Thursday, April 28, 2011

149-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள்..





தருமர் பீஷ்மரை நோக்கி, 'தானம் கொடுப்பவர் மற்றும் ஏற்பவர் இயல்புகள் யாவை? என வினவ பீஷ்மர் கூறலானார்..

'தருமா..இது தொடர்பாக விருஷாதர்ப்பி என்ற மன்னனுக்கும் சப்த ரிஷிகளுக்கும் நடந்த உரையாடலை அறிவாயாக..

ஒருசமயம் விருஷாதர்ப்பி அந்தணர்களிடம் 'தானம் வாங்கி உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.உங்களிடம் எனக்கு மரியாதை உண்டு.அன்பு உண்டு.நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைத் தருகிறேன்.ஒவ்வொரு கன்றை ஈன்ற பத்தாயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன்.விரைந்து செல்லும் வெள்ளைக் குதிரைகள் கொடுக்கிறேன்.எருதுகள் பத்தாயிரம் கொடுக்கிறேன்..கிராமங்களையும் ரத்தினங்களையும் தருவேன்.இன்னும் என்னென்ன உங்களுக்குத் தேவையோ..கேளுங்கள் தருகின்றேன்' என்றான்.

ரிஷிகள் மன்னனிடம் தானம் வாங்க விரும்பவில்லை.மன்னர் தரும் தானம் முதலில் இன்பம் தருவது போல இருந்தாலும் முடிவில் துன்பம் தரும்.ஆயிரம் கசாப்புக் கடைகளை வைத்திருக்கும் கசாப்புக்காரனும், மன்னமும் சரி.எனவே மன்னனிடம் தானம் வாங்குவது தீமை பயக்கும்.பொதுவாக அந்தணர்களுக்குத் தவம் எளிதில் கிடைக்கும்.மன்னனின் பொருள் காட்டுத்தீயைப் போல அந்த தவத்தையே எரித்து விடும்..என்று கூறி ரிஷிகள் காட்டுக்குச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து செல்லுமாறு அமைச்சர்களை அனுப்பினான் மன்னன்.அத்திப் பழங்களைப் பறித்துத் தந்தனர் அமைச்சர்கள்.ரிஷிகள் அப் பழங்களை வாங்கச் சென்ற போது மன்னனின் வேலைக்காரர்கள் உள்ளே பொன்னை வைத்துத் தந்தனர்.

அத்ரி முனிவர் அவை பளுவாய் இருந்ததால் வாங்க மறுத்துப் பேசினார்..'நாங்கள் முட்டாள்கள் அல்ல.இவற்றின் உள்ளே பொன் உள்ளதை அறிவோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்.மறுபடியும் சொல்கிறேன்..அரசன் தரும் பொருள் மறுமை இன்பத்தை அளிக்காது.இம்மை மறுமைகளில் இன்பம் வேண்டுவோர் அரசர் தரும் இத்தகைய பொருள்களை வாங்கவே கூடாது' என்றார்.

கச்யபர்,'பூமியில் பொன்னும் பொருளும் போகமும் விரும்பத் தக்கது அல்ல' என்றார்.

வஷிஷ்டர்,'நூறு ஆயிரம் என மிகுதியானப் பொன்னை வாங்கினால் தாழ்ந்த கதிதான் கிடைக்கும்' என்றார்.

பரத்வாஜர்,'மான் குட்டி வளரும் போது கூடவே வளரும் கொம்பு போன்றது ஆசை.அது வளர்ந்து கொண்டே போகும்.அதற்கு எல்லையே இல்லை' என்றார்.

கௌதமர், "ஆசை நிறைவேறுதல் என்பது இல்லை.நதி நீரால் கடல் நிரம்பாதது போன்றது ஆசை.ஒரு நாளும் மனிதன் நிறைவடைய மாட்டான்' என்றார்.

ஜமதக்னி,'பிறரிடம் வாங்குவதற்கும் மனக் கட்டுப்பாடு வேண்டும்.ஆசைப்படுபவர்களுக்குத் தவம் என்னும் செல்வம் தொலையும்' என்றார்.

விசுவாமித்திரர், 'ஒரு விருப்பம் நிறைவேறும் போதே மற்றொரு விருப்பம் அம்பு போல மனதில் பாயும்' என்றார்.

சீலம் மிக்க ரிஷிகள் அனைவரும் உள்ளே பொன் வைத்த அக்கனிகளை ஏற்க மறுத்து வேறு இடம் சென்றனர்..

(தொடரும்)
 

No comments:

Post a Comment