Thursday, November 18, 2010

121-நட்புக்குத் துரோகம் செய்யக் கூடாது(1)

'நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது'என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.

வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான்.அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.அங்கு ஒரு திருடன்.அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம்.தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன்.அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான்.உண்ண உணவும்,உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன்.வாழ்க்கை நடத்த ஒரு நங்கையையும் அளித்தான்.இவற்றைப் பெற்ற அந்த அந்தணன் இன்பமாகக் காலம் கழித்தான்.நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான்.கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஓரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான்.

வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்றான்.நாள் தோறும் காட்டுப் பறவைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டான்.இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார்.மரவுரி தரித்தவர்.வேதம் அறிந்தவர்.ஆசாரம் மிக்கவர்.அவர் ஒரு பிரம்மச்சாரி.கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும்.கௌதமரின் நண்பரும் கூட.உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார்.அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான்.அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது.அவன் கையில் வில் இருந்தது.தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது.அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.

கௌதமனை நோக்கி 'என்ன காரியம் செய்தாய்? வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்?உன் பெருமையை மறந்தாயா?நீ கீழான செயலைச் செய்யலாமா?நீ உடனே இங்கிருந்து போய் விடு" என்று கூறினார்.

அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன்,'நான் ஏழை.அந்த வறுமை என்ன இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன்.ஓரிரவு மட்டும் இங்குத் தங்கிப் பின் வேறிடம் செல்லலாம் 'என்று கூறினான்.அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை
ஏற்று அங்குத் தங்கினார் .
(தொடரும்)

No comments:

Post a Comment