Sunday, November 7, 2010

119-அடக்கத்தின் மேன்மை

அடக்கத்தின் மேன்மைப் பற்றி பீஷ்மர் உரைக்கிறார்

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர்.அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும்.அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன.மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது.நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான்.அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான்.மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும்.சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது.பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும்.வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும்.அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.
ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும்.அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது.அது மட்டுமன்று..அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.பொறாமை முதலில் மனதில் குடியேறும்.அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும்.அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும்.கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான்.அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.
மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும்.நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும்.நண்பர்கள் நெருங்க மாட்டார்கள்.காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர்.மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.
மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும்.அவன் எப்போதும் அமைதியாக இருப்பான்.எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான்.அவனிடம் சினம் இராது.நேர்மை இருக்கும்.அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான்.சிறிதளவே பேசுவான்.அதுவும் சத்திய வாக்காக இருக்கும்.அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான்.பொய் உரைக்க மாட்டான்.பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.
அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான்.இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று.கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர்.தேவரும் வந்து பணிவர்.
பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும்,பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும்.அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும்.ஞானவானிடம் பொறுமை,சத்தியம்,கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும்.மிகு காமம்,சினம்,தற்புகழ்ச்சி,பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும்.அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான்.அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான்.அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும்.

No comments:

Post a Comment