Monday, January 24, 2011

139-கொல்லாமையைப் பற்றி பீஷ்மர்





தருமர் பீஷ்மரை நோக்கி, 'கொல்லாமை சிறந்த அறம் என்று கூறுகின்றனரே!, எவ்வாறு? என வினவ, பீஷ்மர் விரிவாக விளக்குகிறார்.

கொல்லாமை நான்குவகை எனச் சான்றோர் கூறுவர்.ஒன்று தவறினாலும் அது கொல்லாமை ஆகாது.உலகில் உள்ள அனைத்து தருமங்களும் கொல்லாமையில் அடங்கி விடுகின்றன.மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவனை பாவம் பற்றுகிறது.ஆகவே துன்பங்களை விட வேண்டும்.பிற உயிர்க்குத் துன்பம் செய்யக் கூடாது.இத்தகைய துன்பங்களும் நாங்கு வகை ஆகும்.நினைப்பதாலும்,சொல்வதாலும்,செயலாலும் இது குற்றமாகக் கருதப் படுகிறது.புலால் உண்ணாதவன் இம் மூன்று குற்றங்கள் அற்றவன் ஆகிறான்.மனம், சொல்,ருசி காணும் நாக்கு, இம்மூன்றிலும் இந்தக் குற்றங்கள் நிற்கின்றன என்று வேதம் உணர்ந்தவர்கள் கூறுவர்.அதனால் தவம் இருக்கும் ஞானிகள் புலால் உண்பதில்லை.

புலால் உணவில், தன் மகனது தசை போன்றது என்பது தெரிந்தும் புலாலைப் புசிக்கும் மனிதன் கீழானவனாகக் கருதப்படுகிறான்.தாய் தந்தையர் சேர்க்கையால் மகன் தன் வசம் இல்லாமல் பிறப்பது போல உயிர்க்குத் துன்பம் செய்பவன் தன் இச்சை இலாமலேயே பாவப் பிறவி எடுப்பது உறுதி.எப்போது நாக்கு சுவையை உணர்கிறதோ..அப்போது மனதில் ஆசை தோன்றுகிறது.புலால் உண்ணும் இயல்புடையவர்கள் ஏழிசையை அனுபவிக்க இயலாது.பிறரது செல்வத்தைக் கெடுப்பவரும்,புலாலை விரும்புபவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது.புலாலை விரும்பிப் பேசுவது கூட அதனை உண்பது போன்ற குற்றமாகும்.இரக்க குணம் மிக்க சான்றோர் தம் உடலையே பிறர்க்குக் கொடுத்துச் சுவர்க்கம் சென்றனர்.இவ்வாரு கொல்லாமையின் மேன்மை கூறப்பட்டுள்ளது.

பின்னர் தருமர்..'கொல்லாமை என்பது தர்மங்கள் அனைத்திலும் மேலானது என்றீர்..ஆனால் சிரார்த்தங்களில் முன்னோர்க்குப் புலால் விருப்பத்தைத் த்ரும் என்று முன்னர் கூறியுள்ளீர்..இது முரணாக உள்ளதே..புலாலை விடுதல் என்னும் தருமத்தில் எங்களுக்கு ஐயம் உண்டாகிறது.புலால் உண்பதால் ஏற்படும் குற்றம் யாது?புலால் உண்ணாமையால் ஏற்படும் நன்மை யாது?கொன்று உண்பவன், பிறர் கொடுத்ததை உண்பவன்,விலைக்காகக் கொல்பவன்,விலைக்கு வாங்கி உண்பவன் ஆகிய இவர்களுக்கு நேரும் குற்றங்கள் யாவை? இவற்றையெல்லாம் விளக்க வேண்டுகிறேன்' என்றார்.

பீஷ்மர் சொல்லலானார்..'அழகான உடல் உறுப்புகளையும்,நீண்ட ஆயுளையும்,துணிச்சலையும்,ஆற்றலையும்,நினைவாற்றலையும் அடைய விரும்புபவர்கள் புலால் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.இது குறித்து ரிஷிகளின் முடிவைக் கேள்.'புலால் உண்ணாமலும்,பிற உயிர்களைக் கொல்லாமலும்,கொல்லத் தூண்டாமலும் இருக்கும் ஒருவன் பிராணிகளின் அன்பன்' என்று பதினாங்கு மனுக்களுள் ஒருவரான ஸ்வயம்பு மனு சொல்லியிருக்கிறார்.

புலால் உண்ணாதவனை சாதுக்களும் போற்றுகின்றனர்.'எவன் தன் தசையைக் கொண்டு பிறரை வாழவைக்க நினைக்கின்றானோ,அவன் நம்பத்தக்கவன்' என்று நாரதர் கூறியிருக்கிறார்."ஊனையும் கள்ளையும் விடுபவன் தானம்,தவம்,யாகங்கள் செய்வதால் பெறும் பயனைப் பெறுகிறான்' என்று பிரகஸ்பதி சொல்லியிருக்கிறார்.இட்விடாமல் நூறு ஆண்டுகள் அஸ்வமேத யாகம் செய்வதும்..புலால் உண்ணாமல் இருப்பதும் சமம் என்பது என் கருத்து.

புலால் உண்ணும் பழக்கத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வேதங்களாலும் யாகங்களாலும் பெற முடியாத நன்மையை அடைவான்.ஏதோ ஒரு காரணத்தால் புலால் உண்ண நேர்ந்தாலும் பிராயச்சித்தமாகக் கடும் தவம் புரிய வேண்டும்.சுவை கண்டவன் புலாலை விடுவது கடினமானது என்பது உண்மையாயினும், எல்லா உயிர்களுக்கும் அபயம் கொடுப்பதாகிய இந்த் புலால் உண்ணாமை என்னும் விரதத்திற்கு இணை ஏதுமில்லை.எவன் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளிக்கின்றானோஅவன் உலகுக்கே உயிர் அளிக்கிரான் என்பதில் ஐயமில்லை.மேலோர்கள் இதனையே முதன்மையான அறம் என்று போற்றுகின்றனர்.அறிவும், தூய மனமும்உள்ளவன் தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் நேசிப்பான். எறியப்பட்ட தடியால் புல் அசையும் போதும் அதற்கும் பயம் இருக்கிறது என்றால், விரைவாகக் கொல்லப்படும் உயிர்கள் படும் துன்பத்தைச் சொல்லவா வேண்டும்? ஒரு தீமையும் செய்யாத ஒரு விலங்குக்கு நோய் இல்லாமலேயே புலால் உண்ணும் புல்லர்களால் மரண பயம் இருக்கிறது என்பதை எண்ணுகையில் துக்கம் உண்டாகிறது.எனவே புலால் உண்பதைத் தவிர்த்தல் தருமத்திற்குக் காரணமாகிரது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.கொல்லாமைதான் மிக உயர்ந்த தருமம்..கொல்லாமையே மிக உயர்ந்த தவம்..கொல்லாமையே மிக உயர்ந்த வாய்மை!

புல்லிலிருந்தோ,கல்லிலிருந்தோ,கட்டையிலிருந்தோ புலால் கிடைப்பதில்லை.ஒரு உயிரைக் கொன்றால் தான் கிடைக்கும்.ஆகவே அதை உண்பது பாவம் ஆகும்.புலால் உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை.அவன் ஏற முடியாத மலை மீது அஞ்சாமல் ஏறுவான்.இரவிலும்,பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை.பிறர் ஆயிதத்தால் தாக்க வந்தாலும் அவன் அஞ்ச மாட்டான்.அவனைக் கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் செய்யாமல் விலகிச் செல்லும்.அவன் அஞ்ச வருவது எதுவும் இல்லை.புலால் உண்ணாமல் இருப்பது செல்வத்தைத் தரும்.புகழைத் தரும்.நீண்ட ஆயுளைத் தரும்.பின் சுவர்க்கத்தைத் தரும்.

புலால் உண்பவன், கொல்பவன் போலவே பாவம் செய்கிறான்.விலைக்கு வாங்குபவன் பொருளால் கொல்கிறான்.சாப்பிடுபவன் உண்பதால் கொல்கிறான்.ஒரு விலங்கைக் கொண்டு வருபவன்,அதனை ஒப்புக் கொள்பவன்,கொல்பவன்,விற்பவன்,வாங்குபவன்,சமைப்பவன்,புசிப்பவன் இவர்கள் அனைவரும் கொலையாளிகள்தாம்.

இறுதியாகக் கொல்லாமையின் சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன்.கொல்லாமையே உயர்ந்த தானம்.கொல்லாமையே சிறந்த நண்பன்.கொல்லாமையே யாகங்கள் அனைத்திலும் சிறந்தது.கொல்லாமை மேற்கொள்பவன் உலக உயிர்களுக்குத் தாயாக விளங்குகிறான்.தந்தையாகப் போற்றப்படுகிறான்.ஆண்டுகள் பல நூறு ஆனாலும் கொல்லாமையின் பெருமையை முற்றிலும் உரைக்க முடியாது' என்று கூறி முடித்தார் பீஷ்மர்.

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

puraaNakkadhaikaL புராணக்கதைகள் என்றுமே சுவராஸ்யமே..

Post a Comment