சேர்க்காமலும், உயிரில் கலந்த கர்மத்தை உதிர்த்தும் இன்பம் காண வேண்டும்.சிறந்த அறிஞன் உலகப் படைப்பின் ரகசியத்தை அறிகிறான்.அறிவீனர்கள் இதனை அறிய மாட்டார்கள்.

இன்பமானது அறிஞன்,அறிவிலி,வீரன்,கோழை,ஆற்றல் மிக்கவன்,ஆற்றல் அற்றவன் என்ற பாகுபாடு அறிந்து ஒருவனை அடைவதில்லை.அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப வினைப் பயனை அடைகின்றனர்.முக்தியை அடைய விரும்புவோர் நன்மை ஒன்றையே செய்து இன்பம் அடைகின்றனர்.முக்திப் பாதையில் நாட்டம் இல்லாதவர் வேறு கர்மங்களைச் செய்து துன்புறுகின்றனர்.பொருள் மீது கொள்ளும் ஆசை துன்பத்திற்குக் காரணம் ஆகிறது.ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லை.மனிதப் பிறப்பில் அடையும் இன்பமும், சுவர்க்கத்தில் பெறும் இன்பமும் ஆசையற்றவன் பெறும் இன்பத்திற்கு ஈடாகா.

முற்பிறப்பில் செய்யப்பட்ட கர்மமானது தீமையோ நன்மையோ எதுவாயினும் செய்தவன் அறிவுள்ளவனோ, அறிவீனனோ எவராயினும் அதன் பயனை நுகர்ந்தே ஆக வேண்டும்.ஆதலால் பொருள் மீது பற்றுப் பாசங்களைத் துறத்தல் வேண்டும்.இல்லையேல் ஆசை பேராசை ஆகி, சினமாகி, பொறாமையாகிக் கடுஞ்சொல்லைத் தோற்றுவித்து, தீய செயலுக்கும் காரணமாகிறது.

ஒரு பொருள் எனது என்னும் எண்ணத்தோடு இருக்கும் போது, அது பிரிய நேர்ந்தால் துன்பம் ஏற்படுகிறது.அதுபோலவே உறவினர் பிரிந்தாலும் தாங்க இயலாத துன்பம் தோன்றுகிறது.நம் உயிர்க்கும் மற்றப் பொருள்களுக்கும் தொடர்பில்லை.நாம் செய்யும் தர்மமே நம்மை (உயிரை)த் தொடர்ந்து வரும்.அதுவே நாம் செல்லும் தேயத்திற்கு உறுதுணையாகும் என்ற தெளிவு பெற்றவர் பிறர் மரணத்திற்காக வருந்த மாட்டார்கள்.சாதலும்,பிறத்தலும் இயற்கை என்ற தெளிவு கொண்டு துயரத்தை விடுவாயாக' என்று அந்தணன் கூறினான்.

அதனைக் கேட்ட சேனஜித் மன்னன் அறிவுத் தெளிவு பெற்று உண்மை மார்க்கத்தை நாடி அமைதி அடைந்தான்" என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment