Tuesday, March 16, 2010

92-வியாசர் ராஜநீதி பற்றி கூறல்

'தருமா...தம்பியர் பன்னிரெண்டு ஆண்டுகள் கானகத்தில் இருந்த போது என்னென்ன கனவுகள் கண்டனரோ,..அந்தக் கனவுகள் நிறைவேற நீ உதவ வேண்டும்.அவர்கள் காட்டில் பட்ட துன்பத்தின் முடிவு காலமான தற்போது இன்பம் அடைய வேண்டாமா..நீயும்,உன் தம்பியரும் அறம்,பொருள் இன்பங்களை நல்வழியில் அனுபவித்த பிறகு நீ காட்டை நோக்கிச் சென்று தவம் புரியலாம்.போர்க்களத்தில் பெற்ற வெற்றியின் பயனை நீ அலட்சியம் செய்யாதே..ராஜநீதி தெரிந்தவர்கள் இந்த வெற்றியை ஒழுங்குபடுத்தி நாட்டை நன்முறையில் பரிபாலிக்க வேண்டாமா?அரச நீதியை நன்கு உணர்ந்து இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்பக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்..இதில் பாபம் ஏதும் இல்லை..குடிமக்களிடம் ஆறில் ஒரு பங்கு வசூலித்து..நாட்டை நன்கு ஆளவில்லையெனின்..அந்த அரசனுக்கு குடிமக்களின் பாபத்தில் நாலில் ஒரு பங்கு வந்து சேரும்.

யுதிஷ்டிரா..அரச நீதி பற்றி மேலும் சொல்கிறேன்..தரும நூல் படி தண்டனை வழங்க வேண்டும்.இதில் தயக்கம் கூடாது.சினத்தை விலக்க வேண்டும்.குடிமக்களிடம் அன்பு காட்டித் தந்தை போல் நடந்துக் கொள்ள வேண்டும்.அரசரின் முயற்சி விதி வசத்தால் பழுது பட்டாலும் உலகம் அவ்வரசனை குறை கூறாது.நாடாளும் மன்னன் பகைவரை ஒடுக்குவதில் விழிப்பாக இருக்க வேண்டும்.அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளாகும் நாட்டின் அரசன் எந்த ஒரு நல்ல செயலையும் நிறைவாக செய்ய முடியாது.ஆகவே பகை சிறிது என்று எண்ணக்கூடாது.அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கல்வியிற் சிறந்த சான்றோர்களையும்..போர் வீரர்களையும் கண்ணெனப் போற்ற வேண்டும்..நாட்டின் மேன்மைக்கு வணிகரும் காரணமாவர்.ஆதலால் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மன்னன் திகழ வேண்டும்.உயர் அதிகாரிகளின் தகுதி அறிந்து தக்க காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்..தனக்கு ஆலோசனை கூறத் தக்க அறிவார்ந்த குழுவை அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டும்..தரும சாத்திரத்திலும்..நீதி சாத்திரத்திலும் தேர்ச்சி உள்ளவர்கள் எடுக்கும் முடிவு மூவுலகிலும் பாராட்டப் படும்.அறிவின் எல்லையைக் கண்டவராயினும் ஒருவரையே நம்பியிருக்கக் கூடாது.

தருமா...அடக்கம் இல்லாமல் ஆணவத்துடன் நடக்கும் அரசனை மக்கள் பழிப்பர்.அத்தகைய மன்னனிடம் பாவமும் வந்து சேரும்.நன்றாக ஆராய்ந்து வழங்கும் தண்ட நீதியால் பாவம் ஏதுமில்லை.எவ்வளவுதான் முயன்றாலும் சில விஷயங்கள் விதி வசத்தால் பயனற்றவனாக முடிவதுண்டு.அதனால் மன்னனைப் பழிக்க மாட்டார்கள் மக்கள்.இத்தகைய நற்பண்புகளுடன் கூடிய அரசனை வரலாறு பாராட்டும்.ஆகவே..யுதிஷ்டிரா..அரசாட்சியை மேற்கொண்டு புகழுடன் பொலிக' என்றார் வியாசர்.

No comments:

Post a Comment