Thursday, March 11, 2010

91-வியாசர் அறிவுரை

அசைக்க முடியாத தருமரின் மனதை மாற்ற வியாசர் கூறுகிறார்..

'தருமா..இல்லற தருமமே சிறந்த தருமமாகும் என சாத்திரங்கள் கூறுகின்றன.சாத்திரப்படி நீ நடந்துக் கொள்ள வேண்டும்.இல்லறம் துறந்து காடு செல்ல உனக்குச் சாத்திர அனுமதியில்லை.தேவரும்,விருந்தினரும்,மற்றவரும் இல்லறத்தாரையே சார்ந்திருக்கின்றனர்.அவர்களைக் காப்பது உன் கடமையாகும்.விலங்குகளும்,பறவைகளும் கூட இல்லறத்தாராலேயே காப்பாற்றப்படுகின்றன.உனக்கு நான்கு வருண தருமமும் தெரியும்.க்ஷத்திரிய தருமத்தை நீ நன்கு உணர்ந்திருந்தாலும் உனக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.முயற்சியும்,தானமும்,யாகமும் மக்களைப் பாதுகாப்பதும்,நடு நிலைமையோடு நடந்து கொள்வதும். பகயை அழிப்பதும் அரசருக்கான கடமையாகும்.செங்கோன்மைதான் அரசருக்கு உரிய மிக உயர்ந்த தருமமாகும்.அரசன் குற்றவாளிகளை தண்டித்து நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும்.இதுவும் அரச தருமம் என்பதை புரிந்து கொள்.சுத்யும்னன் என்னும் ராஜரிஷி ஒழுங்காக செங்கோல் செலுத்தியதால் முக்தியடைந்தார் என்பதைத் தெரிந்து கொள்' என்றார்.தருமர் சுத்யும்னன் எப்படி முக்தியடைந்தார் என வியாசரைக் கேட்டார்.

வியாசர் சொல்லத் தொடங்கினார்...முன்னொரு காலத்தில் சங்கர்,லிகிதர் என இரு சகோதரர்கள் இருந்தனர்.இருவரும் தவத்தில் சிறந்தவர்கள்.அவர்களுக்கு பாகுதை என்னும் நதிக்கரையில் மரங்களால் சூழப்பட்ட ஆசிரமங்கள் தனித் தனியாக இருந்தன.ஒரு சமயல் லிகிதர் சங்கரின் ஆசிரமத்திற்கு வந்தார். சங்கர் அப்போது வெளியே சென்றிருந்தார்.லிகிதர் மரத்தில் நன்கு பழுத்திருந்த கனிகள் சிலவற்றை பறித்து உண்ணத் தொடங்கினார்.திரும்பி வந்த சங்கர் தம்பியின் செயல் கண்டு கோபமுற்றார்.'என் அனுமதியின்றி பழங்களைப் பறித்தது திருட்டுக் குற்றம்.இக் குற்றத்திற்கான தண்டனையை இந்நாட்டு மன்னனிடம் பெற்று அத் தண்டனையை அனுபவிப்பாயாக' என்றார்.

அதன்படி லிகிதர் மன்னன் சுத்யும்னனிடம் சென்று தண்டனை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.அதைக் கேட்ட மன்னன் 'தண்டனை வழங்குவது அரச நீதிதான்..என்றாலும் மன்னிப்பு வழங்குவதும் அரச தருமம்..ஆதலால் உம்மை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்..நீர் போகலாம்' என்றார்.ஆனால் லிகிதர் தாம் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.அதனால்..திருட்டுக் குற்றத்திற்காக அவரது கைகள் துண்டிக்கப் பட்டன.

அறுபட்ட கைகளுடன் சங்கரைக் கண்ட லிகிதர்..'அரச நீதி கிடைத்து விட்டது..தாங்களும் சினம் தணிந்து என்னை மன்னிக்கவும்' என்றார்.

அதற்கு சங்கர் 'எனக்கு உன் மீது சினம் இல்லை.ஆனால் குற்றத்திற்கான தண்டனையை யாரானாலும் அனுபவித்தேத் தீர வேண்டும்.குற்றத்திற்கேற்ற தண்டனை விதித்தல் மன்னன் கடமையாகும்.அதுவே அரச நீதியாம்.இனி உன் பாவம் விலகும்.நீ பாகுதி நதிக் கரையில் தியானம் செய்வாயாக' என்றார்.

அவ்வாறே..லிகிதர் தியானம் இருக்க..தியான முடிவில் கைகள் தாமரை மலர்கள் போல் தோன்றின.அவர் தம் சகோதரரிடம் சென்று விவரத்தைச் சொன்னார்.உடன் சங்கர் 'இது என் தவ வலிமையால் நடந்தது.' என்றார்.

அவ்வாறாயின் இதை நீங்கள் முன்னமேயே செய்திருக்கலாமே என்றார் லிகிதர்.

'உண்மை..இதை என்னால் முன்னரே செய்திருக்க முடியும்..ஆனாலும் தண்டனை வழங்கும் தகுதி அரசனுக்கே உண்டு.உனக்கு தண்டனை வழங்கியதால் அரசன் தூயவனாக ஆகி..இறுதியில் முக்தியடைந்தான்.குற்றத்திற்கான தண்டனை அனுபவித்ததால் உன் பாவமும் கழிந்தது' என்றார் சங்கர்.

இக்கதையை எடுத்துரைத்த வியாசர் 'தருமா..நீயும் அரசாட்சியை ஏற்றுச் செங்கோல் செலுத்தி நற்கதி அடைவாயாக' என்றார்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். இதுபோல கருத்துக்களை நான் முதன் முறையாக தங்கள் பதிவில் தான் படிக்கின்றேன். நன்றி அய்யா.

Post a Comment