Tuesday, March 15, 2011

146-பொருள் ஆசை துக்ககரமானது





பொருள்களின் மீது தோன்றும் வைராக்கியமே உண்மையான இன்பத்திற்குக் காரணம் என்பதை விளக்கும் கதை

பீஷ்மர் தருமரிடம், 'தருமா..வாய்மை,வைராக்கியம்,இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுதல்,பற்றில்லாமல் செயலில் ஈடுபடுதல்,வீணாகக் கஷ்டப் படாமலிருத்தல் ஆகிய ஐந்துமே அமைதிக்குக் காரணமாகும்.துறவிகள் இந்த ஐந்தையுமே உத்தம இன்பமாகவும், உத்தம தருமமாகவும் கருதுவர்.இது தொடர்பாக மங்கி என்பவரின் கதையைச் சொல்கிறேன்' என்றபடி தொடர்ந்தார்.

எத்தனையோ தொழில்களைச் செய்தும் பொருள் சேர்க்க இயலாமையால் மங்கி என்பவர் சோர்ந்து போனார்.அவரிடம் சிறிதளவு பணம் இருந்தது.இதுதான் இறுதி என, அப்பணத்தைக் கொண்டு இரு கன்றுக் குட்டிகளை வாங்கினார்.அவற்றை உழவுத் தொழிலுக்கு பழக்குவதற்காக ஒரு நுகத்தடியில் பூட்டி ஓட்டிக் கொண்டு போனார்.பயிற்சி இல்லாக் காரணத்தால் கன்றுக் குட்டிகள் மிரண்டு ஓடின.அப்படி ஓடும் போது, ஒட்டகம் ஒன்று வழியில் படுத்திருந்தது.ஒட்டகம் மத்தியில் இருக்க, இரு புறமும் இரு கன்றுக் குட்டிகள் ஓட..ஒட்டகத்தின் தலை மீது நுகத்தடி உராய்ந்து சென்றது.அது கண்டு ஆத்திரமடைந்த ஒட்டகம் திடீரென எழுந்தது.இரு கன்றுக் குட்டிகளையும் நுகத்தடியுடன் தூக்கிக் கொண்டு விரந்து சென்றது.கன்றுகள் உயிர் போவது போலத் துடித்தன.மங்கி மனம் தளர்ந்து..

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .எவ்வளவோ முயற்சிகளில் ஈடு பட்டேன்..பயன் இல்லை.ஆயினும் விடாமுயற்சியுடன் இரு கன்றுகளை, ஏரில் பழக்கலாம் என நுகத்தடியில் பூட்டி ஓட்டினேன்.ஒட்டகம் ஒன்று கன்றுகளை நுகத்தடியுடன் தூக்கிச் சென்று விட்டது.கன்றுகளை எவ்வளவு முயன்றும் ஒட்டகத்தின் பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.அந்த ஒட்டகத்தின் இரு புறமும் கட்டித் தொங்கவிடப்பட்ட மணிகள் போல கன்றுக் குட்டிகள் தொங்குகின்றன.

தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும்.

என் ஆசை நிறைவேறிவிட்டது என நிம்மதியுடன் இருக்கும் மனிதனைக் காண்பது அரிது.பேராசைக் கொண்ட மனம்..வைராக்கியம் கொண்டு பொருள் பற்றினின்று விலக வேண்டும்.பொருள் சேர்க்க சேர்க்க அது அழிந்துக் கொண்டிருக்கக் கண்டும் மீண்டும் அதன் மீது நாட்டம் ஏன்' என பலவாறு சிந்தித்தார் மங்கி.

பின் உறுதி கொண்டு எழுந்தார்.'இப்போது என் மனம் உறுதி மிக்கதாய் ஆகிவிட்டது.காமமே..உன்னை மட்டும் நான் விட்டு விடுவேனா..உன்னையும் வேருடன் களைந்து எறிந்து விட்டேன்.பொருள் ஆசை துக்ககரமானது என்பதை அறிந்துக் கொண்ட நான், காமத்தை மட்டும் வளர விடுவேனா?இனி நான் எனக்கு உண்டாகும் துன்பங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன்.பிறர் எனக்குத் துன்பம் தந்தாலும் நான் அவர்க்கு துன்பம் தர மாட்டேன்.

காமமே..இனி எனக்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு மன நிறைவு கொள்வேன்.பழைய வாழ்க்கை இனி இல்லை.வைராக்கியம் மேலிடுகிறது.இன்பம்,மன நிறைவு,புலனடக்கம்,வாய்மை,பொறுமை ஆகிய அனைத்தும் இப்போது என்னிடம் இருக்கின்றன.காமமே! நீ ரஜோ குணத்திலிருந்து பிறந்தாய்.உன்னை ஒழிக்க வேண்டுமானால் முதலில் ரஜோ குணத்தைத் தொலைக்க வேண்டும்.குளிர்ந்த நீரில் இறங்கித் தாகத்தை போக்கிக் கொள்வது போல, பரம்பொருளைச் சார்ந்து கர்மங்களை ஒழிப்பேன்.ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திப் பரமானந்தத்தில் திளைக்கப் போகிறேன்' என்றார் மங்கி.

தருமா..இவ்வாறு மங்கி வைராக்கியம் மேலிட, எல்லா ஆசைகளையும் துறந்து அஞ்ஞானத்தை வேரறுத்து முடிவில் பிரமபதத்தை அடைந்து பேரானந்தம் அடைந்தார்.

No comments:

Post a Comment