Thursday, February 3, 2011

141--நன்மை யாருக்குச் செய்ய வேண்டும்..



நன்மை செய்யும் போதும் பண்பு அறிந்து செய்ய வேண்டும் என்பதை விளக்கும் கதை

மனித நடமாட்டம் அற்ற காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார்.கிழங்கு வகைகளையும்,காய்களையும்,கனியையுமே உண்டு முனிவருக்குரிய நியமங்களுடன் திகழ்ந்தார்.கொடிய விலங்குகள் கூட அவர் தவ வலிமை அறிந்து அவருக்கு அருகில் அமைதியாகவே இருந்து விட்டுச் செல்லும்.சிங்கம், புலி, கரடி போன்றவை கூட அவர் தவத்தை வியந்து அன்புடன் நடந்துக் கொள்ளும்.

இந்நிலையில் ஒரு நாய் மட்டும் அவரைப் பிரிய மனமின்றி அவருடனே இருந்தது.முனிவரிடம் பக்தியுடன் நடந்துக் கொண்டது.அவருக்கு எது உணவோ அதுவே நாய்க்கும் உணவு.முனிவரிடம் அந்த நாய் சிநேக பாவத்துடன் நடந்துக் கொண்டது.அப்போது பசியும்,தாகமும் ரத்த வெறியும் பிடித்த ஒரு சிறுத்தைப் புலி அந்த நாயை நோக்கிப் பாய்ந்து வந்தது.அது கண்டு அஞ்சிய நாய் முனிவரைத் தஞ்சம் அடைந்தது.'மா..முனியே! தாங்கள் தான் என்னை இந்தப் புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்' என வேண்டிக் கொண்டது.

முனிவர் அந்த நாயைப் பார்த்து, 'அஞ்சாதே! நீ இந்தப் புலியிடமிருந்து தப்பிப் பிழைக்க ஒரு வழி சொல்கிறேன்.சற்று நேரத்தில் நீ ஒரு சிறுத்தைப் புலியாக மாறுவாய்' என்று கூறினார்.உடன் நாய் புலியாக மாறியது.சீறி வந்த சிறுத்தைப் புலி இது கண்டு விலகிச் சென்றது.

சிறிது நேரம் கழித்து..பெரும் புலி ஒன்று இந்தச் சிறுத்தைப் புலியைக் கண்டு கொல்ல வந்தது.பெரும் புலியைக் கண்ட அஞ்சிய சிறுத்தை முனிவரிடம் சென்று முறையிட்டது.உடன் முனிவர் அச் சிறுத்தைப் புலியை பெரும் புலியாக ஆக்கி அதன் அச்சத்தைப் போக்கினார்.நாயாக இருந்து, சிறுத்தைப் புலியாகி பின் பெரும் புலியாக மாறியதும் அந்நாய் மாமிசத்தை உணவாக உட்கொண்டது.காய் கனிகளை அறவே விலக்கியது.அசல் கொடிய விலங்காய் மாறியது.உணவுக்காக வெளியில் சென்று விலங்குகளைக் கொன்று தின்று பசியாறிய பிறகு முனிவரின் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு யானை ஆசிரமத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.அது கண்டு புலி மீண்டும் முனிவரிடம் முறையிட்டது.கருணை கொண்ட அவரும் அதனை வலிமை மிக்க யானையாக்கினார்.வந்த யானை இதைக் கண்டு திரும்பியது.ஆனால் யானையான நாயோ அஞ்சாமல் காடு முழுதும் உல்லாசமாக திரிந்து வந்தது.அப்படியிருக்கையில் ஒரு நாள் சிங்கம் ஒன்று மலைக்குகையில் இருந்து காடு நடுங்குமாறு கர்ஜனையுடன் வெளிப்பட்டது.சிங்கத்தைக் கண்ட யானை முனிவரை நாடியது.இப்போது மாமுனிவர் யானையை சிங்கமாக மாற்றினார்.இந்த சிங்கத்தைக் கண்ட வந்த சிங்கம் திரும்பியது.புதிய சிங்கம் காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது.அதைக் கண்டு அஞ்சிய விலங்குகள் அந்த ஆசிரமத்தின் பக்கமே வருவதில்லை.

ஆனால் வனவிலங்குகளில் வலிமை மிக்க சரபம் என்னும் மிருகம் ஆசிரமத்தின் அருகே வந்தது.அதனை எதிர்க்கும் ஆற்றல் சிங்கத்துக்குக் கூட கிடையாது.எட்டுக் கால்களுடன் நடை போட்டு அது வரும் போது அனைத்து மிருகங்களும் பயந்து ஓடும்.நாயாக இருந்து சிங்கமாக மாறிய விலங்கையும் பயம் விடவில்லை.சரபத்தைக் கண்டதும் அது மீண்டும் முனிவரை நாடியது.முனிவரும் அதையும் வலிமை மிக்க சரபமாக்கினார்.புதிய சரபம் புதுத் தோற்றத்துடன் நிகரற்று திகழ்ந்தது.ரத்த வேட்டையாடியது.அதைக் கண்டு அனைத்து விலங்குகளும் பயந்து ஓடின.

புதுப்பிறவி எடுத்த சரபம் ,திடமான ஒரு முடிவுக்கு வந்தது.இறுமாப்புடன் தன்னையே ஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டது.அந்தக் காட்டில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கருதிய அதற்கு ஒரு ஐயம் எழுந்தது.ஐயம் வஞ்சனையானது.வஞ்சனை கொடுமையானது.'இந்த முனிவரின் கருணையால் பல ஆபத்துகளிலிருந்து தப்பினேன்.நாயாக இருந்து படிப்படியாக சரபமாக மாறினேன்.இப்போது என்னைவிட பலம் மிகுந்த விலங்கு இல்லை.இந்த முனிவர் கருணை மிக்கவர்.இந்தக் கருணையே எனக்கு ஆபத்தாக முடியலாம்.இரக்கம் உள்ள இவர் மற்ற விலங்குகள், பறவைகளைக் கூட என்னைப்போல மாற்றலாம்.அப்போது எனக்கு அதிக எதிரிகள் உண்டாவார்கள்.அப்படி ஏற்பாமல் இருக்க ஒரே வழி..இந்த முனிவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான்.இவரைக் கொல்வது தவிர வேறு வழியில்லை..என்று நினைத்தது.

சரபத்தின் வஞ்ச எண்ணத்தை தன் தவ வலிமையால் முனிவர் அறிந்தார்.அந்த சரபத்தை நோக்கி 'தவத்தால் உயர்ந்த என் ஆற்றலை நீ உணர மாட்டாய்.அனைத்து உலகும் என்னைக் கண்டு அச்சம் கொள்ளும்.தரும நெறியிலிருந்து விலகும் யாரையும் நான் அழித்து விடுவேன்.நாயாகக் கிடந்த நீ, சிறுத்தைப் புலியாக,பெரும் புலியாக,யானையாக,சிங்கமாக,சரபமாக மாறினாயே..அதெல்லாம் நானெல்லவா மாற்றி உன்னை ஆபத்திலிருந்து காத்தேன்.கொஞ்சமும் நன்றியின்றி என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தாயே! நீ மீண்டும் நாயாவாய்' என்று சபித்தார்.சரபம் மீண்டும் நாயானது.

ஒருவரைப் புரிந்துக் கொள்ளாமல் அவருக்கு நன்மை செய்யும் போது கூடத் தவறு நேரிடலாம்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஒருவரைப் புரிந்துக் கொள்ளாமல் அவருக்கு நன்மை செய்யும் போது கூடத் தவறு நேரிடலாம். //

நன்றாற்றலிலும் தவறுண்டாம் அவரவர்
பண்பறிந்து ஆற்றாக்கடை--

என்றார் வள்ளுவர்.அருமையான கதை
..

Post a Comment