Sunday, April 10, 2011

148- இந்திரனுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்





காலத்தின் இயல்பு குறித்துப் பலி இந்திரனிடம் கூறும்போது, அப்பலியிடமிருந்து லட்சுமி ஒளிமிக்க பெண்ணாக வெளியே வந்தாள்.வியப்புற்ற இந்திரன் பலியை நோக்கி, 'ஒளியுள்ள இந்தப் பெண் யார்?" என வினவினார்.பலியோ தெய்வப் 'பெண்ணோ,மண்ணுலக மாதோ நான் அறியேன்.நீ அவளையேக் கேள் என்றான்.

உடன் இந்திரன், 'பெண்ணே..கண்ணைக் கவரும் அழகுடைய நீ யார்? பலியை விட்டு விலகி என் அருகில் நிற்கிறாயே ஏன்? என்றார்.

அது கேட்டு லட்சுமி சிரித்தாள்.'விரோசனும் என்னை அறியவில்லை.அவன் மகன் பலியும் என்னை அறியவில்லை.போகட்டும்..எனக்கு லட்சுமி,விதித்சை எனப் பலப் பெயர்கள் உண்டு.இந்திரா..நீயும், தேவர்களும் கூட என்னை அறியீர்' என்றாள்.

'பலியிடமிருந்து ஏன் விலகி விட்டாய்..என்னை அடையவா?' என்றார் இந்திரன்.

'பிரம்மதேவன் கூட எனக்குக் கட்டளையிட முடியாது.யாரிடம் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடும் வலிமை காலதேவனுக்கு மட்டுமே உண்டு'காலத்துக்குக் கட்டுப்பட்டவள் நான்.பலிக்கு உரிய காலம் மாறியது.நான் உங்களிடம் வந்து விட்டேன்.அவ்வளவுதான்' என்றாள் லட்சுமி.

'பலியைவிட்டு ஏன் விலகிவிட்டாய்..என்னை விடாமல் இருப்பாயா?' என்ரார் இந்திரன்.

'பலியை விட்டு விலகியதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறேன்.தானம்,தவம்,வாய்மை,வீரம்,தருமம் ஆகியவற்றினின்று விலகி விட்டான் பலி.ஆதலால் அவனை விட்டு விலகினேன்.இப்போது உன்னை அடந்துள்ளேன்.நீயும் அவற்றினின்று விலகினால்,நானும் உன்னை விட்டு விலகுவேன்' என்றாள் லட்சுமி.

'உலகில் உன்னைத் தன்னிடமே இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்தவர் யார்?' என்றார் இந்திரன்.

அத்தகையவர் யாரும் இல்லை என்றாள் லட்சுமி.

'செல்வத் திருமகளே..நீ எப்போதும் என்னிடம் தங்கியிருக்கும் உபாயத்தை சொல்வாயாக' என இந்திரன் வேண்ட, 'இதோ அந்த உபாயத்தைக் கூறுகிறேன்.வேத நெறிப்படி என்னை நான்கு பாகமாகப் பிரித்து அமைத்துக் கொள்' என அருளினாள் தேவி.

'எனது ஆத்ம பலத்திற்கும்,உடல் வலிமைக்கும் ஏற்ப அவ்வாறே உன்னை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்'

'உலக உயிரினங்களைத் தாங்கும் ஆற்றல் பூமி தேவிக்குத் தான் உண்டு.ஆதலால் உனது நாங்கில் ஒரு பாகத்தைப் பூமி தேவியிடம் தந்துள்ளேன்.இனி அவள் பூமி பாரத்தைத் தாங்குவாள்'

ஓடும் நீர்தான் உலக உயிர்களை வளர்க்கிறது.எனவே உன் இரண்டாம் பாகத்தை னிரிடம் வைத்து உள்ளேன்'

'உனது மூன்றாம் பாகத்தை யாகத்திற்கு முதல் காரணமாக விளங்கும் அக்கினி தேவனிடம் வைத்துள்ளேன்'

உனது நான்காம் பாகத்தை மாந்தருள் சிறந்தவர்க்குக் கொடுத்துள்ளேன்.இந்த நான்கினிடத்தும் நீ நிரந்தரமாக தங்கியிருக்க உன்னை வேண்டுகிறேன்.உன்னிடம் தவறு செய்வோர் தண்டிக்கப் படுவர்' என்றார் இந்திரன்.

அப்படியே நடக்கட்டும் என இந்திரனுக்கு அருளினாள் லட்சுமி.

பின் லட்சுமியால் கை விடப்பட்ட பலி, இந்திரனிடம்,'சூரியன் கிழக்கே எந்த அளவு ஒளி வீசுகிறானோ அந்த அளவு மற்ற மூன்று திக்குகளிலும் ஒளி வீசுவான்.அந்தச் சூரியன் நடுப்பகலில் இருக்கும் போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மறுபடி போர் மூளும்.அந்த நேரத்தில் நான் தேவர்களை வெற்றி கொள்வேன்.அந்தச் சூரியன் எப்போது பிரம்ம லோகத்திலிருந்து கீழ் உலகங்களைத் தகிப்பானோ அப்போது உன்னை நான் தோற்கடிப்பேன்.பின் நான் இந்திரன் ஆவேன்' என்றான்.

அது கேட்டு இந்திரன் கோபமுற்று

'உன்னைக் கொல்லக்கூடாது என பிரம்மதேவர் கட்டளையிட்டுள்ளார்.ஆகவே நீ தப்பித்தாய்.உடனே இந்த இடத்தைவிட்டுப் போ.நீ சொல்வது போல சூரியன் நடுவில் இருந்து ஒளி வீசுவதில்லை.எங்கும் சுற்றிக் கொண்டு ஒளி வீச வேண்டும் என்ற பிரமதேவனின் ஆணையை மீறாமல் அந்தச் சூரியன் செயல் படுகிறான்.அவனுக்கு ஆறு மாதம் உத்தராயணம்.ஆறு மாதம் தட்சணாயணம் ஆகும்.அதன்படி உலகிற்கு ஒளி வழங்கி வருகிறான், சூரியன்' என உரைத்தான்.

தருமரே! இவ்வாறு இந்திரன் சொன்னவுடன் பலி தெற்கு நோக்கிச் சென்றான்.பின் இந்திரன் விண் வழியாக இந்திர லோகம் அடைந்தார்.இந்தப் பகுதியில் காலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளதை கவனமாக ஆராய்ந்து பார்.கண்ணுக்குத் தெரியாத ஒப்பற்ற அந்தப் பொருளின் ஆற்றலை உணர்ந்துக் கொள்வாயாக' என்றார்
 

No comments:

Post a Comment