Sunday, November 28, 2010

123-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(3)

அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான்.அந்தணன் கூறினான்.

நான் மத்திய நாட்டைச் சேர்ந்தவன்.தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன்.ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன்.

இதைக் கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான்.'இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை.ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப் பட்டவன்.ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றைத் தருவேன்.மற்ற அந்தணருடன் உணவை இவன் அருந்தட்டும்.இனிச் சிந்திக்க ஏதுமில்லை.மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' என்னும் முடிவுக்கு வந்தான்.

அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான்.மற்றவர்களைப் போல கௌதமனும் நிறைந்த செல்வத்தைப் பெற்றுக் கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போலச் சுமந்துக் கொண்டு ஆலமரத்தை அடைந்தான்.அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ராஜதர்மா..அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பைப் போக்கியது.அப்போது 'இந்த பெருஞ்சுமையைத் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே..வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' என சிந்தித்தான்.

நன்றி கெட்ட கௌதமன்..இந்தப் பறவை அதிகம் சதைப் பற்றுள்ளதாய் இருக்கிறது..இதனைக் கொன்று இதன் மாமிசத்தை எடுத்துச் சென்றால் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான்.

சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி,கௌதமனின் குளிரைப் போக்கிவிட்டு..அவனிடம் கொண்ட நம்பிக்கையுடன் தூங்கலாயிற்று.கௌதமன் தூங்கிக் கொண்டிருந்த பறவையை தீயில் இட்டுப் பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான்..இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து..'பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது.எனக்கு சந்தேகம் வருகிறது.அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன்.இரக்கம் இல்லாதவன்.நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா' என்றான்.

மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கிச் சென்றான்.அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு..அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதைக் கண்டான்.கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான்.அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர,பறவையின் எலும்புகளையும் எடுத்துக் கொண்டு அசுரனிடம் வந்தான்.அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.

பின் அவன் தன் மகனை அழைத்து'கௌதமனைக் கொல்ல வேண்டும்.மகாபாவியான அவன் மாமிசத்தை அரக்கர்கள் உண்ணட்டும்' என்றான்.ஆனால் நன்றிக் கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை.அவனை துண்டு துண்டாக வெட்டி கொள்ளைக் கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை.நன்றிகெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை.திருடனுக்கும்,குடிகாரனுக்கும் கூடப் பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை (தொடரும்)

No comments:

Post a Comment