Friday, April 1, 2011

147-காலத்தின் வலிமை



காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.

இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் வணக்கம்..

ப.கந்தசாமி said...

உண்மை. பல பிரச்சினைகளுக்கு காலம்தான் தீர்வு சொல்லமுடியும்.

அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

Post a Comment