Friday, March 19, 2010

93- உண்ணா நோன்பு இருப்பேன் எனல்

வியாசரின் எந்த விளக்கமும் தருமரின் மனதை மாற்றவில்லை.பலரும் மாறி..மாறி கூறியும் பயன் இல்லை.அவர் வைராக்கியத்துடன் தன் நிலைமையை எடுத்துரைத்தார்.

'போரில் நாட்டாசை காரணமாகச் சகோதரர்களைக் கொன்றேன்..யாரின் மடி மீதிருந்து உற்சாகமாக விளையாடினேனோ அந்த பீஷ்மரை யுத்த களத்தில் இழந்தேன்.அந்தப் பிதாமகர் ரத்த வெள்ளத்தில் மலை போல் சாய்ந்த போதே பாவியாகிய நான் சோகத்தின் மடியில் வீழ்ந்தேன்..பரசுராமருடன் பல நாள் போர் புரிந்த வீரராகிய அந்தப் பீஷ்மர் யுத்த களத்தில் என்னால் வீழ்த்தப்பட்டார்.இளமைப் பருவம் தொடங்கி வளர்த்து எங்களையெல்லாம் ஆளாக்கிய அந்த உத்தமரைக் கேவலம் பேராசை காரணமாக இந்த நிலைக்கு ஆளாக்கினேன்.

ஒரு பொய்யைச் சொல்லி துரோணரைச் சாகடித்தேன்.இதைவிட வேறென்ன பாவம் இருக்க முடியும்? சத்தியம் தவறாதவன் என்ற பெயர் எனக்கு எப்படி பொருந்தும்? பொய்யனாகிய நான் இந்தப் பூமண்டலத்தை ஆண்டு பெறப்போவது என்ன?

புறங் கொடாப் போர் வீரனான் என் தமையனைக் கொன்றேனே..இதைவிட வேறு எது பாவம்?

ஒரு சிங்கக் குட்டியென வலம் வந்த அபிமன்யூவைத் துரோணரின் சக்கர வியூகத்தில் தள்ளிக் கொலை செய்தேனே..பாவியல்லவா நான்? இனி உலகில் அத்தகைய வீரன் பிறப்பானா? என் பொருட்டு திரௌபதியின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப் பட்டனரே..திருஷ்டத்துய்மனும்..விராடனும்..எண்ணற்ற வீரர்களும் என்னால் அல்லவா மாண்டார்கள்?

இவர்கள் அனைவரையும் இழந்த பிறகு நான் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்? நான் உண்ணா நோன்புடன் உயிர் துறக்கத் தயாராகி விட்டேன்..அனுமதி கொடுங்கள்' என மனம் நொந்து வியாசர் முதலான மகரிஷிகளிடம் கேட்டுக் கொண்டார் தருமர்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

பிதாமகர் பீஷ்மர் பரசுஇராமரிடம் சண்டை போட்டாரா? நான் பீஷ்மர் பரசுராமரின் சிஷ்யன் என்று அல்லவா நினைத்தேன். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

Post a Comment